காசி - மங்கைக் கணவனும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மங்கைக் கணவனும் (காசி)

கங்கா நதி பாலரே!
மங்கையர் வசமாகி அழியாமல்
அடியேனை ஆண்டுகொண்டு அருள்.


தந்தத் தனதன தானன தானன
     தந்தத் தனதன தானன தானன
          தந்தத் தனதன தானன தானன ...... தனதான

மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
     பங்கப் படமிசை யேபனி போல்மதம்
          வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி

வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
     பந்துப் பனைபழ மோடிள நீர்குட
          மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே

திங்கட் பதுசெல வேதலை கீழுற
     வந்துப் புவிதனி லேமத லாயென
          சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ......மருள்கூரச்

செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
     பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
          சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ

அங்கைத் தரியென வேயொரு பாலக
     னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
          அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி

அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
     சங்குத் திகிரிக ரோனரி நாரவ
          ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ......மருகோனே

கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
     தங்கப் பவளொளி பால்மதி போல்முக
          கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா

கந்துப் பரிமயில் வாகன மீதிரு
     கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
          கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

 
மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல்
     பங்கப்பட, மிசையே பனி போல், மதம்
          வந்துஉள் பெருகிடவே, விதி ஆனவன் ...... அருள்மேவி

வண்டுத் தடிகை பொல் ஆகியெ, நாள்பல
     பந்து, பனைபழமோடு, ள நீர்குடம்
          மண்டிப் பலபல வாய்வினை கோலும் ...... அவ் வழியாலே,

திங்கள் பது செலவே, தலை கீழ்உற
     வந்து, புவிதனிலே மதலாய் என,
          சிந்தைக் குழவி எனா, னை தாதையும் ......அருள்கூரச்

செம்பொன் தடமுலை பால்குடி நாள், பல
     பண்புத் தவழ்நடை போய், விதமாய் பல
          சிங்கிப் பெருவிழி யார் அவமாய்அதில் ...... அழிவேனோ?

அம்கைத்து அரி எனவே, ரு பாலகன்
     இன்பக் கிருபை அதுஆய், ஒரு தூண்மிசை
          அம்பல் கொடு அரி ஆய் இரண்யாசுரன் ...... உடல்பீறி,

அண்டர்க்கு அருள் பெருமான், முதிரா அணி
     சங்குத் திகிரி கரோன், ரி நார
          அரங்கத் திருஅணை மேல்துயில் நாரணன் .....மருகோனே!

கங்கைச் சடைமுடியோன் இடம் மேவிய
     தங்கப் பவள ஒளி பால்மதி போல்முக
          கங்குல் தரி குழலாள் பரமேசுரி ...... அருள்பாலா!

கந்துப் பரிமயில் வாகன மீது இரு
     கொங்கைக் குறமகள் ஆசையொடே மகிழ்
          கங்கைப் பதி நதி காசியில் மேவிய ...... பெருமாளே.


பதவுரை

      அம் கைத்து அரி எனவே --- உள்ளங்கை நெல்லிக்கனி போல எளிதில் இறைவன் புலப்படுவான் என்று,

     ஒரு பாலகனின் இன்பக் கிருபையதாய் --- ஒரு பாலகனாகிய பிரகலாதர் இன்ப அன்புடனே கூறவும்,

     ஒரு தூண் மிசை அம் பல் கொடு அரியாய் --- ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்ட நரசிங்கமாகத் தோன்றி,

     இரண்ய அசுரன் உடல் பீறி --- இரணியனுடைய உடலைக் கிழித்து,

      அண்டர்க்கு அருள் பெருமான் --- தேவர்களுக்குப் பேரருள் புரிந்த பெருமான்,

     முதிரா அணி சங்குத் திகிரி கரோன் --- தம்மை விட்டு நீங்காத அணிகலன்களான பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக்கரத்தில் கொண்டவன்,

     அரி நார அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே ---  ஆதிசேடன் என்னும் பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் திருமருகரே

      கங்கைச் சடைமுடியோன் இடம் மேவிய --- கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய திருமேனியின் இடது பாகத்தில் பொருந்தியுள்ளவளும்,

     தங்கப் பவள ஒளி --- தங்கம், பவளம் போல ஒளி பொருந்திய திருமேனி கொண்டவளும்,

     பால்மதி போல் முக --- வெண் மதியைப் போலத் திருமுக மண்டலம் கொண்டவளும்,

     கங்குல் தரிகுழலாள் பரமேசுரி அருள் பாலா --- மேகத்தைப் போன்ற கரிய கூந்தலை உடையவளும், மேலான ஐசுவரியங்களை அருள்பவரும் ஆன உமைதேவியார் அருளிய திருக் குழந்தையே!

