திருச்செந்தூர் - 0045. கனங்கள் கொண்ட


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனங்கள் கொண்ட (திருச்செந்தூர்)

மாதர் ஆசையை விட்டு உய்ய

தனந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான

கனங்கள் கொண்ட குந்த ளங்க
ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
     கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ......      களிகூரக்

கரங்க ளுங்கு விந்து நெஞ்ச
கங்க ளுங்க சிந்தி டுங்க
     றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப்

பொனின்கு டங்க ளஞ்சு மென்த
னங்க ளும்பு யங்க ளும்பொ
     ருந்தி யன்பு நண்பு பண்பு ......        முடனாகப்

புணர்ந்து டன்பு லர்ந்து பின்க
லந்த கங்கு ழைந்த வம்பு
     ரிந்து சந்த தந்தி ரிந்து ......           படுவேனோ

அனங்க னொந்து நைந்து வெந்து
குந்து சிந்த அன்று கண்தி
     றந்தி ருண்ட கண்டர் தந்த ......       அயில்வேலா

அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த
வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
     ரிந்த அன்ப ரின்ப நண்ப ......         உரவோனே

சினங்கள் கொண்டி லங்கை மன்சி
ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ
     ரிந்த வன்ப ரிந்த இன்ப ......          மருகோனே

சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி
லம்பு தண்டை யும்பு னைந்து
     செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

 
கனங்கள் கொண்ட குந்தளங்க-
ளும் குலைந்து அலைந்து, விஞ்சு
     கண்களும் சிவந்து, அயர்ந்து, ......         களிகூரக்

கரங்களுங் குவிந்து, நெஞ்ச-
கங்களும் கசிந்திடும்,
     கறங்கு பெண்களும் பிறந்து, ......     விலைகூறி,

பொனின் குடங்கள் அஞ்சும் என்த-
னங்களும் புயங்களும் பொ-
     ருந்தி, அன்பு நண்பு பண்பும் ......     உடனாகப்

புணர்ந்து, உடன் புலர்ந்து, பின்
கலந்து அகங் குழைந்த, அவம்
     புரிந்து, சந்ததம் திரிந்து ......           படுவேனோ?

அனங்கன் நொந்து நைந்து வெந்து,
உகுந்து சிந்த, அன்று கண்
     திறந்த இருண்ட கண்டர் தந்த ......     அயில்வேலா!

அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த
வஞ்சர் அஞ்ச, வெஞ்சமம்
     புரிந்த, அன்பர் இன்ப நண்ப! ......       உரவோனே!

சினங்கள் கொண்டு, லங்கை மன்
சிரங்கள் சித்த, வெஞ்சரம்
     தெரிந்தவன் பரிந்த இன்ப ......           மருகோனே!

சிவந்த செஞ் சதங்கையும்
சிலம்பு தண்டையும் புனைந்து
     செந்தில் வந்த கந்த! எங்கள் ......     பெருமாளே.


பதவுரை

      அனங்கன் நொந்து --- மன்மதன் நொந்து,

     நைந்து --- உடம்பு நலிந்து

     வெந்து உகுந்து சிந்த --- வெந்து  சாம்பலாகி உதிர்ந்து  போகுமாறு,

     அன்று கண் திறந்து --- அந்நாளில், நெற்றிக் கண்ணைத் திறந்தவரும்,

     இருண்ட கண்டர் --- நீலகண்டரும் ஆகிய சிவபெருமான்

     தந்த அயில்வேலா --- பெற்றருளிய, கூரிய வேலாயுதத்தை உடையவரே!

      அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த --- கூட்டம் கூட்டமாக நெருங்கி எதிர்த்து வந்த

     வஞ்சர் அஞ்ச --- வஞ்சகர்களாகிய அசுரர்கள் அஞ்சுமாறு

     வெம் சமம் புரிந்த உரவோனே --- வெப்பமான போர் செய்த வலிமையுடையவரே!

