மதுரை --- 0969. புருவச் செஞ்சிலை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

புருவச் செஞ்சிலை (மதுரை)

 

முருகா! 

விலைமாதர் வசமாகி அழியாமல்

தேவரீரது திருவடியைப் பணிய அருள்.

 

 

தனனத் தந்தன தந்தன தனதன

     தனனத் தந்தன தந்தன தனதன

          தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான

 

 

புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி

     யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி

          பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே

 

புகலச் சங்கிசை கண்டம தனிலெழ

     உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்

          புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே

 

பருகித் தின்றிட லஞ்சுக மெனமன

     துருகிக் குங்கும சந்தன மதிவியர்

          படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே

 

பலருக் குங்கடை யென்றெனை யிகழவு

     மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு

          பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ......பணிவேனோ

 

திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை

     வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்

          சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு

 

திரமிற் றங்கிய கும்பக னொருபது

     தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு

          சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ......மருகோனே

 

மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்

     சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை

          மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ......முருகோனே

 

வடவெற் பங்கய லன்றணி குசசர

     வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்

          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

புருவச் செஞ்சிலை கொண்டுரு கணைவிழி

     எறிய,கொங்கை இரண்டு எனும் மதகரி

          பொரமுத்தம் தரும் இங்கித நயவிதம் ...... அதனாலே,

 

புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழ,

     உருவச் செம் துவர் தந்த அதரமும்,அருள்

          புதுமைத் தம்பலமும்சில தர வரும் ...... மனதாலே

 

பருகித் தின்றிடல்ம் சுகம் என மனது

     உருகி,குங்கும சந்தன மதி வியர்

          படிய,சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கல ...... வியினாலே,

 

பலருக்கும் கடை என்று எனை இகழவும்,

     மயலைத் தந்டு அரு மங்கையர் தமை,வெகு

          பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி ...பணிவேனோ?

 

திருவைக் கொண்டு ஒரு தண்டக வனமிசை

     வரஅச்சம் கொடு வந்திடும் உழைஉடல்

          சிதறக் கண்டக வெம் கரனொடுதிரி ...... சிரனோடு,

 

திரமில் தங்கிய கும்பகன்ருபது

     தலைபெற்று உம்பரை வென்றிடும் அவனொடு

          சிலையில் கொன்ற முகுந்தன் நல்அகம் மகிழ்...மருகோனே!

 

மருவைத் துன்றிய பைங்குழல் உமையவள்,

     சிவனுக்கு அன்பு அருள் உம்பிகை,கவுரிகை,

          மலைஅத்தன் தரு சங்கரி,கருணைசெய் ......முருகோனே!

 

வடவெற்பு அங்கு அயல் அன்று அணி குச சர

     வணையில் தங்கிய பங்கய முக! தமிழ்

          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.

 

பதவுரை

  

            திருவைக் கொண்டு ஒரு தண்டகவன(ம்) மிசை வர--- திருமகள் ஆகிய சீதாதேவியைக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியத்திற்குஇராமபிரான்இலக்குவனுடன் வர,

 

            அச்சம் கொடு வந்திடும் உழை உடல் சிதற--- (அந்த இடத்திற்கு) அச்சத்தோடு,வந்து உலாவிய மாரீசன் ஆகிய பொன்மான் உடல் சிதறிப் போக,

 

            கண்டக வெம்கரனொடு --- கொடியவன் ஆன கரனும்,

 

            திரிசிரனொடு--- திரிசிரனும்,

 

            திரமில் தங்கிய கும்பகன்--- வலிமை பொருந்திய கும்பகருணன் ஆகியவர்களோடு,

 

            ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு--- பத்துத் தலைகளைப் பெற்று இருந்து தேவர்களை வென்றவன் ஆன இராவணனோடுயாவரையும்,

 

           சிலையில் கொன்ற முகுந்தன் நலம் மகிழ் மருகோனே --- வில்லினால் கொன்று அழித்த முகுந்தன் ஆகிய இராமச்சந்திரன் உள்ளம் மகிழ்கின்ற திருமருகரே!