      கந்துப் பரிமயில் வாகன மீது --- பாய்ந்து செல்லும் குதிரை போன்ற மயில் வாகனத்தின் மீது,

     இரு கொங்கைக் குறமகள் ஆசையொடே மகிழ் --- இரு மார்பகங்களை உடைய குறமகளாகிய வள்ளிநாயகியுடன் ஆசையோடு மகிழ்கின்றவரே!

     கங்கைப் பதிநதி காசியில் மேவிய பெருமாளே --- கங்கை நதிக் கரையில் உள்ள திருத்தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      மங்கைக் கணவனும் வாழ் சிவணா --- ஒரு மங்கையும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்தி,

     மயல் பங்கப்பட --- காம இச்சை கொண்டு அதனால் வேதனைப்பட,

     மிசையே பனி போல் மதம் வந்து உள் பெருகிடவே --- அதன் விளைவாக பனித்துளி வடிவில் சுக்கிலம் வெளிப்பட்டு உள்ளே பரவ,

      விதியானவன் அருள் மேவி --- பிரம தேவர் விதித்த வழியே,

     வண்டுத் தடிகை பொல் ஆகியே --- வண்டானது நாளும் தடித்து வளருவது போல்  வளர்ந்து,

     நாள்பல பந்துப் பனை பழமோடு இளநீர் குடம் மண்டிப் பல பலவாய்  --- நாள்கள் செல்லச் செல்ல, பந்து போலவும், பனம்பழம் போலவும், இளநீர் போலவும், குடம் போலவும் கொஞ்ச கொஞ்சமாக பலவிதமாக வளர்ந்து,

      வினை கோலும் அவ்வழியாலே --- எந்த இடத்தில் சுக்கிலமானது புகுந்ததோ, அந்த வழியாகவே,

     திங்கள் பது செலவே தலை கீழ்உற வந்து --- மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து,

     புவிதனிலே மதலாய் என --- பூமியில் குழந்தை வடிவாகப் பிறந்து,

     சிந்தைக் குழவி எனா --- மனதுக்கு உகந்த குழந்தை என்று,

     அனை தாதையும் அருள்கூர --- தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரித்து வளர்க்க,  

      செம்பொன் தடமுலை பால்குடி நாள் --- செவ்விய பொலிவுள்ள பருத்தமுலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் கழியக் கழி,

     பல பண்புத் தவழ்நடை போய் --- பலவிதமான அழகு பெறத் தவழ்ந்து தளர்நடை இட்ட நாட்களும் போய்,

     பல விதமாய் ---  பல விதமாக வளர்ந்து,

     பல சிங்கிப் பெருவிழியார் அவமாய் அதில் அழிவேனோ --- பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அடியேன் அழிந்து போவேனோ?

பொழிப்புரை


       உள்ளங்கை நெல்லிக்கனி போல எளிதில் இறைவன் புலப்படுவான் என்று ஒரு பாலகனாகிய பிரகலாதர் இன்ப அன்புடனே கூறவும், ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்ட நரசிங்கமாகத் தோன்றி, இரணியனுடைய உடலைக் கிழித்து, தேவர்களுக்குப் பேரருள் புரிந்த பெருமான், தம்மை விட்டு நீங்காத அணிகலன்களான பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக்கரத்தில் கொண்டவன். ஆதிசேடன் என்னும் பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் திருமருகரே

         கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய திருமேனியின் இடது பாகத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் போல ஒளி பொருந்திய திருமேனி கொண்டவளும், வெண் மதியைப் போலத் திருமுக மண்டலம் கொண்டவளும்,
மேகத்தைப் போன்ற கரிய கூந்தலை உடையவளும், மேலான ஐசுவரியங்களை அருள்பவரும் ஆன உமைதேவியார் அருளிய திருக் குழந்தையே!

     பாய்ந்து செல்லும் குதிரை போன்ற மயில் வாகனத்தின் மீது, இரு மார்பகங்களை உடைய குறமகளாகிய வள்ளிநாயகியுடன் ஆசையோடு மகிழ்கின்றவரே!

