அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொந்தள ஓலைகள்
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
அறிவிலிகள் ஆகிய போக மாதர்
மேல்
அடியேன் வைத்த ஆசையை மாற்றி அருள்வாயாக.
தந்தன
தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் ...... தனதான
கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை வீசித்தண்
கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ......டையென்மேகம்
கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண்
கொஞ்சிய கோகில மாகப்பொன் ......
பறிகாரர்
தந்திர
மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந்
தம்பல வாயொடு பேசிக்கொண் ......
டுறவாடிச்
சம்பள
மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ......
செயல்தீராய்
அந்தக
னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண்
டங்கச னாருடல் வேகக்கண் ......
டழல்மேவி
அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்
றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
சிந்திட வேல்விடு வாகைத்திண் ......
புயவேளே
செங்குற
மாதுமி னாளைக்கண்
டிங்கித மாயுற வாடிப்பண்
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கொந்தள
ஓலைகள் ஆட, பண்
சங்கு ஒளி போல் நகை வீசி, தண்
கொங்கைகள் மார்பினில் ஆட, கொண்- .....டை
என்மேகம்
கொங்கு
எழு தோள்வளை ஆட, கண்
செங்கயல் வாளிகள் போல, பண்
கொஞ்சிய கோகிலம் ஆக, பொன் ...... பறிகாரர்
தந்திரம்
ஆம்என ஏகி, பொன்
தொங்கலொடு ஆரமும் ஆட, செந்
தம்பல வாயொடு பேசிக் கொண்டு ...... உறவாடி,
சம்பளம்
ஈது என ஓதி, பின்
பஞ்சணை மேல் மயல் ஆட,அச்சம்
சங்கை இல் மூளியர் பால் வைக்கும்
...... செயல்
தீராய்.
அந்தகன்
ஆர்உயிர் போக, பொன்
திண் புரமொடு எரி பாய, பண்டு
அங்கசன் ஆர்உடல் வேக, கண் ...... தழல்மேவி
அண்டர்கள்
ஓட, அடல் ஆர் தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்று,
அம்பல மீதினில் ஆடுஅத்தன் ......
குருநாதா!
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம்
பொங்கமொடு ஏழ்கடல் சூர்பத்மன்
சிந்திட வேல்விடு வாகைத் திண் ......
புய வேளே!
செங்குற
மாது மினாளைக் கண்டு,
இங்கிதமாய் உறவாடி, பண்
செந்தமிழ் மால் புலியூர் நத்தும்
...... பெருமாளே.
பதவுரை
அந்தகன் ஆருயிர் போக --- இயமனுடைய அரிய
உயிர் அழிந்து போகவும்,
பொன் திண் புரமோடு எரி பாய --- அழகிய
வலிய திரிபுரங்கள் எரிந்து அழியவும்,
பண்டு அங்கசனார் உடல் வேக --- முன்
ஒரு நாள் அழகிய மன்மதனுடைய உடல் வெந்து பொடியாகவும்,
கண் தழல் மேவி --- நெற்றிக் கண்ணைத்
திறந்து நெருப்பைச் செலுத்தி,
அண்டர்களோடு --- தேவர்கள்
மட்டும் அல்லாது,
அடல் ஆர் தக்கன் --- வலிமை மிக்க
தக்கனும்,
சந்திர சூரியர் வீழச் சென்று --- சந்திர
சூரியர்களும் விழச் செய்து,
அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா --- பொன் அம்பலத்தில் ஆனந்தத் திருக்கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக் குருநாதரே!
சிந்துரமோடு அரி
தேர் வர்க்கம் பொங்கமோடு ஏழ்கடல் சூர் பத்மன் சிந்திட --- யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள்
எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட
வேல் விடு வாகைத் திண்புய வேளே --- வேலைச்
செலுத்திய வெற்றி பொருந்திய வலிய புயங்களைக் கொண்ட முருகவேளே!
செம் குற மாது
மி(ன்)னாளைக் கண்டு --- செவ்விய குறமாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைக்
கண்டு,
இங்கிதமாய் உறவாடி --- அவரோடு இனிமையாய் உறவு பூண்டு,
பண் செந்தமிழ் மால் புலியூர் நத்தும்
பெருமாளே --- இசைத் தமிழ் விளங்கும் புலியூர் என்னும் சிதம்பரத்தை விரும்பும்
பெருமையில் மிக்கவரே!
