034. நிலையாமை - 06. நெருநல் உளன்ஒருவன்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 34 -- நிலையாமை

     இந்த அதிகாரத்தில் ஆறாவதாக வரும் திருக்குறளில், "நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லை என்று சொல்லும் நிலையாமையையே பெருமையாக உடையது இந்த உலகம்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து --- ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து,

     இவ்வுலகு --- இவ்வுலகம்.
        
         '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

முனைநாள் இருந்த கண்ணன் முக்கணற்கு ஆட்பட்ட
வனசரனால் மாயும் மறுநாள் ---  எனலால்
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு.         

         வனசரன் --- வேடன். கண்ணபிரான் ஒரு சோலையில் யோகநித்திரை செய்திருக்கையில், மறைவில் நின்ற வேடன் ஒருவன் அவரது கால் பெருவிரலை, ஒரு பறவை என்று நினைத்து அம்பு செலுத்த, அதுபட்டுக் கண்ணபிரான் இறந்துபட்டார் என்பது வரலாறு. இராமாவதாரத்தில் மறைந்து நின்று அம்பு எய்து தன்னைக் கொன்ற திருமாலை வாலி வேடனாகப் பிறந்து, கிருஷ்ணாவதாரத்தில் கொன்றான் என்பாரும் உண்டு. வாலி பரம சிவபக்தன். இதனை நினைந்து முக்கணற்கு ஆட்பட்ட வனசரனால் என்றார் போலும். சரீரம் அநித்தியம் என்பது இதனால் புலப்படும்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஒன்றில்லை உன்செயல் அல்லால் "நெருநல் உளன்ஒருவன்
இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு"தனில்
கொன்று இல்லை என்னுங் கொலை பொயுள்ளேன் புல்லைக் கோ எனைஆள்

நன்றுஇல்லை ஆயின் நிலையில்லை, ஆளின் நரகுஇல்லையே.

இதன் பொருள் ---

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள மன்னவன் ஆகிய திருமாலே! உனது திருவருள் அல்லால் ஒன்றும் இல்லை. நேற்று இருந்தான் ஒருவன், இன்று இல்லை என்று சொல்லப்படும் பெருமையை உடைய இந்த உலகத்தில், ஓர் உயிரையும் கொல்லவில்லை என்னும் கொலைக்கு ஒத்த பொய்யினை உடையவன் நான். என்னை நீ ஆண்டருள்வாய். உனது அருளாகிய நன்மை எனக்கு வாய்க்கவில்லையானால், எனது உயிருக்கு நிலை இல்லை. நீ என்னை ஆட்கொண்டு அருள் புரிவாயானால், எனக்கு நரகத் துன்பம் இல்லை.

     கொன்றில்லை --- ஓருயிரையும் கொல்லவில்லை.  புல்லைக்கோ --- திருப்புல்லாணி மன்னவனே. ஆளின் நரகில்லை --- நீ அடியேனை ஆண்டுகொண்டால் எனக்கு நிரயமில்லை.


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...


இன்றுநன்று நாளைநன்று
     என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
     போகவிட்டுப் போதுமின்;
மின்நயங்கு சோதியான்
     வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான்
     கோடிகாவு சேர்மினே.    ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     இன்றைய நாள் நல்லது. நாளைய நாள் நல்லது
என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது
அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல் போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக.


அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே,
நிழலது ஆர்பொழில் நீலக் குடிஅரன்
கழல்கொள் சேவடி கைதொழுது உய்ம்மினே. --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     யாம் அழகியவர்கள் ; இளையவர்கள் எனும் ஆசையால் ஒழுகி, உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே , நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக.


இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்
வளமை போய்ப் பிணியோடு வருதலால்,
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான்
கிளமையே கிளையாக நினைப்பனே.    --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ளமெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் .


இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க் காக விடம்உண்ட
கண்டனார் காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே.--- அப்பர்.  

இதன் பொழிப்புரை ---

      ஊமர்களே ! இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்ட திருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.


வென்றிலேன் புலன்கள் ஐந்தும்,
     வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே
     செந்நெறி அதற்குஞ் சேயேன்,
நின்று உளே துளும்புகின்றேன்,
     நீசனேன், சனே, ,
இன்று உளேன், நாளை இல்லேன்,
     என்செய்வான் தோன்றினேனே.      ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     எல்லோரையும் ஆளும் பெருமானே! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன். வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன். ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய், உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை. அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான்?


