27. உயிர் இரக்கம் என்னும் சீவகாருண்ணியம் வேண்டும்.
முன்அரிய
மறைவழங்கும் தண்டலையார்
ஆகமத்தின் மொழிகே ளாமல்
பின்உயிரை
வதைத்தவனும், கொன்றவனும்
குறைத்தவனும், பேர் உளோனும்,
அந்நெறியே
சமைத்தவனும், உண்டவனும்
நரகுஉறுவர்; ஆத லாலே
தன்உயிர்போல்
எந்நாளும் மன்உயிருக்கு
இரங்குவது தக்க தாமே.
இதன்
பொருள் ---
முன் அரிய மறை வழங்கும் தண்டலையார்
ஆகமத்தின் மொழி கேளாமல் --- முன் ஒருகால் அருமையான வேதங்களைத் தமது திருவாய் மலர்ந்து உலகம்
அறிந்து உய்ய அருளிய திருத்தண்டலை இறைவர் அருளிய ஆகம நூல்களில் கூறப்பட்டு
இருப்பதைக் கேட்டு அதன்படி நடவாமல்,
உயிரை வதைத்தவனும் --- ஓர் உயிருக்குத்
துன்பத்தை விளைவித்தவனும்,
கொன்றவனும் --- ஓர் உயிரைக் கொன்றவனும்,
குறைத்தவனும் --- கொன்றல உடலைக் கூறாக்கிக்
குறைவு படுத்தியவனும்,
பேர் உளோனும் --- கொலையாளி எனப் பெயர்
பெற்றவனும்,
அந்நெறியே சமைத்தவனும் --- கொலை வழியிலே
நின்று உயிர் நீங்கிய ஊனைச் சமைத்தவனும்,
உண்டவனும் --- சமைத்ததை உண்டவனும்,
ஆகிய
இவர்கள் எல்லாம்,
நரகு உறுவர் --- நரகத்தை அடைவர்,
ஆதலாலே --- ஆகையினாலே,
எந்நாளும் தன் உயிர்போல் மன் உயிருக்கு
இரங்குவது தக்கது ஆம் --- எப்போதும்
தன் உயிரைப் போலப் பிற உயிரையும் நினைத்து
இரக்கம் கொள்ளுவதே தக்கது ஆகும்.
No comments:
Post a Comment