கொந்தள ஓலைகள் ஆட --- தலை மயிர்ச்
சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய,
பண் சங்கு ஒளி போல் நகை வீசி ---
அழகிய சங்கின் ஒளியைப் போல பற்கள் ஒளியை வீச,
தண் கொங்கைகள் மார்பினில் ஆட --- குளிர்ச்சியான
மார்பகங்கள் அசைய,
கொங்கு எழு கொண்டை
என் மேகம்
--- மணம் கமழுகின்ற, கொண்டை என்கின்ற
கறுத்த மேகமும்
தோள் வளை ஆட --- தோள்களில்
அணிந்துள்ள அணிகலன்கள் ஆட,
கண் செம்கயல் வாளிகள் போல --- கண்கள்
சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க,
பண் கொஞ்சிய கோகிலமாக
--- இசை கொஞ்சும் குயிலென விளங்கி,
பொன் பறிகாரர் தந்திரமாம் என ஏகி --- பொன் காசுக்களைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று,
பொன் தொங்கலொடு ஆரமும்
ஆட
--- பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய,
செம் தம்பல வாயொடு பேசிக் கொண்டு உறவாடி
--- சிவந்த தாம்பூலக் கரை உடைய வாயுடன் பேசி இருந்து, பல உறவு முறைகளைக் கையாண்டு,
சம்பளம் ஈது என ஓதி --- தனக்குக் கொடுக்க வேண்டிய தொகை இவ்வளவு என்று நிச்சயித்து,
பின் பஞ்சணை மேல் மயல் ஆடு --- அதன்
பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப் பேசும்,
அச்சம் சங்கை இல் மூளியர்பால் வைக்கும்
செயல் தீராய் ---
பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்து அருளுவாயாக.
பொழிப்புரை
இயமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரிபுரங்கள் எரிந்து
அழியவும், முன் ஒரு நாள் அழகிய
மன்மதனுடைய உடல் வெந்து பொடியாகவும், நெற்றிக்
கண்ணைத் திறந்து நெருப்பைச் செலுத்தி, தேவர்கள்
மட்டும் அல்லாது, வலிமை மிக்க தக்கனும், சந்திர சூரியர்களும் விழச் செய்து, பொன் அம்பலத்தில் ஆனந்தத் திருக்கூத்தாடின
பெருமானாகிய சிவபிரானுக்குக் குருநாதரே!
யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள்
எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி பொருந்திய வலிய
புயங்களைக் கொண்ட முருகவேளே!
செவ்விய குறமாதாகிய வள்ளி என்னும்
மின்னல் போன்ற அழகியைக் கண்டு,
அவரோடு
இனிமையாய்
உறவு பூண்டு, இசைத் தமிழ்
விளங்கும் புலியூர் என்னும் சிதம்பரத்தை விரும்பும் பெருமையில் மிக்கவரே!
தலை மயிர்ச் சுருளின் கீழுள்ள காதோலைகள்
அசைய, அழகிய சங்கின்
ஒளியைப் போல பற்கள் ஒளியை வீச,
குளிர்ச்சியான
மார்பகங்கள் அசைய, மணம் கமழுகின்ற, கொண்டை என்கின்ற
கறுத்த மேகமும், தோள்களில்
அணிந்துள்ள அணிகலன்களும் ஆட, கண்கள் சிவந்த கயல்
மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க, இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப்
பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று, பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய, சிவந்த தாம்பூலக்
கரையுடைய வாயுடன் பேசி இருந்து,
பல
உறவு முறைகளைக் கையாண்டு, தனக்குக் கொடுக்க
வேண்டிய தொகை இவ்வளவு என்று நிச்சயித்து, அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம
மயக்கப் பேச்சுக்களைப் பேசும், பயமும் வெட்கமும்
இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்தருளுவாயாக.
விரிவுரை
அந்தகன்
ஆருயிர் போக ---
சிவபெருமான்
மார்க்கண்டேய முனிவரைக் காக்க, இயமனைத் தனது திருவடியால் உதைத்து
அருளினார்.
அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக
முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது
புத்திரியாகிய மருத்துவதியை மணந்து தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால்
வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசித் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம்
புரிந்தனர்.
வேண்டுவார்
வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர்.
முனிவர்
பெருமான் புரமூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டும் என்றனர்.
அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீங்குறு குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு
வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது
சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும்
எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர்.
"தீங்கு
உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,
மூங்கையும்
வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,
ஓங்கிய
ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு
ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",
"கோலமெய்
வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல்
உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,
காலம்
எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல
பாலனைத்
தருதுமோ? நின் எண்ணம் என் பகர்தி" என்றான். ---
கந்த புரைணம்.
முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே
வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.
