இறைவனிடத்தில் ஓர் அன்பான முறையீடு

 

 

இறைவனிடத்தில் ஓர் அன்பான முறையீடு

-----

 

     புழு என்பது மிகவும் தாழ்ந்த பிறவி. எலும்பு இல்லாத உடம்பைப் பெற்றது. எளிதில் அழியக் கூடியது. மலத்தில் பிறந்து, மலத்திலே உழலக் கூடியது. எனவே, "கடையான பிறப்பு ஆகிய புழுவாய்ப் பிறக்க நேர்ந்தாலும், இறைவா! உனது திருவடி எனது மனத்தில் வழுவாமல் இருக்கவேண்டும்" என்று வேண்டி, "புழுவாய்ப் பிறக்கினும், புண்ணியா! உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்" என்று அப்பர் பெருமான் பாடினார். "மலத்திடையே புழுத்த சிறு புழுக்களினும் கடையேன்" என்று அருளினார் வள்ளல் பெருமான்.

 

     மண்ணில் வாழும் புழுக்களுக்கு, உணவின் பொருட்டு முயலுதல், உண்டல், உறங்கல், இன்ப துன்பநுகர்ச்சி ஆகிய நான்கு குணங்கள் மட்டுமே புழுவுக்குப் பொருந்தி உள்ளன. வேறு நல்ல குணங்கள் ஏதும் அதனிடத்தே இல்லை. மனிதனுக்கும் அந்த நான்கு குணங்கள் உண்டு. ஆனால், மனிதனிடத்திலே பொருந்தி உள்ளதாகிய பொல்லாங்குகள் ஏதும் புழுவினிடத்தில் இல்லை. பிறர் உழைப்பில் வாழ எண்ணுதல், பிறருடைய ஆக்கம் கண்டு மனம் பொறுத்துக் கொள்ள முடியாமை, பிறரை வஞ்சித்தல், பிறரைத் துன்புறுத்தல், பொய் சொல்லுதல், புறம் பேசுதல், பயன் இல்லாத சொற்களைப் பேசுதல் போன்ற இழிகுணங்கள் மனிதனிடத்தில் பொருந்தி உள்ளன. ஆனால், இத்தகைய தீய குணங்கள் ஏதும் புழுவினிடத்தில் இல்லை. எனவே, மனிதன் புழுவினை விடவும் தாழ்ந்தவன் ஆகின்றான். மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதரில் மேம்பட்ட புனிதர்களாக வாழுபவர்களும் இந்த உலகில் உண்டு. அந்தப் புனிதர்களோடு கூடி இருப்பதற்கு, புழுவினும் கடையவன் ஆகிய சாதாரண மனிதனுக்குத் தகுதி இல்லை.

 

"புழுவுக்கும் குணம் நான்கு, எனக்கும் அதே,

புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை,

புழுவினும் கடையேன், புனிதன் தமர்

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே".

 

இது அப்பர் பெருமான் அருளியதோர் தேவாரப் பாடல்.

 

இதன் பொருள் ---

 

புழுவுக்கும் குணம் நான்கு. எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவே, புழுவினும் கடையவன் ஆகிய அடியேன், புனிதனாகிய பரம்பொருளைச் சார்ந்து இருக்கும் அடியார் குழுவினைச் சென்று கூடி இருக்க, எவ்விதத் தகுதியை உடையவன் ஆவேன்?

 

     புனிதனாகிய பரம்பொருளை ஒருவன் அடையவேண்டுமானால், அவனிடத்தில் புனிதமான குணங்கள் பொருந்தி இருக்கவேண்டும். புனிதமான குணங்கள் பொருந்தி உள்ள புனிதர்களைச் சார்ந்து இருந்தால், புழுவினிடத்தில் கூடக் காணப்படாத பொல்லாங்குகள் எல்லாம் நீங்கி, ஒருவன் புனிதனாக முடியும் என்பது கருத்து.

