திருமயிலை - 0703. களபமணி ஆரம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

களபமணி ஆரம் (திருமயிலை)

முருகா!
உம்மையே நினைந்து உருகும் இந்தப் பெண்ணை அணைந்து 
இன்பம் தந்து அருளவேண்டும்.


தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான


களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
     கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங்

கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
     கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும்

வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
     வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே

வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
     மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்

துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
     துயிலதர னாத ரித்த ...... மருகோனே

சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
     துரகதக லாப பச்சை ...... மயில்வீரா

அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
     அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா

அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
     அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


களபம் அணி ஆரம் உற்ற வனசமுலை மீது, கொற்ற
     கலகமத வேள் தொடுத்த ...... கணையாலும்,

கனிமொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற,
     கனல் என உலாவு வட்ட ...... மதியாலும்,

வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி
     வனிதை மடல் நாடி நித்தம் ...... நலியாதே,

வரிஅளி உலாவு துற்ற இருபுயம் அளாவி, வெற்றி
     மலர்அணையில் நீ அணைக்க ...... வரவேணும்.

துளபம் அணி மார்ப, சக்ர தரன், அரி, முராரி, சர்ப்ப
     துயிலதரன் ஆதரித்த ...... மருகோனே!

சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவும், உக்ர
     துரகத கலாப பச்சை ...... மயில்வீரா!

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப,
     அருள் பரவு பாடல் சொற்ற ...... குமரேசா!

அருவரையை நீறு எழுப்பி, நிருதர் தமை வேர் அறுத்து,
     அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.

 
பதவுரை 

      துளபம் அணி மாலை மார்ப --- துளசி மாலையைத் திருமார்பிலே தரித்தவரும்,

     சக்ரதரன் --- சக்கர ஆயுதத்தைத் திருக்கையில் தரித்தவரும்,

     அரி --- பாவங்களைப் போக்குபவரும்,

     முராரி --- முரன் என்னும் அசுரனை அழித்தவரும்,

     சர்ப்ப துயிலதரன் --- ஆதிசேடன் என்னும் பாம்பினை அணையாகக் கொண்டு அறிதுயில் புரிபவரும் ஆகிய திருமால்,

     ஆதரித்த மருகோனே --- விரும்புகின்ற திருமருகரே,

      சுருதி --- எழுதாக் கிளவியான வேதமும்,

     மறை --- மற்ற அறநூல்களும்,

     வேள்வி மிக்க --- வேள்விகளும் மிகுந்து விளங்கும்,

     மயிலை நகர் மேவு --- திருமயிலாப்பூர் என்னும் திருநகரில் எழுந்தருளி உள்ள,

     உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா --- கோப மிக்க குதிரையைப் போன்றதும், தோகையை உடையதும் ஆன பச்சை மயில் ஏறும் வீரரே!

       அளகை வணிகோர் குலத்தில் --- அளகாபுரிக்கு மேலான செல்வத்தினை உடைய வணிகர் ஆகிய சவநேசர் என்பவரின் குலத்தில் உதித்து (பாம்பினால் உயிர் கவரப் பெற்ற)

     வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமர ஈசா --- பூம்பாவை என்னும் பெண்ணின் உயிரை மீள அழைக்க வேண்டி இறைவன் திருவருள் பரவிய திருப்பதிகத்தைத் (திருஞானசம்பந்தராக அவதரித்துச்) பாடிய குமாரக் கடவுளே!

      அரு வரையை நீறு எழுப்பி --- அருமையான கிரவுஞ்ச மலையைப் பொடியாகச் செய்து,

     நிருதர் தமை வேர் அறுத்து --- அசுரர்களை அடியோடு ஒழித்து,

     அமரர் பதி வாழ வைத்த பெருமாளே ---அசுரர்களை தேவர்களை அவர்தம் பதியாகிய பொன்னுலகில் வாழ வைத்த பெருமையில் மிக்கவரே!

      களபம் --- சந்தனக் குழம்பும்,

     மணி ஆரம் உற்ற -- நவமணிகளால் ஆன மாலையையும் தரித்துள்ள,

     வனச முலை மீது --- தாமரை மொட்டுப் போன்ற முலைகளின் மீது,

     கொற்ற --- வெற்றி கொள்ளும்,

     கலக மத வேள் --- கலக்கத்தை உயிரிலே விளைக்கின்ற மன்மதன்

     தொடுத்த கணையாலும் --- விடுத்த மலர்க் கணைகளாலும்,

      கனி கொழி --- பழச்சாறு போன்று இனிமையான சொல்லை உடையவர்களும்,

     மினார்கள் --- மின்னல் போன்று ஒளி படைத்த அழகு உடையவர்களும் ஆகிய பெண்கள்,

     முற்றும் இசை வசைகள் பேச உற்ற --- அனைவரும் பொருந்தக் கூறும் பழிச் சொற்களாலும்,

      கனல் என உலாவு வட்ட மதியாலும் --- நெருப்பைப் போல தகிக்கின்ற முழுநிலவாலும்,

      வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி ---வளப்பம் பொருந்திய மலர்ப் படுக்கையின் மீது மனம் உருகுகின்ற  

