பயன் அற்றவை

“அழலுக்கு ளேவிட்ட நெய்யும், பெருக்கான

     ஆற்றிற்க ரைத்தபுளியும்,

அரிதான கமரிற் கவிழ்த்திட்ட பாலும்,வரும்

     அலகைகட் கிடுபூசையும்,


சுழல்பெருங் காற்றினில் வெடித்தபஞ் சும்,மணல்

     சொரிநறும் பனிநீரும்,நீள்

சொல்லரிய காட்டுக் கெரித்தநில வும்,கடற்

     சுழிக்குளே விடுகப்பலும்,


விழலுக் கிறைத்திட்ட தண்ணீரும், முகம்மாய

     வேசைக் களித்தபொருளும்,

வீணருக் கேசெய்த நன்றியும், பலனில்லை,

     விருதா இது என்பர்கண்டாய்!


மழலைப் பசுங்கிள்ளை முன்கைமலை மங்கைதரு

     வண்ணக் குழந்தைமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே.”


இதன் பொருள் –


மழலைப் பசுங்கிள்ளை முன்கை மலைமங்கை தருவண்ணக் குழந்தை முருகா - திருந்தாத மொழிகளை உடைய பச்சைக்கிளியை முன்கையில் வைத்துக் களிக்கும் பார்வதிதேவியின் அழகிய குழந்தையகிய முருகப் பெருமானே! 


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


அழலுக்கு உ(ள்)ளே விட்ட நெய்யும் - நெருப்பில் வார்த்த நெய்யும், 


பெருக்கு ஆன ஆற்றில் கரைத்த புளியும் - வெள்ளமான ஆற்றிலே கரைத்திட்ட புளியும், 


அரிது ஆன கமரில் கவிழ்த்திட்ட பாலும் – அருமையான  நிலவெடிப்பிலே கவிழ்த்த பாலும்,


வரும் அலகைகட்கு இடுபூசையும் - வருகின்ற பேய்களுக்குச் செய்யும் வழிபாடும், 


சுழல் பெருங் காற்றினில் வெடித்த பஞ்சும் - சுழன்று வீசும் பெரிய காற்றிலே வெடித்திருக்கும் பஞ்சும், 


மணல்சொரி நறும் பனி நீரும் - மணலிலே வார்த்த மணமிக்க பனிநீரும், 


சொல்லரிய நீள்காட்டுக்கு எரித்த நிலவும்-  கூறுதற்கரிய பெரிய காட்டிலே பொழிந்த நிலவின் ஒளியும், 


கடல் சுழிக்குள்ளே விடு கப்பலும் - கடலில் சுழித்து நிற்கும் பகுதியிலே செலுத்தப்பட்ட கப்பலும், 


விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் - விழலுக்குப் பாய்ச்சிய குளிர்ந்த நீரும், 


முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – முகப் பார்வையினால் மயக்கும் பரத்தைக்குக் கொடுத்த செல்வமும், 


வீணருக்கே செய்த நன்றியும் - பயனற்றவர்களுக்குச் செய்யும் நலமும், 


பலன் இல்லை - பயன் தராதவை; இது விருதா என்பர் – இவ்வகைச் செய்கை வீண் என்று கூறுவர்.


8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...