 

            மருவைத் துன்றிய பைம்குழல் உமையவள்--- நறுமணம் பொருந்திய பசுமையான கூந்தலை உடைய உமாதேவியும்,

 

           சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை--- சிபெருமானுக்கு அன்பைத் தருகின்ற அம்பிகையும்,

 

           கவுரிகை--- பொன்ற நிறம் உடையவளும்,

 

           மலை அத்தன் தரு சங்கரி--- மலையரசன் தந்தவளும் ஆன சங்கரி,

 

          கருணைசெய் முருகோனே--- கருணை புரிகின்ற முருகப் பெருமானே!

 

           வடவெற்பு அங்கு அயல்--- வடக்கே உள்ள இமயமலைக்கு அருகில்,

 

           அன்று--- அக்காலத்தில்,

 

          அணி குசம் சரவணையில் தங்கிய--- அழகிய தருப்பை வளர்ந்து உள்ள சரவணப் பொய்கையில் த்தங்கி வளர்ந்த,

 

          பங்கய முக--- தாமரை போன்ற திருமுகத்தை உடையவரே!

 

            தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே--- தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் சங்கிலி மண்டபத்தில் வீற்றிருக்கின்றதேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

            புருவச் செம்சிலை கொண்டு--- புருவம் ஆகிய அழகிய வில்லைக் கொண்டு,

 

           இருகணை விழி எறிய--- இரண்டு கண்கள் ஆகிய அம்புகளைத் தொடுத்து,

 

          கொங்கை இரண்டு எனும் மதகரி பொர--- கொங்கைகள் ஆகிய இரண்டு யானைகள் போர் புரிய.

 

         முத்தம் தரும் இங்கித நயவிதம் அதனாலே--- முத்தங்களைப் பொழிகின்ற இனிமையான உபசார விதங்களினாலே

 

          புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழ--- பேசுகையில் சங்கின் ஒலியானது கண்டத்தில் எழ,

 

          உருவச் செம்துவர் தந்த அதரமும் அருள்--- பவள நிற்ம பொருந்திய வாயிதழால் இருகின்ற எச்சிலோடு,

 

         புதுமைத் தம்பலமும் சில தர வரு(ம்) மனதாலே--- புதுமையானதாம்பூலத்தையும் கொடுக்க, (அதனால்மனதில் உணர்ச்சி கிளர்ந்து எழ.

 

         பருகித் தின்றிடல் அம்சுகம் என--- தருகின்ற எச்சிலையும்தாம்பூலத்தையும் உண்ணுதல் நல்ல சுகம் என்று,

 

         மனது உருகி--- மனமானது உருகி,

 

         குங்கும சந்தன அதி வியர் படிய--- உடம்பில் பூசியுள்ள குங்குமமும்சந்தனமும்அதிக வேர்வையோடு படிய,

 

         சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே--- மகிழ்ச்சியும்இன்பமும் தருகின்ற புணர்ச்சியிலே ஈடுபட்டு,

 

         பலருக்கும் கடை என்று எனை இகழவும்--- பலரிலும் கடையவன் என்று என்னை இகழும்படியா,

 

            மயலைத் தந்து--- காம மயக்கத்தைத் தருகின்,

 

           அருமங்கையர் தமை --- அரிய விலைமாதர்களை,

 

           வெகு பலமில் கொண்டிடு வண்டனும்--- உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள தீயவன் ஆகிய நான்,

 

          உனது அடி பணிவேனோ --- தேவரீரது திருவடியைப் பணிய மாட்டேனா?

 

பொழிப்புரை

 

     திருமகள் ஆகிய சீதாதேவியைக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியத்திற்குஇராமபிரான்இலக்குவனுடன் வர,அந்த இடத்திற்கு அச்சத்தோடுவந்து உலாவிய மாரீசன் ஆகிய பொன்மான் உடல் சிதறிப் போக,கொடியவன் ஆன கரனும்திரிசிரனும்வலிமை பொருந்திய கும்பகருணன் ஆகியவர்களோடுபத்துத் தலைகளைப் பெற்று இருந்து தேவர்களை வென்றவன் ஆன இராவணனோடுயாவரையும்,வில்லினால் கொன்று அழித்த முகுந்தன் ஆகிய இராமச்சந்திரன் உள்ளம் மகிழ்கின்ற திருமருகரே!

