027. தவம் - 10. இலர்பலர் ஆகிய






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில்,  "உலகத்தில் செல்வர் சிலராகவும், வறுமை உடையோர் பலராகவும் இருபத்தற்குக் காரணம் யாது என்றால், தவம் செய்வார் சிலராகவும், செய்யாதார் பலராகவும் இருப்பதே" என்கின்றார் நாயனார்.

     செல்வம் என்பது நுண்ணறிவு உடைமையையும், வறுமை என்பது நுண்ணறிவு இல்லாமையையும் குறித்து நின்றது.

திருக்குறளைக் காண்போம்...

இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர், பலர் நோலா தவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்,

     நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.

         (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃது உடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.                  ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     எண்ணுங்கால் --- ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை --- ஒருவனுக்கு நுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் --- அந் நுட்ப அறிவினை உடையவனாயிருத்தலே அவனுக்கு மிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் --- மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கிய பேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதலுண்டன்றோ! அதனை யொத்ததே அறிவிலார் ஏனைச் செல்வமுடையராயிருந்து மகிழ்தலென்க.


நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.              --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     நுண்ணுணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்று --- நுட்ப உணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல் விண்ணுலகத்தின் இன்பமே போலும் விரும்பப்படும் மேன்மையினை உடையது ; நுண் நூல் உணர்விலராகிய ஊதியமில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று --- நுண்ணிய நூலுணர்வும் இல்லாதவராகிய பயனிலாரொடு நேயம் கொள்ளுதல் நரகத்தில் சேர்தலை ஒக்கும்.


அகத்தாரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்.        --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     மேலைத் தவத்தால் --- முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் --- மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் ; அகத்து ஆரே வாழ்வார் --- இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று எண்ணி அண்ணாந்து நோக்கி --- என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாம் புகப்பெறார் --- தாமாக உள்நுழையப் பெறாராய், புறங்கடை பற்றி --- தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிக வருந்தி இருப்பார் --- தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர்.

         இப் பிறப்பில் தவம் செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர்.


இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்ப,  பெரிதும் தாம்
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்புஅன்றே கல்லாமை அன்று.    ---  நீதிநெறி விளக்கம்.

பதவுரை ---

     இவறன்மை கண்டும் --- ஈயாத் தன்மையைத் தெரிந்து கொண்டிருந்தும், உடையாரை --- செல்வமுடையவர்களை, யாரும் --- எல்லாரும், குறையிரந்தும் குற்றேவல் செய்ப --- பொருள் வேண்டி அதன் பொருட்டுக் கைவேலைகளும் செய்வார்கள், முன்பகல் பெரிதும் தாம் நோலாதார் --- முன்பிறப்பில் தாங்கள் மிகவும் தவம் செய்யாதவர்கள், நோற்றாரைப் பின் செல்லல் கற்பு அன்றே --- தவம் செய்தவர்களைப் பின்சென்று வேண்டுதலன்றோ கல்வியறிவாகும்; கல்லாமை அன்று --- அஃது அறியாமையன்று.

         முற்பகலில் தவம் மிகுதியும் செய்து செல்வராய் உள்ளாரை, அவ்வாறு தவம் செய்து செல்வம் பெறாத இலம்பாட்டார் பின் செல்வதன்றோ கல்வி அறிவின் பயன் அஃது அறியாமையன்று’ என்று உரைகூறுவாருமுளர்:

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...