தீயவை செய்தார் கெடுவது உறுதி

 


 

தீயவை செய்பவர் கெடுவது உறுதி

-----

 

     திருக்குறளில், "தீவினை அச்சம்" அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறள், "தீய செயல்களைச் செய்தவர் கெடுவது என்பதுஒருவனது நிழலானதுஅவனை விடாது வந்துஅவனது காலின் கீழ் தங்கியதைப் போன்றது" என்கின்றது.

 

     ஒரு பொருளின் நிழலானதுஒளி வரும் அளவும் வெளிப்படாதுஅப்பொருளைப் பற்றி இருந்து,ஒளி வந்த போது வெளிப்பட்டுத் தோன்றுதல் போலஒருவன் செய்த தீவினையானதுதனது பயனை அவன் அனுபவித்தற்கு உரிய காலம் வரும் அளவும் வெளிப்படாதுஅவனது அந்தக்கரணத்தில் நினைவுச் சுவடாக நின்றுதனது பயனை அனுபவித்தற்கு உரிய காலம் வந்தபோதுவெளிப்பட்டு அவனை வருத்தும் என்பதைக் காட்ட,

 

தீயவை செய்தார் கெடுதல்நிழல் தன்னை

வீயாது அடி உறைந்து அற்று.

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தல் காணலாம்...

 

குற்று ஒருவ்வரைக் கூறை கொண்டு

         கொலைகள் சூழ்ந்த களவு எலாம்

செற்று ஒருவ்வரைச் செய்த தீமைகள்

         இம்மை யேவரும் திண்ணமே

மற்று ஒருவ்வரைப் பற்றி லேன்மற

         வாது எழுமட நெஞ்சமே

புற்று அரவ்வுடைப் பெற்றம் ஏறி

         புறம்ப யம்தொழப் போதுமே.   --- சுந்தரர் தேவாரம்.

 

இதன்பொருள் ---

 

     அறியாமையுடைய மனமே!  பொருளைப் பறித்தல் வேண்டி அது உடைய ஒருவரைக் கருவியால் குத்திஅவர் உடைமையைப் பறித்துமேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும்,நன்முறையில் நிற்கும் ஒருவரை முறையின்றிப் பகைத்துஅப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுபிறவி வரும் வரையில் நீட்டியாது,இப் பிறவியிலேயே வந்து வருத்தும்இது திண்ணம்ஆதலின்அவை போல்வன நிகழாதிருத்தற்கு உன்னை அன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன். புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் அவனை நினைந்து புறப்படுவாயாக.

 

நீலமா மணிநிறநிருதர் வேந்தனை

மூல நாசம் பெற முடிக்கும்மொய்ம்பினாள்,

மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை

காலம் ஓர்ந்துஉடன் உறை கடியநோய் அனாள்.

                                                      ---  கம்பராமாயணம்சூர்ப்பணகைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     சிறந்த நீல இரத்தினம்போன்ற கருநிறமுடைய இராக்கதர் அரசனான இராவணனைவேரோடு அழிவு அடையுமாறு சூழ்ச்சிசெய்து அழிக்கும் வலிமை உடையவளும்முற்காலத்தில் உயிரோடு கூடவே தோன்றிதான் செயலை இயற்றுதற்கு உரிய காலத்தை எதிர்பார்த்து எண்ணிஅவ்வுயிரோடு கூடவே தங்கும்கொடிய வியாதியைப் போன்றவளும்ஆகியவள் சூர்ப்பணகை.

 

     தீய செயல்களைச் செய்து கேடு அடைந்தவர்கள் குறித்து "அறப்பளீசுர சதகம்" கூறுவதாவது...

 

வாய்இகழ்வு பேசிமிகு வாழ்வுஇழந் தோன்,சிவனை

     வைதுதன் தலைபோ யினோன்,

  மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடல்எலாம்

     மாறாத வடுவா யினோன்,

 

தாயத்தி னோர்க்குஉள்ள பங்கைக் கொடாமலே

     சம்பத்து இகழ்ந்து மாய்ந்தோன்,

  தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்

     தந்திவடி வாய் அலைந்தோன்,

 

மாயனைச் சபையதனில் நிந்தைசெய்து ஒளிகொள்நவ

     மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,

  வருநகுட னொடுதக்கன் குருடன்

     மகன்வழுதிசிசுபா லனாம்!

 

ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே!

     அவனிபுகழ் அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ----

 

     ஆயும் அறிவாளரொடு தேவர் பணி தாளனே--- இறையருளைப் பெறுகின்ற நன்னெறியை ஆராய்கின்ற அறிஞர்களும்தேவர்களும்பணிந்து வணங்கும் திருவடியை உடையவனே!