     வனிதை மடல் நாடி நித்த நலியாதே --- இப்பெண் ஆகிய நான் மடல் ஏற விரும்பி நாள்தோறும் துன்பம் அடையாமல்,

         வரி அளி உலாவு துற்ற --- ரேகைகளைக் கொண்டுள்ள வண்டுகள் நெருங்கி உள்ள மாலைகளை அணிந்துள்ள

     இரு புயம் அளாவி --- இரு தோள்களாலும் தழுவிக் கலந்து,

     வெற்றி மலர் அணையில் அணைக்க --- அடியேனது எண்ணமானது ஈடேறும்படியாக, இந்த மலர்ப்படுக்கையில் என்னை அணைத்து மகிழ

     நீ வரவேணும் --- தேவரீர் வந்தருள வேண்டும்.

பொழிப்புரை

     துளசி மாலையைத் திருமார்பிலே தரித்தவரும், சக்கர ஆயுதத்தைத் திருக்கையில் தரித்தவரும், பாவங்களைப் போக்குபவரும், முரன் என்னும் அசுரனை அழித்தவரும்,
ஆதிசேடன் என்னும் பாம்பினை அணையாகக் கொண்டு அறிதுயில் புரிபவரும் ஆகிய திருமால் விரும்புகின்ற திருமருகரே,

         எழுதாக் கிளவியான வேதமும், மற்ற அறநூல்களும், வேள்விகளும் மிகுந்து விளங்கும் திருமயிலாப்பூர் என்னும் திருநகரில் எழுந்தருளி உள்ள, கோப மிக்க குதிரையைப் போன்றதும், தோகையை உடையதும் ஆன பச்சை மயில் ஏறும் வீரரே!

     அளகாபுரிக்கு மேலான செல்வத்தினை உடைய வணிகர் ஆகிய சவநேசர் என்பவரின் குலத்தில் உதித்து (பாம்பினால் உயிர் கவரப் பெற்ற பூம்பாவை என்னும்) பெண்ணின் உயிரை மீள அழைக்க வேண்டி இறைவன் திருவருள் பரவிய திருப்பதிகத்தைத் (திருஞானசம்பந்தராக அவதரித்துச்) பாடிய குமாரக் கடவுளே!

      அருமையான கிரவுஞ்ச மலையைப் பொடியாகச் செய்து, அசுரர்களை அடியோடு ஒழித்து, அசுரர்களை தேவர்களை அவர்தம் பதியாகிய பொன்னுலகில் வாழ வைத்த பெருமையில் மிக்கவரே!

         சந்தனக் குழம்பும், நவமணிகளால் ஆன மாலையையும் தரித்துள்ள, தாமரை மொட்டுப் போன்ற முலைகளின் மீது வெற்றி கொள்ளும் கலக்கத்தை உயிரிலே விளைக்கின்ற மன்மதன் விடுத்த மலர்க் கணைகளாலும், பழச்சாறு போன்று இனிமையான சொல்லை உடையவர்களும் மின்னல் போன்று ஒளி படைத்த அழகு உடையவர்களும் ஆகிய பெண்கள் அனைவரும் பொருந்தக் கூறும் பழிச் சொற்களாலும், நெருப்பைப் போல தகிக்கின்ற முழுநிலவாலும், வளப்பம் பொருந்திய மலர்ப் படுக்கையின் மீது மனம் உருகுகின்ற இப்பெண் ஆகிய நான் மடல் ஏற விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல், ரேகைகளைக் கொண்டுள்ள வண்டுகள் நெருங்கி உள்ள மாலைகளை அணிந்துள்ள இரு தோள்களாலும் தழுவிக் கலந்து, அடியேனது கருத்து ஈடேறும்படியாக, இந்த மலர்ப்படுக்கையில் என்னை அணைத்து மகிழ தேவரீர் வரவேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது. தலைவனை எண்ணி வாடுகின்ற பெண்ணின் நிலையைக் கூறுவது.
  
களபம், மணி ஆரம் உற்ற வனச முலை மீது, கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும் ---

களபம் - சந்தனக் குழம்பு.

வசனம் - தாமரை.

பெண்களின் முலைகள் தாமரை மொட்டுப் போன்று இருக்கும். என்வே, "வனச முலை" என்றார். "முளரி வேரி முகை அடர்ந்த முலை" என்றார் சுவாமிமலைத் திருப்புகழில்.