மாண்
தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,
"ஆண்டு
அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி,
யாக்கைக்கு
ஈண்டு
ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது
ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக" என்றான். ---
கந்த புராணம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது
இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை
நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து
மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர்.
பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாதாண்டில் சகல கலையும்
கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு
உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது
தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக்
கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள்
வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும்
எய்துமோ? சிவபெருமான் உனக்குத்
தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென
எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.
மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு
மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சன்மின்” என்று
கூறி விடைபெற்று, காசி க்ஷேத்திரத்தில்
மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி
வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவமியற்றும்
மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள்
செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல்
வீழ்ந்து,
“ஐயனே! அமலனே! அனைத்தும்
ஆகிய
மெய்யனே!
பரமனே! விமலனே! அழல்
கையனே!
கையனேன் காலன் கைஉறாது
உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’ --- கந்தபுராணம்.
“சங்கரா! கங்காதரா!
காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்!
அஞ்சேல், அந்தகனுக்கு நீ
அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.
மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு
சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து
சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக்
கூடாதவனாய் திரும்பி, சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத
ஈசனோ?” என்று தனது கணக்கராம்
சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர்
“இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர்
உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய
சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று
கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து
வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின்
தகைமையையும் புலனாகுமாறு தோன்றி,
முனிகுமாரரை
வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர்
பார்த்துளன்; உம்மை எதிர்கொண்டு
வணங்கி இந்திர பதவி நல்குவன்; வருவீர்” என்றனன்.
அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை
விரும்பார்.”
“நாதனார் தமது அடியவர்க்கு
அடியவன் நானும்,
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்
போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”
அது
கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம்
நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன்
முனிமகனார் உறைவிடம்ஏகி, ஊழிகாலத்து எழும்
கருமேகம் போன்ற மேனியும் பசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன்
தோன்றினன்.
அந்தகனைக்
கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த
வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும் ககனத்து
உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்;
எனது
ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு
இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர்
ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.
மார்க்கண்டேயர்
“அந்தக! அரன் அடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு
முடிவில்லை; முடிவு நேர்கினும்
சிவபதம் அடைவரே அன்றி நின் புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக்
கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய
அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார்
குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும்
முடிவு போலும்.
“தீது ஆகின்ற வாசகம் என்தன்
செவிகேட்க
ஓதா
நின்றாய்,மேல் வரும் ஊற்றம்
உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய்
போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். --- கந்தபுராணம்
“இவ்விடம் விட்டு
விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனை? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள்
சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர்
சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி
ஈர்த்திடலுற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு
“குழந்தாய் ! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க
உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன்
பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா
ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை யணுகி நிகழ்ந்தவைக் கூறி
அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார
மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.
மதத்தான்
மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்
பதைத்தான்
என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்
சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது
உந்தி
உதைத்தான், கூற்றன் விண் முகில் போல்
மண் உறவீழ்ந்தான். --- கந்தபுராணம்.
நலமலி
தருமறை மொழியொடு
நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,
மலர்அவை
கொடுவழி படுதிறல்
மறையவன் உயிர் அது கொளவரு
சலமலி
தரு மறலி தன்உயிர்
கெட உதை செய்தவன் உறைபதி
திலகம்
இது என உலகுகள் புகழ்
தருபொழில் அணிதிரு மிழலையே. --- திருஞானசம்பந்தர்.
நன்றுநகு
நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு
ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு
காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று
அளித்தான்
கொன்றைமலர்
பொன்திகழும் கோளிலி எம் பெருமானே. --- திருஞானசம்பந்தர்.
நீற்றினை
நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர்
பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,
சாற்றுநாள்
அற்றது என்று, தருமராசற்காய் வந்த
கூற்றினைக்
குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே. ---
அப்பர்.
மருள்துயர்
தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்
இருட்டிய
மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்
சுருட்டிய
நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து,
உங்ஙனே
உருட்டிய
சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பர்.
அந்தணாளன்உன்
அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக
வந்தகாலன்
தன்ஆருயிர் அதனை
வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்
எந்தை!நீ
எனை நமன் தமர் நலியில்
இவன்
மற்றுஎன் அடியான் என விலக்கும்
சிந்தையால்
வந்து, உன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன் கூர்உளானே --- சுந்தரர்.
