சிதம்பரம் - 0646. நீல மாமுகில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நீல மாமுகில் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலைமாதர் உறவால், பாழான செயல்களில் முழுகி,
நரகத்தில் விழும் அடியேனைக் காத்தருளி,
அழியாத சிவபதத்தைத் தந்து அருள்வாயாக.
  
தான தானன தான தானன
     தான தானன தான தானன
          தான தானன தான தானன ...... தனதான


நீல மாமுகில் போலும் வார்குழ
     லார்கள் மாலைகு லாவ வேல்கணை
          நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட

நீடு மார்பணி யாட வோடிய
     கோடு போலிணை யாட நூலிடை
          நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக்

காலி னூபுர வோசை கோவென
     ஆடி மால்கொடு நாணி யேவியர்
          காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர்

காத லாயவ ரோடு பாழ்வினை
     மூழ்கி யேழ்நர காழு மூடனை
          காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே

கோல மாமயி லேறி வார்குழை
     யாட வேல்கொடு வீர வார் கழல்
          கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க்

கோடு கோவென ஆழி பாடுகள்
     தீவு தாடசு ரார்கு ழாமொடு
          கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா

நாலு வேதமு டாடு வேதனை
     யீண கேசவ னார்ச கோதரி
          நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா

ஞான பூமிய தான பேர்புலி
     யூரில் வாழ்தெய்வ யானை மானொடு
          நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நீல மாமுகில் போலும் வார் குழ-
     லார்கள், மாலை குலாவ, வேல் கணை
          நீள வாள் விழி பார்வை, காதுஇரு ...... குழைஆட,

நீடு மார்பு அணி ஆட, ஓடிய
     கோடு போல்இணை ஆட, நூல்இடை
          நேச பாளித சோலை மாமயில் ...... என ஏகிக்

காலின் நூபுர ஓசை கோ என
     ஆடி, மால்கொடு நாணி ஏவியர்,
          காயமோடு அணு பாகு பால்மொழி ...... விலைமாதர்,

காதலாய் அவரோடு பாழ்வினை
     மூழ்கி, ழ்நரகு ஆழும் மூடனை,
          காரிர் பாரும் ஐயா, சிவா பதம் ...... அருள்வாயே.

கோல மாமயில் ஏறி, வார்குழை
     ஆட, வேல் கொடு வீர வார் கழல்
          கோடி கோடி இடி ஓசை போல்மிக ...... மெருதூளாய்க்

கோடு கோ என ஆழி பாடுகள்
     தீவு தாடு அசுரார் குழாமொடு
          கூளம் ஆக, விணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா!

நாலு வேதம் உடாடு வேதனை
     ஈண கேசவனார் சகோதரி,
          நாதர் பாகம் விடாள், சிகாமணி ...... உமைபாலா!

ஞான பூமியதான பேர் புலி-
     யூரில் வாழ் தெய்வயானை மானொடு
          நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.


பதவுரை

         கோல மாமயில் ஏறி --- அழகிய சிறந்த மயிலின் மீது அமர்ந்து,

       வார் குழை ஆட --- திருச்செவிகளில் நீண்ட குழைகள் ஆட,

         வேல் கொடு --- திருக்கரத்தில் வேலாயுதத்தைக் கொண்டு,

        வீர வார்கழல் --- வெற்றிச் சின்னமாகிய வீரக் கழல்கள்

        கோடி கோடி இடிஓசை போல் மிக --- கோடிக்கணக்கான மேகங்கள் மோதுவதால் பெருகும் இடி ஓசை போல் மிகுந்து ஒல் செய்ய,

        மெரு தூளாய் கோடு கோ என --- மேருமலை பொடியாகி அதனுடைய சிகரங்கள் கோ என்று விழ, (மேரு என்னும் சொல், மெரு எனக் குறுகி வந்தது)

         ஆழி --- கடல்களும்,

       பாடுகள் --- மண்ணிலே உள்ள இடங்களும்,

        தீவு --- தீவுகளும்,

        தாடு அசுரார் குழாம் ஒடு கூளம் ஆக --- வலிமை மிக்க அசுரர் கூட்டங்களுடன் குப்பையாகி அழிந்தொழிய,

        விணோர்கள் வாழ்வு உற விடும் வேலா --- தேவர்கள் வாழ்வு பெற்று விளங்க வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரரே! (விண்ணோர்கள் என்னும் சொல் விணோர்கள் எனக் குறுகி வந்தது)

          நாலு வேதம் உடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி --- நான்கு வேதங்களையும் பயின்று உள்ள பிரமதேவனை ஈன்ற திருமாலின் சகோதரியும், (ஊடாடு என்னும் சொல் உடாடு எனக் குறுகி வந்தது)

         நாதர் பாகம் விடாள் --- சிவபெருமானுடைய இடது பாகத்தை விடாது உடன் உறைபவளும்,

        சிகாமணி உமை பாலா --- முடிமணி போன்ற உமாதேவியின் திருக் குமாரரே!

         ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வயானை மானொடு --- ஞானம் விளங்குகின்ற திருத்தலம் என்று பேர் பெற்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற தேவயானை அம்மையோடும், வள்ளி நாயகியோடும்,

          நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே --- நான்கு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         நீல மாமுகில் போலும் வார் குழலார்கள் --- கருமேகம் போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள்,

         மாலை குலாவ --- மாலை விளங்க,

       வேல் கணை நீள வாள் விழி பார்வை காது(ம்) இருகுழை ஆட --- வேலையும் அம்பையும் போன்ற நீண்ட ஒளி பொருந்திய கண்களின் பார்வை சென்று மோதுவது போல்அமைந்த இரண்டு காதுகளிலும் குண்டலங்கள் அசைய,

         நீடு மார்பு அணி ஆட --- அகன்ற மார்பில் அணிகலன்கள் ஆட,

       ஓடிய கோடுபோல் இணை ஆட --- பரந்துள்ள மலையைப் போல மார்பகங்கள் அசைய,

        நூல் இடை நேச பாளித(ம்) --- நூலைப் போன்ற இடையில் விருப்பமான பட்டுப் புடைவை அணிந்து,

         சோலை மாமயில் என ஏகி --- சோலையில் உலவி வரும் அழகிய மயில் போல ஒயிலாகச் சென்று,

       காலில் நூபுர ஓசை கோ என ஆடி --- காலில் உள்ள சிலம்பின் ஓசை கோ என்று ஒலி செய்ய, நடனம் ஆடி,

         மால்கொடு நாணியே --- மோகத்துடன் வெட்கம் கொண்டு,

        வியர் காயமோடு --- வியர்த்த உடலுடன்,

        பாகு அ(ண்)ணு பால் மொழி விலைமாதர் அவரோடு --- பாகோடு கூடிய பால் போன்ற சொற்களை உடைய விலைமாதர்களுடன் (அண்ணு என்னும் சொல் அணு எனக் குறுகியது)

         காதலாய் --- காதல் கொண்டவனாய்,

        பாழ்வினை மூழ்கி --- உயிருக்கு ஆக்கம் என்னும் வீடுபேற்றைத் தருவதான செயல்களை ஓழித்து, பிறவியிலே பாழ்படுத்தும் செயல்களிலே முழுகி,

        ஏழ் நரகு ஆழும் மூடனை --- ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் மூடனாகிய அடியேனை

         காரிர் பாரும் ஐயா --- கண் பார்த்து அருளும் ஐயா,

      சிவா பதம் அருள்வாயே --- சிவபதத்தை அடியேனுக்குத் தந்து அருள்வாயாக.


பொழிப்புரை

         அழகிய சிறந்த மயிலின் மீது அமர்ந்து, திருச்செவிகளில் நீண்ட குழைகள் ஆட, திருக்கரத்தில் வேலாயுதத்தைக் கொண்டு, திருவடிகளில் வெற்றிச் சின்னமாகிய வீரக் கழல்கள் கோடிக்கணக்கான மேகங்கள் மோதுவதால் பெருகும் இடி ஓசை போல் மிகுந்து ஒலி செய்ய, மேருமலை பொடியாகி அதனுடைய சிகரங்கள் கோ என்று விழ, கடல்களும், மண்ணிலே உள்ள இடங்களும், தீவுகளும், வலிமை மிக்க அசுரர் கூட்டங்களுடன் குப்பையாகி அழிந்தொழிய, தேவர்கள் வாழ்வு பெற்று விளங்க வேலாயுதத்தை விடுத்து அருளிய வீரரே!

     நான்கு வேதங்களையும் பயின்றுள்ள பிரமதேவனை ஈன்ற திருமாலின் சகோதரியும், சிவபெருமானுடைய இடது பாகத்தை விடாது உடன் உறைபவளும், முடிமணி போன்றவளும் ஆகிய உமாதேவியின் திருக் குமாரரே!

     ஞானம் விளங்குகின்ற திருத்தலம் என்று பேர் பெற்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற தேவயானை அம்மையோடும், வள்ளி நாயகியோடும், நான்கு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         கருமேகம் போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள், மாலை விளங்க, வேலையும் அம்பையும் போன்ற நீண்ட ஒளி பொருந்திய கண்களின் பார்வை சென்று மோதுவது போல்அமைந்த இரண்டு காதுகளிலும் குண்டலங்கள் அசைய, அகன்ற மார்பில் அணிகலன்கள் ஆட, பரந்துள்ள மலையைப் போல மார்பகங்கள் அசைய, நூலைப் போன்ற இடையில் பட்டுப் புடைவையை விரும்பி அணிந்து, சோலையில் உலவி வரும் அழகிய மயில் போல ஒயிலாகச் சென்று,  காலில் உள்ள சிலம்பின் ஓசை கோ என்று ஒலி செய்ய, நடனம் ஆடி, மோகத்துடன் வெட்கம் கொண்டு, வியர்த்த உடலுடன், பாகோடு கூடிய பால் போன்ற சொற்களை உடைய விலைமாதர்களுடன் காதல் கொண்டவனாய், உயிருக்கு ஆக்கம் என்னும் வீடுபேற்றைத் தருவதான செயல்களை ஓழித்து, பிறவியிலே பாழ்படுத்தும் செயல்களிலே முழுகி,  ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் மூடனாகிய அடியேனைக் கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதத்தைத் தந்து அருள்வாயாக.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவால், பாழான செயல்களில் முழுகி, நரகத்தில் விழும் அடியேனைக் காத்தருளி, அழியாத சிவபதத்தைத் தந்து அருள்வாயாக.






No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...