திரு வெண்ணெய்நல்லூர்
நடு நாட்டுத் திருத்தலம்.
திருக்கோவலூரில் இருந்து தென்கிழக்கே
சுமார் 20 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின்
தென்கரையில் திருவெண்ணெய்நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.
திருக்கோவலூரில் இருந்து அரசூர் செல்லும்
சாலையில் சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும்
திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
இறைவர்
: கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்
இறைவியார்
: மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி
தீர்த்தம் : பெண்ணையாறு
தேவாரப்
பாடல்கள் : சுந்தரர் - பித்தா பிறைசூடி
இவ்வாலயம் ஒரு இராஜகோபுரத்துடனும்
இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர்
வழக்கு நடந்த "வழக்கு தீர்த்த மண்டபம்" உள்ளது. அடுத்து செப்புக்
கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக்
காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி
உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார்.
இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி
காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது.
கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர்
சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக
சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன.
உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி
சிற்பங்கள் உள்ளன.
இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு
அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி
அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம்
வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
இறைவன் சிவபெருமான் சுந்தரரை
தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து
சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை
ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற
திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் "திருவெண்ணெய்நல்லூர்"
என்றும் கோவிலின் பெயர் "அருள்துறை" என்றும் திருப்பதிகத்தில்
குறிப்பிடப் பெறுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப்
பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும்
பாடியுள்ளார்.
சைவசமய சந்தனாசாரியராகிய
மெய்கண்டதேவர் திருக்கோயில் தனியாக வடக்கு தெருவின் கோடியில் உள்ளது.
சடையப்ப வள்ளல் வாழ்ந்த இல்லம் வடக்கு தெருவில்
இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "இடையாது சொல் ஊரன்
தன்னைத் தொழும்பு கொளும் சீல் வெண்ணெய்நல்லூர் அருள்துறையின் நல் பயனே" என்று
போற்றி உள்ளார்.
நம்பியாரூரர் பெருமான் திருமண நிகழ்வைச் சொன்னதால்
உய்வு பெற்றதாக, தெய்வச் சேக்கிழார்
பெருமான் பாடிக் காட்டி உள்ளதால்,
திருவெண்ணெய்நல்லூரை
வழிபடுவோரும்,
நினைப்போரும்
பெரியபுராணத்தின் வழியே இத் திருத்தலத் திருப்பதிகத்தைச் சிந்தித்து வழிபட்டு நலம்
பெறுவோமாக.
சுந்தரர் திருப்பதிக
வரலாறு
பெரியபுராணம் -
தடுத்தாட்கொண்ட பாரணம்
பெரிய
புராணப் பாடல் எண் : 173/27
வருமணக்
கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும்
வாசத்
திருமணப்
பந்தர் முன்பு சென்று, வெண் சங்கம்
எங்கும்
பெருமழைக்
குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து
பேணும்
ஒருமணத்
திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன்
உய்ந்தேன்.
பொழிப்புரை : இவ்வாறு வருகின்ற
மணக்கோலத்தை உடைய எங்கள் நம்பியாரூரர், தெள்ளிதாகிய
நறுமணம் கமழும் திருமணப் பந்தலினிடத்து எழுந்தருளி, வெண்மையான சங்குகள் எவ்விடத்தும் பெரிய
மேகக் கூட்டங்களினின்றும் எழும் ஒலியென முழங்க, குதிரையினின்றும் இறங்கி, தாம் விரும்பிச் செய்தற்குரிய திருமணச்
செயலில், அவ்விடத்து
நிகழ்ந்ததொரு செய்தியைச் சொல்லுதற்குரியேனாய நிலையில் யான் பேறு பெற்றுள்ளேன்.
பெ.
பு. பாடல் எண் : 174/28
ஆலுமறை
சூழ்கயிலை யின்கண்அருள் செய்த
சாலும்
மொழி யால்வழி தடுத்துஅடிமை கொள்வான்
மேல்உற
எழுந்துமிகு கீழ்உற அகழ்ந்து
மாலும்அய
னுக்கும் அரி யார்ஒருவர் வந்தார்.