உயிர் உணர்வில் கலகத்தைப் புரிந்து, தனது தொழிலில் வெற்றி கொள்ளுகின்றவன் மன்மதன். அவன் யாரிலும் வலியவன். இறைவனுக்கு மட்டும் அடியவன்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

யயாதி, நகுஷன், புரூரவன், சர்யாதி, முதலிய ராஜரிஷிகளையும்,
காசிபர், சியவனர், கௌதமர், பராசரர், விசுவாமித்திரர் முதலிய பிரம்ம ரிஷிகளையும், இந்திரன், அக்கினி, பிரமன், திருமால் முதலிய இமையவர்களையும் னது மலர்க்கணைகளால் மயக்கி வாகை சூடியோன்.

மன்மதனுக்கு மலர்களே கணைகளாக உள்ளன.

மன்மதன் கணைகள் ஐந்து. அவையாவன --- தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.

இவற்றின் பெயர் முறையே --- உன்மத்தம் (பித்துக் கொள்ளுதல்) மதனம் (புணர்ச்சி விருப்பம்), சம்யோகம் (உள்ளக் கவர்ச்சி), சந்தாபம் (மனத் துன்பம்), வசீகரணம் (வசியப்படுத்துதல்) என்பனவாம்.

இவை செய்யும் அவத்தை --- சுப்ரயோகம், விப்ரயோகம், சோகம், மோகம், மரணம்.

சுப்ரயோகம் --- காதலரைப் குறித்தே சொல்லும் நினைவும் ஆக இருத்தல்.

விப்ரயோகம் --- காதலன் பிரிவினால் வெய்து உயிர்த்து இரங்கல்;

சோகம் --- வெதுப்பும், உணவு தெவிட்டலும்.

மோகம் --- அழுங்கலும், மொழி பல பிதற்றலும்.

மரணம் --- அயற்பும், மயக்கமும்.

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
     மலர்நீலம் இவைஐந் துமே
  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிகஅசோ கம்து யர்செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்
---      கொடி மகர மீன் ஆகும்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்  முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

தலைவன் மீது காதல் கொண்ட தலைவிக்கும் குளிர்ந்த சந்திரனது தண்ணொளி வெப்பத்தையும், தென்றல் காற்று அனல் போன்ற வெம்மையையும் செய்யும். ஈண்டு ஜீவான்மாவை நாயகியாகவும், பரமான்மாவை நாயகனாகவும் வைத்து பரமான்மா ஆகிய நாயகன் மீது காதல் கொண்ட நாயகியாக ஜீவான்மா மிகுந்த தாபத்தை அடைந்து வருந்துகின்றது. இங்ஙனம் நாயகி நாயக பாவத்தில் எழுந்த பாடல்கள் பல.

துள்ளுமத வேள் கைக்  கணையாலே
  தொல்லை நெடுநீலக்     கடலாலே
மொள்ளவரு சோலைக்     குயிலாலே
  மெய்யுருகு மானைத்    தழுவாயே     --- திருப்புகழ்.   

தென்றலையம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.    --- கந்தரந்தாதி.


இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பதவுரை -----

தென் - வண்டுகள் இசை பாடுகின்ற, தலை - தலையிலே, அம்பு - கங்கையை, புனைவார் - அணியும் பரமசிவனது, குமார - மைந்தனே, திமிர - இருள் நிறமுடைய, முந்நீர் - கடல் சூழ்ந்த, தென் - அழகிய, தலை - பூதேவிக்கும், அம்புயம் - செந்தாமரைப் பூவில் வாசம் செய்கின்ற, மின் - சீதேவிக்கும், கோ - நாயகனாகிய திருமாலினது, மருக - மருகோனே, செழு - செழுமை தங்கிய, மறை தேர் - நான்கு வேதங்களும் துதிக்கின்ற, தென்றலை - தெற்கு திசையில் உள்ளதாகிய, அம் - அழகிய, புசக - பாம்பு போன்ற, பூதர - திருச்செங்கோட்டு மலை அதிபனே, எரி - நெருப்பை, சிந்தி - கொட்டிக் கொண்டு, மன்றல் - வாசனை தோய்ந்த, தென்றல் - தென்றல் காற்றானது, ஐ அம்பு - (என் தேகத்தில் மன்மதனது) ஐந்து அம்புகளும், படு - தைத்த, நெறி - புண் வழியே, போய் - நுழைந்து, உயிர் - என் உயிரை, தீர்க்கின்றது - (வருத்தி) நீக்குகின்றது.

பொழிப்புரை ---

வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண் கங்கை நீரைத் தரித்திருக்கும் பரமசிவனின் மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய பூதேவிக்கும், தாமரையில் வசிக்கும் சீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகரே,!வளமையான வேதங்கள் எல்லாம், பூசிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபரே! அக்கினியைக் கொட்டிக் கொண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது.