 

     மாணவனாக ஒருவன் ஆதற்கு, மாணவனுக்கு உரிய வேடமும், அதற்கு உரிய புத்தகம் முதலிய சாதனங்களும் தேவை. ஆனால், மாணவனுக்கு உரிய வேடத்தைப் பூண்டு, அதற்குரிய சாதனங்களையும் கைக்கொண்டு இருந்து, மாணவனுக்கு உரிய நிலையில் ஒழுகாதவர்களும் உண்டு என்பதுபோல், அடியார்க்கு உரிய உயர்ந்த வேடத்தையும் பூண்டுகொண்டு, அதற்குரிய சாதனங்களையும் கைக்கொண்டு, உள்ளத்தில் மட்டும் தீய குணங்களை விடாது பொருந்தி இருப்பவர்களும் உண்டு. "வேடநெறி நில்லார், வேடம் பூண்டு என்ன பயன்?" என்று வினவுகின்றார் திருமூல நாயனார். வேடத்தால், நல்லவர்கள் போல் காட்சி தருகின்ற, இந்தப் போலி வேடதாரிகளை நம்பினால் தீமையே விளையும் என்பது உறுதி.

 

     இவர்களை விடுத்து, இறைவனையே நம்பி வந்தால், இறைவனும் கூட, ஏன் என்று கேளாது இருக்கின்றானே. இது அவனுடைய திருவருளுக்குப் பொருந்துமா? என்று இறைவனிடமே முறையிடுகின்றார் வள்ளல் பெருமான்.

 

     திருமுல்லைவாயில் என்னும் சிவத் திருத்தலம், அம்பத்தூரை அடுத்து உள்ளது. அங்கே திருக்கோயில் கொண்டு இருக்கும் மாசிலாமணி ஈசுவரனை வணங்கி, அவரிடத்தில் முறையிடுகின்றார்.

 

 

தேன் என இனிக்கும் திருவருட் கடலே!

     தெள்ளிய அமுதமே! சிவமே!

வான் என நிற்கும் தெய்வமே! முல்லை

     வாயில் வாழ் மாசிலா மணியே!

ஊன் என நின்ற உணர்விலேன், எனினும்

     உன் திருக்கோயில் வந்து அடைந்தால்,

ஏன் எனக் கேளாது இருந்தனை, ஐயா!

     ஈதுநின் திருவருட்கு இயல்போ?

 

     சிதம்பரத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கும், முருகப் பெருமானிடத்தும் இவ்வாறே முறையிடுகின்றார் அருணகிரிநாதப் பெருமான். அவர் அருளிய திருப்புகழைக் காண்போம். படித்து அறிந்துகொள்ள எளிதாக, பதம் பிரித்துத் தந்து உள்ளேன்.

 

நஞ்சினைப் போலும் மன வஞ்சகக் கோளர்களை

     நம்புதல் தீது என  ...... நினைந்து, நாயேன்

 

நண்பு உகு அப் பாதம் அதில் அன்பு உறத் தேடி, உனை

     நங்கள் அப்பா சரணம் ...... என்றுகூறல்

 

உன்செவிக்கு ஏறலைகொல்?, பெண்கள்மெல் பார்வையைகொல்?,

     உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவார் ஆர்?,

 

உன் தனக்கே பரமும், என் தனக்கு ஆர் துணைவர்?,

     உம்பருக்கு ஆவதினின் ...... வந்து தோணாய்.

 

கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய,மிகு

     கண்களிப்பு ஆக விடு ...... செங்கையோனே!

 

கண்கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு

     கஞ்சுகப் பான்மை புனை ...... பொன்செய் தோளாய்!

 

அஞ்ச வெற்பு ஏழுகடல் மங்க, நிட்டூரர் குலம்

     அந்தரத்து ஏற விடு ...... கந்தவேளே!

 

அண்டமுன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர்புலிசை

     அம்பலத்து ஆடும் அவர் ...... தம்பிரானே.

 

இதன் பொழிப்புரை ---

 

         பிரமதேவனை அவனது தலையில் முன்பு நன்றாகக் குட்டி மிக்க களிப்புடன் வீசிய சிவந்த திருக்கரத்தினை உடையவரே! கயல்மீன் போலும் கண்களை உடைய பாவையாகிய குறமகளாகிய வள்ளிபிராட்டியின்  அழகிய தோள்களை  தேவரீரது அழகிய திருத்தோள்களால், உடம்பைத் தழுவியுள்ள சட்டை போன்று இறுகத் தழுவியவரே! கிரவுஞ்ச மலை அஞ்சவும், ஏழு கடல்களும் வற்றி ஒடுங்கவும், கொடுமை நிறைந்த அசுரர் குலத்தை விண்ணுலகு செல்லும்படி விடுத்த கந்தவேளே! அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையாகி, அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடும் அம்பலவாணப் பெருமானுடைய தனிப்பெரும் தலைவரே!

