திரு வெண்ணி





திரு வெண்ணி

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "கோயில் வெண்ணி" என்று வழங்கப்படுகின்றது.

      தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம், அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில் சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒர் கிளைச் சாலையில் சுமார் 1 கி மீ. சென்று இத்திருத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு.


இறைவர்              : வெண்ணிக்கரும்பர், வெண்ணிநாதர்

இறைவியார்           : அழகிய நாயகி, சௌந்தரநாயகி

தலமரம்               : நந்தியாவர்த்தம்

தீர்த்தம்               : சூரிய, சந்திர தீர்த்தங்கள்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் -சடையானைச் சந்திரனோடு.

                                      2. அப்பர்  -   1. முத்தினைப் பவளத்தை,
                                                           2. தொண்டிலங்கும்

வெண்ணிப் போர்:  வரலாறு படித்தவர்கள் வெண்ணியில் நடந்த போரைப் பற்றி நன்கு அறிவார்கள். தன்னை எதிர்த்த சேர, சோழ மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து கரிகால் சோழன் இந்த வெண்ணியில் தான் போரிட்டு பெரும் வெற்றி கண்டான். இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கரிகால் சோழன் கரும்பேசுவர் ஆலயத்திற்கு பல திருப்பணிகள் செய்தான்.

         ஆலய அமைப்பு: கிழக்கு திசையில் 3 நிலைகளை உடைய கோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்குப் பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் கரும்பேசுவரர் சுயம்புலிங்க உருவில் காட்சி தருகிறார். சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதி ஒரு கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து கட்டியது போல் காணப்படுகிறது. கருவறைச் சுற்றுச் சுவரில் கோஷ்ட தெய்வங்களாக நடன விநாயகர், தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் செளந்தர நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வெளியே சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. தல மரமாக நந்தியாவட்டை உள்ளது.

         சர்க்கரை நோய்க்கு மருந்து: கரும்பில் இருந்து தான் சர்க்கரை எடுக்கப்படுகிறது. நமது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோய் இன்று நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருவது மிகவும் அவசியம். கரும்புக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றிய இத்தலத்து இறைவனையும், அம்பாள் செளந்தர நாயகியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் விரைவில் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

         காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 896
பொன்னிவளம் தருநாடு புகுந்து, மிக்க
         பொருஇல்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்,
பன்னகப்பூண் அணிந்தவர்தம் கோயில் தோறும்,
         பத்தர்உடன் பதிஉள்ளோர் போற்றச் சென்று,
கன்னிமதில் திருக்களரும் போற்றி, கண்டம்
         கறைஅணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி,
முன்அணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி,
         முள்ளிவாய்க் கரைஅணைந்தார் முந்நூல் மார்பர்.

         பொழிப்புரை : காவிரியாறு வளம் பெருக்குகின்ற சோழநாட்டில் புகுந்து, ஒப்பில்லாத மிகுந்த சிறப்புகளையுடைய தொண்டர் கூட்டத்துடன், பாம்பை அணியாய்ப் பூண்ட இறைவரின் திருக்கோயில்கள் தோறும் இருந்தருளும் அன்பர்களுடன், அப்பதியில் உள்ளவர்களும் எதிர்கொண்டு போற்றச் சென்று, பகைவரால் அழித்தற்கரிய மதிற் சிறப்புடைய `திருக்களர்' என்ற பதியையும் போற்றிப் பின்பு, கழுத்தில் நஞ்சுடைய இறைவரின் `பாதாளீச்சுரத்தினையும்' பாடி வணங்கி, முன்னே வழிபட்டுச் சென்ற மற்றப் பதிகளையும் வணங்கிப் போற்றி, முந்நூல் அணிந்த மார்பையுடைய ஞானசம்பந்தர் முள்ளிவாய்க் கரையைச் சேர்ந்தனர்.

         குறிப்புரை : திருக்களரில் இதுபொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருப்பாதாளீச்சுரத்தில் அருளியது, `மின்னியல்' (தி.1 ப.108) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். கோயில் தொறும் என்றது திருவெண்ணியூர், திருவிரும்பூளை முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். முள்ளிவாய்க்கரை என்பது இப்பொழுது ஓடம்போக்கியாறு என வழங்குகிறது. இது காவிரியின் கிளையே. இதனருகே உள்ள ஊர் திருக்கொள்ளம்பூதூராகும்.


2.014 திருவெண்ணியூர்                   பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சடையானை, சந்திர னோடுசெங் கண்அரா
உடையானை, உடைதலை யில்பலி கொண்டுஊரும்
விடையானை, விண்ணவர் தாம்தொழும் வெண்ணியை
உடையானை, அல்லதுஉள் காதுஎனது உள்ளமே.