     கங்கை நதிக் கரையில் உள்ள திருத்தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         ஒரு மங்கையும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்த, காம இச்சை கொண்டு அதனால் வேதனைப்பட, அதன் விளைவாக பனித்துளி வடிவில் சுக்கிலம் வெளிப்பட்டு உள்ளே பரவ, பிரமதேவர் விதித்த வழியே, வண்டானது நாளும் தடித்து வளருவது போல் வளர்ந்து, நாள்கள் செல்லச் செல்ல, பந்து போலவும், பனம்பழம் போலவும், இளநீர் போலவும், குடம் போலவும் கொஞ்ச கொஞ்சமாக பலவிதமாக வளர்ந்து,  எந்த இடத்தில் சுக்கிலமானது புகுந்ததோ, அந்த வழியாகவே,
மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து, பூமியில் குழந்தை வடிவாகப் பிறந்து, மனதுக்கு உகந்த குழந்தை என்று தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரித்து வளர்க்க, செவ்விய பொலிவுள்ள பருத்தமுலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் கழியக் கழி, பலவிதமான அழகு பெறத் தவழ்ந்து தளர்நடை இட்ட நாட்களும் போய், பல விதமாக வளர்ந்து,  பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அடியேன் அழிந்து போவேனோ?

விரிவுரை

மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட, மிசையே பனிபோல் மதம் வந்து உள் பெருகிடவே ---

சிவணுதல் - நட்புக் கொள்ளுதல், பொருந்துதல், அளவளாவுதல், அணுகுதல், ஒத்தல், பெறுதல்.

ஒரு மங்கையும் அவளுடைய கணவனும் இல்லறத்தில் பொருந்தி வாழ்ந்து வரும் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் காம இச்சை மீதூரப்பட்டுக் கலந்துகொள்வர்.

உயிர்கள் தாம் செய்த நல்வினை தீவினைப் பயன்களாகிய புண்ணிய பாவங்களை ஒளி உலகிலும் இருள் உலகிலும் அனுபவிக்கின்றன. உயிர்கள் சிற்றறிவு உடையன. வினையானது சடம். ஆதலால் வினைகளை அந்தந்த உயிர்களுக்குப் பேரறிவும் பேராற்றலும் படைத்த ஒரு பரம்பொருள் ஊட்டுகின்றது.

எனவே செய்வான், செய்வினை, வினைப்பயன், அதனை ஊட்டுவான், என்ற நான்கினையும் நன்கு உரைப்பது சைவ நூல் ஒன்றே ஆகும்.

செய்வினையும், செய்வானும், அதன் பயனும், கொடுப்பானும்,
மெய்வகையால் நான்குஆகும், விதித்த பொருள் எனக் கொண்டே,
இவ் இயல்பு சைவநெறி அல்லவற்றுக்க் இல்லை என,
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
                                                                                           --- பெரியபுராணம்.

இவ்வண்ணம் வினைப்பயன் நுகர்ந்தபின், கலப்பான வினைப்பயனை நுகர்தற் பொருட்டு இறையாணையால் அவ்வுயிர்கள் மழை வழியாக இப்பூதலத்தைச் சேர்கின்றன. காய் கனி மலர் நீர் தானியம் இவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை உண்ட ஆணிடம் நியதியின்படி சேர்ந்து, அறுபது நாள் கருவுற்றிருந்து, பெண்ணிடம் சேர்கின்றன. அப்படி அக்கரு ஆணிடம் இருந்து பெண்ணிடம் சேர்கின்றபோது அது புல்லின் மீதுள்ள பனித் துளிபோன்ற சிறிய அளவுடையதாக இருக்கின்றது என்பதை “அறுகு நுனி பனியனைய சிறிய துளி” என்கின்றார் அடிகளார் திருவிடைமருதூர்த் திருப்புகழில்.

