மூதேவி வாழும் இடங்கள்





36. மூதேவி வாழும் இடங்கள்

சோரமங் கையர்கள், நிசம்உரையார்கள் வாயினில்;
     சூதகப் பெண்கள் நிழலில்;
சூளையில் சூழ்தலுறு புகையில்; களேபரம்
     சுடுபுகையில்; நீசர்நிழலில்;

காரிரவில்; அரசுநிழ லில்;கடா நிழலினொடு
     கருதிய விளக்குநிழலில்;
காமுகரில்; நிட்டையில் லாதவர் முகத்தினில்;
     கடுஞ்சினத் தோர்சபையினில்;

ஈரமில் லாக்களர் நிலத்தினில்; இராத்தயிரில்;
     இழியுமது பானர்பாலில்;
இலைவேல், விளாநிழலில்; நிதமழுக் கடைமனையில்;
     ஏனம்நாய் அசம்கரம்தூள்

வாரிய முறத்தூள் பெருக்குதூள் மூதேவி
     மாறாது இருப்பள் என்பர்.
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
     சோர மங்கையர்கள் --- பிற ஆடவரைக் கூடும், பரத்தைத் தொழில் உடைய பெண்கள் இடத்தில்,

     நிசம் உரையார்கள் வாயினில் --- உண்மை பேசாதவரின் வாயில்,

     சூதகப் பெண்கள் நிழலில் --- வீட்டுவிலக்கு ஆ பெண்களின் நிழலில்,

     சூளையில் சூழ்தல் உறு புகையில் --- சூளையில் உண்டாகும் புகையில்,

     களேபரம் சுடு புகையில் --- பிணத்தைச் சுடுகின்ற புகையில்,

     நீசர் நிழலில் --- இழிந்த குணம் உடையோரது நிழலில்,

     கார் இரவில் --- கரிய இரவில்,

     அரச நிழலில் --- அரசமரத்தின் நிழலில்,

     கடா நிழலினொடு --- எருமைக்கடாவின் நிழலில்,

     கருதிய விளக்கு நிழலில் --- இருளை நீக்கக் கருதி ஏற்றிய விளக்கின் நிழலில்,

     காமுகரில் --- காம உணர்வு கொண்டவர் இடத்தில்,

     நிட்டை இல்லாதவர் முகத்தினில் --- தியானம், யோகம் பயிலாதவர் முகத்தில்,

     கடும் சினத்தோர் சபையினில் --- கொடிய சீற்றம் உடையோர் உள்ள சபையில்,

     ஈரம் இல்லாத களர் நிலத்தினில் --- ஈரம் தங்காத உவர் நிலத்தில்;

     இராத் தயிரில் --- இரவில் உண்ணப்படும் தயிரில்,

     இழியும் மதுபானர் பாலில் ---  இழிந்த கள்ளை உண்போர் இடத்தில்,

     இலைவேல் விளா நிழலில் --- இலைகளை உடைய வேலமரத்தின் நிழலில், விளாமரத்தின் நிழலில்,

     நிதம் அழுக்கு அடை மனையில் --- எப்போதும் அழுக்குச்சேர்ந்து இருக்கும் வீட்டில்,

     ஏனம் நாய் அசம் கரம் --- பன்றி நாய் ஆடு கழுதை ஆகிய இவைகளின் இடத்தில்,

     தூள் --- புழுதியில்,

     வாரிய முறத் தூள் --- முறத்தில் வாரிய தூளில்,

     பெருக்கு தூள் --- பெருக்கிய குப்பையில்,

     மூதேவி மாறாது இருப்பள் என்பர் --- மூதேவி விலகாது இருப்பாள் என்பார்கள்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...