         பொழிப்புரை :சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன். அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம்.


பாடல் எண் : 2
சோதியை, சுண்ணவெண் நீறுஅணிந் திட்டஎம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை, நினையவல் லார்வினை நில்லாவே.

         பொழிப்புரை :ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன். வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும்.


பாடல் எண் : 3
கனிதனை, கனிந்தவ ரைக்கலந்கு ஆட்கொள்ளும்
முனிதனை, மூவுல குக்குஒரு மூர்த்தியை,
நனிதனை நல்லவர் தாம்தொழும் வெண்ணியில்
இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே.

         பொழிப்புரை :கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானேதலைவன் ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப் பெறும் வெண்ணியில் எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர்.


பாடல் எண் : 4
மூத்தானை, மூவுல குக்குஒரு மூர்த்தியாய்க்
காத்தானை, கனிந்தவ ரைக்கலந்து ஆளாக
ஆர்த்தானை, அழகமர் வெண்ணிஅம் மான்தன்னை
ஏத்தாதார் என்செய்வார் ஏழைஅப் பேய்களே.

         பொழிப்புரை :எல்லாப் பொருள்கட்கும் முன்னே தோன்றிய பழையோன். மூவுலகங்கட்கும் தலைவனாய் விளங்கிக்காப்பவன். தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன். அழகிய வெண்ணி நகரில் விளங்கும் தலைவன். அவனை ஏத்தாதவர் என்ன பயனைக் காணவல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர்.


பாடல் எண் : 5
நீரானை, நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானை, தையலொர் பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்துஉறை
ஊரானை உள்கவல் லார்வினை ஓயுமே.

         பொழிப்புரை :நிறைந்த நீரைக் கொண்ட கங்கையை முடிமிசைத் தரித்தவன். அதனைச் சூழக் கொன்றை மாலையைப் புனைந்துள்ளவன். உமையம்மையை ஓர்பாகமாக உடையவன். புகழ் பொருந்தியவன். விளங்கும் வெண்ணியை விரும்பி உகந்த ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அவனை நினைவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 6
முத்தினை, முழுவயி ரத்திரள் மாணிக்கத்
தொத்தினை, துளக்கம் இலாதவி ளக்குஆய
வித்தினை, விண்ணவர் தாம்தொழும் வெண்ணியில்
அத்தனை, அடையவல் லார்க்குஇல்லை அல்லலே.

         பொழிப்புரை :முத்துப் போன்றவன். முழுமையான வயிரத்திரள் போன்றவன். மாணிக்கக் கொத்துப் போன்றவன். அசைவற்ற சுடராய் உலகத்தோற்றத்துக்கு வித்தாய் விளங்குபவன். தேவர்களால் தொழுது வணங்கப்பெறும் வெண்ணியில் விளங்கும் தலைவனாவான். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 7
காய்ந்தானைக் காமனை யும், செறு காலனைப்
பாய்ந்தானை, பரியகை மாவுரித் தோல்மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை, நினையவல் லார்வினை நில்லாவே.

         பொழிப்புரை :மன்மதனை எரித்தவன். கொல்லும் தொழிலுடைய எமனைச் சினந்து உதைத்தவன். பெரிய கையை உடைய யானையை உரித்து அதன் தோலை மேனிமீது போர்த்தவன். தேவர்கள் வந்து வணங்கும் திருவெண்ணியில் விளங்கும் அக்கடவுளை நினைப்பவர்களின் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 8
மறுத்தானை மாமலை யைமதி யாதுஓடிச்
செறுத்தானைத் தேசுஅழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை, எழில்அமர் வெண்ணிஎம் மான்எனப்
பொறுத்தானைப் போற்றுவார் ஆற்றல் உடையாரே.

         பொழிப்புரை :பகைமை பூண்டவனாய்ப் பெருமை மிக்க கயிலை மலையைப் பொருட்படுத்தாது விரைந்து அதனைச் சினந்து சென்று எடுத்த இராவணனது பெருமை அழியுமாறு அவனுடைய விளங்கும் தோள்கள் முடிகள் ஆகியனவற்றை முரித்தவன். அழகமைந்த வெண்ணியில் உறையும் எம்தலைவன் என வழிபடுபவர் குற்றங்களைப் பொறுப்பவன். அவனைப் போற்றுவார் ஆற்றல் உடையவர் ஆவர்.


பாடல் எண் : 9
மண்ணினை, வானவ ரோடும னிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முக னுங்காணா
விண்ணினை, விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடையவல் லார்க்குஇல்லை அல்லலே.