         கொடிய விடத்தைப் போல் மனத்திலே வஞ்சம் கொண்டவர்களை  நம்புதல் தீமையைத் தரும் என்று நினைத்து, நாயினும் கடைப்பட்டவனாகிய அடியேன், நன்மையே பெருகுகின்ற தேவரீரது திருவடிகளில்  உள்ளன்போடு தேடி, தேவரீரை, "எங்கள் அப்பனே! சரணம்" என்று கூறி முறையிடுவது தேவரீரது திருச்செவிகளில் ஏறவில்லையா? தேவிமார்களாகிய வள்ளி தேவயானை மேல் வைத்த பார்வையால் இந்தப் பாராமுகமோ? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் மிஞ்சக் கூடும்? அடியேனைத் தாங்குதல் உமக்கே கடமை ஆகும். தேவரீரை அன்றி அடியேனுக்குத் துணையாக யார் உள்ளனர்? தேவர்களுக்கு அருளியதுபோல் அடியேன் முன்னும் தோன்றி அருள் புரிக.

 

     இறைவனையே நம்புவோம். அவன், தக்க சமயத்தில் நல்லவர்களை அடையாளம் காட்டி அருளுவான். நாமாக முயன்று தேடினால் ஏமாற்றம் மிஞ்சுவதும் உண்டு.


உண்மை அன்பே சிவபத்தி

 

 

 

உண்மை அன்பே சிவபத்தி

-----

 

     பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவராகிய பிசிராந்தையார் என்பவரும் சோழ நாட்டினை ஆண்டிருந்த கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் காணாமலேயே, அவரவருடைய குணநலன்களைக் கேட்ட அளவிலேயே நட்புப் பூண்டு இருந்தனர் என்பது உண்மை நட்புக்கு இலக்கணமாக அமைந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் வாயிலாக அறிவோம்.

 

     உண்மை நட்புக்கு மட்டுமல்ல, ஆசாரிய - சீடன் உறவுக்கு இலக்கணமாக அமைந்த ஒரு நிகழ்வினைப் பார்ப்போம்.

 

     மருள்நீக்கியார் என்னும் பிள்ளைத் திருநாமம் உடையவர், இறைவரால் "திருநாவுக்கரசு" என்று அழைக்கப்பட்டார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரால் "அப்பர்" என்று அழைக்கப்பட்டார். இவர் நடுநாட்டிலே, இப்போதைய பண்ணுருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் என்னும் திருத்தலத்திலே வேளாளர் குலத்தில் பிறந்தவர். திருநாவுக்கரசரின் பெருமைகளைக் கேள்விப்பட்ட அந்தணரின் மேம்பட்டவர் என்று போற்றப்பட்ட அப்பூதி அடிகள், அவர்பால் அன்பு பூண்டு ஒழுகியதோடு மட்டுமல்லாமல், "திருநாவுக்கரசு" என்னும் திருப்பெயரால், தண்ணீர்ப் பந்தல், கிணறுகள், குளங்கள், நிழல் தரும் மரங்கள் முதலான பல அறச்சாலைகளைத் தமது ஊராகிய திங்களூரில் (திருவையாறுக்கு அருகில் உள்ளது) வைத்து நடத்தி வந்தார்.

 

     திங்களூருக்கு வந்த திருநாவுக்கரசு பெருமான் எல்லாவற்றிலும் "திருநாவுக்கரசு" என்னும் பெயர் அழகாக வரையப்பட்டு இருந்ததைக் கண்டார். அது தம்முடைய பெயர் என்று அவர் நினைக்கவில்லை. இத்தனை அறங்களையும் ஒரு பெயராலேயே அமைக்கப்பட்டுள்ளது அவருடைய உள்ளத்தை ஈர்த்தது. அங்குள்ளவர்களை அணுகி, "இந்தத் தண்ணீர்ப் பந்தலை இப்பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார்?" என்று வினவினார். அவர்கள், "ஆண்ட அரசு எனும் பெயரால் செப்ப அரும் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார். தப்பு இன்றி எங்கும் உள சாலை, குளம், கா (சோலை)" என்று சொன்னார்கள். அப்போது தான் தெரிந்தது தண்ணீர்ப் பந்தல் மட்டுமல்லாமல் மற்ற அறச் செயல்களையும் அப்பூதி அடிகளார் "திருநாவுக்கரசு" என்னும் பெயரால் நிறுவி உள்ளது.

