சிதம்பரம் - 0655. மந்தரம்என் குவடு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மந்தரமென் குவடார் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் ஆசையால் அழிந்து, எமனுலகம் புகாமல்,
உனது திருவடியை அடைய அருள்


தந்தன தந்தன தான தந்தன
         தான தனந்தன தான தந்தன
   தந்தன தந்தன தான தந்தன
         தான தனந்தன தான தந்தன
   தந்தன தந்தன தான தந்தன
         தான தனந்தன தான தந்தன ...... தந்ததான


மந்தர மென்குவ டார்த னங்களி
         லார மழுந்திட வேம ணம்பெறு
     சந்தன குங்கும சேறு டன்பனி
         நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
     மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
          வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை

வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
         வாட நடம்புரி வார்ம ருந்திடு
     விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
         மோக னவஞ்சியர் போல கம்பெற
     வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
         போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச்

சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
         வாரு மெனும்படி யால கங்கொடு
     பண்சர சங்கொள வேணு மென்றவர்
         சேம வளந்துறு தேன ருந்திட
     துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
         ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ......மங்கையோரால்

துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
         சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய
     புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
         சூலை மிகுந்திட வேப றந்துடல்
     துஞ்சிய மன்பதி யேபு குந்துய
         ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய்

அந்தர துந்துமி யோடு டன்கண
         நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
     ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
         வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி
     அம்புய னந்திரு மாலொ டிந்திரை
         வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர்

அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
         மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்
     அம்புவி மங்கைய ரோட ருந்ததி
         மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
     அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
         காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே

திந்திமி திந்திமி தோதி மிந்திமி
         தீத திதிந்தித தீதி திந்திமி
     தந்தன தந்தன னாத னந்தன
         தான தனந்தன னாவெ னும்பறை
    செந்தவில் சங்குட னேமு ழங்கசு
         ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் .....கண்டவேலா

செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
         வாழு மிளங்கொடி யாள்ப தங்களில்
     வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
         தாள ழகங்கையின் வேலு டன்புவி
    செம்பொனி னம்பல மேல கம்பிர
         கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மந்தரம் என் குவடு ஆர் தனங்களில்
         ஆரம் அழுந்திடவே, மணம் பெறு
     சந்தன குங்கும சேறு உடன், பனி
         நீர்கள் கலந்திடுவார், முகஞ் சசி,
     மஞ்சு உறையும் குழலார், சரம் கயல்
          வாள் விழி, செங்கழு நீர் ததும்பிய ......கொந்தளஓலை

வண் சுழலும் செவியார், நுடங்கு இடை
          வாட நடம் புரிவார், மருந்து இடு
     விஞ்சையர், கொஞ்சிடுவார், இளங்குயில்
         மோகன வஞ்சியர் போல, அகம்பெற
     வந்தவர் எந்தஊர், நீர் அறிந்தவர்
         போல இருந்தது எனா மயங்கிட ...... இன்சொல்கூறிச்

சுந்தர வங்கணமாய் நெருங்கி, நிர்
         வாரும் எனும்படி ஆல அகம் கொடு
     பண் சரசங் கொள வேணும் என்று, வர்
         சேம வளந்துறு தேன் அருந்திட,
     துன்று பொன் அங்கையின் மீது, கண்டவ-
         ரோடு விழைந்துமெ கூடி இன்புறு ......மங்கையோரால்

துன்பமுடன் கழி யோய் சிரங்கொடு
         சீ புழுவும் சலமோடு இறங்கிய
     புண் குடவன் கடியோடு இளஞ்சனி
         சூலை மிகுந்திடவே பறந்து, டல்
     துஞ்சி, யமன் பதியே புகும் துயர்
         ஆழி விடும்படி சீர் பதம் பெறு ...... விஞ்சை தாராய்