         பொழிப்புரை :ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன். வானவர்க்கும் மக்களுக்கும் கண் போன்றவன். திருமால் பிரமன் காண இயலாத விண் வடிவானவன். தேவர்களால் வழிபடப் பெறும் திருவெண்ணியில் விளங்கும் தலைமையாளன். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 10
குண்டரும் குணம்இலாத சமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டுஅவை கேட்டுவெகு ளன்மின்,
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்தவல் லார்துயர் தோன்றாவே.

         பொழிப்புரை :குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமயநெறிகளை வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில் உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத் துயர்கள் தோன்றா.


பாடல் எண் : 11
மருஆரும் மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை
உருஆரும் ஒண்தமிழ் மாலை இவைவல்லார்
பொருவாகப் புக்குஇருப் பார்புவ லோகத்தே.

         பொழிப்புரை :மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப்பாடிய ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 198
கருகாவூர் முதலாக, கண்ணுதலோன் அமர்ந்துஅருளும்
திருஆவூர், திருப்பாலைத் துறை,பிறவும் சென்றுஇறைஞ்சி,
பெருகுஆர்வத் திருத்தொண்டு செய்துபெருந் திருநல்லூர்,
ஒருகாலும் பிரியாதே உள்உருகிப் பணிகின்றார்.

         பொழிப்புரை : நெற்றியில் திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள திருஆவூர், திருப்பாலைத்துறை முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம் பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து, திருநல்லூரை ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.

         குறிப்புரை : இப்பாடற்கண் குறிக்கப் பெற்ற திருப்பதிகளுள் திரு ஆவூருக்கு உரிய பதிகம் கிடைத்திலது. ஏனைய இரண்டாம்:

1. திருக்கருகாவூர்: `குருகாம்` (தி.6 ப.15) - திருத்தாண்டகம்.

2. திருப்பாலைத் துறை: `நீலமாமணி` (தி.5 ப.51) -  திருக்குறுந்தொகை.

இனிப் `பிறவும் சென்றிறைஞ்சி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள் மூன்றாம்:

1.    திருஅவளிவண நல்லூர்: - `தோற்றினான்` (தி.4 .59)- திருநேரிசை.

2. திருவெண்ணியூர்:     (அ). `முத்தினை` (தி.5 ப.17) - திருக்குறுந்தொகை.
                                     (ஆ). `தொண்டிலங்கும்` (தி.6 ப.59) - திருத்தாண்டகம்.

3. திருப்பூவனூர்: `பூவனூர்ப் புனிதன்` (தி.5 ப.65)  - திருக்குறுந்தொகை.

திருநாவுக்கரசர்  திருப்பதிகங்கள்

5. 017    திருவெண்ணி           திருக்குறுந்தொகை
                                       திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முத்தி னைப்பவ ளத்தை, முளைத்தஎம்
தொத்தி னை,சுட ரைச்சுடர் போல்ஒளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை, வானவர்
நித்த னைநெரு நல்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : முத்தினை , பவளத்தை , முளைத்த எம் பூங்கொத்தினை , சுடரை , சுடர்போல் ஒளி உடைய பித்தனை , கொல்லும் நஞ்சு போல்பவனை , வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது .


பாடல் எண் : 2
வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்,
கண்ணித் தொத்த சடையர், கபாலியார்,
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டுஅமுது ஊறும்என் நாவுக்கே.

         பொழிப்புரை : வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும் , வெண்திங்களைச் சூடியவரும் , கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும் , கபாலத்தைக் கையில் ஏந்திய வரும் , ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும் .


பாடல் எண் : 3
காற்றி னை,கன லை,கதிர் மாமணி
நீற்றி னை, நினைப் பார்வினை நீக்கிடும்
கூற்றி னைஉதைத் திட்ட குணம்உடை
வீற்றி னை, நெரு நல்ண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : காற்றும் கனலும் ஆவான் ; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான் ; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன் . கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன் . இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது.


பாடல் எண் : 4
நல்ல னை, திகழ் நான்மறை ஓதியை,
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போல்ஒளிர்
கல்ல னை, கடி மாமதில் மூன்றுஎய்த
வில்ல னை,நெரு நல்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : நல்லவனை , விளங்கும் நால்வேதங்களை ஓதும் பிரானை , சொல்வடிவானவனை , ஒளியை , சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை , திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது .


பாடல் எண் : 5
சுடரைப் போல்ஒளிர் சுண்ணவெண் நீற்றனை,
அடரும் சென்னியில் வைத்த அமுதினை,
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை,
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணி மேனியனை , பூவிதழும் ( பிறவும் ) சென்னியிலே வைத்த அமுதனையானை , படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை , இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும் . சடைநெருங்கிய சென்னியில் அமுது ( நீர் - கங்கை ) வைத்தவனை - எனினும் அமையும் . ( வைத்த அமுதினை என்பதை அருங்கேடன் என்பது போலக் கொள்க )

பாடல் எண் : 6
பூத நாதனை, பூம்புக லூரனை,
தாது எனத்தவ ழும்மதி சூடியை,
நாதனை, நல்ல நான்மறை ஓதியை,
வேத னைநெரு நல்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை :பூதங்களுக்குத் தலைவனை , பூக்கள் நிறைந்த புகலூரனை , மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை , தலைவனை , நான்மறை ஓதியவனை , வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .


பாடல் எண் : 7
ஒருத்தி யைஒரு பாகத்து அடக்கியும்
பொருத்திய புனி தன்,புரி புன்சடைக்
கருத்த னை, கறைக் கண்டனை, கண்ணுதல்
நிருத்த னை, நெரு நல்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும் , மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை , கருத்துள் இருப்பவனை , திருநீலகண்டனை , கண்ணுதலானை , நிருத்தம் ஆடுவானை , நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன் .


பாடல் எண் : 8
சடைய னை,சரி கோவண ஆடைகொண்டு
உடைய னை, உணர் வார்வினை தீர்த்திடும்
படைய னை, மழு வாளொடு பாய்தரும்
விடைய னை, நெரு நல்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : சடை உடையவனை , சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை , உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை , பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .


பாடல் எண் : 9
பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னை, இளந் திங்கள்அம் கண்ணியான்,
பருப்ப தம்பர வித்தொழும் தொண்டர்கள்
விருப்ப னை,நெரு நல்கண்ட வெண்ணியே.

         பொழிப்புரை : திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை , கங்கை யாளைச் சடையிற் கொண்டவனை , அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை , திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன் .


பாடல் எண் : 10
சூல வஞ்சனை வல்லஎம் சுந்தரன்,
கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்,
காலன் அஞ்ச உதைத்து,இருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.

         பொழிப்புரை : வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன் ; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான் ; காலன் அஞ்சும்படி உதைத்தவன் ; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன் . இப் பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம் .


பாடல் எண் : 11
இலையி ஆர்கொன்றை சூடிய ஈசனார்,
மலையி னால்அரக் கன்திறல் வாட்டினார்,
சிலையி னால்மதில் எய்தவன் வெண்ணியைத்
தலையி னால்தொழு வார்வினை தாவுமே.

         பொழிப்புரை : இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார் , வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்


6. 059    திருவெண்ணியூர்            திருத்தாண்டகம்

                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தொண்டுஇலங்கும் அடியவர்க்குஓர் நெறியி னாரும்,
         தூநீறு துதைந்துஇலங்கு மார்பி னாரும்,
புண்டரிகத்து அயனொடுமால் காணா வண்ணம்
         பொங்குதழல் பிழம்புஆய புராண னாரும்,
வண்டுஅமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்,
         வானவர்க்கா நஞ்சுஉண்ட மைந்த னாரும்,
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்து வேறுபட்டவராகிய சிவபெருமானார் , தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும் , திருநீறு அணிந்த மார்பினரும் , தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும் , வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும் , தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும் , பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார் .


பாடல் எண் : 2
நெருப்புஅனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்,
         நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தாரும்,
பொருப்புஅரையன் மடப்பாவை இடப்பா லாரும்,
         பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்,
மருப்புஅனைய வெண்மதியக் கண்ணி யாரும்,
         வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்,
விருப்புஉடைய அடியவர்தம் உள்ளத் தாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும் , நெற்றிக் கண்ணரும் , பார்வதி பாகரும் , பூந்துருத்தியில் உறையும் பழைய வரும் , யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடிய வரும் , வளைகுளம் , மறைக்காடு இவற்றில் தங்கியவரும் , தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார் .

   
பாடல் எண் : 3
கைஉலாம் மூவிலைவேல் ஏந்தி னாரும்,
         கரிகாட்டில் எரிஆடும் கடவு ளாரும்,
பைஉலாம் நாகங்கொண்டு ஆட்டு வாரும்,
         பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்,
செய்உலாம் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
         திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்,
மெய்எலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார் , கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும் , சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும் , படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும் , தம்மை வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும் , கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும் , உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர் .