பொழிப்புரை : மறை முழக்கம்
சூழ்ந்து நிற்கும் திருக்கயிலாய மலையில், அருளிச்
செய்த மேதக்க திருவாக்கின்படி, அந் நம்பியாரூரரை
மணம் செய்யாது தடுத்து, வழி அடிமை கொள்ளும்
பொருட்டு, அன்னவடிவாய்
மேற்கொண்டு எழுந்தும், பன்றி வடிவாய்க்
கீழ்ப் புகுந்து தோண்டியும் பெருமானைக் காணாது மயங்கி நிற்கும் மால் அயன் ஆகிய
இருவருக்கும் அரியராய் இருந்த சிவபெருமான், அங்கு ஒரு திருமேனி கொண்டு எழுந்தருளி
வந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 175/29
கண்இடை
கரந்தகதிர் வெண்படம் எனச்சூழ்
புண்ணிய
நுதல்புனித நீறுபொலிவு எய்தத்
தண்மதி
முதிர்ந்துகதிர் சாய்வதுஎன மீதே
வெண்நரை
முடித்தது விழுந்துஇடை சழங்க.
பொழிப்புரை : நெற்றிக் கண்ணிடத்து
மறைத்து நிற்கும் வெள்ளாடை போலப் புண்ணிய வடிவாய தூய திருநீறானது நெற்றியில்
பொருந்தி விளங்கவும், திருச்சடையிடத்து
வாழும் இளம்பிறையானது முதிர்ந்து அதனால் அதன் ஒளி கீழே செல்லுதல் போலத் தலையின்
உச்சியிடத்து ஒருங்கு சேர்த்து முடித்த தலையின் வெண்மயிரானது இடையிடையே விழுந்து
அசையவும்,
பெ.
பு. பாடல் எண் : 176/30
காதில்அணி
கண்டிகை வடிந்தகுழை தாழச்
சோதிமணி
மார்பின்அசை நூலினொடு தோளின்
மீதுபுனை
உத்தரிய வெண்துகில் நுடங்க
ஆதபம்
மறைக்குடை அணிக்கரம் விளங்க.
பொழிப்புரை : காதில் அழகுபெற
அணியப் பெற்ற உருத்திராக்கத்தாலாய குண்டலமானது தாழ்ந்து அசையவும், ஒளி பொருந்திய உருத்திராக்க மாலை அணிந்த
திருமார்பில் பூண நூலொடு திருத்தோளின்மேல் அணிந்திருக்கும் மேலாடையாகிய வெள்ளிய
ஆடை அசையவும், வெயிலை மறைக்கின்ற
குடையானது அழகிய திருக்கையில் விளங்கவும்,
பெ.
பு. பாடல் எண் : 177/31
பண்டிசரி
கோவண உடைப்பழமை கூரக்
கொண்டதுஓர்
சழங்கல்உடை ஆர்ந்தழகு கொள்ள
வெண்துகில்
உடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டுஒருகை
கொண்டுகழல் தள்ளுநடைகொள்ள.
பொழிப்புரை : வயிற்றின்கீழ்ச் சரிய
உடுத்த கோவணமாகிய உடை, அதன் பழமையை
வெளிப்படுத்தவும், அதன்மீது விளங்கும்
அசைய நிற்பதொரு உடையானது அழகிய இடுப்பின்கண் பொருந்தி அழகு செய்யவும், வெண்மையான ஆடையோடு தருப்பையைச் சேர
முடித்து விளங்கும் மூங்கில் தண்டத்தை, ஒரு
திருக்கையில் கொண்டு, திருவடிகள் தளர்நடை
கொள்ளவும்,
பெ.