கனல் என உலாவு வட்ட மதியாலும் ---

முழுநிலவின் குளிர்ந்த ஒளியானது காதல் வயப்பட்டோர்க்கு நெருப்புப் போலத் தகிக்கும்.

பரவையார் மீது கால் கொண்ட நம்பியாரூரர் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல்கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி! 

ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! எனது துன்பத்தைக் கண்ட பின்னும் மேலும்மேலும், எப்போதும் போல் உனது போக்கின்படியே போகாமல் நின்று, உனது இயல்பான குளிர்ந்த கிரணம் அல்லாது இயல்புக்கு மாறான வெப்பக் கதிர்களைத் தூவுவதா!? எனைத் தடுத்து ஆளாகக் கொண்ட இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய நெடிய கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தாய் இல்லையே.

நம்பியாரூரரை நினைந்து வருந்தும் பரவையாரின் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் விளக்குமாறு காண்க.

"ஆரநறும் சேறு ஆட்டி, அரும் பனிநீர்
     நறும் திவலை அருகு வீசி,
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து, மடவார்
     செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று
     அதன்மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
     மலர்வாளி சொரிந்தான் வந்து".

மணமுடைய கலவைச் சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களில் எல்லாம் வீசித் தெளித்தும், குளிரியினது ஈரமுள்ள இளந்தளிர்களை இட்டும், இவ்வாறாகத் தோழிப் பெண்கள் செய்த இவைகளும் இவை போன்றன பிறவும் ஆகிய எல்லா உபசாரங்களும் முன்னரே பெருநெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை வளர்க்குமாறு நெய்யையும் சொரிந்தது போல் ஆயின. அதன்மேலும்,  அந்த அழலைப் பின்னும் வளர்க்க உணவு தருவது போல, மன்மதனும் வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய அம்புகளை மேன்மேலும் எய்தான்.

"மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல்
     மருங்கு ஆற்றாள்: மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள், நிறை ஆற்றும்
     பொறை ஆற்றாள்; நீர்மையோடும்
கலவமயில் என எழுந்து கருங்குழலின்
     பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து, ஆற்றா
     மையின் வறிதே இன்ன சொன்னாள்".

பூம்படுக்கையிலே வீழ்ந்த பரவையார் அந்த மலர் அமளியிலே படுத்துத் துயிலைச் செய்யாதவராய், நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக் கூடியதாய்த் தமது பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றல் காற்றுத் தமது மேலே பட, அதனையும் பொறாதவர் ஆயினர். மேகங்கள் தவழும் வானில் இருந்து ஒளி வீசும் நிலாவினுடைய கதிர்கள் நெருப்பை உமிழ்தலால் அவ் வெப்பத்தையும் பொறுக்க முடியாதவர் ஆயினர். தமக்கு உரிய தன்மையோடு காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக் கொண்டு செலுத்த வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாதவர் ஆயினர். மலரணையில் வீழ்ந்து கிடந்தவர் இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப் போல எழுந்து தமது கரிய கூந்தலின் பாரத்தையும் தாங்கமுடியாத நிலை உடையவராய், இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத வருத்தத்தாலே தமக்குத் தாமே
பின்வருமாறு சொல்வார் ஆயினார்.

கந்தம் கமழ்மென் குழலீர்! இது என்?
     கலைவாள் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
     தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார்
     மலய அனிலமும் எரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவும்
     சடையான் அருள் பெற்று உடையார் அருளார்.      

வாசனை வீசும் மெல்லிய கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்! அமிர்த கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச் சுடுவாயின் ஆயினான். இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து என்மேல் பூசுகின்ற கொடியீர்களே!
நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர். இங்கு வந்து உலாவி நிற்கும் தென்றலோ தீ உருவமாய் வருகின்றது. அழகிய குளிர்ந்த கங்கைப் புனலையும் பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம் சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ என்பால் அருள் செய்கின்றாரில்லை.

வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி, வனிதை மடல் நாடி நித்த நலியாதே ---

செழிப்பான மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட அமளி மீது இருந்தாலும் உறக்கம் வராமல் படிக்கு தலைவனின் நினைவால் பெண்கள் வருந்தி மனம் உருகுவர்.

பெண்கள் மடல் ஏறும் வழக்கமில்லை. ஆனாலும் மடல் ஏறவேண்டும் என்னும் அளவுக்கு அவர்கள் விரகதாபமானது மிகும்.

கடல் அன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப்
பெண்ணின் பெருந் தக்கது இல்.         