 

            நறுமணம் பொருந்திய பசுமையான கூந்தலை உடைய உமாதேவியும்,சிபெருமானுக்கு அன்பைத் தருகின்ற அம்பிகையும்பொன்ற நிறம் உடையவளும்மலையரசன் தந்தவளும் ஆன சங்கரி கருணை புரிகின்ற முருகப் பெருமானே!

 

            வடக்கே உள்ள இமயமலைக்கு அருகில்அக்காலத்தில்அழகிய தருப்பை வளர்ந்து உள்ள சரவணப் பொய்கையில் தங்கி வளர்ந்ததாமரை போன்ற திருமுகத்தை உடையவரே!

 

     தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் சங்கிலி மண்டபத்தில் வீற்றிருக்கின்றதேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

            புருவம் ஆகிய அழகிய வில்லைக் கொண்டுஇரண்டு கண்கள் ஆகிய அம்புகளைத் தொடுத்துகொங்கைகள் ஆகிய இரண்டு யானைகள் போர் புரிய.முத்தங்களைப் பொழிகின்ற இனிமையான உபசார விதங்களினாலேபேசுகையில் சங்கின் ஒலியானது கண்டத்தில் எழபவள நிறம் பொருந்திய வாயிதழால் தருகின்ற எச்சிலோடுபுதுமையானதாம்பூலத்தையும் கொடுக்கஅதனால்மனதில் உணர்ச்சி கிளர்ந்து எழதருகின்ற எச்சிலையும்தாம்பூலத்தையும் உண்ணுதல் நல்ல சுகம் என்று மனமானது உருகிஉடம்பில் பூசியுள்ள குங்குமமும்சந்தனமும்அதிக வேர்வையோடு படிய மகிழ்ச்சியும்இன்பமும் தருகின்ற புணர்ச்சியிலே ஈடுபட்டு,

பலரிலும் கடையவன் என்று என்னை இகழும்படியா,காம மயக்கத்தைத் தருகின்அரிய விலைமாதர்களைஉறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள தீயவன் ஆகிய நான்தேவரீரது திருவடியைப் பணிய மாட்டேனா?

 

விரிவுரை

 

புருவச் செம்சிலை கொண்டு--- 

 

பெண்களின் புருவத்தை வில்லுக்கு உவமையாக்குவது கவி மரபு.

 

இருகணை விழி எறிய--- 

 

பெண்களின் கண்களை அம்புக்கு உவமை கூறுவர். 

 

புருவமாகிய வில்லில்இரண்டு கண்கள் ஆகிய அம்புகளைத் தொடுத்துப் போர் புரிவர் விலைமாதர்கள்.

 

கொங்கை இரண்டு எனும் மதகரி பொர--- 

 

பெண்களின் பருத்த கொங்கைகளை யானையின் மத்தகத்துக்கு உவமை கூறுவர்.

 

முத்தம் தரும் இங்கித நயவிதம் அதனாலே புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழஉருவச் செம்துவர் தந்த அதரமும் அருள்புதுமைத் தம்பலமும் சில தர வரு(ம்) மனதாலே பருகித் தின்றிடல் அம்சுகம் என மனது உருகி--- 

 

இதயோடு இதழ் பதித்து முத்தங்களைப் பொழிந்துவந்தவர் மனம் மகிழ்ந்து பொருளைத் தருவதற்கு இசைவாக உபசாரமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டேதொண்டையில் விதவிதமான குரல்களை எழுப்பிசரசம் புரிந்துவாய் உள்ள எச்சிலையும் உண்ணத் தருவர். வாயில் தரித்துள்ள தாம்பைலத்தையும் மென்று வாயில் தருவர். காமுகர்கள் அதை இனிமையானது எனக் கருதி உண்டு உள்ளம் மகிழ்வர்.

 

     அந்த எச்சிலானதுபாலும் தேனும் கலந்தது போல இனிக்கும்.

 

"பாலொடு தேன் கலந்து அற்றேபணிமொழி

வால்எயிறு ஊறிய நீர்".                    --- திருக்குறள்.