பு. பாடல் எண் : 178/32
மொய்த்துவளர்
பேரழகு மூத்தவடி வேயோ,
அத்தகைய
மூப்புஎனும் அதன்படிவ மேயோ,
மெய்த்தநெறி
வைதிகம் விளைத்தமுத லேயோ,
இத்தகைய
வேடம்என ஐயம்உற எய்தி.
பொழிப்புரை : செறிந்து வளர்கின்ற
பேரழகானது இளமையினின்றும் முதிர்ந்து ஒரு வடிவு கொண்டதோ, அவ்வழகு மிளிரும் மூப்பு என்பது ஒரு
வடிவுகொள்ள அவ்வடிவாக விளங்குகின்றதோ, மெய்ந்நெறிகளைத்
தன்னகத்துக்கொண்ட வைதிகம் என்பது விளைத்ததொரு முதன்மையோ? இத்தன்மையுடையதொரு திருவுருவம்
இருந்தவாறு என்? எனக் கண்டார்
ஐயம்கொள்ளுமாறு எழுந்தருள.
பெ.
பு. பாடல் எண் : 179/33
வந்துதிரு
மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தர்இடை
நம்பிஎதிர் பன்னுசபை முன்நின்று,
"இந்தமொழி கேண்மின்எதிர்
யாவர்களும்" என்றான்
முந்தைமறை
ஆயிரம் மொழிந்த திருவாயான்.
பொழிப்புரை : அழகிய மறைவழித்
திருமணம் செய்யத் தொடங்கும் மணப்பந்தலினிடத்து, இவ்வாறு எழுந்தருளி வந்தவராய மிகப்
பழங்காலத்தேயே எண்ணற்ற மறைகளை அருளிச்செய்த அழகிய திருவாயினையுடைய சிவபெருமான், நம்பியாரூரர்க்கு முன், புகழத்தக்க அவையினரின் எதிர்நின்று, `எனக்கு எதிரில் அமர்ந்திருக்கும்
இவ்வவையத்தில் உள்ளார் யாவரும் யான் கூறும் இச்சொல்லைக் கேளுங்கள்` என்று அருளிச் செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 180/34
என்றுஉரைசெய்
அந்தணனை எண்ணில்மறை யோரும்,
மன்றல்வினை
மங்கல மடங்கல்அனை யானும்,
"நன்றுஉமது நல்வரவு
நங்கள்தவம் என்றே
நின்றதுஇவண்
நீர்மொழிமின் நீர்மொழிவது" என்றார்.
பொழிப்புரை : இவ்வாறு கூறிவரும்
மறையவரை, ஆண்டிருந்த எண்ணற்ற
மறையவர்களும், திருமணத்திற்குரிய
செயலைச் செய்து கொண்டிருக்கும் மணக்கோலம் கொண்ட சிங்கம் போன்ற ஆற்றலை உடைய
நம்பியாரூரரும் `நும் வரவு எங்கட்கு
மிக நன்மை பயப்பது; இது நாங்கள் செய்த
தவமேயாகும்` என்று கூறி, `இவ்விடத்து நீர் சொல்ல வந்ததைச்
சொல்லுங்கள்` என்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 181/35
பிஞ்ஞகனும்
நாவலர் பெருந்தகையை நோக்கி,
"என்இடையும் நின்இடையும்
நின்றஇசை வால்யான்
முன்உடையது
ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்உடைய
வேள்வியினை நீமுயல்தி" என்றான்.
பொழிப்புரை : இவ்வாறு அவையத்தார்
கூற, சிவபெருமானாகிய
மறையவரும், நம்பியாரூரரைப்
பார்த்து, `என்னிடத்தும்
உன்னிடத்தும் முன்னமேயே அமைந்ததொரு இசைவு இருப்பதால், முற்பட அமைந்ததொரு பெருவழக்கினை
முடிவுசெய்தபின், உன்னுடைய மணத்தை நீ
நடத்த முயலுக` என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 182/36
நெற்றிவிழி
யான்மொழிய, நின்றநிகர் இல்லான்,
"உற்றதொர்
வழக்குஎன்இடை நீஉடையது உண்டேல்,
மற்றுஅது
முடித்துஅலது யான்வதுவை செய்யேன்
முற்றஇது
சொல்லுக"என, எல்லைமுடிவு இல்லான்.