பனியின் விந்துளி போலவே கருவின் உறும்
அளவில், அங்கு ஒரு சூசமாய், மிளகு துவர்
பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப்

பருவ முந்தலை கீழதாய் நழுவி,நிலம்
மருவி, ஒன்பது வாசல்சேர் உருவம்உள
பதுமை யின்செயல் போலவே, வளிகயிறின் ...... உடனாடி

மனவி தந்தெரி யாமலே மலசலமொடு,
உடல்ந கர்ந்து,அழுது ஆறியே, அனைமுலையின்
மயம் அயின்று,ரு பாலனாய் இகமுடைய ...... செயல்மேவி

வடிவ முன்செய்த தீமையா லெயும்உனையும்
அறம றந்து,க மீதுபோய் தினதினமும்
மனம் அழிந்து உடல் நாறினேன் இனிஉனது ...... கழல்தாராய்..  ---  திருப்புகழ்.

விதியானவன் அருள் மேவி ---

முன்னை வினையின் பயனாக உயிரானது உடம்பை எடுக்கின்றது. எடுக்க வைப்பது பிரமதேவருடைய அருள் வழி ஆகும்.

வண்டுத் தடிகை பொல் ஆகியே --- 

போல் என்னும் சொல் பொல் என வந்தது.

வண்டானது நாளும் தடித்து வளருவது போல் தாயின் உதரத்தில் கரு வளரும்.

நாள்பல பந்துப் பனை பழமோடு இளநீர் குடம் மண்டிப் பல பலவாய்  ---

நாள்கள் செல்லச் செல்ல, பந்து போலவும், பனம்பழம் போலவும், இளநீர் போலவும், குடம் போலவும் கொஞ்ச கொஞ்சமாக பலவிதமாக வளர்ந்து வரும்.

வினை கோலும் அவ்வழியாலே, திங்கள் பது செலவே தலை கீழ்உற வந்து ---

கரு உருவாவதற்கு எந்த இடத்தில் சுக்கிலமானது புகுந்ததோ, அந்த வழியாகவே, மாதங்கள் பத்து கழிந்த பின்னர் தலை கீழாக வந்து குழந்தையாய் பிறக்கும்.

புவிதனிலே மதலாய் என, சிந்தைக் குழவி எனா, அனை தாதையும் அருள்கூர ---

பூமியில் குழந்தை வடிவாகப் பிறந்த பின், தாயும் தந்தையும் தமது அன்புக்கு உகந்த குழந்தை என்று சிந்தை மகிழ, அன்புடன் வளர்ப்பார்கள்.

"அருமதலை குதலை மொழி தனில்உருகி, அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய், அருமையினில் அருமையிட" என்றார் திருவிடைமருதூர்த் திருப்புகழில்.

செம்பொன் தடமுலை பால்குடி நாள் ---

செவ்விய பொலிவுள்ள பருத்தமுலையில் பாலைக் குடித்துக் குடித்து நாள்கள் செல்லச் செல்ல,
    
பல பண்புத் தவழ்நடை போய், பல விதமாய் ---

பலவிதமான அழகு பெறத் தவழ்ந்து தளர்நடை இட்ட நாட்களும் போய், பல விதமாக வளர்ந்து,

தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஒடித் திரிந்து நவகோடிப் பிரபந்த கலை,
இச்சீர் பயிற்ற, வயது எட்டோடும் எட்டு வர....         --- (அறுகுநுனி) திருப்புகழ்.

பல சிங்கிப் பெருவிழியார் அவமாய் அதில் அழிவேனோ ---

வாலிப வயதை அடைந்து, ஆவி ஈடேறும் வழி தேடாமல், மன்மத பாணத்தால் மயங்கி, பரத்தையர் நட்புக்கொண்டு, தாம் கற்ற கல்வியை இறைவன் திருவருள் நெறியில் உபபோகிக்காது, இன்று இருந்து நாளை அழியும் மனிதர்களிடம் போய், கொடாதவனைப் “பாரியே காரியே” என்றும் வலி இல்லாதானை, “விஜயனே விறல் வீமனே” என்றும் பலவகையாகப் பாடி, அவர்கள் தரும் பொருள்களைக் கொணர்ந்து, நல்வழியில் செலவழிக்காமல், பரத்தையர்க்கு ஈந்து, மகளிர் போகமே சுவர்க்க வாழ்வு என்று மயங்கிக் கிடந்து பிணிவாய்ப்பட்டு மடிகின்றதை அடிகளார் உணர்த்துகின்றார். 
 
அறிவுஇலாப் பித்தர், ன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகளாக்கிப் புகழ்ந்து,
     அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடி,

சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, ரிந்து,
     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.      --- திருப்புகழ்.  
 