 

 

குங்கும சந்தன அதி வியர் படிய--- 

 

கலவியில் ஈடுபட்டு இருக்கும்போதுவிலைமாதர் தமது மேனியில் பூசியுள்ளசந்தனக் குழம்புகுங்குமம் ஆகியவற்றோடுவியர்வை கலந்து படியும்.

 

சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே--- 

 

சம்பிரமம் --- மகிழ்ச்சிபரபரப்புமனக்களிப்புசிறப்புசிறைவு.

 

ரஞ்சிதம் --- இன்பம்.

 

திருவைக் கொண்டு ஒரு தண்டகவன(ம்) மிசை வரஅச்சம் கொடு வந்திடும் உழை உடல் சிதறகண்டக வெம்கரனொடுதிரிசிரனொடு திரமில் தங்கிய கும்பகன்ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு சிலையில் கொன்ற முகுந்தன்--- 

 

அயோத்தியை விட்டு வனவாசம் புகுந்த இரகுராமர்,சீதாதேவியோடும்இலக்குவனோடும் தண்டகாரணியத்தில் தங்கி இருந்து காலத்தில்இராவணனின் தங்கையான சூர்ப்பணகையின் தூண்டுதலால்சீதாதேவியைக் கவர்ந்து செல்ல ஏதுவாகமாரீசன் என்பவனை மாயமாளா உருக்கொள்ளும்படி அனுப்பினான் இராவணன். அவன் விரும்பி வரவில்லை. அச்சத்தோடுதான் வந்தான். அவன் இராம்பிரானது கணையினால் மடிந்தான். கரனும்திரிசிரனும் மடிந்தார்கள்.

 

திரம் --- உறுதி. திரம் என்னும் சொல் வடமொழியில் "ஸ்திரம்" என வழங்கப்படுகின்றது.

 

இராவணனை விட்டுவிபீடணர் நீங்கியபோதுகும்பகருணன் மட்டும் உறுதியாக இலங்கையில் இருந்தார். போரில்கும்பகருணனையும்இராவணனையும் இராமபிரான் ஒப்பற்ற அம்பினால் வென்றார்.

 

வடவெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கியபங்கய முக---

 

வடவெற்பு --- இமயமலை.

 

குசம் --- தருப்பை.

 

சரவணை --- சவரணப் பொய்கை. 

 

வெண்மையான ஒளி விளங்குகின்றஅழகிய திருக்கயிலை மலையில்தொடுக்கப் பெற்ற அழகிய பூமாலையினை அணிந்த உமாதேவியாரை தமது இடப்பாகத்திலே வீற்றிருக்கப் பெற்ற மூன்று திருக் கண்களை உடைய மேலான சோதி வடிவாகிய சிவபெருமான்ஒருநாள் கொடிய அசுரர்கள் செய்யும் துன்பத்தைத் தாங்க இயலாத தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுள்ளம் இரங்கி,  தமது ஈசானம்தற்புருடம்அகோரம்வாமதேவம்சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன்,கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டுஆறு திருமுகங்களை உடையவராய்செந்தழல் வடிவாகிய ஆறு நெற்றிக் கண்களின் நின்றும்ஒரே சமயத்தில் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தஅத்தீப் பொறிகள் விரிந்து நின்ற உலகங்கள் எங்கும் பரவ,  அவற்றைத் தேவர்கள் கண்டு பயப்படவும்அதனை அறிந்து பொங்கிய அத் தீப்பொறிகளின் திரட்சியினைத் தம் அழகிய திருக் கரத்தால் உடனே அவ்விடத்தினின்றும் எடுத்துஅவற்றின் வேகத்தை அடக்கிவாயுதேவனை நோக்கி,  'நீ இவற்றை எடுத்துச் செல்வாயாகஎன்று சிவபெருமான் அவனிடம் கொடுத்து அருளவாயுதேவனும் அவற்றைப் பெற்று மெல்லக் கொண்டு சென்றுதன்னால் இயலாமல்தன்னை அடுத்து நிற்பவனாகிய அக்கினி தேவனை நோக்கி,  'ஒப்பற்ற ஐம்பூதங்களுக்குத் தலைவனாய் உள்ள அக்கினித் தேவனேநீ இப்பொறிகளை எடுத்துச் செல்வாயாகஎன்று கூறி அவனிடம் கொடுக்கஅக்கினி தேவனும் அவற்றைப் பெற்றுத் தாங்க இயலாமல் சென்றுகுளிர்ந்த கங்கை ஆற்றில் கொண்டுபோய் விடுக்க,அந்த கங்காதேவியும் அவற்றைச் சிறிது நேரமும் தாங்கிக் கொண்டு இருப்பதற்கு வலிமை அற்றவளாய்தனது தலைமீது தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விடுக்கஅவ்விடத்து அத்தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய்,தாமரை ஒத்த திருமுகங்களுடன் முருகப் பெருமான் திருவவதாரம் புரிந்தார்.