பொழிப்புரை : நெற்றிக் கண்ணை உடைய
சிவபெருமானாகிய மறையவர் இவ்வாறு அருளிச் செய்ய, அங்கு நின்ற ஒப்புமை கூறுதற்கு இயலாத
நம்பியாரூரர் தாமும், நம் இருவருக்கும்
உரியதொரு வழக்கு நின்னிடத்து இருக்குமானால், அவ்வழக்கை முடித்தன்றி யான் மணம் செய்து
கொள்ளேன்; நீர் முழுமையாக
இவ்வழக்கைச் சொல்வீராக! என்று கூற,
தன்பெருமையைத்
தானும் அறியாதவனாகிய அப் பெருமானாய மறையவரும்,
குறிப்புரை : எனக்கும் உனக்கும்
உரிய வழக்கொன்று
இருத்தற்கில்லை
என்பார் `நீ உடையது உண்டேல்` என்றார். எனவே, வந்தவர் பெருமான் என்பதும், தாமும்
திருக்கயிலையிலிருந்து வந்தவர் என்பதும் அறியாராயினார் என்பது
விளங்குகின்றது.
பெ.
பு. பாடல் எண் : 183/37
"ஆவதுஇது கேண்மின்மறை
யோர்என்அடி யான்இந்
நாவல்நகர்
ஊரன்இது நான்மொழிவது" என்றான்
தேவரையும்
மால்அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும்
வேறுஅடிமை யாஉடைய எம்மான்.
பொழிப்புரை : இந்திரன் முதலிய
தேவர்களையும், மால் அயன் முதலிய
தகுதிச்செல்வம் பெற்ற பிறர் எவரையும் தனித்தனியாக அடிமை கொண்டிருக்கும்
சிவபெருமானாகிய மறையவரும், `மறையவர்களே! நான்
சொல்லத்தக்க இதனைக் கேளுங்கள், என்னுடைய அடிமையாவன் `இத்திருநாவலூரன்`, இதுவே நான் சொல்ல வந்தது` என்று அருளிச் செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 184/38
என்றான்
இறையோன் அதுகேட்டவர் எம்ம ருங்கும்
நின்றார்
இருந்தார் "இவன்என் நினைந் தான்கொல்" என்று
சென்றார்
வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரான்
"நன்றால் மறையோன்
மொழி"என்று எதிர்நோக்கி நக்கான்.
பொழிப்புரை : மறையவராக வந்த இறைவன்
இவ்வாறு கூற, அதனைக் கேட்டவர்களாய்
எவ்விடத்திலும் நின்றவர்களும் இருந்தவர்களுமாகிய யாவரும், இம்மறையவர் நினைந்தது தான் எவ்வகையது? என, அம்மறையவர் அருகே சென்றார்கள், சினந்தார்கள், சிரித்தார்கள். நம்பியாரூரரும்
இம்மறையவர் சொல் மிக நன்றாக இருந்தது என்று அவர் எதிர்நோக்கிச் சிரித்தார்.
பெ.
பு. பாடல் எண் : 185/39
நக்கான்
முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான்
மிசை உத்தரி யத்துகில் தாங்கி மேல்சென்று
"அக்காலம் உன்தந்தை
தன்தந்தை ஆள்ஓலை ஈதால்
இக்கா
ரியத்தை நீஇன்று சிரித்ததுஎன் ஏட" என்ன.
பொழிப்புரை : தம்மை இகழ்தல்
குறிப்புடன் சிரித்த நம்பியாரூரரின் முகத்தைப் பார்த்து, உடல் நடுக்குற்றுப் பெருந்துயரால்
வருந்தி, யாவர்க்கும் மேலாய
இறைவன், நழுவிய மேலாடையை
விழாமல் கையால் தாங்கிக் கொண்டு,
அவர்
அருகில் சென்று அந்நாளில், உன்னுடைய பாட்டன்
எனக்கு எழுதிக் கொடுத்த அடிமைச் சீட்டு இதுவாகும். அங்ஙனம் இருக்க, `ஏட! நீ இன்றைக்கு இகழ்ந்து சிரித்தது
எவ்வாறு பொருந்தும்` என்று சொல்ல.
