சிதம்பரம் - 0634. தத்தை என்று ஒப்பிடும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தத்தையென்று (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
கீழோனாகிய அடியேன் சிவபதம் சேர அருள்


தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான


தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்
பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ......என்பநீலச்

சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர்

சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ......விஞ்சையோர்பால்

தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...யெந்தநாளோ

குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி .....கொண்டவேலா

கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ......மங்கைபாலா

சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
    சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரும் ......எங்கள்கோவே

சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே.



பதம் பிரித்தல்


தத்தை என்று ஒப்பிடும் தோகை, நட்டம் கொளுவர்,
பத்திரம் கண் கயல், காரி ஒப்பும் குழல்கள்,
சச்சைஅம் கெச்சையும் தாளஒத்தும் பதுமை ......என்ப, நீலச்

சக்கரம் பொன்குடம் பால்இருக்கும் தனமொடு
ஒற்றி, நல் சித்திரம் போல எத்தும் பறியர்,
சக்களம் சக்கடம் சாதி துக்கம் கொலையர், ...... சங்கமாதர்,

சுத்திடும் பித்திடும் சூதுகற்கும் சதியர்,
முற்பணம் கைக்கொடும் தாரும் இட்டம் கொளுவர்,
சொக்கி, இடும்புக் கடன் சேருமட்டும் தனகும் .....விஞ்சையோர்பால்

தொக்கிடும் கக்கலுமு சூலை பக்கம்பிளவை
விக்கலும் துக்கமுமு சீத பித்தங்கள் கொடு
துப்பு அடங்கிப் படும் சோரனுக்கும் பதவி ... எந்தநாளோ?

குத்திரம் கற்ற சண்டாளர் சத்தம், குவடு
பொட்டு எழுந்திட்டு நின்று ஆட, எட்டு அம்திகையர்
கொற்றமும் கட்டியம் பாட, நிர்த்தம் பவுரி .....கொண்ட வேலா!

கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம் குமரி,
பத்தர் அன்பு உற்ற எம் தாய், ழில் கொஞ்சுகிளி,
கொட்புரம் தொக்க வெந்து ஆடவிட்டு, ங்கிவிழி ......மங்கை பாலா!

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி என்று எத்தி வந்து, டி நிர்த்தங்கள் புரி
    சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ......எங்கள் கோவே!

சிற்பரன், தற்பரன், சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன், பத்திரம் சூல கர்த்தன், சபையில்
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் ......  தம்பிரானே.


பதவுரை

      குத்திரம் கற்ற சண்டாளர் --- வஞ்சகம் கற்ற சண்டாளர்களாகிய அசுரர்களும்,

     சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட --- அழகிய ஏழு மலைகளும் பொடிபட்டுக் குலையவும்,

     எட்டு அம் திகையர் கொற்றமும் கட்டியம் பாட --- அழகிய எட்டுத் திக்குப் பாலகர்கள் மகிழ்ச்சியுடன் நின்று கூத்தாடவும், தேவரீரது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாடவும்,

     நிர்த்தம் பவுரி கொண்ட வேலா --- நடனமாகிய ஆடல்களைச் செய்த வேலாயுதக் கடவுளே!

         கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம்குமரி --- வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணியை ஒத்தவரும்,  செவ்விய குமரியும்,

     பத்தர் அன்புற்ற எம்தாய் --- பக்தர்கள் அன்பு கொண்ட எமது அன்னையும்,

     எழில் கொஞ்சு கிளி --- கொஞ்சுகின்ற அழகிய கிளி போன்றவரும்,

     கொட்(கு) புரம் தொக்க வெந்து ஆட விட்டு அங்கி விழி மங்கை பாலா --- சுழன்று திரியும் திரிபுரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் திருக்குமாரரே!

      சித்திரம் பொன் குறம்பாவை பக்கம் புணர --- விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளிநாயகியின் பால் சென்று சேர

     செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி --- வளையல் செட்டியாக ஏமாற்றி வந்து திருவிளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து,

     சில்சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே --- நுண்ணிய ஞானமாதாவாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவரே!

