“நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ?
ஆதலினால், நினைந்தபோதே
ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி
வைப்பதறி வுடைமை அன்றோ?
கூற்றுள்ளம் மலையவரும் தண்டலையா
ரே! சொன்னேன்! குடபால் வீசும்
காற்றுள்ள போதெவரும் தூற்றிக்கொள்
வதுநல்ல கருமந் தானே?”
இதன் பொருள் —
கூற்று உள்ளம் மலையவரும் தண்டலையாரே - (மார்க்கண்டனுக்காக) எமனுடைய மனம் கலங்க வந்தருளிய, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
எவரும் குடபால் வீசும் காற்று உள்ளபோது தூற்றிக்கொள்வது நல்ல கருமம் தானே? - யாவரும் மேலைக்காற்று வீசும்போது (தூற்றுவதைத்) தூற்றிக்கொள்வது நல்ல வேலையாகும் அல்லவா? நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ - நேற்று இருந்தவர் இன்று இருப்பது நிச்சயமோ? (இல்லை). ஆதலினால் நினைந்த போதே ஊற்று உள்ள பொருள் உதவி அறம் தேடி வைப்பது அறிவுடைமை அன்றோ - ஆகையால், உள்ளத்தில் எண்ணம் உண்டான பொழுதே ஆதரவாக உள்ள பொருளைக் கொடுத்து அறத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வது அறிவுடைமையாகும்.
கூற்று : உடலிலிருந்து உயிரைக் கூறுபடுத்துவோனுக்கு ஆகுபெயர். ஊற்று - ஆதரவு. குடபால் - மேலைத்திசை. "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் : கரும்பு உள்ளபோதே ஆடிக் கொள்" என்பன பழமொழிகள்.
No comments:
Post a Comment