பெ.
பு. பாடல் எண் : 186/40
மாசுஇலா
மரபில் வந்த வள்ளல் வேதியனை
நோக்கி,
நேசம் முன்
கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால்
சிரிப்பு நீங்கி,
"ஆசு இல் அந்தணர்கள்
வேறோர் அந்தணர்க்கு அடிமை
ஆதல்
பேச, இன்று
உன்னைக் கேட்டோம், பித்தனோ
மறையோன்" என்றார்.
பொழிப்புரை : குற்றமற்ற ஆதிசைவ
மரபில் தோன்றிய நம்பியாரூரர், சிவபெருமானாகிய
மறையவரைப் பார்த்து, அவரிடத்து
முன்பிருந்த அன்பின் நெகிழ்ச்சியால், சிரித்தலை
விடுத்துக், குற்றமற்ற
ஆதிசைவர்கள் வேறொரு ஆதிசைவர்க்கு அடிமையாதலைச் சொல்ல, இற்றை நாளில் உன்னிடத்தில் கேட்டோம்
ஆதலின் மறையவனே! நீ பித்தனோ என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 187/41
"பித்தனும் ஆகப்
பின்னும், பேயனும் ஆக, நீஇன்று
எத்தனை
தீங்கு சொன்னாய், யாதும் மற்று அவற்றால்
நாணேன்,
அத்தனைக்கு
என்னை ஆன்றும் அறிந்திலை ஆகில், நின்று
வித்தகம்
பேச வேண்டாம், பணிசெய
வேண்டும்" என்றார்.
பொழிப்புரை : இவ்வாறாக
நம்பியாரூரர் கூறக் கேட்ட மறையவர்,
`நான்
பித்தன் ஆனாலும் ஆகுக! பின் பேயன் ஆனாலும் ஆகுக! நீ இப்பொழுது எத்துணைக் குற்றமாய
சொற்களைச் சொல்வாயாயினும் அச்சொற்களால் நான் எத்துணையும் நாணமாட்டேன். அவ்வளவிற்கு
என்னை ஒருவகையாலும் நீ இன்னவன் என்று அறியவில்லை. ஆயினும் நீ என்முன் நின்று உன்
திறமையைப் (சதுரப்பாட்டை) பேசவேண்டாம். எனக்குத் தொண்டு செய்ய வேண்டும்` என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 188/42
கண்டது ஓர்
வடிவால் உள்ளம் காதல்செய்து உருகா
நிற்கும்,
கொண்டது ஓர்
பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்,
உண்டு ஓர் ஆள்
ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன்
என்று
தொண்டனார்
"ஓலை காட்டுக" என்றனர் துணைவனாரை.
பொழிப்புரை : `என்னால் காணப்பட்ட ஒப்பற்ற இம்மறையவரது
திருவடிவால் என் மனம் இவரிடத்து அன்பு வைத்து உருகும். மாறாக, இவருக்கு நான் அடிமை என்று கொண்ட ஒரு
பைத்தியச் சொல் சினத்தையும் உடனே விளைவிக்கும். எனினும் இவ்வுவத்தலும்
காய்தலுமின்றி, அடிமை ஓலை ஒன்று
உண்டு என்று சொல்லும் அச்சொல்லின் உண்மையை அறிவேன்` என்று, தம் துணைவனாரான சிவபெருமானாகிய மறையவரை
நோக்கி, நம்பியாரூரர் அடிமை
ஓலையைக் காட்டுக என்று கூறினார்.
பெ.