         சிற்பரன் தற்பரன் சீர் திகழ்த் தென்புலியூர் ருத்திரன் --- ஞான முதல்வரும், பரம்பொருளும், பெருமை விளங்கும் அழகிய புலியூர் என்ற சிதம்பரத்தில் உறைகின்ற உருத்திர மூர்த்தியும்,

     பத்திர அம் சூல கர்த்தன் --- இலைகளை உடைய அழகிய சூலாயுதத்தைக் கொண்ட தலைவரும்,

     சபையில் தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே --- பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமான் மெச்சும் தனிப்பெரும் தலைவரே!

      தத்தை என்று ஒப்பிடும் --- கிளி என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய்,

     தோகை --- மயில் போன்றவராய் உள்ளவர்கள்,

     நட்டம் கொளுவர் --- நடனம் செய்பவர்கள்,

      பத்திரம் கண் கயல் --- அம்பு போன்ற கண்ணும்,

     காரி ஒப்பும் குழல்கள் --- நீருண்ட கார் மேகத்தை ஒத்த கூந்தலும் கொண்டு,

     சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் --- ஒலி செய்யும் அழகிய கால் சதங்கை தாள ஒத்துப் போல ஒலி செய்யும்,

     பதுமை என்ப --- பாவை எனக் கூறத் தக்கவர்கள்,

      நீலச் சக்கரம் --- நீல நிறமுள்ள சக்கரவாகப் பறவை,

     பொன் குடம் --- பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து,

     பால் இருக்கும் தனமொடு ஒற்றி --- பால் கொண்டதாய் உள்ள கொங்கையைக் கொண்டு அணைந்து,

     நன் சித்திரம் போல எத்தும் பறியர் ---  நல்ல ஓவியம் போல இருந்து, வஞ்சித்து பொருளைப் பறிப்பவர்கள்.

      சக் களம் சக்கடம் சாதி --- முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற

     துக்க கொலையர் --- துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள்,

     சங்கமாதர் --- கூட்டமாகிய விலைமாதர்கள்.

     சுத்திடும் --- தம் வசத்தில் சுழலும்படியான

     பித்து இடும் --- மயக்கத்தைத் தருகின்ற

     சூது கற்கும் சதியர் --- சூதினைக் கற்ற சதிகாரிகள்.

      முன் பணம் கைக்கொடு --- முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு

     உந்து ஆரும் இட்டம் கொளுவர் --- செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள்,  

     சொக்கி இடும்பு --- மயங்கும்படியான இடும்பு வார்த்தைகளைச் சொல்லி

     கடன் சேருமட்டும் --- பொருள் சேரும் வரையில்

     தனகும் விஞ்சையோர் பால் --- கொஞ்சிப் பேசும் மாய வித்தைக்காரர்கள் ஆகிய விலைமகளிரால்,

      தொக்கிடும் --- நெருங்கிக் கூடி வருகின்ற

     கக்கலும் --- வாந்தியும்,

     சூலை --- சூலை நோயும்,

     பக்கம் பிளவை --- விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும்,

     விக்கலும் --- விக்கலும்,

     துக்கமும் --- துக்கமும்,

     சீத --- சீதமலம்,

     பித்தங்கள் கொடு --- பித்தம் ஆகிய நோய்களைக் கொண்டு,

     துப்பு அடங்கிப் படும் சோரனுக்கும் --- வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனாகிய அடியேனுக்கும்

     பதவி எந்த நாளோ --- சிவ பதவி கிடைப்பது எந்த நாளோ அறிகிலேன்?

பொழிப்புரை


         வஞ்சகம் கற்ற சண்டாளர்களாகிய அசுரர்களும், அழகிய ஏழு மலைகளும் பொடிபட்டுக் குலையவும்,  அழகிய எட்டுத் திக்குப் பாலகர்கள் மகிழ்ச்சியுடன் நின்று கூத்தாடவும், தேவரீரது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாடவும், நடனமாகிய ஆடல்களைச் செய்த வேலாயுதக் கடவுளே!

         வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணியை ஒத்தவரும்,  செவ்விய குமரியும், பக்தர்கள் அன்பு கொண்ட எமது அன்னையும், கொஞ்சுகின்ற அழகிய கிளி போன்றவரும், சுழன்று திரியும் திரிபுரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் திருக்குமாரரே!

         விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளிநாயகியின் பால் சென்று சேர வளையல் செட்டியாக ஏமாற்றி வந்து திருவிளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணிய ஞானமாதாவாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவரே!

