41. தூய்மை
வாம்பரி
தனக்கு அதிக புனிதம்முகம் அதனிலே;
மறையவர்க்கு உயர்பு னிதமோ
மலர்அடியி லே;புனிதம் ஒளி கொள்கண் ணாடிக்கு
மாசில்முற் புறம்அ தனிலே;
மேம்படும்
பசுவினுக் குப்பிற் புறத்திலே;
மிக்கமட மாத ருக்கோ
மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு
மேவுவனி தையர்த மக்கும்
தாம்பிர
மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்
தங்கம்ஈ யந்த மக்கும்
தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
சாரும்மண் தாது சாணம்
ஆம்புனிதம்
இவையென்பர்; மாமேரு வில்லியே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
மாமேரு வில்லியே --- திரிபுர சங்கார
காலத்தில் பெருமை மிக்க மேரு மலையை வில்லாக வளைத்தவரே!
அனகனே --- குற்றம் அற்றவரே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வாம் பரி தனக்கு முகம் அதனிலே அதிக
புனிதம் ---தாவி ஓடுகின்ற குதிரைக்கு அதனுடைய முகத்திலே மிகுந்த தூய்மை,
மறையவர்க்கு மலர் அடியிலே உயர் புனிதம்
--- வேதங்களை உணர்ந்த அந்தணர்க்கு அவலது மலர் போன்ற பாதங்களிலே மிகுதியும் தூய்மை,
ஒளி கொள் கண்ணாடிக்கு மாசு இல் முற்புறம்
அதனிலே புனிதம் --- ஒளி பொருந்திய கண்ணாடிக்கு தூய்மையான அதன் முன்புறத்திலே
தூய்மை,
மேம்படும் பசுவினுக்குப் பின் புறத்திலே
--- உயர்ந்த பசுவுக்குப் பின் புறத்திலே தூய்மை,
மிக்க மட மாதருக்கு மேனி எல்லாம் புனிதம்
ஆகும் --- அழகு மிக்க இளம்பெண்களுக்கு உடம்பெல்லாம் தூய்மை ஆகும்,
ஆசௌசமொடு மேவும் வனிதையர் தமக்கும் ---
பூப்படைந்து தீட்டு உற்ற பெண்களுக்கும்,
தாம்பிரம் அதற்கும் --- தாமிரத்திற்கும்,
மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம்
தமக்கும் --- சிறப்பு மிக்க வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கும்,
புனிதம் தரும் --- தூய்மையைத் தருபவை,
வரு பெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும்
மண்தாது சாணம் இவை புனிதம் ஆம் என்பர் --- வருகின்ற வெள்ளத்துடன், முறையே புளியும், சுண்ணாம்புப் பொடியும் சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக் கல்லும், சாணமும் ஆகிய இவைகள் என்று மேலோர்
கூறுவர்.
No comments:
Post a Comment