தூமொழி
நகைத்துக் கூற்றை மாளிட
உதைத்துக்கோத்த தோள்உடை
என்அப்பர்க்கு ஏற்றி திரிவோனே ---(வார்குழல்)
திருப்புகழ்
பொன்
திண் புரமோடு எரி பாய ---
தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள்
வான்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காருமின்றி இருந்தனர்.
அன்னர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன்
அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டுமென்ன, மூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று
பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும்
அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன்.
எந்தையும் அப்படியே! கங்கைக்கரையிலுள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர்.
ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது
மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய
நெஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” எனதானவர்
பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த
மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி,
அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும்
வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கு ஒரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும்.
அப் புரமூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி
வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு
வரமீந்து தனது இருக்கை சேர்ந்தனன்.
தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும்
அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன்
என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில்
பொன் மதிலுமாக, பல வளங்களும்
பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது
புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ
நரகங்களையும், உலகிலுள்ள
பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண்
பலவிளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன்
சென்று எதிர்த்து திரிபுரர்களிடந் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதியென்றுன்னி தேவர்
குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலிற் பலகாலந்தவஞ் செய்தனர். அத்தவத்திற்
கிரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேற்றோன்ற விண்ணவர்கள் பன்முறை பணிந்து
திரிபுரத்தவர் புரியவும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி
மறைந்தனர்.
திருமால் தேவர்களே அஞ்சாதீர்கள் என்று
புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக
உடன் வரத் திரிபுரமடைந்து பிடகாகமம், பிரசங்கித்து
அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையிலகப்படாதார் மூவரே ஆதலின் திருமால்
ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராதொழிமின்கள். அவர்கள் இழிதொழில்
பூண்டோர் என்று கூறி, நாரதருடன்
மேருமலையடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட
அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பாற் சென்று
திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக்
கட்டளையிடுக” என, நந்தியண்ணல் மேருவரை
சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச் சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம்
சிங்காரிக்கலாயினர்.
மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு
தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள்
கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு
மரமாகவும், அட்டப்பருவதங்கள்
தூண்களாகவும், எட்டுத்
திக்குயானைகள் இடையிற்றாங்கவும்,
ஏழு
சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும்,
ஞானேந்திரிய
கண்மேந்திரியங்கள் கலன்களாகவும்,
கலைகள்
முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ
மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர்
நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை
பாடவும், அரம்பை முதலிய
அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாய் அலங்கல் பச்சை வண்ணன்
பாணமாகவும், சரஸ்வதி
வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின்
கூர்வாயாகவும், வாயுதேவன்
அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி
திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக்
கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.
“வண்டிஇரு சுடராக,வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கற்
அனைவரும்பரிவார மாக,மலர் வாழ்பவன் பாகனாக,
கொண்டுமலை
சிலைஆக, அரவு நாணாக, மால் கோல் ஆக, அழல் ஆக வாய்,
கோல்இறகு
காலாக வெந்து முப்புரமெரி கொளுந்த எய்தவர் குமரனே.
---
திருவிரிஞ்சை
முருகன் பிள்ளைத்தமிழ்
நந்தியம்பெருமான்
சந்நிதியுட் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங் குயிலுடன்
*இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.
தச்சு
விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு
முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன
முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே
நாராயணர் இடபமாக, அவ் இடபமேல் எம்பெருமான்
ஏறுதலும் திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள் கொண்டு இறங்கி
இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மார காலத்தில்
சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலுங் காண்க.
கடகரியும்
பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம்
உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பு ஏடி,
தடமதில்கள்
அவை முன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம்
அதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. --- திருவாசகம்.
விரிஞ்சன்
விநாயக பூசனை புரிய அவரருளால் இரதம் முன்போலாக சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல்
எழுந்தருளினார். மூத்தபிள்ளையார்,
இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில்
ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள்
எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர்
பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள்
வாச்சியமிசைக்கவும், கறைமிடற்றண்ணல்
இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.
அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து
“அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய
சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லிற் பணியரசாகிய
நாணையேற்றினர். (அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா
அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும்
படையேனும் துணை வேண்டுவது இல்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய
வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக்
கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின.
பெருந்தவராய் இருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையும் இன்றிப்
பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத்
துவாரபாலகராக அருளி, தேவர்களை
அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கணகன்று
இன்புற்றனர்.
அலைஅடுத்த
பெருங்கடல்நஞ்சு அமுதா உண்டு
அமரர்கள் தம் தலைகாத்த ஐயர், செம்பொற்
சிலையெடுத்து
மாநாக நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்,
நிலைஅடுத்த
பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த
மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. ---
அப்பர்
வளைந்தது
வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற.
