“வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய்
மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்
கற்கட்டா கியமடமும் காணியும் செம்
பொனுந்தேடும் கருமம் எல்லாம்
பொற்கொத்தாம் செந்நெல்வயல் தண்டலையா
ரே! சொன்னேன் பொன்னா டாகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
ராட்டினத்தைச் சுமந்த வாறே.”
இதன் பொருள் –-
பொன் கொத்துஆம் செந்நெல் வயல் தண்டலையாரே - பொன்கொத்துப் போல விளையும் செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர் - உறவினர்களை வெறுத்த முதியவராய், உண்மையறிவே ஒரு வடிவம் எனக் காணப்படுவோர், கல்கட்டு ஆகிய மடமும் காணியும் செம்பொனும் தேடும் கருமம் எல்லாம் - கல்லால் கட்டப்பட்ட மடமும் நிலமும் செம்பொன்னும் சேர்க்கிற வேலையெல்லாம், பொன் நாடு ஆகும் சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே ராட்டினத்தைச் சுமந்த ஆறே - பொன்னுலகாகிய சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுதும் இராட்டினத்தைக் கக்கத்தில் இடுக்கிச் செல்லும் தன்மையை ஒக்கும்.
இராட்டினம் : நூல் நூற்கும் கருவி. நூல் நூற்பதனாலே கிடைக்கும் வருவாய் சிறிதாகும். அது வறுமையின் அடையாளம். அக் கருவியைப் பொன்னாட்டிற்கும் சுமந்து செல்வது (பற்றைக் காட்டுவதால்) நகைப்புக்கு இடமானது. பேரின்ப வீட்டிற்குச் செல்லும் நிலையிலுள்ள உண்மை அறிவினர் (மெய்ஞ்ஞானி) உலகத் தொடர்பாகிய மடமும் பொன்னும் நிலமும் தேடுவது நகைத்தற்கு உரியதாகும். உலகப் பற்றை விட்டுவிட்ட உண்மை ஞானி, பொன்னையும் பொருளையும் தேடி அலையமாட்டார். அப்படித் தேடினால், அவர் உண்மை ஞானி அல்ல. பொய் வேடம் பூண்டு இருப்பதாகக் கொள்ளுதல் வேண்டும்.
‘சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே த்தைச் சுமத்தல்’ என்பது பழமொழி.
No comments:
Post a Comment