         ஞான முதல்வரும், பரம் பொருளும், பெருமை விளங்கும் அழகிய புலியூர் என்ற சிதம்பரத்தில் உறைகின்ற உருத்திர மூர்த்தியும், இலைகளை உடைய அழகிய சூலாயுதத்தைக் கொண்ட தலைவரும், பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமான் மெச்சும் தனிப்பெரும் தலைவரே!

         கிளி என்று ஒப்பு சொல்லத் தக்கவராய், மயில் போன்றவராய் உள்ளவர்கள், நடனம் செய்பவர்கள், அம்பு போன்ற கண்ணும், நீருண்ட கார் மேகத்தை ஒத்த கூந்தலும் கொண்டு, ஒலி செய்யும் அழகிய கால்சதங்கை தாள ஒத்துப் போல ஒலி செய்யும், பாவை எனக் கூறத் தக்கவர்கள், நீல நிறமுள்ள சக்கரவாகப் பறவை,  பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால் கொண்டதாயுள்ள கொங்கையைக் கொண்டு அணைந்து, நல்ல ஓவியம் போல இருந்து, வஞ்சித்து பொருளைப் பறிப்பவர்கள், முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள், கூட்டமாகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான மயக்கத்தைத் தருகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள்,  முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள், மயங்கும்படியான இடும்பு வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் கொஞ்சிப் பேசும் மாய வித்தைக்காரர்கள் ஆகிய விலைமகளிரால், நெருங்கிக் கூடி வருகின்ற வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும், விக்கலும், துக்கமும், சீதமலம், பித்தம் ஆகிய நோய்களைக் கொண்டு, வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனாகிய அடியேனுக்கும் சிவ பதவி கிடைப்பது எந்த நாளோ அறிகிலேன்?

விரிவுரை

தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் ---

பொதுமாதர்கள், கிளிபோல் கொஞ்சிப் பேசி மயில்போல் நடனம் புரிபவர்கள்.
   
பத்திரம் கணும் கயங் காரி ஒப்பும் குழல்கள் ---

பத்திரம் - அம்பு.  பத்திரம் கண் - அம்பு போன்ற கண்கள். கயம் காரி ஒப்பும் குழல் - நீர் உண்ட மேகத்தைப் போன்ற கரிய கூந்தல்.

சச்சையங் கெச்சை ---

ஒலிக்கின்ற கெச்சை - கால் சதங்கை.

நீலச் சக்கரம் ---

நீல நிறம் உள்ள சக்கரவாகப் பறவை போன்ற கொங்கை.

சக்களம் சக்கடம் சாதி ---

ச கள்ளம் சக்கடம் சாதி - முழுப் பொய்யை பரிகாச வார்த்தைகளால் சாதிப்பவர்கள்.

சங்கமாதர் ---

சங்கம் - கூட்டம்.  கூட்டமாயுள்ளவர்கள்.

சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் ---

சுத்திடும் - சுற்று என்பதன் மரூஉ. தமது வசமாக ஆடவர் சுற்றும்படியான பித்தத்தைத் தலைக்கு ஏற்றி வஞ்சனைகளைக் கற்ற சதிகாரர்.

முற்பணம் கைக்கொடு வந்தாரும் இட்டங் கொளுவர் ---

முன்பணம் கை கொடு வந்து ஆரும் - முன்பணமாகப் பொருளைக் கொண்டு செலுத்தப்படும் யாரும்.

சொக்கிடும் புக்கடன் சேருமட்டும் தனகும் ---

சொக்கு இடும்பு கடன்.  சொக்கும்படியான இடும்பு வார்த்தைகள் பேசி பணம் சேரும் வரை கொஞ்சிப் பேசுவர்.

தனகுதல் - கொஞ்சுதல்.

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும்     ---  திருப்புகழ்.

சத்தங்குவடு ---

சத்த அம் குவடு - ஏழு அழகிய மலைகள்.

சூரன் போரிட்டபோது அசுரர்கள் ஏழு மலைகலாக நின்று மாயம் செய்தனர்.  அம் மலைகளை முருகவேள் பொடிபட்டு அழியச் செய்து அருளினார்.

எட்டந் திகையர் ---

எட்டு அம் திகையர்.  திகை - திசை.

அழகிய எண்திசைக் காவலர்கள்.  கிழக்கில் - இந்திரன். தென்கிழக்கில் - அக்கினி. தெற்கில் - இயமன்.  தென்மேற்கில் - நிருதி.  மேற்கில் - வருணன்.  வடமேற்கில் - வாயு. வடக்கில் - குபேரன். வடகிழக்கில் - ஈசானன்.