      அன்பர் இன்ப நண்ப --- அன்புடையார்கட்கு இன்பத்தை அருளும் நண்பரே!

      சினங்கள் கொண்டு --- கோபங்கொண்டு

     இலங்கை மன் சிரங்கள் சிந்த --- இலங்கை அரசனாகிய இராவணனுடைய தலைகள் விழுமாறு

     வெம் சரம் தெரிந்தவன் --- வெப்பமான கணைவிடுத்த ஸ்ரீராமபிரான்

     பரிந்த இன்ப மருகோனே --- அன்புகொள்ளும் இன்பத்தைச் செய்யும் திருமருகரே!

         சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த --- சிவந்த பொன்னாலாகிய அழகிய சதங்கையும், சிலம்பும், தண்டையும் தரித்து, திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானே!

         எங்கள் பெருமாளே --- அடியேங்களுடைய பெருமை மிகுந்தவரே!

         கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து --- மேகம்போன்ற கூந்தல் குலைந்து அசைந்து,

     விஞ்சு கண்களும் சிவந்து அயர்ந்து --- அழகில் மிகுந்த கண்கள் சிவந்து சோர்வுற்று,

     களிகூர கரங்களும் குவிந்து --- மகிழ்ச்சி மிகுந்து, - கரங்களைக் கூப்பி,

     நெஞ்சங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து --- நெஞ்சத்தினுள்ளே இரக்கங்கொண்டுத் திரியும் பெண்களும் தோன்றி,

     விலை கூறி --- அவர்களுடன் பொருள் இவ்வளவு என்று உரை செய்து,

     பொனின் குடங்கள் அஞ்சும் என் தனங்களும் --- தங்கக் குடங்கள் அஞ்சும் என்று கூறுமாறு கொங்கைகளையும்,   

     புயங்களும் பொருந்தி --- தோள்களையும் தழுவி,

     அன்பு நண்பு பண்பும் உடனாக --- அன்பும் நட்பும் குணமும் ஒன்று கூடும்படி,

     புணர்ந்து உடன் புலர்ந்தும் --- கலந்தும், உடனே பிணங்கியும்,

     பின் கலந்து அகம் குழைந்து --- பின்னர் இணங்கியும் உள்ளம் உருகி,

     அவம் புரிந்து --- பயனற்ற கருமங்கள் செய்து,

     சந்ததம் திரிந்து படுவேனா --- நாள்தோறும் வீணாக உலாவி அழிவேனோ?

பொழிப்புரை

         மன்மதன் உளம் நொந்து உடல் வெந்து அழிந்து விடுமாறு அந்நாளில் நெற்றிக் கண்ணைத் திறந்தவரும், இருண்ட நீல கண்டத்தையுடையவரும் ஆகிய சிவபெருமான் பெற்ற கூரிய வேலாயுதத்தை உடையவரே!

         கூட்டமாக நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சகராகிய அசுரர் அஞ்சும்படி வெம்மையான போர்ப் புரிந்த வலிமை மிக்கவரே!

         அன்பர்கட்கு இன்பத்தைச் செய்யும் நண்பரே!

         கோபங் கொண்டு இலங்கை வேந்தனாகிய இராவணனுடைய சிரங்கள் அற்று விழுமாறு, வெய்ய கணையைவிடுத்த ஸ்ரீராமருடைய அன்புக்கு உகந்த இன்பமுடைய திருமருகரே!

         செம்பொன்னனாலாகிய அழகிய சதங்கை, சிலம்பு, தண்டை என்ற அணிகலன்களை யணிந்து, திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளே!

         எமது பெருமிதமுடையவரே!

         மேகம் போன்ற கூந்தலை குலைந்து அலைந்து, அழகுமிக்க கண்கள் சிவந்து சோர்ந்து, மகிழ்ச்சி மிகுந்து, கைகைளைக் குவித்து நெஞ்சினுள் இரக்கங்கொண்டுத் திரியும் பெண்கள் தோன்றி, அவருடன் பொருள் இவ்வளவு என்று கூறத்தக்க விலைபேசி, பொற்குடங்களும் அஞ்சும் என்று கூறத்தக்க தனங்களையும் தோள்களையும் தழுவி, உடனே அவருடன் ஊடியும், பின் கூடியும் மனம் குழைந்து வீண் செயலைச் செய்து நாள் தோறும் திரிந்து அழிவேனோ?