என்றார் திருவள்ளுவ நாயனார். கடலைப் போல அளவு அற்று மிகுந்துள்ள காதலால் துன்புற்ற போதும், மடல் ஏற எண்ணாமல் பொறுத்துக்கொள்ளும் பெண் பிறவியைப் போல பெருமைக்கு உரிய பிறவி வேறு இல்லை.

வள்ளியம்மையாரை விரும்பிய முருகப்பெருமான் தான் மடல் ஏறியதாகத் திருப்புகழும், கந்தபுராணமும் கூறும்.

மணம் இரண்டு வகைப்படும். ஒன்று களவு. மற்றொன்று கற்பு. பண்டைக்காலத்தில் களவு மணம் நிகழ்ந்தபின் கற்பு மணம் நிகழும். தமிழ்க் கடவுளாகிய முருகவேள் இந்த இருமணங்களுக்கு இலக்கியமாகவே கற்பு நெறியினாலே தெய்வயானையம்மையாரையும், களவு நெறியிலே வள்ளியம்மையாரையும் மணஞ்செய்து கொண்டருள் புரிந்தனர்.

களவு என்பது பிறர்க்குரிய பொருளை வௌவுதல் போன்றது அன்று. ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் ஊழ்கூட்டத் தனி இடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒருமைப்பட்டு அன்பு வெள்ளத்தில் திளைத்துப் புணர்தலேயாகும். வேதத்தை மறையொன்றாற் போல இம்மணத்தை களவு என்று கூறுவர்.

களவு எனப்படுவது யாதுஎன வினவின்,
வலைகெழு முன்கை வளங்கெழு கூந்தலு
முனைஎயிற்று அமர்நகை மடநல் லாளொடு
தளைவுஅவிழ் தண்தார்க் காமன் அன்னோன்
விளையாட்டு இடமென வேறுமலைச் சாரல்
மானிளம் குழவியொடு கடிந்து விளையாடும்
ஆயமும் தோழியும் மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி மென்மனார் புலவர்.

இக்களவு மனத்தைக் காந்தர்வ மணம் என்றுங் கூறப்படும்.

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
 துறையமை நல்லயாழ்த் துணைமையோ ரியல்பே

என்று தொல்காப்பிய சூத்திரத்தினால் அறிக.

இனி மேற்கண்ட சூத்திரத்துள் மன்றல் எட்டு எனப்பட்டதால், அந்த எட்டு மணத்தின் தன்மையையும் சிறிது விளக்குவாம்.

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று மணம் எட்டாகப் பேசப் படுகின்றது.

இவற்றுள்;

1.       பிரமம் --- ஒத்த கோத்திரத்தவனாய் நாற்பத்தியெட்டு யாண்டு இளமையில் கழித்த (பிரமசரியவிரத மிருந்த) ஒருவனுக்குப் பன்னிரண்டு யாண்டுடையவளாய்ப் பூப்பு எய்திய ஒருத்தியைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தா முன் அணிகலன் அணிப்பித்து தானமாகக் கொடுப்பது.

அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
 ஆறினில் கழிப்பிய அறம் நவில் கொள்கை   --- திருமுருகாற்றுப்படை    


2.       பிரசாபத்தியம் --- உரிய கோத்திரம் உடைய தலைமகனை அழைத்து அவனுக்குரியார் தந்த பரிசத்திற்கு இரட்டி தம்மகட்குத் தந்து தீ முன் மணஞ்செய்து தருவது.

3.       ஆரிடம் --- தாம் புரியும் வேள்வியாதி கருமங்களின் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு, பசு எருது இவைகளைப் பெற்றுக்கொண்டு மகளை மணஞ்செய்து தருவது.

4.       தெய்வம் --- வேள்வியில் வந்த கன்னியைத் தக்க தலைமகனுக்குத் தருவது; அல்லது தம் மகளை வேள்விவேட்பித்துத் தரும் ஆசானுக்குத் தக்கணையாகத் தருவது.

5.       ஆசுரம் --- கொல் ஏறு கோடல், திரி பன்றி யெய்தல், வில்லேற்றுதல் செய்து வீரத்தால் மிக்க ஒருவனுக்கு மகளைத் தருதல். இவைகளில் கொல் ஏறு தழுவுதல் என்பது முரட்டு எருதை வீரத்தால் அடக்குதல்; இது ஆயர்க்குரியது. மற்ற இரண்டும் அரசர்க்குரியது.

6.       இராக்கதம் --- பெண் வீட்டாரிடம் தனது வலிமையைக் காட்டி அவர்கள் இணங்காதிருப்பினும் போராடி தலை மகளை வலிதிற் கொள்வது. (இது அரசர்க்கு உரியது).

7.       பைசாசம் --- துயில்பவளை சென்று கூடுதல் பிசாச மணமாகும். இனி வயதில் மூத்தவளைப் புணர்தலும், இழிந்தவளைப் புணர்தலும் இதன் இனமாகும்.