பு. பாடல் எண் : 189/43
ஓலைகாட்டு
என்று நம்பி உரைக்க,"நீ ஓலை காணல்
பாலையோ, அவைமுன் காட்டப் பணிசெயல் பாலை", என்ற
வேலையில்,
நாவல் ஊரர் வெகுண்டு, மேல்
விரைந்து சென்று
மால்அயன்
தொடராதானை வலிந்து பின் தொடரல்
உற்றார்.
பொழிப்புரை : நம்பியாரூரர் `அடிமை ஓலையைக் காட்டுக` என்று சொல்ல, அம்மறையவர் நீ அவ்வடிமை ஓலையைப்
பார்த்து உணரத் தகுதி உடையையோ?
(அல்லை).
இவ்வவை முன் அதனை யாவரும் அறியக் காட்டியபின் அடிமை செய்தற்கே உரியை என்று கூறிய
அளவில், நம்பியாரூரர் சினந்து
மேல் விரைவாய்ச் சென்று, மாலும் அயனும் அறிய
ஒண்ணாத சிவபெருமானை வன்மை செய்து,
அவர்
ஓடிய அளவில் தாமும் பின்தொடர்ந்து சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 190/44
ஆவணம்
பறிக்கச் சென்ற அளவினில், அந்தணாளன்
காவணத்து
இடையே ஓட, கடிது பின் தொடர்ந்து,
நம்பி
பூவணத்தவரை உற்றார், அவர்அலால் புரங்கள்
செற்ற
ஏவணச்
சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட
வல்லார்?
பொழிப்புரை : நம்பியாரூரர் தம்மை
அடிமையெனக் குறித்திருக்கும் ஓலையைப் பறிக்கச் சென்றபொழுது, சிவபெருமானாகிய மறையவரும் அம்மணப்
பந்தலின் ஊடே ஓட, விரைவாக நம்பி
யாரூரரும் தொடர்ந்து அவர்பின் ஓடி,
செந்தாமரை
அனைய திருமேனியுடையராய சிவபெருமானாகிய அம்மறையவரைத் தலைப்பட்டார். அந்நம்பியாரூரர்
அல்லாமல் முப்புரங்களையும் ஓரம்பினால் அழித்த சிவபெருமானை யார் தொடர்ந்து தலைப்பட
வல்லவர்கள்? ஒருவருமாகார்
என்பதாம்.
பெ.
பு. பாடல் எண் : 191/45
மறைகள் ஆயின முன் போற்றி, மலர்ப்பதம் பற்றி
நின்ற
இறைவனைத்
தொடர்ந்து பற்றி, எழுதும் ஆள் ஓலை
வாங்கி,
"அறைகழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை"எனக்
கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான்.
பொழிப்புரை : மறைகளானவை முற்பட
வணங்கிப் பின் திருவடிகளைத் தொடர்ந்து பற்றி நிற்கின்ற சிவபெருமானைத் தொடர்ந்து
பிடித்துக் கொண்டு, எழுதப்
பெற்றிருக்கும் அடிமை ஓலையை வாங்கி,
ஒலிக்கின்ற
வீரக் கழலினை உடைய நம்பியாரூரர்,
`மறையவர்கள்
அடிமையாய்ப் பிறரிடம் பணி செய்தல் எந்த நூலினும் கூறப்படும் முறைமையுடையதன்று` எனக் கிழித்தார். ஈறில்லாத
சிவபெருமானும் `இது முறையோ` என்று முறையிட்டு அருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 192/46
அருமறை
முறைஇட்டு இன்னும் அறிவதற்கு அரியான்,
பற்றி
ஒருமுறை
முறையோ என்ன, உழை நின்றார் விலக்கி, "இந்தப்
பெருமுறை
உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்குகின்ற
திருமறை
முனிவரே, நீர் எங்குஉளீர், செப்பும்"
என்றார்.
