திருவாரூர் - 5



 சுந்தரர் திருப்பதிக வரலாறு

         கொடுங்கோளூரில், சேரமான் பெருமாளது வழிபாட்டை ஏற்றிருந்த சுந்தரர், ஆரூர்ப் பெருமானை நினைந்து, "ஆவியை ஆரூரானை மறக்கலும் ஆமே" என்று பாடியருளியது இத் திருப்பதிகம்.

கழறிற்றறிவார் நாயனார் புராணப் பாடல் எண் : 154
பாடல் ஆடல் இன்னியங்கள்
         பயிறல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
         நெருங்கு காலந் தொறும்நிகழ,
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
         ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
         கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.

         பொழிப்புரை : பாடலும், ஆடலும், இனிய இசைக் கருவிகள் இசைத்தல் முதலான மகளிர் விளையாட்டில் நீடும் இனிய மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளும் ஆகக் காலங்கள் தோறும் நிகழ்த்தியும், அருகிலுள்ள மணமுடைய மலர்களால் மணம் வீசும் சோலைகளில் அமர்வித்தும், தம்முடன் திருமுனைப்பாடி நாட்டின் தலைவர் பெருமானான நம்பியாரூரரை மகிழ்வித்திருந்தார் கோதையர் பெருமான்.


பெ. பு. பாடல் எண் : 155
செண்டாடும் தொழின்மகிழ்வும்,
         சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்,
வண்டாடும் மலர்வாவி
         மருவியநீர் விளையாட்டும்,
தண்டாமும் மதகும்பத்
         தடமலைப்போர் சலமல்போர்
கண்டுஆரா விருப்புஎய்தக்
         காவலனார் காதல்செய்நாள்.

         பொழிப்புரை : பந்தாடுகின்ற தொழிலின் நிகழ்ச்சியும், சிறு சோறு உண்ணும் பெருஞ்சிறப்பும், வண்டுகள் தங்குவதற்கு இடமான பூக்கள் நிறைந்த பொய்கைகளில் பொருந்திய நீரில் விளையாடுதலும், குறைவற்ற மும்மதங்களையும் மத்தகத்தையும் உடைய பெரிய மலை போன்ற யானைகளின் போரும், சினத்துடன் செய்யும் வீரர்களின் போரும் என்னும் இவற்றைக் காணுமாறு செய்து, நிறைவுறாத பெரும் விருப்பம் பொருந்தச் சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரர்க்கு மகிழ்வை ஏற்படுத்திவரும் நாளில்,


பெ. பு. பாடல் எண் : 156
நாவலர்தம் பெருமானும் திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள் மிகநினைந்த சிந்தையராய்
"ஆவியைஆ ரூரானை மறக்கலும் ஆமே"என்னும்
மேவியசொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்.

         பொழிப்புரை : நாவலர் பெருமானான நம்பி ஆரூரரும் திருவாரூரை ஆட்சி கொண்டிருக்கும் வானவர் தலைவரான இறைவரின் திருவடிகளை, ஒரு நாள் மிகவும் நினைவிற் கொண்ட உள்ளத்தவராய், என் உயிர் போன்றவரைத் திருவாரூர் இறைவரை `மறக்கலும் ஆமே\' என்ற கருத்து நிறைவு கொண்ட திருப் பதிகத்தைப் பாடி, அச்சம் கொண்டார்.

         இக்கருத்தும் நிறைவுமுடைய திருப்பதிகம் `பொன்னும் மெய்பொருளும்' எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி.7 ப.59). `மறக்கலுமாமே' எனும் தொடர் பாடல்தொறும் அமைந்துள்ளது. மறக்கலும் ஆமே? ஆகாது என்றும் பொருள்பட நின்றது. ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. எனவே ஆரூருக்குச் செல்லவேண்டும் எனத் திருவுளம் பற்றினர்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 059    திருவாரூர்                               பண் - தக்கேசி
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானை,
         போக மும்திரு வும்புணர்ப் பானை,
பின்னை என்பிழை யைப்பொறுப் பானை,
         பிழைஎ லாம் தவி ரப்பணிப் பானை,
இன்ன தன்மையன் என்றுஅறி ஒண்ணா
         எம்மா னை,எளி வந்தபி ரானை,
அன்னம்வை கும்வ யல்பழ னத்து அணி
         ஆரூ ரானை, மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : எனக்குப் பொன்னையும் , மெய்யுணர்வையும், வழங்குபவனும் , அவை வாயிலாக உலகின்பத்தையும் , வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும் , அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும் , பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும் , இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும் , எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய , அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 2
கட்ட மும்பிணி யும்களை வானை,
         காலன் சீறிய கால்உடை யானை,
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை,
         விரவி னால்விடு தற்கு அரி யானை,
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
         வாரா மேதவி ரப்பணிப் பானை,
அட்ட மூர்த்தியை, மட்டுஅவிழ் சோலை
         ஆரூ ரானை, மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்ற வனும் , கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும் , கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும் , வந்த பழிச் சொல்லும் , வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும் , அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய , மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 3
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானை,
         கலைக்கு எலாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானை,
         பகலும் கங்குலும் ஆகிநின் றானை,
ஓர்க்கின் றசெவி யை, சுவை தன்னை,
         உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,
ஆர்க்கின் றகட லை,மலை தன்னை,
         ஆரூ ரானை, மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும் , நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று , காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும் , பகலாகியும் இரவாகியும் இருப்பவனும் , ஒசையைக் கேட்கின்ற செவியாகியும் , சுவையை உணர்கின்ற நாவாகியும் , உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும் , ஒலிக்கின்ற கடலாகியும் , மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