 

     அவர் இருக்கும் இடத்தைக் கேட்டு, அங்குச் சென்ற திருநாவுக்கரசு நாயனாரைக் கண்ட அப்பூதி அடிகளார், சிவன் அடியார் வந்தார் என்று மகிழ்ந்தார். அவர்தான் திருநாவுக்கரசர் என்று அறிந்திரார். "நீர் நிகழ்த்தும் அறச் சாலையில் உமது பெயரை எழுதாது, வேறு ஒரு பேர் எழுத வேண்டிய காரணம் என்ன" என்று அப்பூதி அடிகளைக் கேட்டார்.

 

     அப்பூதி அடிகளுக்கு வந்தது பெருஞ்சினம். திருநாவுக்கரசர் என்னும் திருநாமத்துக்கு உரியவர் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு, அவரது பெருமையை அறியாமல், "அந்தத் திருப்பெயரை வேறு ஒரு பேர் என்று எப்படிச் சொல்லலாம். கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு சிவபெருமான் திருவருளால் கரை ஏறிய அவர் பெருமையை அறியாத சிவனடியார் ஒருவர் இருக்கமுடியுமா? நல்ல சிவவேடத்துடன் இருந்து இவ்வாறு சொல்லுகின்ற நீர் யார்?" என்று கேட்டார்.

 

     அதற்குத் திருநாவுக்கரசர், "சிவபெருமானால் சூலை நோய் தந்து ஆளப் பெற்ற தெளிவுணர்வில்லாத சிறியவன் நான் தான்" என்றார்.

 

     அப்பூதி அடிகளுக்குத் தாம் இதுவரை உணர்வு நிலையில் மட்டுமே கண்டு வந்த பெரியவர் இவர்தான் என்றறிந்ததுமே கைகள் தலைமீது ஏறின. கண்கள் நீர் மல்கின. உரை குழறியது. திருநாவுக்கரசரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்ந்து எழுந்தார். கூத்தாடினார். சுவாமிகளின் வருகையை ஆடிப்பாடி எல்லோருக்கும் அறிவித்தார்.

 

     அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளாரின் நிலை இது. அந்த அந்தணரின் இல்லத்தில் அவர் வேண்ட, வேளாளர் குலத்தில் வந்த திருநாவுக்கரசர் அமுது செய்ய ஏற்பாடு ஆனது. தோட்டத்திற்குச் சென்று வாழை இலையை அரிந்து கொண்டு வருமாறு, தனது மகனாகிய மூத்த திருநாவுக்கரசைப் பணிக்கின்றார்கள். "நல்ல தாய் தந்தே ஏவ நான் இது செய்யப் பெற்றேன்" என்று மனம் குளிர்ந்து, தோட்டதிற்குச் சென்ற மூத்த திருநாவுக்கரசைப் பாம்பு தீண்டியது. விடம் தலைக்கு ஏறிச் சாயும் முன்னர், தாம் பறத்தி வாழை இலையைத் தாயிடம் கொண்டு வந்து சேர்த்தான். அவன் உயிர் பிரிகின்றது. மகனின் இறப்பு, அடகளார் அமுது செய்யத் தடையாக இருக்குமே என்று உணர்ந்த அப்பூதி அடிகளார், மகனின் பிணத்தைப் பாயில் மூடி மறைத்து வைத்து, அடிகளாரை அமுது செய்விக்க முற்படுகின்றார். திருநாவுக்கரசர், அமுது செய்யும் முன், திருநீறு அளிக்க, அப்பூதி அடிகளாரின் பிள்ளைகளை அழைத்துவரச் சொல்கின்றார். "மூத்த திருநாவுக்கரசு எங்கே?" என்கின்றார் அப்பர் அடிகள். "இப்போது இங்கு அவன் உதவான்" என்கின்றார் அப்பூதி அடிகளார். திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. உண்மையை அப்பூதி அடிகள்சொல்லியாக வேண்டி வந்த்து. திருநாவுக்கரசர், பாம்பு கடித்து இறந்த அப்பூதி அடிகளாரின் புதல்வனை, "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி உயிரோடு மீண்டு எழச் செய்தார். பிறகும், அந்தணராகிய அப்பூதியார் இல்லத்தில், வேளாளர் குலத்தில் அவரித்த திருநாவுக்கரசர் விருந்து அயர்ந்தார்.