அந்தர துந்துமி யோடு உடன்கண
         நாதர் புகழ்ந்திட, வேத விஞ்சையர்
     இந்திர சந்திரர் சூரியன் கவி-
         வாணர் தவம் புலியோர் பதஞ்சலி
     அம்புயன் அம் திருமாலொடு இந்திரை
         வாணி அணங்கு அவளோடு அருந்தவர் ......தங்கள்மாதர்

அம்பர ரம்பையரோடு உடன்திகழ்
         மாஉரகன், புவியோர்கள் மங்கையர்,
     அம்புவி மங்கையரோடு அருந்ததி
         மாதர் புகழ்ந்திடவே நடம் புரி
     அம்புய செம்பதர் மாடு அகம் சிவ-
         காம சவுந்தரியாள் பயந்து அருள் ...... கந்தவேளே!

திந்திமி திந்திமி தோதி மிந்திமி
         தீத திதிந்தித தீதி திந்திமி
     தந்தன தந்தன னாத னந்தன
         தான தனந்தன னா எனும்பறை
    செந்தவில் சங்குடனே முழங்க, சு-
         ரார்கள் சிரம் பொடியாய் விடும்செயல் .....கண்டவேலா!

செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில்
         வாழும் இளங்கொடியாள் பதங்களில்
     வந்து வணங்கி நிணே முகம் பெறு
         தாள் அழக! அங்கையின் வேலுடன் புவி
    செம்பொனின் அம்பல மேல் அகம் பிர-
         கார சமந்திர மீது அமர்ந்து அருள் ...... தம்பிரானே.

பதவுரை

         அந்தர துந்துமியோடு உடன் கணநாதர் புகழ்ந்திட --- ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி என்னும் பேரிகை வாத்தியத்துடன், கணத் தலைவர்கள் புகழ,

     வேத விஞ்சையர் இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு --- வேதமந்திரத்தில் வல்லவர்கள், இந்திரர்கள், சந்திரர்கள், சூரியன், கவி பாடும் புலவர்கள், தவத்தில் சிறந்த வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரமதேவன், அழகிய திருமாலுடன் இலக்குமிதேவி, சரசுவதிதேவியுடன்

         அரும் தவர் தங்கள் மாதர் அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மாஉரகன் புவியோர்கள் மங்கையர் அம்புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே --- அரிய தவ முனிவர்களின் பத்தினிமார்கள், விண்ணுலகில் உள்ள ரம்பை முதலான தேவ மாதர்களுடன், விளங்கும் சிறப்புடைய நாகலோக மாதர்களும், அழகிய மண்ணுலக மாதர்களும், அருந்ததி ஆகிய மாதர்களும் புகழ்ந்திடவே,

         நடம் புரி அம்புய செம்பதர் --- திருநடனம் புரிகின்ற, தாமரை ஒத்த செவ்விய திருவடியை உடைய சிவபெருமானது

     மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் --- பக்கத்திலும் உள்ளத்திலும் உறைகின்ற சிவகாம சுந்தரியாம் உமாதேவியார்

     பயந்து அருள் கந்தவேளே --- பெற்றருளிய கந்தக் கடவுளே!

      திந்திமி திந்திமி தோதிமிந்திமி தீததி திந்தித தீதிதிந்திமி தந்தன தந்தன னாதனந்தன தானதனந்தனனா எனும் பறை --- திந்திமி திந்திமி தோதிமிந்திமி தீததி திந்தித தீதிதிந்திமி தந்தன தந்தன னாதனந்தன தானதனந்தனன என்ற ஓசையுடன் ஒலிக்கும் பறைகளும்,

     செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா --- செவ்விய தவில்களும், சங்குகுளும் முழங்க, அசுரர்களுடைய தலைகள் பொடியாகும்படிப் போகும் செயலைச் செய்த வேலாயுதக் கடவுளே!

      செம்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் --- சிவந்த தினைப் புனத்தில் இருந்த அழகிய மலைநில ஊராகிய வள்ளிமலையில் வாழ்கின்ற

     இளம் கொடியாள் பதங்களில் வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக --- இளமை வாய்ந்த கொடி போன்ற வள்ளிநாயகியின் திருவடிகளில் வந்து வணங்கி நின்று, அவளது திருமுகத் தரிசனத்தைப் பெற்ற திருவடி அழகரே!