 

ஆரணன் விண்ணகம் அச்சுதன் புவி

வாரணன் முதலிய மாதிரத்து உ(ள்)ளோர்

ஏரண அமரர்கள் எண்டதிக்கு ஆகியே

சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார். 

 

கங்கையும் ஒல்கப் புக்க கடுங்கனல் கடவுட் சோதி

அங்கு இரு மூன்று முன்னர் அம்மைவாழ் இமையச் சாரல்

தங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும்,முக்கண்

புங்கவன் அருளால் தொன்மை போன்றது வறத்தல் இன்றி.

 

விண்ணிடை இழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும்

வண்ண ஒண் கமலம் செய்ய முளரியை மாறதாகத்

தண்ணளி யோடு நல்கித் தரித்தெனச் சரவணப் பேர்க்

கண்ணகன் பொய்கை ஈசன் கண்தழல் மிசைக்கொண்டு அன்றே.   

 

அருவமும் உருவும் ஆகி,அநாதியாய்,பலவாய்ன்றாய்,

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அது ஓர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும்,கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களை நோக்குக.

 

தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே--- 

 

தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் சங்கிலி மண்டபம் என்பதுஇக்காலத்தில்,"கிளி மண்டபம்" என வழங்கப்படுகின்றது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் வசமாகி அழியாமல்தேவரீரது திருவடியைப் பணிய அருள்.

 

 

 

 

கேடில்லாத அறிவுச் செல்வத்தைப் பெற முயல்க

 


கேடில்லாத அறிவுச் செல்வத்தைப் பெற முயல்க.

----

 

"கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன்

செல்வம் மல்கு திருக் கானூர் ஈசனை,

எல்லியும் பகலும் இசைவு ஆனவா

சொல்லிடீர் நுங்கள் துயரங்கள் தீரவே

 

என்றார் அப்பர் பெருமான். 

 

கல்விஞானம்கலை ஆகியவற்றின் பொருளாய் இருப்பவன் இறைவன். 

 

கல்வி --- நூல்களால் அறியப் படுவது. 

ஞானம் --- நூல்களைக் கற்ற கல்வியால் விளையும் உண்மை அறிவு. 

கலைப்பொருள் --- கலைகளால் உணரப்படும் பொருள்.

 

     எனவேஇறைஞானத்தைப் பெறும்பொருட்டுக் கல்வியைப் பயிலவேண்டும்.

 

     மன உறுதியோடு கருதிப் பயிலும்போதுகல்வி அறிவு வளர்கின்றது. கருத்தை ஊன்றிப் படித்தால்விருத்தி கிடைக்கும். கூர்மையான கவனம்சீர்மையான அறிவைத் தருகின்றது.

 

     உள்ளம் குவிந்து வந்தால்எதையும் தெளியும் அறிவு உண்டாகும். நலங்கள் எல்லாம் வெள்ளமாய் விரைந்து வரும்.

 

"தொட்டனைத்து ஊறும் அறிவுமாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு"

 

என்றார் திருவள்ளுவ தேவநாயனார்.

 

     கல்வி அறிவு பெருகி வரும் நிலையைஓர் உவமையால் நமக்குக் காட்டி அருளினார்.