 

     இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது, நட்பிற்கு இனம் ஒரு தடையல்ல. இது மட்டுமல்ல, சமய வாழ்வு, இறைவழிபாடு என்பது அவர்வர் இல்லத்தில் வழிபடுவது, திருக்கோயில் வழிபாடு, தல யாத்திரை, தீர்த்த யாத்திரையோடு மட்டும் முடிவதல்ல. சகல உயிர்களுக்கும் நலம் பயக்கும் அருட்பணிகளைச் செய்வதும் தான் என்பது தெளிவாகும். "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈந்தால், நடமாடக் கோயில் நம்பர்க்கு அது ஆகாது. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈந்தால், படமாடக் கோயில் பகவற்கு அது ஆகும்" என்பது திருமூலர் திருமந்திரம்.

 

     சாலைகளை அமைப்பதும், குளங்களை அமைப்பதும், சோலைகளை வளர்ப்பதும் மக்கட்பிறப்புக்கு மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது. உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வது பூதவேள்வி எனப்படும். மக்களுக்கு நன்மை பயப்பது மானுடவேள்வி எனப்படும். எரி வளர்ப்பது மட்டுமே வேள்வி அல்ல. ஐந்து விதமான வேள்விகள் உண்டு. அவை விரிக்கில் பெருகும்.

 

அப்பூதி அடிகளார் வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்.

 

     1. கண்ணால் காணாத நிலையிலும் கூ, பெரியோர்களின் குணங்களைக் கேட்டதும் அவர்களிடம் அன்பு பூண்டு, அவர்களுக்கு அடிமை ஆதல் நமது முன்னோர் பண்பாடு.

 

       2. தம்மால் மதிக்கப்படும் பெரியோர்களது பெயரைத் தமது மக்களுக்கும் மற்றும் உடைமைகளுக்கும் இட்டு வழங்குதல், அப்பெரியோரை வழிபடும் முறையே ஆகும்.

 

        3. தங்கள் பேரை எழுதி, அறப் பணிகளைச் செய்தல் உலக வழக்கம். ஆனால் தாம் செய்யும், அறங்களைத் தன் பெயரால் செய்யாது, தம்மால் மதிக்கப்படும் பெரியவர் பெயரால் செய்தவது உயர்ந்தோர் குணம்.

 

        4. தண்ணீர்ப் பந்தர்கள் அளவில்லாத மக்கள் எப்போதும் செல்லும் வழியில், வேனில் வெப்பத்தை அகற்றுவதில், அருளுடைய பெரியோர்களது உள்ளம் போலக் குளிர்ச்சி உடையனவாய் அமைக்கப்படுதல் வேண்டும். இன்றைய காலத்தில் தண்ணைர்ப் பந்தர்கள், முதலில் அழகு மிளிர அமைப்பதும், நாளடைவில் சீர்கெட்டு இருப்பதும் காணலாம்.

 

        5. பெரியவர்களைத் தியானப் பொருளாய்க் கொண்டு பலநாள் வழிபட்டு அழைத்து வந்தால், தேடுதல் இல்லாமலேயே ஒருநாள் அவர்கள் வந்து அருளுவார்கள்.

 

        6. சிவனடியாரை "வேறொருவர்" என்று கூறுதல் சிவ நிந்தனை - சைவநிந்தனை ஆகும். அதனை யாரேனும் தம் முன் செய்தால், உண்மை அன்பு கொண்ட சிவனடியார்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார். சினம் கொள்வார். சத்தி நாயனார் சிவ நிந்தனை செய்தோரது நாவை வலித்து அரிந்து தொண்டு செய்தார். தம்மால் அவ்வாறு ஒன்றும் செய்ய இயலாத போது "சிவசிவ" என்று காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு நீங்கிவிட வேண்டும் என்பதும் விதி. சிவனடியாரை நிந்தித்தவர் ஒரு சிவனடியாராக இருக்கமுடியாது என்பதால், அப்பூதி அடிகளுக்குச் சினம் வந்தது.

 

        7. தமது பெருமைகளைத் தாமே பறைசாற்றிக் கொள்வது கீழ்மக்களின் தன்மை. தம்மைச் சிறுமை உடையவராகவே அறிவித்துக் கொள்வது பெரியோர் தன்மை. "பணியுமாம் என்றும் பெருமை" என்னும் திருவள்ளுவ நாயனார் வாக்கு சிந்தனைக்கு உரியது. திருநாவுக்கரசு நாயனார், அப்பூதி அடிகளார் முன், தம்மைச் சிறுமை உடையவராகவே பணிவுடன் காட்டினார். "சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த, தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான்" என்றார் அப்பர்.