 

      அவனி புகழ் அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே--- உலகம் புகழுகின்றஅருமை மதவேள் என்பான்,  எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     வாய் இகழ்வு பேசிமிகு வாழ்வு இழந்தோன்--- வாயினால் பிறரை இகழ்ந்து பேசி,தனது சிறந்த வாழ்வை இழந்தவன்சிவனை வைது தன் தலை போயினான் --- சிவபெருமானை நிந்தனை செய்து தனது தலையை இழந்தவன்மற்றொருவர் தாரத்தில் இச்சை வைத்து உடல் எலாம் மாறாத வடு ஆயினோன்--- பிறர் மனைவியிடம் ஆசை கொண்டு தனது உடம்பு முழுதும் நீங்காத வடுவைக் கொண்டவன்தாயத்தினோர்க்கு உள்ள பங்கைக் கொடாமலே சம்பத்து இழந்து மாய்ந்தோன்--- பங்காளிக்கு உரிய பங்கைக் கொடுக்காமல்,தனக்குரிய செல்வத்தையும் இழந்து மடிந்தவன்தக்க பெரியோர் தமை வணங்கா மதத்தினால் தந்தி வடிவாய் அலைந்தோன்--- தகுதியான சான்றோரை வணங்காத செருக்கினால் யானை வடிவாக அலைந்தவன்மாயனைச் சபை அதனில் நிந்தனை செய்துஒளிகொள் நவமணி முடி துணிந்து மாய்ந்தோன் --- மாயத்தில் வல்ல கண்ணனை அவையிலே பழித்துக் கூறியதனால் கதிர்விடும் நவமணிகளால் ஆன தனது முடியை இழந்து இறந்தவன்  (ஆகிய இவர்கள்முறையே,)  வரு நகுடனோடு --- இந்திர பதவிக்கு வந்த நகுடனும்,  தக்கன்--- தக்கனும்,  அயிராவதன்--- அயிராவதம் என்னும் யானையை உடைய இந்திரனும்குருடன் மகன்--- திருதராட்டிரன் மகனாகிய துரியோதனனும்,  வழுதி--- பாண்டிய மன்னனும்,  சிசுபாலன் ஆம்--- சிசு பாலனும் ஆகிய இவர்களே ஆவார்.

 

       விளக்கம்--- நகுடன் நூறு அசுவமேத யாகம் என்னும் பரிவேள்விகளைச் செய்து இந்திர பதவியைப் பெற்றான். ஏழுமுனிவர் சுமக்கும் சிவிகையிலே ஏறி தேவலோகம் செல்லுகையில்இந்திராணியின் மீது கொண்ட ஆசையால்விரைந்து செல்ல எண்ணிசிவிகையைத் தாங்குபவர்களை விரைந்து செல்லவேண்டி‘சர்ப்ப! சர்ப்பஎன விரைந்து செல்லும்படி பெரியோர்களை மதிக்காமல் ஏவியதால் மலைப் பாம்பாகும்படியாக அகத்திய முனிவரால் சபிக்கப் பெற்றுஅரிதில் பெற்ற இந்திர பதவியை இழந்தான்.

 

     சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றிதக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்அக்கினியின் கையை வெட்டினார்நாமகளின் மூக்கை அரிந்தார்பிரமன் விழுந்தான்தக்கன்எச்சன்முதலியவர்கள் தலையை வெட்டினார்இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர்தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத் தலையை வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.   

 

     இந்திரன் கௌதம முனிவரின் பன்னியான அகலிகை மேல் காதல் கொண்டு,  முனிவரைத் தமது குடிலை விட்டுகாலைக் கடன் கழிக்கச் செல்லுமாறு உபாயம் செய்து போக்கிகௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். இதனை அறிந்ததும் அகலிகையைக் கல்லாகுமாறு கௌதம முனிவர் சபித்தார். இந்திரன் உடம்பெல்லாம் குறி எய்தப் பெற்று வருந்தினான்.

 

     துரியோதனன் தன் பங்காளிகளான பாண்டவரோடு சூதாடிஅவர்களின் உரிமையைக் கவர்ந்தான். பாண்டவர்களோடு மூண்ட பாரதப் போரில்தனது தம்பியர் முதலான அனைவரையும் இழந்து,இறுதியில் தானும் மடிந்தான். 

 

     சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையும் கொண்டிருந்தான்."யார் இவனைத் தொடுகையில் இவனது கைகள் இரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோஅவனால் இவனுக்கு மரணம்" என்று ஆகாயவாணி கூறிற்று. அவ்வாறே பலரும் தொடும்போது மறைபடாத கைகளும் கண்ணும்கண்ணபிரான் தொட்டதும் மறைந்தனஅதனால் இவனைக் கொல்பவன் கண்ணனேஎன்று அறிந்த சிசுபாலனின் தாய்ஏது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாதுஎன்று கண்ணனை வேண்டினாள். அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய கண்ணன் இவன் எனக்கு நூறு பிழை செய்யும் அளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன்.சிசுபாலன்தனக்குக் கண்ணன் எதிரி என்பதை இளமையிலேயே அறிந்து பகைமையைப் பாராட்டிஎப்பொழும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான். இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்து வைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து மணம் செய்துகொண்டது இவனது பகைமை உணர்வை மிகுதியாக்கியது.பின்பு இந்திரப்பிரஸ்தத்தில் நாரதரின் சொற்படி இராஜசூய யாகம் இனிதே நடந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. பீஷ்மர் மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட,கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தருமர் ஆகியோரின் மனதைப் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான்.கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்று ஏசினான். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக் கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்தெறிந்தது.

 

     யானை வடிவாக ஆன பாண்டிய மன்னன் பற்றிய செய்தி விளங்கவில்லை.

 

     தீய வழியிலே செல்வோர் தீமை அடைவது உறுதி. "கெடுவான் கேடு நினைப்பான்" என்பது பழமொழி.

 

தீயவை செய்தார் கெடுதல்நிழல் தன்னை

வீயாது அடி உறைந்து அற்று.

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...