47. குற்றம் குற்றமே

“மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்?

     நக்கீரர் வலிய ராகி

வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா

     யகரடுத்து விளம்பும் போதில்,

பற்றுளதண் டலைவாழும் கடவுளென்றும்

     பாராமற் பயப்ப டாமல்

நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே

     குற்றம்என நிறுத்தி னாரே.”


இதன் பொருள் –


வெற்றி புனை மீனாட்சிசுந்தர நாயகர் அடுத்து விளம்பும் போதில் – வெற்றியை உடைய  மீனாட்சி சுந்தரேசர் வந்து  தமது பாட்டில் குற்றம் கூறியபொழுது, நக்கீரர்  வலியராகி - நக்கீரர்  மொழித் திறன் உடையவராய், பற்று உள தண்டலை வாழும் கடவுள் என்றும் பாராமல் பயப்படாமல் - (வந்திருப்பது தமக்குப்) பற்றாக உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள் என்று எண்ணாமலும், அஞ்சாமலும், நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே குற்றம் என நிறுத்தினார் - நெற்றி விழியைக் காட்டினாலும் குற்றம் குற்றமே ஆகும் என நிலை நிறுத்தினார்.


தருமி என்னும் அந்தணருடைய வறுமையைத் தீர்க்கச் சோமசுந்தரக் கடவுள் ‘கொங்குதேர் வாழ்க்கை' என்னும் செய்யுளை எழுதிக் கொடுத்தார். அதனைக் கொண்டுசென்று பாண்டியனிடம் காட்டினார் தருமி. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று தான் நினைத்த கருத்து அச் செய்யுளில் இருப்பது கண்ட பாண்டியன் அதற்கென முடித்திருந்த பொன் முடிப்பைச் சங்கத்தாரிடம் பெற்றுக்கொள்ளச் சொன்னான். சங்கத் தலைவரான நக்கீரர், அச் செய்யுள் குற்றமுடையது என்று  திருப்பிவிட்டார். தருமி சோமசுந்தரரிடம் முறையிட்டான். அவர் ஒரு புலவனாக வந்து வினவியபோது ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு' என இருப்பதால் அச் செய்யுள் குற்றமுடையது என்றார் நக்கீரர். சிவபிரான் தம் நெற்றிவிழி காட்ட, நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே என வாதித்தார். பிறகு, நெற்றிவிழியின் வெம்மையால் தாக்கப்பெற்றுப் பொற்றாமரையில் வீழ்ந்தார். புலவர்கள் வேண்ட, அருள்கூர்ந்து நக்கீரரை வெளியேற்றி அகத்தியரால் இலக்கணம் உணரச் செய்து திருத்தினார் சோமசுந்தரப் பெருமான்.


No comments:

Post a Comment

47. குற்றம் குற்றமே

“மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்?      நக்கீரர் வலிய ராகி வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா      யகரடுத்து விளம்பும் போதில், பற்றுளதண் டலைவாழும் க...