பாவம் சேரும் இடம்





பாடல் எண். 57
மண்டலத்தோர்கள் செய்த
     பாவம் மன்னவரைச் சேரும்,
திண்திறல் மன்னர் செய்த
     தீங்கு மந்திரியைச் சேரும்,
தொண்டர்கள் செய்த தோடம்
     தொடர்ந்து தம் குருவைச் சேரும்,
கண்டுஅன மொழியாள் செய்த
     கன்மமும் கணவர்க்கு ஆமே.

இதன் பொருள் ---

     மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரைச் சேரும் --- மண்ணுலகில் வாழ்வார்கள் செய்கின்ற பாவமானது, அவர்களை ஆளுகின்ற மன்னவனையே சாரும்.

     திண்திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியைச் சேரும் --- வலிமையும் வெற்றியும் பொருந்திய செய்த தீவினையானது, நன்மை தீமைகளை ஆராய்ந்து மன்னனைச் செங்கோல் செலுத்தும் முறையில் நடத்தாத அமைச்சரையே சாரும்.

     தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவைச் சேரும் --- அடியார்கள் செய்யும் குற்றமானது, அவர்களை வழி நடத்தி வரும் குருவையே சேரும்.

     கண்டுஅன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே --- (கணவனாய் இருப்பவனுக்குத் தான் செய்த பாவத்தோடு,) கற்கண்டை ஒத்த மொழியை உடைய மனைவி செய்த பாவமும் அவளின் கணவனையே சாரும்.


8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...