 

     ஆற்று மணலின் உள்ளே நீர் நிறைந்து இருந்தாலும்தோண்டுகின்ற அளவுக்கே அது சுரந்து வெளிப்படும். தோண்டாமல் தோன்றாது. மனிதன் அறிவு உள்ளத்தில் மருவி இருந்தாலும்கற்ற கல்வியின் அளவுக்கே அது தெளிவாய் வருகின்றது. தோண்டா விட்டால்நீர் மறைந்து இருப்பது போலகற்காவிட்டால்அறிவு வெளிப்படாது.

 

     மணலைப் பறிக்கப் பறிக்க நீர் ஊறி வருதவது போநூல்களைப் படிக்கப் படிக்க அறிவு தேறி வரும். அறிவுக்கு நீரை உவமை கூறியதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். "நீர் இன்றி அமையாது உலகு" என்ற நாயனார்,"அறிவு இன்றி அமையாது வாழ்க்கை" என்பதைச் சூசகமாக அறிவுறுத்தினார்.

 

     மணல் கேணி மனிதன் உள்ளத்திற்கும்நீர் அறிவுக்கும்தோண்டல் என்பது கற்றலுக்கும்ஊறல் என்பது அறிவின் தெளிவுக்கும் ஒப்பாகும். எல்லை இல்லாத அறிவு மனிதனின் உள்ளத்தில் பொதிந்து உள்ளது. இதனை அவன் அறிந்து கொள்ளவேண்டும். வெளியே இருந்து எதுவும் வருவது இல்லை. எல்லா அறிவு நலங்களும் உள்ளத்தில் இருந்தே வெளிப்படுகின்றன. இதயம் விரிந்தால்இருள் நீங்கிஉதயம் ஒளி வீசும்.

 

     வெளியே மணலைத் தோண்டினால்நீர் ஊறும். அதனால் தாகம் தீரும். உள்ளே மனதைத் தோண்டினால் நல்ல அறிவு வரும். எல்லா இன்ப நலங்களும் வந்து சேரும்.

 

     உண்ட உணவு செரிமானம் ஆனால்குருதி விருத்தி ஆகிஅது உடலுக்கு உறுதியைத் தரும். கல்வியால் பெற்ற கருத்துஉள்ளத்தோடு நன்கு தோய்ந்து இருக்குமானால்அது உணர்வுக்கு உறுதி தருகின்றது. எனவேசிந்தனை செய்து உணராமல்,கல்வி பயிலுவதுபசி இல்லாமல் உணவு கொள்வது போல அமையும்.

 

     முயன்று தேடாமல்சோம்பேறியாய் இருந்தாலும் ஒருவனுக்குதந்தை ஈட்டிய பொருள் முறைமையாக வந்து சேரும். ஆனால்கல்வி அறிவு அவ்வாறு வருவதில்லை. பொருளால் சிறப்பு உண்டாவதில்லை. அறிவால் மட்டுமே சிறப்பு வந்து சேரும். எனவேஒருவன் விரைந்து பெறவேண்டியது கல்வி அறிவே என்பது விளங்கும்.

 

செல்வம் வழிமுறையில் சேர்ந்து வரும்;கல்வியோ

புல்லிப் பியன்றார்க்கே போதுமால் --- ஒல்லையினில்

ஓதி உயர்கஒழிந்தாயேல் நீ என்றும்

பேதையாய் நிற்பாய் பிறழ்ந்து.             --- தருமதீபிகை.

 

     செல்வம் வமிச வழியாக வந்து சேரும். கல்வி அவ்வாறு வருவதில்லை. விரும்பிப் பயின்றவர்க்கே அது நெருங்கி வரும். ஆதலால்விரைந்து கற்று உயர்வடைய வேண்டும். சோர்ந்து விட்டாயானல்நீ மூடனாய் இழிந்த நிலையில் உழலுவாய்.

 

     "Learning by study must be won. It was never entailed from son to son" என்று ஒரு மேனாட்டு அறிஞர் கூறியுள்ளபடிகல்வியைப் பரம்பரை உரிமையாக யாராலும் பெற்றுக் கொள்ள முடியாது. அது ஒருவனது முயற்சி காரணமாகவே வந்து சேரும்.