கட்டியம் பாட ---

அரசனிடம் வீரவிருதுகளைப் புகழ்ந்து பாடுவது.  அட்ட திக்குப் பாலகர்கள் முருகவேளைக் கட்டியம் பாடித் துதி செய்தார்கள்.


கொற்றர் ---

கொற்றம் - வெற்றி.  வெற்றியுடையவர் சிவபெருமான்.

சிந்தாமணி ---

சிந்தாமணி பாற்கடலில் அமுதத்துடன் தோன்றியது. இது சிந்தித்தவை அனைத்தையும் தரவல்லது. இச் சிந்தாமணி இந்திரனிடம் இருந்தது.

இந்திரன் விநாயகரை வழிபடும்போது, தங்கக் குடத்தில் சிந்தாமணியைப் பதித்து விநாயகருக்குக் காணிக்கையாகத் தந்தான்.

விநாயகர் சிந்தாமணி பதித்த பொற்குடத்தால் அம்மையப்பரை வழிபடுவர். அதனால், சிந்தாமணி விநாயகர் எனப் பேர் பெற்றார்.

சிந்தாமணிக் கலச கரகட கபோலத்ரி
அம்பக விநாயகர்                        ---  மயில் விருத்தம்.

சிந்தாமணி தெண்கடல் அமிர்தம்
தில்லையோன் அருளால்
வந்தால் இகழப்படுமே....                  --- திருக்கோவையார்.

சிந்தாமணி போல இறைவன் உயிர்களுக்கு எல்லா நலங்களையும் தர வல்ல மணியாக விளங்குகின்றான் என்பதை வள்ளல் பெருமான் அருளுமாறு காண்க...

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே!

 விண்பதம் அனைத்தும் மேற்பதம் முழுவதும்
  கண்பெற நடத்தும் ககனமா மணியே!

  பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
   சார்புற நடத்தும் சரஒளி மணியே!          
         
அண்ட கோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்
கண்டு கொண்டிட ஒளிர் கலைநிறை மணியே!

சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராவி உள் விளங்கும் வித்தக மணியே!

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே!

தாழ்வு எலாம் தவிர்த்து, சகமிசை அழியா
வாழ்வு எனக்கு அளித்த வளர்ஒளி மணியே!

 நவமணி முதலிய நலமெலாம் தரும் ஒரு
 சிவமணி எனும்அருட் செல்வ மாமணியே!...
  

கொட்புரந் தொக்க வெந்தாட ---

கொட்பு - சுழற்சி.

கொட்புற்றெழ நட்பற்றவுணரை வெட்டி   
                                    --- (முத்தைத்தரு) திருப்புகழ்.

சதா சுழன்று உலகுக்கு இடுக்கண் செய்த திரிபுரங்கள் எரிய கண்களால் நெருப்பைச் சிந்திய உமாதேவி என்கின்றார் அருணகிரியார். அர்த்தநாரி சிவபிரான். ஆதலால், அக்கினிக் கண்ணில் பாதி அம்பிகைக்கும் உண்டு. ஆதலால், திரிபுரத்தைக் கனல் கண்ணால் எரித்தவர் பார்வதி என்பது பொருள்.


நித்தம்புரி ---

வள்ளிநாயகியிடம் முருகவேள் வளையல்காரச் செட்டியாகவும், வேங்கைமரமாகவும் முதிய முனிவராகவும் வந்து திருவிளையாடல் புரிந்து அருளினார்.  புரி - புரிந்து.

முருகவேள் வள்ளிபிராட்டியைக் காத்தருளும் பொருட்டு வளையல் செட்டியாராக வனம் போனார். “செட்டியப்பனை” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுகின்றார்.