மணம் என மகிழ்வர் முன்னே,
    மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணம் எனச் சுடுவர் பேர்த்தே,
    பிறவியை வேண்டேன் நாயேன்;
பணை இடைச் சோலைதோறும்
    பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே..    ---  சுந்தரர்.
.
இதன் பொழிப்புரை ---

     வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம், பசிய இளமரக் காக்களை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள். பின்பு அவர்தாமே அவர்ளை, ` பிணம் ` என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டில் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர்.  ஆதலின், இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன். அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன்.


கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக் கண்டும் தேறார் விழியிலா மாந்தர்;
குழக்கன்று மூத்து எருதாய்ச் சில நாளில்
விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே. --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண்ணொளி இல்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லாது இருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணால் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை உற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.


காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும்; வாழ்நாள் கழிவதும்;
சாலும் அவ் வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே. --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர் தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுள் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினன். ஆயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.


அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்,
இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,
கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே  ---  திருமந்திரம்.

    
இதன் பொழிப்புரை:

     உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார். பின் தம் இல்லக் கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சிலவற்றை உசாவுதல் செய்தார்; அச் செயலுக்கிடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார். படுத்தவர் படுத்துவிட்டவரே ஆயினார்; மீள எழுந்திருக்கவில்லை.


நன்று உளேன் அல்லேன், யார்க்கும்
     நல்லறம் புரியேன், அன்றிக்
கொன்று உளேன், அற்றம் பார்க்கும்
     கூற்றுவன் விடுவான் அல்லன்,
இன்று உளேன் நாளை இல்லேன்
     யமன் வரும்போது வெள்ளி
மன்று உளே இருந்த சொக்கே!
     வழக்கு நீ என் சொல் வாயே?     ---  மதுரை அந்தாதி.

இதன் பொருள் ---

         வெள்ளியம்பலத்தில் கால்மாறித் திருநடம் புரியும் சொக்கநாதப் பெருமானே! நன்மை எதுவும் என்னிடம் இல்லை. யாருக்கும் நல்ல அறத்தினை நான் புரியவில்லை. அல்லாமல், பல உயிர்களைக் கொன்று உள்ளேன். இன்று உயிரோடு இருக்கின்றேன். நாளை இருக்கப் போவது இல்லை. வாழ்நாள் முடிவு பார்த்து இருக்கும் கூற்றன் என்னை விட்டுவிட மாட்டான். இயமன் வருகின்றபோது, உன்னிடத்தில் முறையிட, என்னிடத்தில் என்ன வழக்கு உள்ளது. நீயே சொல்லி அருள்வாயாக.


நேற்றுளார் இன்று மாளா
     நின்றனர், அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை, அந்தோ!
     போக்கினேன் வீணே காலம்,
ஆற்றிலேன் அகண்டா னந்த
     அண்ணலே! அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து
     திளைக்கவோ? சிறியனேனே.  ---  தாயுமானவர்.

இதன் பொழிப்புரை ---

     நேற்றைப் பொழுதில் நோய் நொடி ஏதுமின்றித் தோற்றத்து நன்றாக இருந்த ஒருவரே, எதிர்பாரா வண்ணம் திடும்மென இன்று மாண்டு ஒழிந்தனர். இத்தகைய உலக நிலையாமையினைக் கண்ணாரக் கண்டும், இறைவனே! நின் திருவடியினைத் தனித் தமிழ்த் திருமாமறைகளினால் போற்றி வழிபடுகின்றிலேன். ஐயோ! வீணாகக் காலம் போக்கினேன். இன்னமும் அடியேனால் அந் நிலையினைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எல்லையற்ற பேரின்பப் பெருமையனே! அளவில்லாத பிறப்பு இறப்புகட்கு உட்படுத்தும் மாயாகாரியம் ஆகிய சேற்றிலே சிறியேன் இன்னமும் வீழ்ந்து துன்பத்தில் அழுந்தவோ?


நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ?
     ஆதலினால், நினைந்த போதே
ஊற்று உள்ள பொருள் உதவி, அறம் தேடி
     வைப்பது அறிவுடைமை அன்றோ?
கூற்று உள்ளம் மலையவரும் தண்டலையா
     ரே! சொன்னேன்! குடபால் வீசும்
காற்றுஉள்ள போது எவரும் தூற்றிக்கொள்-
     வது நல்ல கருமம் தானே?      --- தண்டலையார் சதகம்.