 
பாடல் எண் : 4
செத்த போதினில் முன்நின்று நம்மைச்
         சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைய உண்டே, மனம் உண்டே,
         மதிஉண்டே, விதியின் பயன் உண்டே,
முத்தன் எங்கள்பி ரான் என்று வானோர்
         தொழநின் றதிமில் ஏறு உடை யானை,
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை,
         ஆரூ ரானை, மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே , நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ ! நெஞ்சு உளதன்றோ ! அறிவு உளதன்றோ ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ ! அவற்றால் தேவர்கள், ` இயல்பாகவே பாசம் இல்லாதவன் ` என்றும் , ` எங்கள் தலைவன் ` என்றும் வணங்க நிற் கின்ற , முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும் , யாவர்க்கும் தந்தையும் , என் தந்தைக்குத் தலைவனும் , எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ!


பாடல் எண் : 5
செறிவு உண் டேல்,மனத் தால்தெளிவு உண்டேல்,
         தேற்றத் தால்வருஞ் சிக்கனவு உண்டேல்,
மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல்,
         வாழ்நாள் மேல்செல்லும் வஞ்சனை உண்டேல்,
பொறிவண்டு யாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
         பொன்போ லும்சடை மேல்புனைந் தானை,
அறிவு உண்டே, உடலத்து உயிர் உண்டே,
         ஆரூ ரானை மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : நன்மையைத்தரும் கல்வியும் , அதன்பயனாகிய உள்ளத்தெளிவும் , அதன்பயனாகிய இறைவன்பற்றும் நமக்கு உள்ளன என்றால் , அவற்றோடே இறப்பும் , மறுபிறப்பும் , வாழ்நாளை இடை முரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால் , இவற்றை யெல்லாம் அறிகின்ற அறிவும் . அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின் , புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற , பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை , பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 6
பொள்ளல் இவ்வுட லைப்பொருள் என்று
         பொருளும் சுற்றமும் போகமும் ஆகி,
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
         வாரா மேதவிர்க் கும்விதி யானை,
வள்ளல் எம்தமக் கேதுணை என்று
         நாள்நா ளும்அம ரர்தொழுது ஏத்தும்
அள்ளல் அம்கழ னிப்பழ னத்து அணி
         ஆரூ ரானை, மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு , செல்வமும் , படைகளும் , இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற , நன்னெறியாய் உள்ளவனாகிய , தேவர்கள் நாள்தோறும் , ` வள்ளல் ` என்றும் , ` எங்களுக்குத் துணை ` என்றும் சொல்லித் துதிக்கின்ற , சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணை யிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 7
கரிஆ னைஉரி கொண்டகை யானை,
         கண்ணின் மேல்ஒரு கண்உடை யானை,
வரியா னை,வருத் தம்களை வானை,
         மறையா னை, குறை மாமதி சூடற்கு
உரியா னை,உல கத்து உயிர்க்கு எல்லாம்
         ஒளியா னை,உகந் துஉள்கி நண்ணாதார்க்கு
அரியா னை,அடி யேற்கு எளி யானை,
         ஆரூ ரானை மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும் , இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும், அழகையுடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும் , சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும் , உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் விளக்காய் உள்ளவனும் , தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும் , அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 8
வாளா நின்று தொழும்அடி யார்கள்
         வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்,
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார்,
         நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்,
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன்,
         கிளைக்கு எலாம் துணை ஆம்எனக் கருதி,
ஆள் ஆவான்பலர் முன்பு அழைக் கின்றேன்,
         ஆரூ ரானை மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்றுவிடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும் , சிலர் , அவனை நாள் தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர் . அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர் . ஆயினும் , யான் , எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணை யாவான் என்று கருதி , அவனையே உறவாகக் கொண்டு , அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன் ; அன்றியும் , பலரையும் அவனுக்கு ஆளாகு மாறு முன் நின்று அழைக்கின்றேன் ; ஆதலின் , யான் அவனை மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 9
விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
         வேட்கை யால்பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன், நெறி காணவும் மாட்டேன்,
         கண்கு ழிந்து இரப் பார்கையில் ஒன்றும்
இடக்கி லேன்,பர வைத்திரைக் கங்கைச்
         சடையா னை,உமை யாளைஓர் பாகத்து
அடக்கி னானை,அந் தாமரைப் பொய்கை
         ஆரூ ரானை மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று , அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும் , கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும் , பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான் , பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும் , உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய , அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !


பாடல் எண் : 10
ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
         உச்சிப் போதனை, நச்சரவு ஆர்த்த
பட்டியை, பகலை, இருள் தன்னை,
         பாவிப் பார்மனத்து ஊறும்அத் தேனை,
கட்டி யை, கரும்பின் தெளி தன்னை,
         காத லால் கடல் சூர்தடிந் திட்ட
செட்டி அப்பனை, பட்டனை, செல்வ
         ஆரூ ரானை, மறக்கலும் ஆமே

         பொழிப்புரை : என்னை . வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த , நண்பகற் போது போலும் ஒளியுடைய வனும் , நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடைய வனும் , பகலாயும் இரவாயும் உள்ளவனும் , தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும் , கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும் , தேவர்மீது வைத்த அன்பினால் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய , செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை , யான் மறத்தலும் இயலுமோ !

  
பாடல் எண் : 11
ஓர்ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம்
         உரைக்கலாம் பொருளாய், உடன் கூடிக்
கார் ஊரும் கமழ் கொன்றை நன் மாலை
         முடியன், காரிகை காரணம் ஆக,
ஆரூரைம் மறத்தற்கு அரி யானை,
         அம்மான் தன் திருப் பேர்கொண்ட தொண்டன்,
ஆரூ ரன்,அடி நாய் உரை வல்லார்
         அமர லோகத்து இருப்பவர் தாமே

         பொழிப்புரை : ` பரவை ` என்பவள் முன்னிலையாக , எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய் , தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை , கார் காலத்தில் பூக்கின்ற , மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடைய வனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட, அவன் அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர் , அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம் .

                                             திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------

        
திருவிசைப்பா

                  பூந்துருத்தி நம்பி காடநம்பி அருளிச் செய்தது
9. 18  திருவாரூர்                         பண் - பஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து,
         கழுத்தில்ஓர் தனிவடம் கட்டி,
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்து, இங்ஙன்
         முரிவதுஓர் முரிவு,உமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவும்அன்று, என்னோ
         தம்ஒருப் பாடு, உலகு அதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
         விடங்கராய் நடம்குலா வினரே.

         பொழிப்புரை : கைகளில் வெள்ளிய முத்துக்களால் ஆகிய தோள் வளைகளை அணிந்து, கழுத்தில் ஒப்பற்ற தனிமாலையைச்சூடி, மூன்று கண்களை உடைய தலைவராய், இவ்வுலகிலே மிக்க சிறப்பையுடைய திருவாரூரில் முதல்வராய், வீதிகளில் திருவுலாப்போகும் அழகராய் அசபாநடனம் என்று போற்றப்படும் கூத்தினைச் சிறப்பாகப் புரிந்து வருகிறார். திருவீதி உலாமேற்கொண்டு, இங்ஙனம் உடம்பை வளைத்து எம்பெருமான் ஆடும் ஆட்டத்தின் விளக்கம் உமாதேவி அளவிலும், கங்காதேவி அளவிலும் அடங்காது மேம்பட்டுள்ளது. எம்பெருமானுடைய கொள்கைதான் யாதோ?


பாடல் எண் : 2
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
         பருகுதோறு அமுதம்ஒத்து, அவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள், இவர்தம்
         திருவுரு இருந்தவா பாரீர்,
சத்தியாய், சிவமாய், உலகுஎலாம் படைத்த
         தனிமுழு முதலும்ஆய், அதற்குஓர்
வித்தும்ஆய், ஆரூர் ஆதியாய், வீதி
         விடங்கராய் நடம்குலா வினரே.

         பொழிப்புரை : தேவர்களே! சிவபெருமானிடத்துப் பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந் தோறும் அமுதம்போல அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளிவீசிக் கொண்டிருப் பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கல மாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார்.
                                             திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

 
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
அருளிய
க்ஷேத்திரத் திருவெண்பா
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 4
காளை வடிவுஒழிந்து, கையறவோடு ஐயுறவாய்,
நாளும் அணுகி, நலியாமுன், பாளை
அவிழ் கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க்
கவிழ்க முகம், கூம்புகஎன் கை.

         காளை வடிவம் போன்ற இளமை கழிந்து, முதுமை வந்தபோது செயலற்ற நிலை உண்டாகி, இன்றோ, நாளையோ, எப்போதோ இந்த வாழ்வு முடியும் நாள் வரும் என்று எண்ணித் துன்பப்படுவதன் முன்னம்,  பாளைகள் நிறைந்த பாக்கு மரங்களை உடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருவாரூரில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமானுக்கு ஆட்பட்டு, எனது தலையானது கவிழட்டும். எனது கையானது அவனைக் கூப்பி வணங்குவதாக.

                                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...