பொழிப்புரை : அரிய மறைகளும்
முறையிட்டு இதுவரையும் இவ்வியல்பினர் என்று அறிதற்கு அரியவராகிய சிவபெருமான், நம்பியாரூரரைத் தம் திருக்கரத்தால்
பற்றிக் கொண்டு, ஒருமுறை `இது முறையோ` என்று கூற, அருகில் நின்றவர்கள் இருவரையும் விலக்கி, இவ்வுலகில் இல்லா வழக்காகிய ஒரு
பெருவழக்கைக் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென்று, `மாறு கொள்ளும் மேன்மை மிக்க மறை
முனிவரே! நீர் தாம் எங்குள்ளீர்?`
சொல்லும்
எனக் கேட்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 193/47
என்றலும்
நின்ற ஐயர், "இங்குஉளேன், இருப்பும் சேயது
அன்று, இந்த வெண்ணெய்
நல்லூர், அது நிற்க, அறத்து ஆறு
இன்றி
வன்திறல்
செய்து, என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்று, இவன்
கிழித்துத் தானே நிரப்பினான்
அடிமை" என்றான்.
பொழிப்புரை : இவ்வாறு விலக்கிய மறையவர்கள்
வினவ, அதைக் கேட்டு நின்ற
மறையவர், `இவ்விடத்தில் உள்ளேன், என் இருக்கையும் மிகத் தொலைவன்று; இந்தத் திருவெண்ணெய் நல்லூரேயாம். அது
கிடக்க, அறநெறிக்குப்
புறம்பாக வன்முறை செய்து என் கையிலிருந்த அடிமைச் சீட்டை வலியப்பறித்த இந்
நாவலூரன் கிழித்தமையால், அவன்தானே எனக்கு
அடிமை என்பதை மெய்ப்பித்து விட்டான்` என்று
அருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 194/48
குழைமறை
காதி னானைக் கோது இல்ஆ ரூரர்
நோக்கிப்
பழைய மன்றாடி போலும் இவன் என்று, பண்பின்
மிக்க
விழைவுறு
மனமும் பொங்க, "வெண்ணெய்நல்லூர் ஆயேல், உன்
பிழை நெறி
வழக்கை ஆங்கே பேச நீ போதாய்"
என்றார்.
பொழிப்புரை : கந்தருவராக இருந்து
மறைந்த குழைகளை அணிந்த காதினை உடைய சிவபெருமானைக், குற்றமற்ற நம்பியாரூரர் பார்த்து, பழைமையான அறம் கூறும் அவையத்தின்கண், இவர் பன்முறையும் வழக்காடி இருப்பர்
போலும்! என்று மனத்துட் கொண்டு,
`பண்புமிக்க
அன்புறு மனமும் பொலிவும் பெறத் திரு வெண்ணெய்நல்லூரில் நீர் இருப்பவரானால்
உம்முடைய குற்றமுடைய வழக்கை அங்கேயே பேசுதற்கு வாரும்` என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 195/49
வேதியன்
அதனைக் கேட்டு, "வெண்ணெய்நல்லூரிலே நீ
போதினும்
நன்று, மற்று அப் புனிதநான் மறையோர் முன்னர்
ஆதியில்
மூல ஓலை காட்டி, நீ அடிமை ஆதல்
சாதிப்பன்"
என்று முன்னே தண்டுமுன் தாங்கிச்
சென்றான்.
பொழிப்புரை : சிவபெருமானாகிய
மறையவர், அவர் கூறியதைக்
கேட்டு, திருவெண்ணெய்
நல்லூரிலே நீ செல்லினும் நல்லதே. அவ்வூரில் இருக்கின்ற தூய்மையான நான்மறைகளையும்
ஓதி உணர்ந்த மறையவர் முன்னிலையில்,
நின்
முன்னோர் எழுதித் தந்துள்ள மூல ஆவணத்தைக் காட்டி, நீ எனக்கு அடிமை என்பதை
உறுதிப்படுத்துவன் என்று சொல்லி,
அவருக்கு
முன்னாகத் தம்முடைய தண்டத்தை முன்னே ஊன்றிக் கொண்டு, திருவெண்ணெய் நல்லூருக்கு
எழுந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 196/50
செல்லும் நான்
மறையோன் தன்பின், திரிமுகக் காந்தம்
சேர்ந்த
வல்இரும்பு
அணையுமா போல், வள்ளலும் கடிது
சென்றான்
எல்லை இல்
சுற்றத்தாரும் இது என்னாம் என்று
செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய்நல்லூரை
நண்ணி.
