திரு நெல்வாயில்


திரு நெல்வாயில்
(திருவுச்சி)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் சிவபுரி என்று அழைக்கப்படுகின்றது,

         சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வரை சென்று, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது பிரதான சாலையில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பி) நேரே பேராம்பட்டு செல்லும் எதிர்ச்சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். திருவேட்களத்திலிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

இறைவர்                   : உச்சிநாதேசுவரர்

இறைவியார்               : கனகாம்பிகை

தல மரம்                    : நெல்லி மரம்

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் -  புடையினார்புள்ளி


         கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் காட்சி அளிக்கிறது. கோயிலுக்கு எதிரே நீராழி மண்டபத்துடனுள்ள கிருபாசமுத்திரம் என்ற திருக்குளம் ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குகிறது. இராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. அடுத்து சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் சிவகாமியுடன் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் பின்புறம் பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்கள் உள்ளன.

         திருஞானசம்பந்தருக்கு உச்சிப் பொழுதில் உணவு அளித்துப் பசியை கோக்கியதால் இறைவனுக்கு உச்சிநாதேஸ்வரர் என்று பெயர் உண்டானதாகச் சொல்லப்படுகின்றது.பெரிய புராணத்தில் ஆதாரம் இல்லை. திருஞானசம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "வாழ்க்கைமனை நல் வாயல் எங்கும் நவமணிக் குன்று ஓங்கு திரு நெல்வாயில் நின்று ஒளிரும் நீள் ஒளியே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 167
கைம்மான் மறியார் கழிப்பாலை உள்அணைந்து
மெய்ம்மாலைச் சொல்பதிகம் பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவிஉறை
அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்.

         பொழிப்புரை : தம் திருக்கையில் மான் கன்றைக் கொண்டிருக்கும் சிவபெருமான் எழுந்தருளிய திருக் கழிப்பாலையைச் சேர்ந்து மெய்ம்மை பொருந்திய சொற்பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலராலாய அழகான மாலையைச் சூடிய திருச்சடையை உடைய `திருவுச்சி\' என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப்பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார்.

         குறிப்புரை : திருக்கழிப்பாலையில் அருளிய பதிகங்கள்:  

1. `புனலாடிய' (தி.2 ப.21) - பண், இந்தளம். 
 2. `வெந்தகுங்கிலியப்புகை' (தி.3 ப.44) - பண், கௌசிகம்.

         திருநெல்வாயிலில் அருளிய பதிகம்: `புடையினார்' (தி.2 ப.26) - பண், இந்தளம்.

     இத்திருப்பதி திருவுச்சி என்றும், சிவபுரி என்றும் அழைக்கப்பெறும். இப்பதிகப் பாடல் தொறும் இறைவன் `உச்சியாரே' எனக் குறிக்கப் பெறுதலும் காணலாம். உச்சியார் - தலைமீது உள்ளவர் எனும் பொருள்படவும் வரும். `தலைமே லான்' (தி.6 ப.8 பா.5) என வரும் அப்பர் திருவாக்கும் காண்க.


2.026 திருநெல்வாயில்               பண் - இந்தளம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
புடையின் ஆர்புள்ளி கால்பொ ருந்திய
மடையின் ஆர்மணி நீர்நெல் வாயிலார்
நடையில் நால்விரற் கோவ ணம்நயந்து
உடையி னார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தெளிந்தநீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால் விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடி மேல் திகழும் மாண்பினர்.


பாடல் எண் : 2
வாங்கி னார்மதல் மேற்க ணை,வெள்ளம்
தாங்கி னார்,தலை ஆய தன்மையர்,
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர். மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினைஉடைய நெல் வாயில் என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.


பாடல் எண் : 3
நிச்சல் ஏத்துநெல் வாயி லார்தொழ
இச்சை யால்உறை வார்எம் ஈசனார்,
கச்சை யாவதுஓர் பாம்பி னார்,கவின்
இச்சை யார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில் இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர். உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.


பாடல் எண் : 4
மறையி னார், மழு வாளி னார், மல்கு
பிறையி னார், பிறை யோடு இலங்கிய
நிறையின் ஆர்அம்நெல் வாயிலார் தொழும்
இறைவ னார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை உடையவர். சடைமுடியில் பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர். நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.


பாடல் எண் : 5
விருத்தன் ஆகிவெண் நீறு பூசிய
கருத்த னார்,கனல் ஆட்டு உகந்தவர்,
நிருத்தன் ஆரநெல் வாயின் மேவிய
ஒருத்த னார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர். தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.


பாடல் எண் : 6
காரின் ஆர்கொன்றைக் கண்ணி யார்,மல்கு
பேரின் ஆர்பிறை யோடு இலங்கிய
நீரின் ஆர்அம்நெல் வாயி லார்தொழும்
ஏரி னார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :கார்காலத்தில் மலரும் கொன்றைமலரால் இயன்ற கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறைசூடி விளங்கும் இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.


பாடல் எண் : 7
ஆதி யார்அந்தம் ஆயி னார்,வினை
கோதி யார்மதில் கூட்டு அழித்தவர்
நீதி யார்அம்நெல் வாயி லார்மறை
ஓதி யார் எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.


பாடல் எண் : 8
பற்றி னான்அரக் கன்க யிலையை
ஒற்றி னார்ஒரு கால்வி ரல்உற
நெற்றி ஆர, நெல் வாயி லார்தொழும்
பெற்றி யார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒருகால் விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர். நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது உச்சியில் உறைபவர்.


பாடல் எண் : 9
நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்,
நீடி னார்அம்நெல் வாயி லார்தலை
ஓடி னார்எமது உச்சி யாரே.

         பொழிப்புரை :நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும், நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளியிருப்பவர். தலை ஓட்டைக்கையில் உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.


பாடல் எண் : 10
குண்டு அமண்துவர்க் கூறை மூடர்சொல்
பண்ட மாகவை யாத பண்பினர்,
விண்த யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டர்எம் உச்சி யாரே.

         பொழிப்புரை :குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல் வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது உச்சியார்.


பாடல் எண் : 11
நெண்ப யங்குநெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன்சொல் இவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.

         பொழிப்புரை :நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பண்ணின்பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்.

                                    திருச்சிற்றம்பலம்





No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...