8.       காந்தர்வம் --- கொடுப்பாரும் கேட்பாருமின்றி ஒத்த ஆணும் ஒத்த பெண்ணும் பண்டை ஊழ் கூட்ட தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒன்றக் கூடுவது ஆகும். இந்த காந்தர்வ மணம் மிகவும் இனிமையானது என்க. அன்பின் பெருக்கினால் நிகழ்வது.

தான் களவொழுக்கத்தினால் எய்திய தலைவியை, இடையில் எய்துதற்குக் காவல் முதலிய தடைகள் நேர்ந்தபோது தலைவன் பெரிதும் வருந்துவன் தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறி வேண்டுவான் அவள் உள்ளம் இரங்கித் தலைவியைக் கூட்டி வைப்பாள். ஒருக்கால் அவ்வாறு செய்யவில்லையாயின், இறுதியாக மடல் ஏறியாவது விரும்பிய கரும்பனைய காரிகையை அடைய முயலும்.

காமம்உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி.                ---- திருக்குறள்.
  
காதலியைப் பெற விரும்பிய காதலன், அவளது உருவத்தையும், பெயரையும், ஒரு படத்தில் எழுதி, தன் ஊரையும் பேரையும் அதன் மேல் எழுதி, அப்படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, எருக்கம்பூ மாலையைச் சூடிக்கொண்டு, பழுத்த இலைகளைத் தலையில் சூடி, வாள் போல் கூர்மையாகவுள்ள பனை மடலாற குதிரைபோல் கட்டி அதன் மீது ஊர்ந்து காதலியின் ஊர்நடுவிற் சென்று, நாற் சந்தியில் நின்று, ஒன்றும் பேசாமல்; பிறர் வசைக்கும் கூசாமல், படத்தில் எழுதிய உருவையே நோக்கி, பகலிரவெனாது உறுதியுடன் நிற்பன். அவனது காதலின் உறுதியைக்கண்ட காதலியின் உறவினர், உழுவலன்புடைய அவனுக்குத் தமது திருமகளை மணஞ்செய்து தருவர்.

ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே.    --- தொல்காப்பியம்.

காய்சின வேல்அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுஉள்ள மீன் இழந்தார், வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து, ஓர் கிழிபிடித்து,
பாய்சின மாஎன ஏறுவர், சீறூர்ப் பனைமடலே,          --- திருக்கோவையார்.

வாமத்து உமைமகிழ் வெங்கைபுரேசர் மணிவரைமேல்
தாமக்குவிமென் முலைமட்டுவார்குழற் றையல்நல்வாய்
நாமக்கடலைக் கலம் இவர்ந்தேறுவர் நானிலத்தோர்
காமக்கடலை மடல்மா இவர்ந்து கடப்பர்களே.       --- திருவெங்கைக்கோவை.
 
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிழுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமங்காழ்க் கொளினே.   --- குறுந்தொகை


வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் அணைக்க நீ வரவேணும் ---

முருகப் பெருமானுக்கு உகந்தது கடப்ப மலர் மாலை ஆகும். அந்தக் கடப்ப மலர்மாலையைச் சூடியுள்ள தோள்களில் தழுவிக் கொண்டு, மலரணையிலே கூடி இன்பத்தைத் தந்து அருள வேண்டும் என்று தலைவியாகிய அருணகிரிநாதப் பெருமான் வேண்டுகின்றார்.

உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா ---

கோப மிக்க குதிரையைப் போன்றதும், தோகையை உடையதும் ஆன பச்சை மயில் ஏறும் வீரர் முருகப் பெருமான். "ஆடும் பரி" என்றார் அநுபூதியில். "உக்ர துரகம்" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

சக்ரப்ர சண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் க்ரவுஞ்ச சயிலம்
தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன் முடி திண்டாட ஆடல் புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்..              --- மயில்விருத்தம்.


அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமர ஈசா ---

திருமயிலை என்னும் திருத்தலத்தில், பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிரோடு மீள அழைத்து, திருஞானசம்பந்தப் பெருமான் புரிந்த அற்புதத்தை இங்கே குறித்தார் அருணை அடிகள்.

திருமயிலாப்பூரிலே சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு வணிகர், சிவன் அடியார். அளகாபுரிக்கு அதிபன் ஆகிய குபேரனுக்கு மேலான செல்வத்தில் சிறந்தவர்.
அவர் திருஞானசம்பந்தப் பெருமானுடைய பெருமைகளைக் கேள்வியுற்று, அவர்பால் பேரன்பு உடையவராய் வாழ்ந்திருந்தார்.   அவருக்கு மகப்பேறு இல்லாமல் இருந்தது. அவர் புரிந்த தவம் அடியார்க்கு அமுது படைத்தலும், அவர்க்கு வேண்டியன செய்தலுமே.அதன் பயனாக அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. 