      அம்கையின் வேலுடன் புவி செம்பொ(ன்)னின் அம்பலம் --- திருக்கரத்தில் வேலாயுதத்துடன் இந்தப் பூமியில் செம்பொன் அம்பலத்தில் உள்ள,

     மேல் அகம் பிரகார சமந்திர மீது அமர்ந்து அருள் தம்பிரானே --- அழகிய மேற்குப் பிரகாரத்தில் விளங்கும் கோயிலில் வீற்றிருந்து அருள் புரிகின்ற தனிப்பெரும் தலைவரே!

      மந்தரம் என் --- மந்தரம் என்று சொல்லப்பட்ட

     குவடுஆர் தனங்களில் --- மலை போன்ற மார்பகங்களில்

     ஆரம் அழுந்திடவே ---  (கழுத்தில் அணிந்துள்ள) பொன் மாலை அழுந்திக் கிடக்க,

     மணம் பெறு சந்தன --- நறுமணம் கொண்ட சந்தனம்,

     குங்கும சேறுடன் --- குங்குமப்பூ அரைத்த கலவைச் சேற்றுடன்

     பனி நீர்கள் கலந்திடுவார் --- பன்னீர்களைக் கலந்து பூசி வைப்பவர்கள்.

      முகம் சசி --- சந்திரன் போன்ற முகத்தை உடையவர்கள்.

     மஞ்சு உறையும் குழலார் --- மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள்.

     சரம் கயல் வாள் விழி --- அம்பு, கயல் மீன், வாள் (இவைகளைப் போன்ற) கண்களை உடையவர்கள்,

     செம்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை வண் சுழலும் செவியார் --- செங்கழுநீர் மலர் நிரம்ப வைத்துள்ள கூந்தலானது (காதணியாகிய) ஓலைச் சுருள் விளங்கும் நன்றாகச் சுருண்டுள்ள காதுகளை உடையவர்கள்,

         நுடங்கு இடை வாட நடம் புரிவார் --- துவள்கின்ற இடை வாடும்படி நடனம் செய்பவர்கள்,

     மருந்திடு விஞ்சையர் --- வசிய மருந்தை இடும் மாய வித்தைக்காரர்கள்.

     கொஞ்சிடுவார் --- கொஞ்சிப் பேசுபவர்.

     இளம் குயில் மோகன வஞ்சியர் போல் --- இளம் குயில் போல்பவர்கள், காம மயக்கம் தர வல்ல வஞ்சிக் கொடி போல்பவர்கள்,

         அகம் பெற வந்தவர் எந்த உ(ஊ)ர் நீர் அறிந்தவர் போல இருந்தது எனா மயங்கிட இன்சொல் கூறி --- தமது வீட்டிற்கு வந்தவர்களை நீர் எந்த ஊரைச் சேர்ந்தவர், முன்பே பழக்கம் உள்ளவர் போல் இருக்கின்றதே என்றெல்லாம் பேசி காம மயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி

     சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும்படி --- அழகாக உற்ற நேசத்துடன் அருகில் வந்து வரவேற்று

     ஆல அகம் கொடு பண்சரசம் கொள வேணும் என்று --- வீட்டுக்கு உள்ளே அழைத்து தமது இசைப் பாட்டால், காமச் சேட்டைகள் உண்டாக வேண்டும் என்ற எண்ணத்துடன்

         அவர் சேம வளம் துறு தேன் அருந்திட --- வந்தவருடைய செல்வம் என்கின்ற வளம் செறிந்த தேனை உண்ணும் பொருட்டு பொருளைக் கவர,

     துன்று பொன் அங்கையின் மீது கண்டு --- கிட்டிய பொன்னை உள்ளங்கை மேல் கண்டவுடன்

     அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால் --- அவருடன் விருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்ற விலைமாதர்களால்,