  செட்டியென்று வனமேவி இன்பரச
      சக்தியின் செயலினாளை யன்புருக
      தெட்டி வந்து புலியூரின் மன்றுள்வளர் பெருமாளே”    ---  (கட்டிமுண்ட) திருப்புகழ்

      ... ...        ... ...          ... ...     வள்ளி
கைவளையல் ஏற்றி, ரு காலில் வளைந்து ஏற்றி
மைவளைய நெஞ்ச மயல் ஏற்றி - வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு வியாபாரம் செய்செட்டி, - வெருட்டியொரு
வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியும் குறச்செட்டி, - பாடாநல்
கீரனைப் பூதத்தால் கிரிக்குகையுள் கல்சிறைசெய்து
ஓர் அரிய பாவை உகந்து அணைந்து - கீரனுக்கு
வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மையாம் செட்டி,
ஆட்டில் உவந்து ஏறும் அன்ன தானசெட்டி, - ஈட்டுபுகழ்
தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி,
நாவேந்தர்க்கே இன்பம் நல்கு செட்டி, - பூ ஏந்திக்
கண்டு பணிபவர் தம் காசு பறிக்கும் செட்டி,
பண்டு அறுவர் ஊட்டு தனபால் செட்டி, - தொண்டர்
மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
குதிரை மயில் ஆம் குமர செட்டி, சதிர் உடனே
சீவ பர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி,
மூவர் வணங்கும் முருகப்ப செட்டி - பாவனைக்கும்
அப்பாலுக்கு அப்பாலாம் ஆறுமுக செட்டி, இவன்
தப்பாமல் கண்டால் உன் தன்னை விடான், - இப்போதுஎம்
வீட்டில் அவல் வெல்லம் வேணது உண்டு வா எனச் சீர்
ஆட்டி அனைமார் அகம் புகுந்தார்”                  --- தணிகையுலா

சிற்சிதம் ---

சில் சிதம் - நுண்ணிய ஞானம்.
சிதம் - ஞானம்.

வள்ளியம்மையார் நுண்ணிய ஞான வடிவு உடையவர்.

ருத்திரன் ---

உருத்திரன் என்ற திருப்பேர் ஆதியந்தம் இல்லாத சிவபெருமானுடையது.

துன்பக் கடலில் வீழ்ந்த உயிர்களைக் கைகொடுத்து எடுப்பவர்.  ஆதலால், உருத்திரன் என்று பேர் பெற்றார்.

இன்னலங் கடல்உள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்,
அன்னவன் தர வந்தோர்க்கும், அடிஅடைந் தோர்க்கும் அன்னான்
தன்உரு எய்தினோர்க்கும் சார்ந்ததால் அவன் தனிப்பேர்.   ---  கந்தபுராணம்.

ஆகவே, சிவபெருமானுடைய திருநாமம் உருத்திரன் என உணர்க. அன்றி, சிவபெருமானுடைய அடிமலரை நினைக்கும் கணங்கட்கும் உருத்திரர்கள் என்று பேர் உண்டு. ஏகாதச ருத்திரர், நூற்றெட்டு உருத்திரர்கள், சீகண்ட ருத்திரர், சிவசாரூபம் பெற்றோர் ஆகிய பலருக்கும் உருத்திரர் என்று பேர் அமைந்தது.  இதனால், உருத்திரன் என்ற பேர் கொண்டவர் பலர்.  சிவபெருமான் மகாருத்திரர்.

அக்கினி தேவனுக்கும் உருத்திரன் என்று பேருண்டு. அவனுக்கு அப்பேர் வந்த காரணம் பின்வருமாறு......

தேவர்கள் ஒரு சமயம் தமது செல்வங்களை அக்கினிபால் ஒப்புவித்து, அசுரர்கள் மீது போருக்குச் சென்றார்கள்.  வெற்றி பெற்று வந்து தேவர்கள் கேட்டபோது, அக்கினி தர மறுத்து ஓடினான். தேவர்கள் அவனைத் தொடர்ந்து சூழ்ந்தபோது, அவன் அழுதான்.  ஆதலால், உருத்திரன் என்று பேர் பெற்றான்.  எணவே, உருத்திரன் என்ற பேர் பலருக்கும் உண்டு.  இந்த விவரம் தெரிந்தவர்கள் மயக்கமடையார்கள்.

பத்திரஞ் சூலகரத்தன் ---

பத்திர அம் சூலம்.  இலை போன்ற கூரிய மூன்று பிரிவுடைய சூலம்.  மூவிலைச் சூலம் என்பர்.  இது சிவபெருமானுடைய ஆயுதம்.  இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி என்று மூன்று சத்திகளைக் குறிக்கும்.

கருத்துரை

கனகசபையில் நடமிடும் சிவபெருமானுடைய திருக்குமாரரே, மாதர் வயப்பட்ட சிறியேன் நற்பதவி சேர அருள் புரிவாயாக.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...