இதன் பொருள் --- 

     கூற்று உள்ளம் மலையவரும்  தண்டலையாரே --- மார்க்கண்டேயருக்காக எமனுடைய மனம் கலங்க வந்து அருளிய திருத்தண்டலை இறைவரே! எவரும் குடபால் வீசும் காற்று உள்ளபோது தூற்றிக்கொள்வது நல்ல கருமம் தானே --- யாவரும் மேலைக்காற்று வீசும்போதே தூற்று வேண்டுவதைத் தூற்றிக்கொள்வது நல்ல நல்ல செயல் ஆகும் அன்றோ?  நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ --- நேற்று இருந்தவர் இன்று இருப்பது உறுதி அல்லவே?, ஆதலினால் --- ஆகையால்,
நினைந்த போதே --- உள்ளத்தில் எண்ணம் உண்டான போதே, ஊற்று உள்ள பொருள் உதவி --- வருகின்ற பொருளைப் பிறர்க்கு உதவி, அறம் தேடி வைப்பது அறிவுடைமை அன்றோ --- அறத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வது அறிவுடைமை ஆகும் அல்லவா?


வென்றிலன் என்ற போதும்,
     வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளன் அன்றோ, மற்று அவ்
     இராமன் பேர் நிற்கும்ஆயின்?
பொன்றுதல் ஒரு காலத்தும்
     தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வர்;
     புகழுக்கும் இறுதி உண்டோ?   --- கம்பராமாயணம், இந்திரசித்து வதைப் படலம்.

இதன் பதவுரை ---

     வென்றிலன் என்ற போதும் --- யான் வெற்றி பெறவில்லையாயினும்; மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின் --- (வெற்றி பெற்ற) அந்த இராமன் பேர் நிற்குமாயின்; யானும் வேதம் உள்ளளவும் நின்றுளன் அன்றோ --- (அவனால்)  வெல்லப் பெற்ற) யானும் வேதம் இருக்கின்ற காலம் வரையில்  நிலைபெற்றுள்ளேன் அன்றோ?  பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ ---  இறத்தல் என்பது
ஒரு காலத்தும் தவிரக் கூடியதோ? அது எவ்வுயிர்க்கும் பொதுவானது அன்றோ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ? --- இன்று இருப்பவர்கள் நாளைக்கு இறப்பார்கள்; ஆனால் புகழுக்கும் அத்தகைய இறுதி உளதாமோ?

     இராமன் பரம்பொருளானால், அப்பரம்பொருளே இராவணனை வெல்வதற்கு மண்ணில் பிறப்பெடுத்து வென்றதெனில்; அதற்காக அதன் பெயர் வேதமுள்ளவும் நிற்குமாயின், அதனோடு சேர்ந்து என் பெயரும் நிற்குமன்றோ என்கின்றான்.

     இறுதி இரண்டடிகள் அற்புதமானவை. இன்றுளேன் நாளையில்லேன் என் செய்வான் தோன்றினேனே  (அப்பர்.தேவா 4:78:1) என்பதனையும், “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்  பொன்றாது நிற்பதொன்றில் (233) என்ற குறளினையும் இதனோடு ஒத்துக் காண்க. மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்ற புறப்பாடல்  அடியும் இங்கு நினைக்கத்தகும். இன்றைக்கு இருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லை என்பார் தாயுமான அடிகள்.


புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.    ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     புல் நுனிமேல் நீர்போல் --- புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை --- யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி --- என்று கருதி, இன்இனியே --- இப்பொழுதே, இப்பொழுதே, செய்க அறவினை --- அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் --- இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான் --- உடனே தன் உறவினர் அலறி அழும்படி இறந்துவிட்டான், எனப்படுதலால் --- என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க.


மன்றம் கறங்க மணப்பாறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.   ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     மன்றம் கறங்க --- பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறை ஆயின --- திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே --- திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய் பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று --- சாவு மேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேரும் எனக் கருதி, உய்ந்து போம் ஆறே --- நன்னிலை உற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார் மனம் --- அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப.

         மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க.


மணமகனே பிணமகனாய்,
         மணப்பறையே பிணப்பறையாய்,
அணியிழையார் வாழ்த்தொலி போய்,
         அழுகை ஒலியாய்க் கழியக்
கணம் அதனிற் பிறந்து இறும் இக்
         காயத்தின் வரும்பயனை
உணர்வு உடையார் பெறுவர், உணர்வு
         ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை. ---  தி.வி. புராணம், பழியஞ்சின படலம்.

இதன் பதவுரை ---

     மணமகனே பிண மகனாய் --- மணப் பிள்ளையே உயிர் கழிந்த பிணமாகவும், மணப்பறையே பிணப் பறையாய் --- மண வாத்தியமே சாப்பறையாகவும், அணி இழையார் வாழ்த்து ஒலி அழுகை ஒலியாய் போய்க் கழிய --- அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே அழுகை ஒலியாகவும் மாறி முடிய, கணம் அதனில் பிறந்து இறும் இக்காயத்தின் வரும் பயனை --- கணப்பொழுதில் தோன்றி மறையும் இவ்வுடலினாலாய பயனை, உணர்வு உடையார் பெறுவர் --- அறிவுடையார் அடைவர்; உணர்வு ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை --- அறிவு சிறிதும் இல்லாதவர்க்கு அப்பயன் எய்துதல் சிறிதும் இல்லை.