         துன்பம் முடங்கு அழிநோய் --- துயரமும், முடக்குவாதம் முதலிய உடலை அழிக்கும் நோய்களும்,

     சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே --- சிரங்குடன் சீயும், புழுவும், நீரும் ஒழுகுகிற புண்கள், குடவுண்ணியால் ஏற்பட்ட விஷக் கடியுடன், இளமையில் வந்த ஜன்னி நோய், சூலை நோய் - இவை எல்லாம் பெருகிடவே,

      பறந்து உடல் துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி --- பறந்து போய் உடல் அழிவுற்று, யமன் ஊரில் புகும் துன்பக் கடலை நான் கடக்கும்படி,

     சீர்பதம் பெறு விஞ்சை தாராய் --- உனது சீரான திருவடியைப் பெற வல்ல மந்திரத்தைத் தந்து அருளுவீராக.
    
பொழிப்புரை

         ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி என்னும் பேரிகை வாத்தியத்துடன், கணத் தலைவர்கள் புகழ, வேதமந்திரத்தில் வல்லவர்கள், இந்திரர்கள், சந்திரர்கள், சூரியன், கவி பாடும் புலவர்கள், தவத்தில் சிறந்த வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரமதேவன், அழகிய திருமாலுடன் இலக்குமிதேவி, சரசுவதிதேவியுடன், அரிய தவ முனிவர்களின் பத்தினிமார்கள், விண்ணுலகில் உள்ள ரம்பை முதலான தேவ மாதர்களுடன், விளங்கும் சிறப்புடைய நாகலோக மாதர்களும், அழகிய மண்ணுலக மாதர்களும், அருந்ததி ஆகிய மாதர்களும் புகழ்ந்திடவே, திருநடனம் புரிகின்ற, தாமரை ஒத்த செவ்விய திருவடியை உடைய சிவபெருமானது பக்கத்திலும் உள்ளத்திலும் உறைகின்ற சிவகாம சுந்தரியாம் உமாதேவியார் பெற்றருளிய கந்தக் கடவுளே!

         திந்திமி திந்திமி தோதிமிந்திமி தீததி திந்தித தீதிதிந்திமி தந்தன தந்தன னாதனந்தன தானதனந்தனன என்ற ஓசையுடன் ஒலிக்கும் பறைகளும், செவ்விய தவில்களும், சங்குகுளும் முழங்க, அசுரர்களுடைய தலைகள் பொடியாகும்படிப் போகும் செயலைச் செய்த வேலாயுதக் கடவுளே!

         சிவந்த தினைப் புனத்தில் இருந்த அழகிய மலைநில ஊராகிய வள்ளிமலையில் வாழ்கின்ற இளமை வாய்ந்த கொடி போன்ற வள்ளிநாயகியின் திருவடிகளில் வந்து வணங்கி நின்று, அவளது திருமுகத் தரிசனத்தைப் பெற்ற திருவடி அழகரே!

         அழகிய திருக்கரத்தில் வேலாயுதத்துடன் இந்தப் பூமியில் செம்பொன் அம்பலத்தில் உள்ள, மேற்குப் பிரகாரத்தில் விளங்கும் கோயிலில் வீற்றிருந்து அருள் புரிகின்ற தனிப்பெரும் தலைவரே!

