மூலம் 5

“உடம்புஒழிய வேண்டின் உயர்தவம் ஆற்று,ஈண்டு

இடம்பொழிய வேண்டுமேல் ஈகை, - மடம்பொழிய

வேண்டின் அறிமடம், வேண்டேல் பிறர்மனை,

ஈண்டின் இயையும் திரு.” -- சிறுபஞ்சமூலம்.


பிறந்து இறந்து உழலும் அல்லல் வாழ்க்கைக்கு இடமாக உள்ள உடம்பை (இனிப் பிறவி வாராமல்) ஒழிக்க வேண்டினால், உயர்ந்த தவத்தைச் செய்வாயாக. வாழும் காலத்தில் நீ இருக்கும் இடம் புகழோடு மேன்மையை அடைய வேண்டுமானால் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவுவாயாக. மெல்லிய வீரம் உனக்குள்ளே நிறைய வேண்டுமானால் அறிய வேண்டுவனவற்றை அறிந்து, தான் அறிந்தமையைப் பிறருக்கு வெளிக் காட்டிக் கொள்ளாமல், மனம் அடங்கி ஒழுகுதல் வேண்டும். பிறர்மனைவியை விரும்பாது ஒழிய வேண்டும். வருவாய் சிறிதே ஆனாலும், நாளும் வந்து சேருமானால், அதுவே நாளடைவில் பெரும் செல்வம் ஆகிவிடும்.


“ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதை இங்கு வைத்து எண்ணுதல் நலம். "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்றும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும், "உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே" என்றும், "செல்வத்துப் பயனே ஈதல்" என்றும் புறநானூறு கூறும். "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்" என்று கலித்தொகை கூறும். "ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" என்று மணிமேகலை அறிவுறுத்தும். இதனால், இசைபட வாழ்தலை ஈகை அறிவிக்கின்றது என்று அறியலாம். பின்வரும் பாடல்களையும் ஓதி உணர்தல் நலம்.


“இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம்போல் பெரிது உவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்(கு)

அடையாவாம் ஆண்டைக் கதவு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

பொருளில்லாத காலத்திலும் இயன்ற அளவில், பொருளுள்ள காலத்தில் மிகவும் மகிழ்ந்து கொடுத்தது போலவே, ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் ஆகிய நற்பண்போடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு சுவர்க்க உலகத்தின் கதவுகள் மூடப்படாது திறந்தே இருக்கும்.


ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்

நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து. ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

சொல்லப்பட்ட அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல் ஆகும். அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உணவு முதலியன உதவித் தாமும் உண்ணுதல் ஆகும்.  இவ்விரு செயல்களாலும் நிறைந்த புகழை அடைந்தவனை, வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கும்.


“ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்

பாடு அறியாதானை இரவு.” ---  நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

பிறர்க்கு கொடுத்து உண்பவன் உலகத்தில் புகழை நிறுத்துவான். அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான். விரும்பாதவர் முன்,ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சி உண்டாக்கும். தனது தகுதி அறியாதவனை இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.


மடம் என்பது மென்மையைக் குறிக்கும். அது மென்மையின் பயனாகிய இணக்கத்தை உணர்த்துகின்றது. தான் கூறுவதை அறியமாட்டாத ஒருவரிடத்தில் அவரது அறியாமையைக் கூறுவதால் பயனில்லை. அறிமடம் என்பது, தான் கூறுவதை அறியும் அறிவு இல்லாதவரிடத்தில் அவரது அறியாமையை அறிந்திருந்தும் அறியாதவர் போன்று இலுத்தல். 


பாவங்களில் கொடியது பிறர்மனை விரும்பல். எனவே,  பிறர்மனை வேண்டேல் என்றார் இந்நூலாசிரியர். வள்ளுவரும், “பகை பாவம் அச்சம் பழி என நான்கும், இகவாவாம் இல் இறப்பான் கண்” என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக. “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என ஔவைப் பிராட்டியார் அருளிதையும் அறிக.


No comments:

057. வெருவந்த செய்யாமை - 02. கடிதோச்சி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பெருஞ்செல்வமானத...