காணாத துறைகள்




29. காணாத துறை

இரவிகா ணாவனசம், மாரிகா ணாதபயிர்,
     இந்துகா ணாதகுமுதம்,
ஏந்தல்கா ணாநாடு, கரைகள்கா ணாஓடம்,
     இன்சொல்கா ணாவிருந்து,

சுரபிகா ணாதகன்று, ன்னைகா ணாமதலை,
     சோலைகா ணாதவண்டு,
தோழர்கா ணாநேயர், கலைகள்கா ணாதமான்,
     சோடுகா ணாதபேடு,

குரவர்கா ணாதசபை, தியாகிகா ணாவறிஞர்,
     கொழுநர்கா ணாதபெண்கள்,
கொண்டல்கா ணாதமயில், சிறுவர்கா ணாவாழ்வு,
     கோடைகா ணாதகுயில்கள்,

வரவுகா ணாதசெலவு, இவையெலாம் புவிமீதில்
     வாழ்வுகா ணாஇளமையாம்.
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---


     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     இரவி காணா வனசம் --- கதிரவனைக் காணாத தாமரை மலர்,

     மாரி காணாத பயிர் --- மழையை அறியாத பயிர்,

     இந்து காணாத குமுதம் --- சந்திரனைப் பாராத அல்லி,
    
     ஏந்தல் காணா நாடு --- அரசன் இல்லாத நாடு,

     கரைகள் காணா ஓடம் --- கரை சேராத படகு,

     இன்சொல் காணா விருந்து --- இன்மொழி அற்ற விருந்து,

     சுரபி காணாத கன்று --- பசுவைக் காணாத கன்று,  (சுரபி - பசு)

     அன்னை காணா மதலை --- தாயை அறியாத குழந்தை,

     சோலை காணாத வண்டு --- மலர்ச் சோலையை அடையாத வண்டு,

     தோழர் காணா நேயர் --- நண்பரைப் பிரிந்திருக்கும் அன்பர்,

     கலைகள் காணாத மான் --- ஆணைக் காணாத பெண்மான், (கலை - ஆண்மான்)

     சோடு காணாத பேடு --- தன் இணையைக் காணாத பெட்டை,

     குரவர் காணாத சபை --- பெரியோர் இல்லாத அவை,

     தியாகி காணா வறிஞர் --- கொடையாளியைக் காணாத ஏழைகள்,

     கொழுநர் காணாத பெண்கள் --- கணவரைப் பிரிந்த பெண்கள்,

     கொண்டல் காணாத மயில் --- மேகத்தைப் பாராத மயில்,

     சிறுவர் காணா வாழ்வு --- மக்கள் பேறு இல்லாத வாழ்க்கை,

     கோடை காணாத குயில்கள் --- வசந்த காலத்தை அறியாத குயில்கள்,

     வரவு காணாத செலவு --- பொருள் வரவு இல்லாமல் செய்கின்ற செலவு,

     இவை எலாம் --- இவைகள் யாவும்,

     வாழ்வு காணா இளமையாம் --- இனிமையான வாழ்வை அனுபவித்து அறியாத இளமைப் பருவத்திற்குச் சமமானவை.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...