 

       8. தமது பெற்றோர் அல்லது பெரியோர் தம்மை ஒரு காரியத்தில் ஏவினால், அதனை உள்ளம் மகிழ்ந்து அன்புடன் ஏற்றுச் செய்வது நல்ல பிள்ளைகளுக்கு அடையாளம். "நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன்" என்று அப்பூதி அடிகளின் மகனாகிய மூத்த திருநாவுக்கரசு, தாய்தந்தை இட்ட பணியைத் தலைமேற்கொண்டு செய்தது சிறப்பு. அத்தகைய பிள்ளைகளைப் பெறுவது பெரும்பேறு. அத்தகைய பிள்ளைகள் உள்ள இல்லம் சிறக்கும்.

 

      9. திருநீறு சாத்த, உமது மூத்த பிள்ளையையும் காட்டும் என்று அப்பர் பெருமான் சொன்னபோது, அப்பூதியார் "இப்போது இங்கு அவன் உதவான்" என்றனர். அது கேட்டதும் அப்பரது செவ்விய திருவுள்ளத்தில் தடுமாற்றம் உண்டானது. பெரியோர்களுக்கு, திருவருள் அவரது உள்ளத்தில் இருந்து உண்மையை உணர்த்தும்.

 

        10. திருநாவுக்கரசர் சிவபெருமானைத் திருப்பதிகம் பாட, தமது மகன் விடம் நீங்கி உயிர்பெற்று எழுந்தது கண்ட அப்பூதி அடிகளார், அது கண்டு மகிழாமல், "பெரியவர் அமுது செய்வதற்குச் சிறிது இடையூறாக இவன் இருந்தான்" என்று சிந்தை நொந்தது, அப்பர் பெருமான்பால் அப்பூதி அடிகளார் கொண்டிருந்த உண்மை அன்பினைக் காட்டுகின்றது.

        11. தாம் அமுது செய்யும்போது அப்பூதியாரையும், அவரது மக்களையும் தம் உடன் இருந்து அமுது செய்யும்படி ஏவினர் திருநாவுக்கரசர். அவர்களும் அவ்வாறே செய்தனர். இது முதிர்ந்த சிவபத்தியின் காரணமா, உலகியல் உணர்வு இல்லாமல், சாதி முதலிய வேறுபாடுகள் யாவற்றையும் மறந்து, அன்பும், சிவபத்தியுமே உள்ளத்தில் கொண்டு, அப்பூதி அடிகள் விளங்கியதை அறிவுறுத்தும்.

 

     12. திருநாவுக்கரசரின் திருநாமத்தை உச்சரித்தே, அப்பூதியார் சிவப் பேற்றை அடைந்தார். இறைவன் திருநாமம் மட்டும் அல்லாது, அடியவர்களின் திருநாமமும் சிறந்த மந்திரம் ஆகும். இப்படி, அடியவர்களை வழிபட்டே பேறு பெற்றவர்கள் உள்ளனர்.

 

 

 

 


கடவுள் உள்ள பொருளா? இல்லாததா?

 

கடவுள் உள்ள பொருளா? இல்லாததா?

-----

 

     கடவுள் உள்ள பொருளா, இல்லாத ஒன்றா என்ற வினாவிற்கு இப்படியும் அப்படியும் விளக்கம் பண்டுதொட்டே நடந்து வருகிறது. கடவுள் என்று ஒரு பொருள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன்.... என்றெல்லாம் சொல்லியாகிவிட்டது. எல்லாரும் உண்டு என்கின்ற ஒன்றை, ஒருவர் இல்லை என்று சொல்வாரானால், அவரை எப்படிக் கொள்ளலாம் என்பதனைத் திருவள்ளுவ நாயனார் பின்வருமாறு சொல்லுகின்றார்...

 

"உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்".

 

     "புல்லறிவாண்மை" என்னும் அதிகாரத்தில் வருவது இத் திருக்குறள். எது புன்மையான அறிவு என்றால், தான் சிற்றறிவினன் ஆக இருந்தே, தன்னைப் பேரறிவினன் ஆக மதித்து, உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல் கொள்ளாமை என்று வரையறுக்கப்பட்டது.

 

     இந்த வரையறை நாத்திகத்திற்கும் பொருந்தும். கடவுள் கொள்கை உடையவர்க்கும் பொருந்தும். இரண்டிற்கும் அறிவு முதிர்ச்சி வேண்டும். அறிவு முதிர்ச்சி இல்லாதது தான் சிக்கலுக்குக் காரணம்.