காயம்ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்
     காட்டில் ஆற்றின் பெருக்காம்!
  கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
     கானல் காட்டும் ப்ரவாகம்!

மேயபுய பலவலிமை இளமைஅழகு இவை எலாம்
     வெயில்மஞ்சள்! உயிர் தானுமே,
  வெட்டவெளி தனில்வைத்த தீபம் எனவே கருதி,
     வீண்பொழுது போக்காமலே.

நேயம் உடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்
     நினைவு வைத்து, இருபோதினும்
  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க
     நிமலனே! அருள்புரி குவாய்

ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
     அண்ணல்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!           ---  அறப்பளீசுர சதகம்.

 இதன் பொருள் ---

     நிமலனே --- தூயவனே!,  ஆயும் அறிவாளர் பணி பாதனே --- ஆராந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே!  போதனே --- அறிவு வடிவானவனே!  அண்ணல் --- தலைவனே! எமது அருமை மதவேள் - எமது அரிமதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     காயம் ஒரு புற்புதம் --- இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது; வாழ்வு மலை சூழ் தரும் காட்டில் ஆற்றின் பெருக்குஆம் --- இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்;  கருணை தரு புதல்வர் கிளை மனை மனைவி இவையெலாம் கானல் காட்டும் பிரவாகம் --- அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு,  மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்; மேய புய பல வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள் --- பொருந்திய தோள் வலிமை, இளமை, அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும்  மஞ்சள் நிறமுள்ள இளவெயில்; உயிர் தானுமே வெட்ட வெளியில் வைத்த தீபம் --- இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு; எனவே கருதி --- என்றே நினைத்து,  வீண் பொழுது போக்காமல் --- வாழ்நாளை வீணே கழிக்காமல்,  தெளிந்து --- அறிவுத் தெளிவை அடைந்து,  உன் பாதத்தில் நேயமுடனே அன்பொடு நினைவு வைத்து --- உன் திருவடிகளில் நட்பு பூண்டு, உள்ளன்புடன் நினைந்து, இரு போதினும் நீர் கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க அருள் புரிகுவாய் --- காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.

          நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும்,எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது.  எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம். 

     "நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை" என்பார் அருணகிரிநாதர்.

ஐந்துவகை ஆகின்ற பூதபே தத்தினால்
                 ஆகின்ற ஆக்கை, நீர்மேல்
      அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன,நான்
                 அறியாத காலமெல்லாம்
புந்திமகிழ் உறஉண்டு உடுத்து, ன்பம் ஆவதே
                 போந்தநெறி என்று இருந்தேன்,
      பூராய மாகநினது அருள் வந்து உணர்த்த இவை
                 போனவழி தெரியவில்லை..    ---  தாயுமானார்.

     இந்த வாழ்க்கையைக் காட்டாற்றுக்கு உவமைப் படுத்தினார். வாழ்க்கை நிலையானது அல்ல. காட்டாற்றிலே எப்போது வெள்ளம் வரும், எப்போது வடியும் என்று சொல்லமுடியாது. வெள்ளம் வந்ததும் விரைவில் வற்றி விடும்.

     மனைவி, மக்கள், உறவு, செல்வம் இவை எல்லாம் உள்ளது போலத் தோன்றி அழியக் கூடியவையே. வேனில் காலத்தில், நண்பகல் வேளையில், திறந்த வெளியிலே நீர்ப்பெருக்கு உள்ளது போலத் தோன்றும். ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் இருக்காது.  இதனைக் கானல் நீர் என்பர். இது பொய்த்தோற்றமாதலால் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.

     காலையிலும் மாலையிலும் உண்டாகும் இளவெயிலை மஞ்சள் வெயில் என்பது வழக்கம். நிலையாமை கருதி இவ்வாறு சொல்லப்பட்டது.

     திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கானது எப்போது அணையும் என்று சொல்லமுடியாது போ, உடம்பிலே உள்ள உயிரானது எப்போது நீங்கும் என்று நிச்சயித்துக் கூற முடியாது.

     எனவே, வாழ்நாளை வீணாக்காமல், இளமையிலேயே, இறைவனுக்கு ஆட்பட்டு, உள்ளன்போடு, பூவும் நீரும் கொண்டு வழிபட்டு உய்ய வேண்டும்.




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...