பெரியாரை இகழாதே - கேடு வரும்.




33.  பெரியாரை இகழ்தல் குலத்துக்குக் கேடு.

கோடாமற் பெரியவர்பால் நடப்பதன்றிக்
    குற்றமுடன் குறைசெய் தோர்கள்
ஆடாகிக் கிடந்த இடத்து அதன்மயிரும்
    கிடவாமல் அழிந்து போவார்!
வீடாநற் கதியுதவும் தண்டலையா
    ரே! சொன்னேன் மெய்யோ? பொய்யோ?
கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக்
    கோடான கொள்கை தானே!

          இதன் பொருள் ---

     வீடா நற்கதி உதவும் தண்டலையாரே --- கெடாத  நல்ல நிலையை அருளும் திருத்தண்டலை இறைவரே!,

     கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக் கேடான கொள்கை மெய்யோ பொய்யோ --- கோடரிக்குக் காம்பு தன் குலத்துக்குக் கேடு என்று கூறும் வழக்கம் மெய்யோ! பொய்யோ? (மெய்யே தான், எனவே)

     பெரியவர் பால் கோடாமல் நடப்பது அன்றிக் குற்றமுடன் குறை செய்தோர்கள் --- சான்றோர்களிடம் முறையாக நடந்து கொள்ளாமல் குற்றமும் குறையும் செய்தவர்கள்,

     ஆடு ஆகிக் கிடந்த இடத்து, அதன் மயிரும் கிடவாமல் அழிந்தே போவார் --- ஆடு வளர்ச்சி அற்றுக் கிடந்த இடத்திலே அதன் மயிரும் கிடைக்காமல் அழிந்து விடுவார்.

       விளக்கம் --- வீடா நற்கதி --- கெடுதல் இல்லாத நல்ல நிலை. வீடுபேற்று இன்பத்தைக் குறிக்கும். வீடுதல் - கெடுதல்.

     கோடு அரிவது : கோடரி. அது கோடாலி என மருவியது. கோடரியின் காம்பு மரத்தால் ஆனது.அந்தக் காம்பு இல்லாவிட்டால் கோடரியானது மரத்தை வெட்டாது. அதைப் போலவே, பெரியோரைப் பழிப்போர் அப் பெரியோரால் தம் குலத்துக்குக் கேடு விளைவித்து அடியோடு அழிவர் என்பது தோன்ற ‘ஆடாகிக் கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாமல் அழிந்தே போவார்' எனக் கூறினார். ஆடு கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாது' ‘கோடரிக் காம்பு குலத்துக்கு ஈனம்' என்பவை பழமொழிகள்.

பெரியாரைப் பிழையாமை என்னும் ஒரு அதிகாரத்தையே திருக்குறளில் நாயனார் வைத்துள்ளத்தை எண்ணினால், பெரியாரின் அருமை விளங்கும். பெரியாரை இகழ்ந்தால் விளையும் தீமைகளை இந்த அதிகாரத்தில் நாயனார் விளக்கி உள்ளார்.

பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

என்பனவாதி திருக்குறள் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணுக.  

பெரியாரைத் துணைக் கோடல் என்னும் ஒரு அதிகாரத்தையும் நாயனார் வைத்து இருப்பதும் அறிந்து தெளிக.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...