விரிவுரை

கனங்கள் கொண்ட குந்தளம் ---

மகளிருடைய கூந்தல் கருமையால் மேகத்தை ஒத்துள்ளது. இங்ஙனமே இப்பாடலில் மூன்று அடிகளில் அடிகளார் அம்மகளிரது அவயவ நலன்களைக் கூறுகின்றனர்.

புணர்ந்து உடன் புலர்ந்து கலந்து ---

பொதுமகளிர் தம்மிடம் வரும் ஆடவர்கட்கு இன்பம் அதிகரிக்கும் பொருட்டு அடிக்கடி ஊடுவர். ஊடுவது-பிணங்கிப் பிரிவது. அவ்வாறு சிறிது பிணங்கிப் பிரிந்துப் பின்னர் இணங்கிக் கூடுவதனால் காமுகர்க்கு இன்பம் அதிகப்படும்.நன்கு பசித்து உண்பதனால் உணவின் சுவை அதிகப்படுவது போல என உணர்க.

இத்தகைய மகளிருடன் கலந்து நாடோறும் வீணே திரிந்து அழிதல் கூடாது எனக் குறிப்பிடுகின்றனர்.

அனங்கன் ---

மன்மதன் சிவபெருமானை மயக்கும் பொருட்டு ஐங்கணைகளைச் சொரிய, இறைவன் நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து நோக்கினார். கரியவேள் கரிந்து சாம்பரானான்.

அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் ---

சூராதி அவுணர்கள் கூட்டமாக வந்து கந்தவேளை எதிர்த்துப் போர்புரிந்து அழிந்தனர். கொசுக் கூட்டங்கள் நெருப்பு மலையை அணுகி அழிவதுபோல் ஆயினர்.

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த ---

பரதார கமனம் என்பது பாவங்களில் தலையாயது, அப்பாவத்தை அழிக்க வந்தது இராமவதாரம். பரதார கமனம் புரிந்த காரணத்தால் வாலியையும் இராவணனையும் இராமர் வதைத்தனர். ஏகபத்தினி விரதத்தின் உயர்வைத் தாமே நடந்து காட்டியருளினார். காமம் மனத்தில் தங்கி எழுகின்றது. மனம், மெய், வாய், கண், நாசி, செவி, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் என்ற பத்து இந்திரியங்களையும் பற்றி நிற்கின்றது.

எனவே, மனமாகிய இராவணனுக்குத் தசேந்திரியங்கள் என்ற பத்துத் தலைகள் இருந்தன. ஆத்மாவாகிய இராமர் ஞானமாகிய பாணத்தில் அப் பத்து இந்திரியங்களை அறுத்து அருளினார். இராமர் பரிந்து முருகவேளைக் கொண்டாடுகின்றனர் என்பதன் குறிப்பு, தச இந்திரியங்களை வென்றவன் மெய்ஞ்ஞானத்தை விரும்புவான் என்பது ஆகும். மெய்ஞானானந்தம் முருகன். அஞ்ஞானத்தால் விளைவது துன்பம்; ஞானத்தால் விளைவது இன்பம். இன்பவடிவினன் முருகன். “ஆனந்தாய நம” என்றே ஒரு மந்திரம் உண்டு. அது முருகனுடைய அஷ்டோத்தர சத நாமங்களில் ஒன்று.

கருத்துரை

         காம தகனஞ்செய்த சிவகுமாரரே! சூரகுல காலரே! மால் மருகரே! செந்திற் கந்தக்கடவுளே! மாதராசையினின்று நீங்கி உய்ய அருள் புரிவீர்.
                 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...