 

     இத் திருக்குறளின் பொருள் ---

 

     "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது சேந்தன் திவாகர நிகண்டு. உலகத்தார் என்றாலே, அதில் வாழுகின்ற உயர்ந்தோரையே குறிக்கும். உயர்ந்தோர் என்றால், அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்தவரைக் குறிக்கும். எனவே, உலகத்தில் உள்ள உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளை தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுகின்ற அறிவிலியானவன், மனிதனாக வைத்து எண்ணப்படான். அவன் உலகத்தில் காணப்படுவதோர் பேய் எனலாம்.

 

     பேய் என்பது கண்ணால் காணப்படாதது. இந்த அறிவிலியானவன் கண்ணால் காணப்படுகின்றவன்.

 

     "அல்லை ஈது அல்லை ஈது என மறைகளும் அன்மைச் சொல்லினால் துதிக்கும்" என்று திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கும். கடவுள் இதுவா என்றால், இது அல்ல, இதுவா என்றால், இதுவும் அல்ல, இதுவா என்றால் இதுவும் கூட அல்ல, என்று எதிர்மறைச் சொல்லினால் வேதங்களே இறைவனைத் துதித்து மெலிவடைகின்றன என்பது இதன் பொருள்.

 

     "வேதங்கள், ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே" என்பார் மணிவாசகப் பெருமான். அளக்கலாகாத அறிவுப் பொருளாக உள்ளவன். அவனை அறிவு வடிவானவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்த பின்னர், அவன் எப்படி இருப்பான் என்பதை அவர்களாலும் சொல்ல முடியாது. இதனால்தான், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்னும் பரிபாஷை உண்டாகியது.

 

     "பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால், போக்கு இலன், வரவு இலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால், கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை" என்பது மணிவாசகப் பெருமானால் அருளப்பட்ட திருவாசகம்.

 

     "திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிபெருமானே!, நினைப்பதற்கும் அருமையானவனே! உன்னை எல்லாப் பொருள்களிலும் நின்றவன் என்று பலரும் சொல்வதும், போக்கு என்னும் இறப்பு நிலையும், வரவு என்னும் பிறவி நிலையும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப் பாடல்களோடு உன்னைப் பாடுவதும், ஆனந்தக் கூத்து ஆடுவதும் தவிர, உன்னை நேரே பார்த்து அறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை" என்பது மேற்குறித்த திருவாசகப் பாடல் வரிகளின் பொருள்.

 

     இது குடம், இது படம் என்பதெல்லாம் நம்மால் கண்ணால் கண்டு அறியப்படுகின்ற பொருள்கள். காணும் பொருள்கள் அனைத்தும், தோன்றி, நின்று, மறையக் கூடியவையே. நிலையில்லாத பொருள்கள் எவையும் பரம்பொருள் ஆக மாட்டா. தோற்றமும், அழிவும் இல்லாத ஒன்றை நாம் நம்முடைய கண்ணாலோ, அறிவாலோ சுட்டி அறிய முடியாது.  றெனவே, அறிவாலும், சொல்லாலும் அறிந்து கொள்ள முடியாத இறைவனை "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் நம்முடைய சொல்லையும், மன உணர்வையும் கடந்து நிற்கின்றவன்.

 

     ஆற்றல் மிகுந்தவை அனைத்தும் கண்ணுக்குப் புலானாகாதவையே. கண்ணுக்குப் புலனாகாத ஒன்றை, ஒரு வடிவத்தில்தான் உணர்ந்துகொள்ள முடியும். மின்சாரம் கண்ணுக்குப் புலனாகாதது. அதன் இருப்பை அதற்குரிய கருவி ஒன்றின் மூலமாகத்தான் விளங்கிக் கொள்ளமுடியும். மின்சாரம் இருப்பதாலேயே, அந்தக் கம்பியை மின்சாரம் என்று சொல்லமுடியுமா. இல்லை, கம்பி வேறு, மின்சாரம் வேறு. மின்சாரத்தின் இருப்பைக் கம்பியின் மூலமாக உணர்ந்துகொள்கிறோம். அதபோலத்தான் இறை ஆற்றல் என்பது உலகப் பொருள்களில் விளங்கித் தோன்றும். அதை உணருகின்ற ஆற்றல் உள்ளவர்க்கு அது விளங்கும். இல்லாதவர்க்கு அது இல்லாததாகவே இருக்கும். மின்சாரத்தை உணர, கம்பி எப்படித் தேவையோ, அதுபோல இறையை உணர உள்ளம் தேவை.

