மெய்யால் வரும் நன்மை, பொய்யால் வரும் கேடு.





மெய்அதைச் சொல்வார் ஆகில் விளங்கிடும் மேலாம் நன்மை,
வையகம் அதனைக் கொள்ளும், மனிதரில் தேவர் ஆவார்,
பொய்அதைச் சொல்வார் ஆகில், போசனம் அற்பம் ஆகும்,
நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுஉள்ளோரே.

இதன் பொருள் ---

     மெய் அதைச் சொல்வார் ஆகில் விளங்கிடும் மேலாம் நன்மை --- உண்மையையே ஒருவன் சொல்வானானால், அவனிடத்தே மேலான நன்மைகள் யாவும் விளங்கித் தோன்றும்,

     வையகம் அதனைக் கொள்ளும் --- உலகில் உள்ளோரும் அவரை மேலானவர் என்று கொள்வார்கள்.

     மனிதரில் தேவர் ஆவார் --- மனிதருக்குள் தேவர் போன்று விளங்குவார்கள்.

     பொய் அதைச் சொல்வார் ஆகில் --- அப்படிக்கு அல்லாது பொய்யையே ஒருவன் செல்வானானல்,

     போசனம் அற்பம் ஆகும் ---  உண்ண உணவு கிடைக்காது.

     நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவு உள்ளோரே --- அறிவு உடைய பெரியோர் இவர்களை அற்பர்கள் என்று கொண்டு, ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.

     விளக்கம் --- வாய்மை என்னும் அதிகாரத்தில் பொய்யால் வரும் கேட்டினைத் திருவள்ளுவ நாயனார் எடுத்துக் காட்டி உள்ளார்.

பொய்யாமை அன்ன புகழ் இல்லை, எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று.

என வரும் திருக்குறள் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணுக.

"பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது" என்பது பழமொழி. இதன் விளக்கத்தை, தண்டலையார் சதகம் என்னும் நூலில் காணலாம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...