         மந்தரம் என்று சொல்லப்பட்ட மலை போன்ற மார்பகங்களில் (கழுத்தில் அணிந்துள்ள) பொன் மாலை அழுந்திக் கிடக்க, நறுமணம் கொண்ட சந்தனம், குங்குமப்பூ அரைத்த கலவைச் சேற்றுடன் பன்னீர்களைக் கலந்து பூசி வைப்பவர்கள்.
சந்திரன் போன்ற முகத்தை உடையவர்கள். மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள். அம்பு, கயல் மீன், வாள் (இவைகளைப் போன்ற) கண்களை உடையவர்கள்,  செங்கழுநீர் மலர் நிரம்ப வைத்துள்ள கூந்தலானது (காதணியாகிய) ஓலைச் சுருள் விளங்கும் நன்றாகச் சுருண்டுள்ள காதுகளை உடையவர்கள், துவள்கின்ற இடை வாடும்படி நடனம் செய்பவர்கள், வசிய மருந்தை இடும் மாய வித்தைக்காரர்கள். கொஞ்சிப் பேசுபவர். இளம் குயில் போல்பவர்கள், காம மயக்கம் தர வல்ல வஞ்சிக் கொடி போல்பவர்கள், தமது வீட்டிற்கு வந்தவர்களை நீர் எந்த ஊரைச் சேர்ந்தவர், முன்பே பழக்கம் உள்ளவர் போல் இருக்கின்றதே என்றெல்லாம் பேசி காம மயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி அழகாக உற்ற நேசத்துடன் அருகில் வந்து வரவேற்று வீட்டுக்கு உள்ளே அழைத்து தமது இசைப் பாட்டால், காமச் சேட்டைகள் உண்டாக வேண்டும் என்ற எண்ணத்துடன், வந்தவருடைய செல்வம் என்கின்ற வளம் செறிந்த தேனை உண்ணும் பொருட்டு பொருளைக் கவர, கிட்டிய பொன்னை உள்ளங்கை மேல் கண்டவுடன் அவருடன் விருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்ற விலைமாதர்களால், துயரமும், முடக்குவாதம் முதலிய உடலை அழிக்கும் நோய்களும், சிரங்குடன் சீயும், புழுவும், நீரும் ஒழுகுகிற புண்கள், குடவுண்ணியால் ஏற்பட்ட விஷக் கடியுடன், இளமையில் வந்த ஜன்னி நோய், சூலை நோய் - இவை எல்லாம் பெருகிடவே, பறந்து போய் உடல் அழிவுற்று, யமன் ஊரில் புகும் துன்பக் கடலை நான் கடக்கும்படி, உனது சீரான திருவடியைப் பெற வல்ல மந்திரத்தைத் தந்து அருளுவீராக.


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதி விலைமாதர்களின் சாகசத் திறத்தை விளக்கி விளம்புகின்றது.

மருந்திடு விஞ்சையர் ---

தமது பால் வந்த ஆடவர்களை என்றும் அகலாது மயங்கிக் கிடக்குமாறு மருந்து இடுவார்கள்.

கருப்பஞ் சாறொ டரைத்துள உண்டைகள்
நிழல்கண் காண உலர்த்தி மணம்பல தடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை பின்புறம்
ஒளித்து அன்பாக அளித்து.....         ---  (நிறுக்கும்) திருப்புகழ்.

குடவன் ---

குடவுண்ணி என்ற விஷப் பூச்சி. இது கடித்து உதிரத்தை உறிஞ்சிக் குடிக்கும்.

மாடகம் சிவகாம சவுந்தரி ---

மாடு அகம்.  மாடு - பக்கத்தில்.  அகம் - உள்ளத்தில்.  பக்கத்திலும் உள்ளத்திலும் இருக்கும் சிவகாமசுந்தரி.

நிணே முகம் பெறு ---

நின்றே என்ற சொல் நிணே என்று வந்தது.  முகம்பெறு - தோன்றக் காட்சி தந்து என்ற பொருளில் வந்தது.

மேலகம்பிர காரச மந்திரம் ---

சிதம்பரத்தில் மேல் பிரகாரத்தில் உள்ள தனிக் கோயிலில் முருகவேள் எழுந்தருளி இருக்கின்றார்.  இந்தக் கோயிலை இன்றும் செங்குந்தர்கள் பரிபாலித்துக் கந்தர் சஷ்டி விழா முதலிய நித்திய நைமித்திகங்களைச் செய்து வருகின்றார்கள்.

கருத்துரை

சிதம்பரம் கோயிலில் மேல் பிரகாரத்தில் எழுந்தருளிய வேலவனே, உன் பதம் பெறும் மந்திரத்தை உபதேசித்து அருள்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...