ஒன்றை மட்டும் மாற்றவே முடியாது



37.  மாற்ற முடியுமோ?

கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
     காஞ்சிரம் கைப்புவிடுமோ?
கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்
     கதிபெறும் குதிரை ஆமோ?

குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும்
     கொடுவிடம் அலாது தருமோ?
குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
     கோணாமலே நிற்குமோ?

ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம்இலா
     யோனிகண் ஆகிவிடுமோ?
உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
     உள்ளியின் குணம் மாறுமோ?

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில்
     மார்க்க மரியாதை வருமோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கட்டி எரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ --- வெல்லக்கட்டியை எருவாக இட்டு, நல்ல தேனை நீராக ஊற்றி வளர்த்தாலும் எட்டிக் காயின் கசப்பு நீங்குமா? நீங்காது.

     கழுதையைக் கட்டி வைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறும் குதிரை ஆமோ --- கழுதையைக் கட்டிப் போட்டு, வேள்வியைச் செய்தாலும், பல கதிகளிலும் செல்லும் குதிரை ஆகுமோ? ஆகாது.

     குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம் அலாது தருமோ --- பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய விடத்தை அல்லாமல் வேறு நல்லது எதையாவது தருமா? தராது.

     குக்கல் நெடுவாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ --- நாயின் நீண்ட வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாலும், அதனுடைய கோணல் தன்மை மாறுமோ? மாறாது.

     ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகி விடுமோ --- நிறைய மையினை நன்றாக இட்டாலும் பெண்குறியானது கண் ஆகுமா? ஆகாது.

     உலவு கன கற்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ --- இனிய மணம் கொண்ட கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களோடு கூட்டினாலும், பூண்டின் குணம் மாறுமா? மாறாது.

அது போலத்தான்,

     மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ --- அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறையும் நல்ல அறிவு புகட்டினாலும், அதனால் அவருக்கு ஒழுங்கான நடத்தை வருமோ? வராது.

     விளக்கம் --- பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தை, இப் பாடலோடு ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.

தக்காரும் தக்கவர் அல்லாரும் ம் நீர்மை
எக்காலும் குன்றல் இலர்ஆவர்,  - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம், கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

தகுதி உடைய பெரியவர்கள் நன்மை செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். தகுதியே இல்லாத தீயவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப, தீமையும் செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் கசக்காது. இனிக்கவே செய்யும். ஆனால், வேப்பங்காயை யார் தின்றாலும் இனிக்காது. கசக்கவே செய்யும்.      

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்; - தடம் கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்
கைப்புஅறா பேய்ச்சுரையின் காய்.            

அகன்ற கண்களை உடைய பெண்ணே! என்னதான் உப்பும், நெய்யும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் பேய்ச்சுரைக்காயின் கசப்புத் தன்மை நீங்காது. அது போலவே, கீழோர் எவ்வளவு தான் ஞான நூல்களைக் கற்றாலும், பிறருக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்.

இப் பாடலில் அறிவிலிகள் என்னதான் நல்ல புத்தி சென்னாலும் நன்னெறியில் நடக்கமாட்டார்கள் என்றார்.  நாலடியாரில் என்னதான் அறிவு நூல்களைக் கற்றாலும் மனம் அடங்க மாட்டார் எனப்பட்டது.

மேலான நறுமணப் பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும், உள்ளிப் பூண்டினுடைய தீயநாற்றம் நீங்காதது போல, பொறாமைக் குணம் கொண்ட நெஞ்சத்தை உடைய அறிவிலிகளை நல்லவர்களாக ஆக்க முடியாது என்கிறது நீதிவெண்பா என்னும் நூல்.

அவ்விய நெஞ்சத்து அறிவுஇலாத் துர்ச்சனரை
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? -- திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் மெடுமோ கரை.

பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களையும் அவற்றின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் தகும்.

நாய்வாலை அளவு எடுத்து பெருக்கித் தீட்டின்
     நல் தமிழை எழுத எழுத்தாணி ஆமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
     பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடுஅது ஆமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
     சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான், இவனும் ஈயான்;
     எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

நாயினது வாலை எழுத்தாணிக்கு உரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.

தூம்பினில் புதைத்த கல்லும்
     துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
     பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
     வேப்பிலை கசப்பு மாறா;
தாம்பல நூல் கற்றாலும்
     துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.

கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எருப்போட்டு,
     கமழ்நீர் பாய்ச்சி,
பொற்பு ஊரர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்
     பொருந்தக் காட்டும்;
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக
     வரும் எனவே சொல்லினாலும்,
நற்போதம் வாராது, அங்கு அவர் குணமே
     மேலாக நடக்கும்தானே.

என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...