பாடல் எண் : 4
சடைஏறு புனல்வைத்த சதுர னாரும்,
         தக்கன்தன் பெருவேள்வி தடைசெய் தாரும்,
உடைஏறு புலிஅதள்மேல் நாகம் கட்டி
         உண்பலிக்குஎன்று ஊர்ஊரின் உழிதர் வாரும்,
மடைஏறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
         மயிலாடு துறைஉறையும் மணாள னாரும்,
விடைஏறு வெல்கொடி எம் விமல னாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும் , தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும் , உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , நீர்மடையில் ஏறிக் கயல்பாயுமாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும் , காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும் , வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே .


பாடல் எண் : 5
மண்இலங்கு நீர்அனல்கால் வானும் ஆகி
         மற்றுஅவற்றின் குணம்எலா மாய்நின் றாரும்,
பண்இலங்கு பாடலோடு ஆட லாரும்,
         பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்,
கண்இலங்கு நுதலாரும், கபாலம் ஏந்திக்
         கடைதோறும் பலிகொள்ளும் காட்சி யாரும்,
விண்இலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :ஐம்பூதங்களும் , அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும் , பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம், பாசூர் இவற்றில் உறைபவரும், நெற்றிக்கண்ணினரும் , மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும் , பிறையை முடிமாலையாக உடையவரும் , வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .


பாடல் எண் : 6
வீடுதனை மெய்அடியார்க்கு அருள்செய் வாரும்,
         வேலைவிடம் உண்டுஇருண்ட கண்டத் தாரும்,
கூடலர்தம் மூஎயிலும் எரிசெய் தாரும்,
         குரைகழ லால் கூற்றுவனைக் குமைசெய் தாரும்,
ஆடும்அரவு அரைக்குஅசைத்துஅங்கு ஆடு வாரும்,
         ஆலமர நீழல்இருந்து அறம் சொன்னாரும்,
வேடுவராய் மேல்விசயற்கு அருள்செய் தாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும் , விடமுண்ட நீலகண்டரும் , பகைவருடைய மும்மதில்களையும் எரித்த வரும் , திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும் , படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும் , கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும் , வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .


பாடல் எண் : 7
மட்டுஇலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
         மடவா ளவளோடு மான்ஒன்று ஏந்திச்
சிட்டுஇலங்கு வேடத்தர் ஆகி நாளும்
         சில்பலிக்குஎன்று ஊர்ஊர் திரிதர் வாரும்,
கட்டுஇலங்கு பாசத்தால் வீச வந்த
         காலன்தன் காலம் அறுப்பார் தாமும்,
விட்டுஇலங்கு வெண்குழைசேர் காதி னாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத்தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும் , ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .


பாடல் எண் : 8
செஞ்சடைக்குஓர் வெண்திங்கள் சூடி னாரும்,
         திருஆல வாய்உறையும் செல்வ னாரும்,
அஞ்சனக்கண் அரிவையொஒரு பாகத் தாரும்,
         ஆறுஅங்கம் நால்வேத மாய்நின் றாரும்,
மஞ்சுஅடுத்த நீள்சோலை மாட வீதி
         மதில்ஆரூர் புக்குஅங்கே மன்னி னாரும்,
வெஞ்சினத்த வேழம்அது உரிசெய் தாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும் , திருவாலவாய் உறையும் செல்வரும் , மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும் , மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும் , மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .


பாடல் எண் : 9
வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்,
         வானவர்க்கா நஞ்சுஉண்ட மைந்த னாரும்,
களங்கொளஎன் சிந்தை உள்ளே மன்னினாரும்,
         கச்சி ஏகம்பத்துஎம் கடவு ளாரும்,
உளங்குளிர அமுதுஊறி அண்ணிப் பாரும்,
         உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்,
விளங்கிளரும் வெண்மழுஒன்று ஏந்தி னாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :வளமான பிறைசூடும் சடையினரும் , தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும் , என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும் , என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும் , மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும் , ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .


பாடல் எண் : 10
பொன்இலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
         புகலூரும் பூவணமும் பொருந்தி னாரும்,
கொன்இலங்கு மூவிலைவேல் ஏந்தி னாரும்,
         குளிர்ஆர்ந்த செஞ்சடைஎம் குழக னாரும்,
தென்இலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்தும்
         திருவிரலால் அடர்த்துஅவனுக்கு அருள்செய் தாரும்,
மின்இலங்கு நுண்இடையாள் பாகத் தாரும்,
         வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.

         பொழிப்புரை :பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும் , அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும் , குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும் , இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும், மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...