ஆன நாள்செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும், நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்
ஊனம் இல் புகழ் அடியர்பால் கேட்டு உவந்து உளராய்
        
செல்வம் மல்கிய சிரபுரத் தலைவர் சேவடிக் கீழ்
எல்லை இல்லதோர் காதலின் இடையறா உணர்வால்
அல்லும் நண்பகலும் புரிந்து அவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.

நிகழும் ஆங்கு அவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்
புகழு மேன்மையில் உலகினில் பொலிந்து உளார், எனினும்
மகவு இலாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு;
        
அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து அரன் அடியார்க்கு
உரிய வர்ச்சனை உலப்பு இல செய்த அந் நலத்தால்
கரியவாம் குழன் மனைவியார் வயிறு எனும் கமலத்து
உரிய பூமகள் என ஒரு பெண்கொடி உதித்தாள்.
                                   
எனவரும் பெரியபுராணப் பாடல்களால் சிவநேசரின் பெருமை தெரியவரும்.

பிறந்து குழந்தைக்கு, பூம்பாவை என்னும் திருநாமம் சூட்டினார். பெண் குழந்தை பிறை என வளர்ந்து வந்தது. "என் மகளுக்குக் கணவனாக வாய்க்கிறவனுக்கே எனது அருநிதி உரியது" என்று சொல்லி வந்தார். அந் நாளில் அவரிடம் சிலர் வந்து திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டில் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறினர். சிவநேசர் அவர்களுக்குப் பொன்னையும் மணியையும் வாரி வாரி வழங்கினார். மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், "என் மகள், என் நிதி, எனக்கு உள்ள மற்ற எல்லாவற்றையும், என்னையும் பிள்ளையாருக்கே கொடுத்தேன்" என்று சுற்றத்தாருக்கு எல்லாம் கேட்குமாறு அறிவிக்கை செய்து இன்பக் கடலில் திளைத்தார். 

ஒருநாள், பூம்பாவையார் நந்தவனத்துள் சென்றார்.  பூக்கொய்யும் வேளையில், மல்லிகைப் பந்தரிலே மறைந்து இருந்த பாம்பு தீண்டியது. சாய்ந்த அம்மையாரைச் சேடியர்கள் கன்னிமாடத்துக்குக் கொண்டு சென்றார்கள். மணி, மந்திர, மருந்து முறைகள் செய்யப்பட்டன. பயனில்லை. பூம்பாவையாரிடம் உயிர் நீங்கும் குறிகள் தோன்றின. துயரக் கடலில் அழுந்திய சிவநேசர் ஒருவாறு தெளிவு பெற்று, "இந்த விடத்தை மாற்றுவோருக்கு நிதி குவியல் குவியலாக வழங்கப்படும்" என்று பறை அறைவித்தார். அரச மருத்துவர்களும், மந்திரவாதிகளும் தங்களால் இயன்றவரை மூன்று நாள்கள் முயன்றும் பயன் இல்லை. அது கண்ட சிவநேசர், "பூம்பாவை திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உரியவள். நான் ஏன் வருந்தல் வேண்டும். இவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் பெருமான் வரும்வரை சேமித்து வைத்தல் வேண்டும்" என எண்ணி, அவ்வாறே செய்து, சாம்பலையும் எலும்பையும் குடத்தில் இட்டு, அக்குடத்தை அலங்கரித்து வைத்து இருந்தார்.

அவ் வேளையில், திருஞானசம்பந்தப் பெருமான் திருவொற்றியூரில் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்றார்.  திருமயிலாப்பூரிலே இருந்து திருவொற்றியூர் வரை நடைப்பந்தல் அமைத்து, திருஞானசம்பந்தப் பெருமானை திருமயிலாப்பூருக்கு வரவேற்றார். அப்பொழுது அடியவர்கள், சிவநேசருக்கு உற்றதை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அறிவித்தார்கள்.

