ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இருப்பது அறிவு.





36. ஆரியக் கூத்தாடுகினும் காரியத்தில் கண்ணாக இருப்பது அறிவு.

பேர் இசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்மா
     தரும்சூழப் பிரபஞ் சத்தே,
பார்இயைபு உற்று இருந்தாலும், திருநீற்றில்
     கழல்காய்போல் பற்று இல்லாமல்,
சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை
     நினைக்கின் முத்தி சேரல் ஆகும்;
ஆரியக்கூத்து ஆடுகினும் காரியமேல்
     கண்ணாவது அறிவு தானே.

     இதன் பொருள் ---

     ஆரியக்கூத்து ஆடுகினும் காரியம் மேல் கண் ஆவது அறிவு --- ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தின் மேல் கண்ணாக இருப்பது அறிவுடைமை ஆகும், என்பது போல்,

     பேர் இசைக்கும் சுற்றமுடன் மைந்தரும் மாதரும் சூழ --- புகழ்ந்து சொல்லத்தக்க உறவினருடன் மக்களும் பெண்டிரும்  சூழ்ந்திருக்க,

     பிரபஞ்சத்தே பார் இயைபு உற்று  இருந்தாலும் - உலகத்திலே பொருந்தி வாழ்வதாக இருந்தாலும்,

     திருநீற்றில் கழல்காய் போல் பற்று இல்லாமல் --- திருநீற்றில் இருந்தாலும் கழல் காயானது திருநீற்றில் பற்று இல்லாமல் இருப்பது போல, உலகப் பற்றுக்களிலே மனதை வைத்து விடாமல், (கடமை உணர்வோடு வாழ்ந்துக் கொண்டு) 

     சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்சு எழுத்தை நினைக்கின் முத்தி சேரலாகும் --- சிறப்புப் பொருந்திய திருத்தண்டலையாரின் நாமமாகிய திருவைந்தெழுத்தினையும் நினைத்து வாழ்ந்தால் முத்தி இன்பத்தைப் பெறமுடியும்.

        கருத்து --- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின்மேல் கண்ணாயிரு' என்பது பழமொழி. உலக வாழ்விலே ஈடுபட்டு இருந்தாலும், அதில் பற்று வைக்காமல், உலக இன்பத்தைப் பொருளாக மதிக்காமல், திருவைந்தெழுத்தைச் செபித்து வந்தால் முத்தி பெறல் ஆகும்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...