034. நிலையாமை - 03. அற்கா இயல்பிற்று





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 34 -- நிலையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "நிலைபேறு இல்லாத செல்வத்தை ஒருவன் பெற்றால், அதைக் கொண்டு, நிலையான அறங்களை உடனே செய்திடல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

     நல்வினைப் பயன் உள்ளபோதே செல்வம் வந்து சேரும். அது இல்லாத இடத்து நில்லாது நீங்கும். நிலையில்லாத செல்வத்தைக் கொண்டு, நிலையான பயனைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

     செல்வத்தினால் செய்யப்படும் அறங்களாவன -- பயனை நோக்காது செய்யும் கடவுள் பூசையும், தண்ணீர்ப் பந்தர் வைத்தல், பெரியோர் தங்க மடம் அமைத்தல், உயிர்களைக் காத்தல், கல்விச் சாலைகளை உருவாக்கல், நிழல் மரங்களை வளர்த்தல், அன்ன சத்திரம் வைத்தல் முதலாயின எனப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...

அற்கா இயல்பிற்று செல்வம், அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அற்கா இயல்பிற்றுச் செல்வம் --- நில்லாத இயல்பினை உடைத்துச் செல்வம்,

     அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் --- அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க.

         ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க....

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால், தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க ;
அகடுஉற யார்மாட்டும் நில்லாது, செல்வம்
சகடக்கால் போல வரும்.             ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     துகள் தீர் பெரு செல்வம் --- குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் --- உண்டானால், தொட்டு --- அது தொடங்கி, பகடு நடந்த கூழ் --- ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க --- விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால்; செல்வம் --- பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது --- உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல், சகடக்கால் போல வரும் --- வண்டி உருளை போல மாறிப் புரளும்.

         செல்வம் யாரிடத்திலும் நிலைத்து இராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


என்ஆனும் ஒன்றுதம் கைஉறப் பெற்றக்கால்,
பின்ஆவது என்று பிடித்துஇரா, - முன்னே
கொடுத்தார் உயப்போவர், கோடுஇல்தீக் கூற்றம்
தொடுத்துஆறு செல்லும் சுரம்.            ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     என் ஆனும் ஒன்று --- யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் --- தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று --- மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா --- இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் --- இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் --- நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு --- கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் --- தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.

         இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.

         சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாய் இருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது; அஃதாவது, பெற்ற உடனே என்பது; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.


யானை எருத்தம் பொலிய, குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும், - ஏனை
வினைஉலப்ப, வேறுஆகி வீழ்வர்,தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.      --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     யானை எருத்தம் பொலிய --- யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் --- குடை நிழலில் சேனைத் தலைவராய் --- பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் --- ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனை வினை உலப்ப --- மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள --- தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் --- முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலை குலைவர்.

         யானை எருத்தத்தில் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால், ஏனையோர் நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளுதலைவிட இழிவானதொன்று வேறின்மையின், அடியோடு ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர்.


அரையது துகிலே, மார்பினது ஆரம்,
முடியது முருகுநாறும் தொடையல், புடையன
பால்வெண் கவரியின் கற்றை, மேலது
மாலை தாழ்ந்த மணிக்கால் தனிக்குடை,
முன்னது முரசுமுழங்கு தானை, இந்நிலை
இனைய செல்வத்து ஈங்கு இவர் யாரே
தேவர் அல்லர் இமைப்பதுஞ் செய்தனர்,
மாந்தரே என மயக்கம் நீங்கக்
களிற்றுமிசை வந்தனர் நெருநல், ன்று இவர்
பசிப்பிணி காய்தலின் உணங்கித் துணி உடுத்து
மாசுமீப் போர்த்த யாக்கையொடு
தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே.   ---  ஆசிரியமாலை.

இதன் பொருள் ---

     அரையில் நல்ல ஆடையை உடுத்தி உள்ளார். மார்பில் முத்து மாலை அசைகின்றது. தலையிலே மணம் நிறைந்த மலர்களால் ஆன சரத்தை அணிந்து உள்ளார். பக்கத்திலே பசுமையான வெண் கவரி வீசப்படுகின்றது. மேலே மாலைகளைச் சூடி உள்ள, இரத்தினக் கால்களை உடைய ஒப்பற்ற குடை நிழற்றுகின்றது. அவர் முன்னர் சேனைகள் செல்ல, முரசு முழங்குகின்றது. இப்படிப்பட்ட பெரும்செல்வத்துள் செல்பவர் யார்? தேவராக இருப்பாரோ? இல்லை, இல்லை அவருடைய கண் இமைக்கின்றது. மயக்கம் தீர உணர்ந்தால், ஆம், இப் பெரும் செல்வர் மனிதரே ஆவார் என்று எல்லோரும் வியக்கும்படி, யானை மீது ஏறி நேற்று வந்தவர். இன்று இவர் செல்வமெல்லாம் சுருங்கி, வறியவர் ஆகி, பசி நோயானது வருத்த உள்ளமும், உடலும் வாடி, துணி ஒன்றை இடுப்பிலே கட்டி, அழக்கு மூடிய உடம்போடு தனியாக ஓரிடத்தல் இருந்தார்.


இன்றுளார் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும்--நின்ற
கருமத்த ரல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று.         ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     இன்று உளார் இன்றேயும் மாய்வர் --- இன்றைக்கு இருப்பவர் இன்றே அழியினும் அழிவர், அவர் உடைமை அன்றே பிறருடைமை ஆய் இருக்கும் --- அவர் செல்வம் அவர் இறந்த அப்பொழுதே அயலாருடைய செல்வமாகும், (ஆதலால்) அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார் --- கொடிய எமனது ஆணையின்கீழ் வாழும் மாந்தர், நின்ற கருமத்தர் --- நிலைபெற்ற செயலையுடையராய், தருமம் தலைநிற்றல் நன்று --- அறத்தினை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

         தலைநிற்றல், ஒருசொல்; மேற்கொண்டொழுகுதல்,

தக்கம் இல் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
மிக்க வகையால் அறஞ்செய் கெனவெகுடல
அக்காரம் பால்செருக்கு மாறு.       --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் --- மாறுபாடில்லாத செயல்களை உடைய செல்வத்தை ஒருவன் பெற்றால், அப்பொருள் தொக்க வகையும் முதலும் அது ஆனால் --- அச் செல்வம் திரண்டு வந்த திறனும் அதற்குக் காரணமாயிருப்பதும் அறமே என்று அறியப்படுமானால், மிக்க வகையால் அறம் செய்க என --- பலதிறப்பட்ட நெறியால் அறம் செய் யென்று ஒருவன் சொல்ல, வெகுடல் --- அவனைச் சினத்தல், அக்காரம் பால்செருக்கு மாறு --- சர்க்கரை கலந்த பாலை உட்கொள்ளாது குமட்டித் துப்புதலை ஒக்கும்.

         அறத்தால் பொருள் பெறலாம் என்று அறிபவன் பலதிறப்பட்ட நெறியால் அறம் இயற்றக் கடவன்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...