திருஞானசம்பந்தப் பெருமான், தம்முடன் இருந்த சிவநேசரை நோக்கி, "என்புக் குடத்தைக் கொண்டு வாரும்" என்றார்.  சிவநேசர் என்புக் குடத்தைக் கொண்டு வந்து கோபுரத்திற்கு எதிரே திருமுன்னர் வைத்தார். அவ் ஊரில் உள்ளாரும், பிற ஊராரும், சமணர்களும், மற்றவரும் அங்கே வந்து சூழ்ந்தார்கள்.  திருஞானசம்பந்தப் பெருமான் திருவருளைச் சிந்தித்து, "மட்டிட்ட" என்னும் திருப்பதிகத்தை எடுத்து, "போதியோ பூம்பாவாய்" என்று பாடலானார். பூம்பாவையார் குடத்தில் உருப்பெற்றார்.  "உரிஞ்சாய வாழ்க்கை" என்னும் திருப்பாட்டைப் பெருமான் பாடியதும்,  குடம் உடைந்தது. பூம்பாவையார் பன்னிரண்டு வயது உடையவராய் வெளித் தோன்றினார். திருக்கடைக் காப்புச் சாத்தப் பெற்றதும், அடியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து அஞ்செழுத்தை ஓதித் துதித்தார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். பூம்பாவையார் திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கி நின்றார். பெருமான் சிவநேசரைப் பார்த்து, "உமது அருமை மகளை அழைத்து வீட்டிற்குச் செல்க" என்றார்.  சிவநேசர் திருஞானசம்பந்தப் பெருமானைத் தொழுது, "இவளைத் திருமணம் செய்து அருளல் வேண்டும்" என்றார்.  திருஞானசம்பந்தப் பெருமானோ, "நீர் பெற்ற பெண், விடத்தால் மாண்டாள். பின்னர் சிவன் அருளால் நாம் தோற்றுவித்தோம்.  உமது உரை தகாது" என்று மறுத்தார். சிவநேசரும் அவர்தம் உறவினரும் மயங்கி நின்றனர். பெருமான் திருக்கோயில் சென்று வழிபட்டார். சிவநேசர், பூம்பாவையாரை வேறு ஒருவருக்கும் மணம் செய்து கொடுக்க விரும்பவில்லை.  அம்மையார் கன்னிமடாத்திலேயே தவம் கிடந்து, சிவனடி சேர்ந்தார்.

திருமயிலைக் கபாரலீச்சரத் திருக்கோயிலின் மேலைக் கோபுரத்து அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் திருஞானசம்பந்தர் இருக்கிறார். திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனிப் பெருவிழாவின்  எட்டாம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் சாம்பலுக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, திருஞானசம்பந்தரின் திருப்பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவை உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் திருமயிலை என்று கூறுவர்.

பங்குனிப் பெருவிழாவின் போது, இத் திருக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவின் எட்டாம் நாளில், அறுபத்துமூன்று நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் சிறப்புப் பெற்றது. அப்போது சிவபெருமான் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஆறாவது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், அடியவர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது.


அரு வரையை நீறு எழுப்பி ---

கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமான் விடுத்து அருளிய ஞானசத்தியாகிய வேல், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியைப் பொடியாக்கியது. "வல்வினையைச் சுட்டு" என்றது மெய்கண்ட சாத்திரம்.

ஆலமாய் அவுணருக்கு, அமரருக்கு அமுதமாய்,
ஆதவனின் வெம்மை ஒளி மீது
அரியதவ முனிவருக்கு இந்துவில் தண் என்று
அமைந்து, அன்பருக்கு முற்றா
மூலமாம் வினை  அறுத்து, அவர்கள் வெம் பகையினை
முடித்து, இந்திரர்க்கும்  எட்டா
முடிவில் ஆனந்தம் நல்கும் பதம் அளித்து, எந்த
மூதண்டமும் புகழும் வேல்...

என்னும் வேல் விருத்தப் பாடலால் இது தெளிய வரும்.

திடவிய நெஞ்சு உடை அடியர் இடும்பை கெடும்படி
    தீயாம் குறை போய் ஆழ்ந்தது......
மகபதி தன்பதி பகை கிழியும் படி அன்று அடல்
    வாள் ஓங்கிய வேல் வாங்கவே.              --- வேல்வாங்கு வகுப்பு.

சுரர்க்கும்முநி வரர்க்கும்மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
          இடுக்கண்வினை சாடும்;
சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
          ஒளிப்பிரபை வீசும்;
துதிக்கும்அடி யவர்க்குஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
          எனக்குஓர்துணை ஆகும்; 
சொலற்குஅரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்துஎறிய உருக்கிஎழும்
          அறத்தைநிலை காணும்;
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
          கழற்குநிகர் ஆகும்;
தனித்துவழி நடக்கும்எனது இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அருகு அடுத்துஇரவு
          பகல்துணைஅது ஆகும்;
திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில்
          நடத்துகுகன் வேலே.                              ---  வேல் வகுப்பு.

நிருதர் தமை வேர் அறுத்து ---

நிருதர்கள் என்றது உயிர்களில் நிறைந்துள்ள ஆணவ மலத்தைக் குறித்தது. முருகப் பெருமானது ஞானசத்தியாகிய வேல் ஆணவ மலத்தை வலி குலையச் செய்தது.

சயிலமொடு சூரன்உடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்டநெடுவேல்..        --- வேல் விருத்தம்.

கருத்துரை

முருகா! உம்மையே நினைந்து உருகும் இந்தப் பெண்ணை அணைந்து இன்பம் தந்து அருளவேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...