......வயது எட்டோடும் எட்டு வர,
         வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்கள் ......உடன் உறவாகி,

இக்கு ஆர் சரத்து மதனுக்கே இளைத்து, வெகு
         வாகக் கலம்ப வகை பாடிப் புகழ்ந்து, பல
    திக்கோடு திக்குவரை மட்டு ஓடி, மிக்கபொருள்
         தேடி, சுகந்த அணை மீதில் துயின்று, சுகம்
     இட்டு ஆதரத்து உருகி, வட்டார் முலைக்குள் இடை
         மூழ்கிக் கிடந்து, மயல் ஆகித் துளைந்து, சில ......பிணிஅதுமூடிச்

சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்
         ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,
    பெற்போர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,
         ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்
     தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
         ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என, ...... எடும் என ஒடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா, வரிச்சுடலை
         ஏகி, சடம்பெரிது வேக, புடம் சமைய
    இட்டே, அனற்குள் எரி பட்டார் எனத்தழுவி,
         நீரில் படிந்துவிடு பாசத்து அகன்று, னது
    சற்போதகப் பதுமம் உற்றே, தமிழ்க்கவிதை
         பேசிப் பணிந்து உருகு நேசத்தை இன்று தர, ......இனிவரவேணும்.
                                                                    --- (இத்தாரணிக்குள்) திருப்புகழ்.

உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு,
     வளர்பிறை என்று பலரும் விளம்ப,
     வாழ் பதினாறு பிராயமும் வந்து,.....

மயிர்முடி கோதி, அறுபத நீல
வண்டு இமிர் தண்தொடை கொண்டை புனைந்து,
     மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து,
     மாகதர் போகதர் கூடி வணங்க,.....

மதன சொரூபன் இவன் என, மோக
மங்கையர் கண்டு, மருண்டு, திரண்டு,
     வரிவிழி கொண்டு சுழிய எறிந்து,
     மாமயில் போல்அவர் போவது கண்டு,.....

மனது பொறாது அவர் பிறகு ஓடி,
மங்கல செங்கலசம் திகழ் கொங்கை
     மருவ மயங்கி, இதழ் அமுது உண்டு,
     தேடிய மாமுதல் சேர வழங்கி,.....

ஒருமுதல் ஆகி, முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து,
           மதன சுகந்த விதனம் இது என்று,
            வாலிப கோலமும் வேறுபிரிந்து,.....

வளமையும் மாறி, இளமையும் மாறி,
 வன்பல் விழுந்து, இரு கண்கள் இருண்டு,
          வயது முதிர்ந்து, நரைதிரை வந்து,
          வாத விரோத குரோதம் அடைந்து,
                    செங்கையில் ஓர் தடியும் ஆகியே,.....

வருவது போவதும், ஒருமுது கூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து,
     மதியும் மறிந்து, செவிதிமிர் வந்து,
     வாய்அறியாமல் விடாமல் மொழிந்து,.....

துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சம் உலர்ந்து வறண்டு,
         துகிலும் இழந்து, சுணையும் அழிந்து,
     தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு,.....

கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச,
         கலகல என்று மலசலம் வந்து,
         கால் வழி மேல் வழி சார நடந்து,.....

தெளிவும் இராமல் உரை தடுமாறி,
சிந்தையும் நெஞ்சம் உலைந்து மருண்டு,
     திடமும் உலைந்து, மிகவும் அலைந்து,
     தேறி நல் ஆதரவு ஏது என நொந்து,.....

மறையவன் வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்று தெளிந்து,
         இனி என்ன கண்டம், இனி என தொந்தம்
         மேதினி வாழ்வு நிலாது, இனி நின்ற.....

கடன்முறை பேசும் என, உரை நாவும்
உறங்கி விழுந்து, கை கொண்டு மொழிந்து,
         கடை வழி கஞ்சி ஒழுகிட வந்து,
         பூதமும் நாலு சுவாசமும் நின்று,
                           நெஞ்சு தடுமாறி வரும் நேரமே.....

வளர் பிறை போல எயிறும் உரோமமும்
சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச
         மனதும் இருண்ட வடிவும் இலங்க
         மாலை போல் யம தூதர்கள் வந்து.....

வலைகொடு வீசி உயிர்கொடு போக,
மைந்தரும் வந்து குனிந்து அழ, நொந்து
         மடியில் விழுந்து மனைவி புலம்ப,
         மாழ்கினரே இவர் காலம் அறிந்து.....
  
பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட நின்றவர், பந்தர்
         இடும் என வந்து, பறை இட, முந்தவே
         பிணம் வேக விசாரியும் என்று.....

பலரையும் ஏவி, முதியவர் தாமும்
இருந்த சவம் கழுவும் சிலர் என்று,
         பணிதுகில் தொங்கல் களபம் அணிந்து,
         பாவகமே செய்து, நாறும் உடம்பை.....

வரிசை கெடாமல் எடும்என, ஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து,
         கடுகி நடந்து, சுடலை அடைந்து,
         மானிட வாழ்வு என வாழ்வு என நொந்து.....

விறகுஇட மூடி, அழல்கொடு போட,
வெந்து விழுந்து முறிந்து, நிணங்கள்
         உருகி, எலும்பு கருகி, அடங்கி
         ஓர் பிடி நீறும் இலாத உடம்பை
              நம்பும் அடியேனை இனி ஆளுமே.          ---  பட்டினத்தார்.

அம்கைத்து அரி எனவே, ரு பாலகன் இன்பக் கிருபை அதுஆய், ஒரு தூண்மிசை அம்பல் கொடு அரி ஆய் இரண்யாசுரன் உடல்பீறி, அண்டர்க்கு அருள் பெருமான் ---

பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர்.  காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர்.  இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்.  இளையவனாகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்ற போது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவ வலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டனன். மனம் வெருண்டனன். பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டனன்.  அப்போது அவன் மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை, சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.

தானவ இந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன்.  இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன் சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன்.

இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு, நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கரு வளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்னவாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர்.  அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன். 

நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர்.  பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள். மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றனன்.

பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினன்.  தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண்கிலேம்" என்றனர்.  இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான். 

எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன்.

கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன்.  ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டனன்.

காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர்.  திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சியிருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருமின். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்க்குதும்" என்று அருளிச் செய்தனர்.

பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியான பரராக இருந்தனர்.  ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும் தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது, கருமால் அற, திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பத்தி புரிந்து வந்தனர்.

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன். சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார்.  பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே, பிழைபடக் கூறினீர். இன்று இருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.

ஓதப் புக்கவன் "உந்தை பேர் உரை" எனலோடும்,
போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
"மூதக்கோய், இது நல்தவம் அன்று" என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.

பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே, அந்தோ! இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர்.  சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.

"கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர, நின் அறிவின்
எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ" என்றான்.

பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐய, இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.

"என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்,
என்னை குற்றம்நான் இயம்பியது? இயம்புதி" என்றான்.

ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள்.  இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர்.  பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது.  எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.

ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே, உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். 

இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான்.  ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.

இரணியன் தன் மகனை அழைப்பித்தான்.  பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே, நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார்.  இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.

காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய.

"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்" என்றார்.  தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய 'இரணியாய நம' என்றே கூறுகின்றனர். யாரடா உநக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த அரவத்தின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன். அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால்.  எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர்.  மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர்.  அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு.  வாயார வாழ்த்து. நெஞ்சார நினை" என்றார்.

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான்.  அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுமின்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர்.  பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.

நிருதன் வியந்து நெருப்பில் இடுமாறு பணித்தனன்.  விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர்.  தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது.  தாமரைத் தடாகத்தில் விளையாடும் என்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான். அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன.  திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர்.  பாம்புகளின் பற்கள் ஒடிந்து. மணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்குயானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான்.  வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, கஜேந்திர வரதா என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன்.  அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டார் பிரகலாதரைக் குத்தின். வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.

ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர். கனகன் சிரித்து, அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள் என்றான். பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் "ஓம் நமோ நாராயணாய" என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி தேவியைப் போற்றி நின்றார். பூதேவி, "கண்ணே! குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று அருள் புரிந்தனள்.  ஞானக் குருந்தர், "அம்மா இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான்.  நிலவறைக்குள் அடைப்பித்தான். விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்த சீலராகிய அவர், "சாகர சயனா" என்று துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பத்தி புரிந்தனர்.

