பசித்தோர் முகம் பார் - பசியின்றி வாழலாம்.




பாடல் எண். 56
மண்ணார் சட்டி கரத்து ஏந்தி
     மறநாய் கௌவும் காலினராய்
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை
     அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!
பண்ணார் மொழியார் பால் அடிசில்
     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட
உண்ணா நின்ற போது ஒருவர்க்கு
     உதவா மாந்தர் இவர்தாமே!

இதன் பொருள் ---

     மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி --- களிமண்ணால் செய்யப்பட்ட செய்யப்பட்ட பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, வீதிகள் தோறும் சென்று,

     மறநாய் கௌவும் காலினராய் --- கோபம் பொருந்திய தெரு நாய்கள் தங்களின் கோர வடிவத்தைக் கண்டு, குரைத்துக் கொண்டு வந்து கடிக்கின்ற கால்களை உடையவர்களாய்,

     அண்ணாந்து ஏங்கி இருப்பாரை --- தலையினை உயர்த்திப் பார்த்து, பசியினால் வாடி, யாராவது தமக்குத் தருவார்களா என்று ஏக்கமுற்று, இரந்து நிற்போரை

     அறிந்தோம் அறிந்தோம் ---  இன்னார் என யாம் அறிந்து கொண்டோம், அறிந்து கொண்டோம்,

     அம்மம்மா --- ம்ம, அம்மா! (இவர் யார் என்றால், முற்பிறவியில்)

     பண்ணார் மொழியார் --- இசை ததும்பும்படியான இனிமை தரும் சொற்களைப் பேசுகின்ற தமது மனைவியர்,

     பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட --- பால் சோற்றை பசுமையான பொன்னால் ஆன கலத்தில் வைத்து அன்போடு தங்களுக்கு ஊட்ட,

     உண்ணா நின்ற போது --- உண்டுகொண்டு இருந்த காலத்தில்,

     ஒருவர்க்கு --- (முன் சொன்னது போல) பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கு
    
     உதவா மாந்தர் இவர் தாமே --- (தாம் உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியேனும் கொடுத்து) உதவாத மனிதர் இவரே தான்.

     விளக்கம் --- மனிதனாகப் பிறந்தால் அவன் ஆறறிவு உடையவனாக இருத்தல் வேண்டும். ஆறாவது அறிவு மன அறிவு அல்லது உயிர் அறிவு எனப்படும். உயிர் அறிவு உள்ளவன் என்றால், பிற உயிர் படும் துன்பத்தைக் கண்டு பொறுத்திருக்கமாட்டான். அப்படிப்பட்ட அறிவு இல்லாதபோது, ஒருவன் கொண்டிருக்கும் வெற்று நூல் அறிவால் பயன் இல்லை. "அறிவினால் ஆவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போற்றாக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

     பசியினால் துன்பப்படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதே, இந்த உடம்பினால் உயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவி அவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம் பசிவந்திடப் பத்தும் பறந்து போகும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.               --- ஔவையார்.

அற்றார் அசிபசி தீர்த்தல், உஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.             --- திருக்குறள்.

"யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார்.

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு, பிடிசோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.

என்றார் அருணை அடிகள் கந்தர் அலங்காரத்தில்.

ஆற்றொடு தும்பை அணிந்து ஆடும் அம்பல வாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டு, இந்தப் பூதலத்தில்,
சோற்றாவி அற்று, சுகம் அற்று, சுற்றத் துணியும் அற்றே,
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே.
                                        
அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும், சிவன் அருளைப் போற்றாமல்,
பொன்னும், மனையும், எழில் பூவையரும், வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே.

முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்தசெல்வம்,
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது, பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல், அரன் பூசை செய்யாமல்,
கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே.

நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயம் என்றே எண்ணி,
பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்,
போர்க்குள் எமதூதன் பிடித்து இழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே.

எனவரும் பட்டினத்து அடிகள் அருட்பாடல்களையும் சிந்திக்கவும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...