துறவிக்கு வேந்தன் துரும்பு




35. துறவிக்கு வேந்தன் துரும்பு

சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்
     பொன்னிவளம் செழித்த நாட்டில்,
குறை அகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்
     களும்பொருளாக் குறித்தி டாமல்,
மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப்
     பிள்ளையும்சேர் மகிமை யாலே,
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
     வேந்தன் ஒரு துரும்பு தானே.


     இதன் பொருள் ---

     சிறுபிறை துன்னிய சடையார் தண்டலை சூழ் பொன்னி வளம் செழித்த நாட்டில் --- இளம் பிறைச் சந்திரன் பொருந்தியுள்ள திருச்சடையை உடைய திருத்தண்டலை நீள்நெறி இறைவரின் வளம் கொழிக்கும் பொன்னி நல்நாட்டினில்,

     குறை அகலும் பெருவாழ்வும் மனைவியும் மக்களும் பொருளாக் குறித்திடாமல் --- குறைவற்ற பெருவாழ்வையும்ர மனைவியையும்,  மக்களையும் பொருளாக மதித்திடாமல், 

     மறைபயில் பத்திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும்  சேர் மகிமையாலே --- அறநெறியில் வாழும் பத்திரகிரியாரும் பட்டினத்துப் பிள்ளையாரும் சேர்ந்த பெருமையினால்,

     துறவறமே  பெரிது ஆகும் --- துறவறமே சிறப்பு உடையதாகும்.

     துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே --- துறவிக்கு மன்னன் ஒரு துரும்பைப் போன்றவனே.

          கருத்து --- ‘துறவிக்கு வேந்தன் துரும்பு' என்னும் பழமொழிக்கு விளக்கமாக அமைந்த பாடல் இது.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...