 

"உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை,

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே".

 

என்னும் திருமந்திரத்தால் இதனை உணர்த்தினார், நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.

 

     உயிர் உணர்வால் உயிரின் உள்ளே உணரப்படும் இறைவனை, வெளி ஆரவாரத்தால் யாரும் கலந்து அறிய இயலாது. இதனை," உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை, கள்ளத்தின் ஆரும் கலந்து அறிவார் இல்லை" என்றார் திருமூல நாயனார்.

 

     கடவுளின் இருப்பை இவ்வாறு நாம் தெளிந்துக் கொள்ளமுடியும். மின்சராத்தின் பயன்பாடு அந்தந்தக் கருவிக்கு ஏற்ப அமைவதுபோல், இறைவன், தன்னை யார் யார் எந்தெந்த உருவில் வழிபடுகின்றார்களோ அந்த உருவின் மூலமாக வெளிப்பட்டு அருள்வான். ஆக, கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்தது அறிவு அற்ற செயல் என்றால், மின்சாரத்தை கம்பியின் மூலமாகவும் கருவிகளின் மூலமாகவும் பயன்படுத்துவதும் அதைப் போலத்தான்.

 

     புத்தகம் என்ற அழியக்கூடிய ஒரு பொருள் இல்லாமல், ஒருவனுக்கு அறிவு விளங்காது. அப்படி விளங்குகின்ற அறிவுக்கு வடிவம் கற்பிக்க முடியாதுதானே.

 

     இல்லையென்று சொல்லுகின்ற கடவுளை உண்டு என்று சொல்வது பொருளற்றது. அதுபோலவே, ஒரு பொருளின் மூலமாக விளங்குகின்ற ஒரு ஆற்றலை, பண்பை, இல்லை என்று சொல்வதும் பொருளற்றதே.

 

     கடவுளின் இருப்பை உண்மையில் காணாதவர்கள் கண்டுவிட்டதாகப் பிதற்றுகின்றார்கள். உண்மையை உணராதவர்கள், கடவுள் உண்மையை உணராமையால் பிதற்றுகின்றார்கள்.

 

சிவவாக்கியர் பாடல் ஒன்றைக் காண்போம்...

 

இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்!

இல்லைஎன்று நின்றதுஒன்றை, இல்லை என்னல் ஆகுமோ?

இல்லை,அல்ல, ஒன்றும்அல்ல, இரண்டும்ஒன்றி நின்றதை

எல்லைகண்டு கொண்டபேர் இனிப் பிறப்பது இல்லையே.

 

இப்பாடலின் பழைய பொருள் ஒன்றை அப்படியே, இங்கே தருகின்றேன்...

 

     சர்வ வியாபகப் பொருளாகிய கடவுள் இல்லை, இல்லை என்று அக்கடவுளின் தன்மையை உணர்ந்தால் போன்றும், அங்ஙனம் உணர்ந்த காலத்தில் யாதும் இல்லை என்று அறிந்தமை போலும் சொல்லி வழக்காடுகின்ற அறிவீனர்களாகிய நாத்திகர்களே!  இல்லை என்று சொல்லும் சொல்லின் பயனாக உண்டு என்பது உண்டு என்பது ஒன்றாகிய சொல் இருக்கின்றமையின், இல்லை என்று சொல்லப்பட்டதாய் நிற்கின்ற அக்கடவுளை இல்லையென்று சொல்லல் ஆகாது. அப் பொருளின் உண்மையை விசாரிக்கப் புகுங்கால், இல்லாத பொருள் என்றும், இருந்தாலும் ஒன்று என்றும், இரண்டு என்றும் சொல்லாதபடி கலந்து இருக்கின்ற பொருள் என்றும் வெளிப்படும். அப்படிப்பட்ட பொருளின் உண்மையை உள்ளபடியே ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்களான ஞானிகள் இனி உலகத்தின்கண் வந்து பிறவார்.

 

     உண்டு என்று நாட்டவும் அறிவு தேவை. இல்லை என்று நிறுவவும் அறிவு தேவை. அந்த அறிவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்.....

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள்

மெய்த்தன்மை காண்பது அறிவு.

 

என்று திருவள்ளுவ நாயனார் அருளினார்.

 

 

 

 

 

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...