 

     பொருட்செல்வம் அழிந்து போகும். உடம்பை விட்டுஉயிர் போகும்போது கூட வராது. கல்விச் செல்வம் என்றும் அழியாது. உயிரோடு கூடவே வந்துகொண்டு இருக்கும் என்பதால்,

 

"ஒருமைக்கண் தான்கற்ற கல்விஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து"

 

என்றார் திருவள்ளுவ தேவநாயனார். அதுவேஅழியாதமேன்மையான செல்வம் ஆகும். செல்வம் என்று கருதி இருக்கும் மற்றவை எல்லாம்உண்மையில் செல்வம் அல்ல என்பதால்,

 

கேடுஇல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு,

மாடு அல்ல மற்றை அவை.    

 

     ஒருவனுக்கு இழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி,  அது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வம் அல்ல.

 

 

     எனவே, "கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி"என்றார் ஔவைப் பிராட்டியார்."கையில் இருக்கிற (பொய்ப்)பொருளைப் பார்க்கிலும்மெய்ப்பொருளாவதுகல்வியே ஆகும். அந்த மெய்ப்பொருள் ஆகிய கல்வி அறிவே உயிருக்கு உற்ற துணையாஎல்லாப் பிறிவியிலும் உதவுவது என்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.    --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் --- ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும் வீடுபேற்றையும் கொடுக்கும்புறங்கடை நல்இசையும் நாட்டும் --- உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் --- நேரக் கூடிய வருத்தம் ஒன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கு இல்லை --- ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விடப் பிறிதில்லை.

 

     பொருட்செல்வமானது ஒருவனுடைய அறிவை மயக்கும். அறிவுச் செல்வமானது ஒருவனுடைய அறிவு விளங்கச் செய்யும். கல்வியே அறிவு மயக்கத்தைத் தீர்க்கின்ற மருந்து ஆகும் என்கின்றது நாலடியார்.

 

இம்மை பயக்குமால்,ஈயக் குறைவு இன்றால்,

தம்மை விளக்குமால்,தாம் உளராக் கேடு இன்றால்,

எம்மை உலகத்தும் யாம் காணேம்,கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.       --- நாலடியார்.

 

     நல்வாழ்க்கையாகிய இம்மைப் பயனை கல்வியே விளைவிக்கும்பிறர்க்குச் சொல்லிக் கொடுப்பதால் அது குறைவுபடுதல் இல்லைஅது கற்றவர் தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்.அது இருப்பதால் கெடுதல் இல்லை. ஆதலால்எந்த உலகத்தில் பிறந்தாலும்கல்வி போல் அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தைக் காணமுடியாது.

 

     எனவேமனத் தடுமாற்றத்தைத் தீர்க்க உதவும் நல்ல நூல்களைத் தேடிப் படித்து நலம் பெறுதல் வேண்டும். "கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்று ஒரு வழக்குச் சொல் உள்ளது. அது வழுக்குச் சொல் அல்ல. நல்ல அறிவு நூல்கள் எவை என்று கண்டுஅவற்றைக் கற்றுத் தெளிந்தால்நல்லறிவு உடையவனாகலாம். "கண்டுஅத்தைப் படித்தால்பண்டிதன் ஆகலாம்". அட்டைப் பகட்டுடன் வெளிவந்துஅறிவை மயக்கும் நூல்களைப் படித்தால் அறிவு விளங்காது. நிறைய நூல்களைப் படித்தோம் என்னும் பகட்டு மட்டுமே உண்டாகும். அது பயன் தராது.

 

            Good friends, good books and a sleepy conscience: this is the ideal life.--- Mark Twain

     நல்ல நண்பர்கள்நல்ல நூல்கள், அமைதியான மனசாட்சி. இவையே சிறந்த வாழ்வுக்குத் துணை புரிவன.

 

     நல்ல நண்பர்களைத் தேர்வது அரிது. சில நேரங்களில் எண்ணியதற்கு மாறாக அமையலாம். ஆனால்நல்ல நூல்களைத் தேர்ந்து கொள்ளலாம். அவை என்றுமே நமக்கு நல்வழியைக் காட்டுவன. நல்ல நூல்களைத் தேர்ந்து பயின்றுகேடில்லாதசிறந்த அறிவுச் செல்வத்தைப் பெற்றுசிறக்க வாழ்ந்துபோகும்போது உடன்கொண்டு செல்வோம்.

 

 

 

 

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...