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம் நமோ நாராயணாய" என்று சிந்தித்த வண்ணமாக நின்றார்.

இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். "மதிநலம் படைத்த அமைச்சர்களே, என் மகனுடைய மனக்கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன்.  இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.  அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான். என்னிடம் கொட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்" என்று சொல்லி, "கண்ணே! பிரகலாதா! உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே! அந்த மாயவன் எங்குளன்? கூறு" என்று வினவினான்.

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல் என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். 

இரணியன், "மைந்தா, என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உளனோ? உரை" என்று கேட்டான்.

சாணிலும் உளன், ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் என்றார், நன்றுஎனக் கனகன் சொன்னான்.

பிரகலாதர், "தாதாய், அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூரு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன்.  காணுதி" என்று அருளிச் செய்தார்.

இரணியன் சீற்றமிக்கு, "பேதாய், நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான். 

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில்,
கும்பத் திண் கரியைக் கோள்மாக் கொன்று என, நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்  என்றான்.

பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது.  என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.

என்உயிர் நின்னால் கோறற்கு எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர் யானே மாய்ப்பன், பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்.

கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான்.  அது தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.

அதுகண்ட கனகன் அஞ்சாது வாலினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே, இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய்! உன் கண் காண இந்த நரசிங்கத்தையும் உன்னையும் கொன்று என் வீரவாளை வணங்குவன்" என்றான்.

கேள்இது நீயும்காணக் கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவது அல்லால் வணங்குதல் மகளீரூடல்
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்.

அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்க மூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் அல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித் தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய்! உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன். என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர்.

உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்

பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார்.

"முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்.
         
நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.

அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
"என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன்
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.


என்று வரம் அருளி, எவ் உலகும் கை கூப்ப,

முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட,

நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு

ஒன்று பெருமை உரிமை புரிக என்றான்.




முதிரா அணி சங்குத் திகிரி கரோன் ---

தம்மை விட்டு நீங்காத அணிகலன்களான பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக்கரத்தில் கொண்டவர் திருமால்.

அரி நார அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே ---  

ஆதிசேடன் என்னும் பெரியபாம்புப் படுக்கை மேல், திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் திருமருகர் முருகப் பெருமான்.

கங்கைச் சடைமுடியோன் இடம் மேவிய, தங்கப் பவள ஒளி, பால்மதி போல் முக கங்குல் தரிகுழலாள் பரமேசுரி அருள் பாலா ---

கங்கை நதியைத் தமது  திருச்சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய திருமேனியின் இடது பாகத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் போல ஒளி பொருந்திய திருமேனி கொண்டவளும், வெண் மதியைப் போலத் திருமுக மண்டலம் கொண்டவளும், மேகத்தைப் போன்ற கரிய கூந்தலை உடையவளும், மேலான ஐசுவரியங்களை அருள்பவரும் ஆன உமைதேவியார் அருளிய திருக் குழந்தை முருகப் பெருமான்.

கங்கையைச் சடையில் பரித்து, மறிமழு அம்
கரத்தில் தரித்து, உருத்ரம்
காட்டு உழுவை அதள் அசைத்து அணி மன்றில் ஆடு,கங்
காளருக்கு அபின்னம் ஆய

சங்கரி, சடாதாரி, சர்வாணி, கல்யாணி,
தற்பரி, கவானி தந்த
தந்திமுகனோடு மற்று ஐந்து பெயர் நீர்மையும்
தன் அகத்து உள தெய்வமே.             --- பாம்பன் சுவாமிகள்.

கங்கைப் பதிநதி காசியில் மேவிய பெருமாளே ---

திருத்தலங்களுக்கு எல்லாம் தலையாயது காசி என்னும் மிகவும் புராதனமான திருத்தலம். தன்னிடம் அடைந்தார்க்கு அருள வல்லது. காசியில் இறக்க முத்தி. கங்கா நதி சூழப்பெற்றது. கங்கை நதிக்கரையில் எழுந்தருளி உள்ள முருகவேளைக் குறித்து இப்பாடல் பாடப் பெற்றது.

கருத்துரை

கங்கா நதி பாலரே! மங்கையர் வசமாகி அழியாமல் அடியேனை ஆண்டுகொண்டு அருள்.







No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...