ஈர்அம்பு
கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற. --- மாணிக்கவாசகர்
“உருவு கரியதொர்
கணைகொடு பணிபதி
இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
உருளை இருசுடர் வலவனும் அயன்என மறைபூணும்
உறுதி
படுசுர ரதமிசை அடியிட
நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒருகோடி
தெருவு
நகரிய நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி
கெனஎரி வன,அனல் நகையொடு
முனிவார்தம் சிறுவ”
--- (அருவமிடை) திருப்புகழ்.
அண்டர்கள்
ஓட, அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர்
வீழச்சென்று ---
சிவபெருமானைப்
புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். அதற்கு எல்லாத் தேவர்களும்
வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்; அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக்
கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச்
சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள்
எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார்.
பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்; அக்கினியின் கையை வெட்டினார்; நாமகளின் மூக்கை அரிந்தார்; பிரமன் விழுந்தான்; தக்கன், எச்சன், முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்; மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு
ஓடினர். பின்னர், தக்கன் இழந்த
தலைக்காக ஆட்டுத் தலையை வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.
சந்திரனைத்
தேய்த்து அருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத்
தோள்நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே
செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,
சிந்தித்
திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த,
செந்தார்ப்
பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார
மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற.
உருத்திர நாதனுக்கு உந்தீபற.
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே, ஏடி உந்தீபற
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.
புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன்என்றே உந்தீபற.
வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்புஅற உந்தீபற.
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்று உந்தீபற. ---- திருவாசகம்.
அச்சம்
சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய் ---
பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்து அருளுவாயாக
என்று அடிகளார் முருகப் பெருமான்பால் வேண்டுகின்றனர்.
மாதர்
மேல் வைத்த இச்சையை மாற்றி, இறைவன் மேல் வைக்க
வேண்டும்.
நெறிதரு
குழலை அறல் என்பர்கள்,
நிழல்
எழு மதியம் நுதல் என்பர்கள்,
நிலவினும்
வெளிது நகை என்பர்கள்,
நிறம்வரு
கலசம் முலை என்பர்கள்,
அறிகுவது
அரிது இவ் இடை என்பர்கள்,
அடிஇணை
கமல மலர் என்பர்கள்,
அவயவம்
இனைய மடமங்கையர்
அழகியர், அமையும், அவர் என் செய?
மறிமழு
உடைய கரன் என்கிலர்,
மறலியை
முனியும் அரன் என்கிலர்,
மதிபொதி
சடில தரன் என்கிலர்,
மலைமகள்
மருவு புயன் என்கிலர்,
செறிபொழில்
நிலவு தி(ல்)லை என்கிலர்,
திருநடம்
நவிலும் இறை என்கிலர்,
சிவகதி
அருளும் அரசு என்கிலர்,
சிலர்
நரகு உறுவர் அறிவு இன்றியே. --- கோயில் நான்மணி
மாலை.
சொல்
பல பேசித் துதித்து, நீங்கள்
நச்சிச்
செல்லும் நரக வாயில்
தோலும்
இறைச்சியுந் துதைந்து சீப் பாயும்
காமப்
பாழி, கருவிளை கழனி,
தூமைக்
கடவழி, தொளைபெறு வாயில்
எண்சாண்
உடம்பும் இழியும் பெருவழி,
மண்பால்
காமம் கழிக்கும் மறைவிடம்,
நச்சிக்
காமுகர நாய்தான் என்றும்
இச்சித்து
இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்
தங்கித்
திரியும் சவலைப் பெருவழி,
புண்
இது என்று புடவையை மூடி
உள்
நீர் பாயும் ஓசைச் செழும்புண்,
மால்கொண்ட
அறியா மாந்தர் புகும் வழி,
நோய்கொண்டு
ஒழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய
காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய
காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணுமு
ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம்
சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்
சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா,
பச்சிலை
இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச்
சிவபத வீடு அருள்பவனை,
முத்தி
நாதனை, மூவா முதல்வனை,
அண்டரு
அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட
அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக
நாதனை, இணை அடி இறைஞ்சுமின்,
போக
மாதரைப் போற்றுதல் ஒழிந்தே! --- பட்டினத்தார்.
கருத்துரை
முருகா!
அறிவிலிகள் ஆகிய போக மாதர் மேல் வைத்த ஆசையை மாற்றி அருள்வாயாக.
No comments:
Post a Comment