பொழிப்புரை : திருவெண்ணெய் நல்லூரை
நோக்கிச் செல்கின்ற சிவபெருமானாகிய மறையவரின் பின்பு, தன்முன் வைக்கப்பெற்ற பொருளை
வேறுபடுத்தும் முகத்தை உடைய காந்தத்தின் முன் இரும்பு பற்றுவது போல, நம்பியாரூரரும் அவர்பின் விரைந்து
சென்றார். எண்ணிறந்த சுற்றத்தாரும் இவ்வழக்கு என்னாகுமோ? எனும் நினைவுடன் பின் தொடர்ந்து செல்ல, நல்ல மறையவர்கள் வாழுகின்ற திருவெண்ணெய்
நல்லூரை அடைந்து..,
பெ.
பு. பாடல் எண் : 197/51
வேதபா
ரகரின் மிக்கார் விளங்குபேர் அவைமுன்
சென்று
நாதனாம்
மறையோன் சொல்லும், "நாவலூர் ஆரூரன் தான்
காதல் என்
அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி
மூது அறிவீர் முன் போந்தான், இது மற்று என்
முறைப்பாடு" என்றான்.
பொழிப்புரை : மறையவர்களுள் மிகச்
சிறந்தவர்கள் விளங்குகின்ற பேரவையின் முன்னே சென்று, சிவபெருமானாகிய மறையவர் சொல்லுவார், `திருநாவலூரின்கண் வாழும்
இந்நம்பியாரூரன் விரும்புதற்குரிய என் அடியவன் என்று யான் காட்டிய அடிமை ஓலையைக்
கிழித்து, முதிய அறிவினையுடைய
மறையவர்களே! உங்களிடத்து வந்தான். இது என்னுடைய முறைப்பாடு` என்று அருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 198/52
அந்தணர்
அவையின் மிக்கார், "மறையவர் அடிமை அதல்
இந்தமா
நிலத்தில் இல்லை, என் சொன்னாய்
ஐயா" என்றார்
"வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு, இவன் கிழித்த ஓலை
தந்தை தன்
தந்தை நேர்ந்தது" என்றனன் தனியாய்
நின்றான்.
பொழிப்புரை : அவ்வவையில் அறிவில்
மிக்கிருப்பவர்களாகிய மறையவர்கள்,
ஒரு
மறையவருக்கு, மற்றொரு மறையவர்
அடிமையாதல் இவ்வுலகத்தில் வழக்கமில்லை. அங்ஙனம் இருக்க, ஐயா! நீர் என்ன பொருந்தா வழக்கைச்
சொல்லுகின்றீர்கள் என்றார்கள். யான் கொண்டு வந்த வழக்கு, எழுதிக்கொடுத்த இசைவையுடைய தன்றோ? இவன் கிழித்த அடிமை ஓலை இவன்
தந்தைக்குத் தந்தையாகிய பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்ததாகும் என்று தனித்து
நிற்கும் சிவபெருமானாகிய மறையவர் சொன்னார்.
பெ.
பு. பாடல் எண் : 199/53
"இசைவினால் எழுதும்
ஓலை காட்டினான் ஆகில்
இன்று
விசையினால்
வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி
ஆமோ",
தசை எலாம்
ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச்
சொன்னான்,
"அசைவுஇல்ஆ ரூரர்
எண்ணம் என்?",என்றார் அவையின்
மிக்கார்.
பொழிப்புரை : அவ்வவையில் உள்ள
பெரியோர்கள், காண்பதற்கு உடன்பட்டு
எழுதிய ஓலையை இம்மறையவர் காட்டினாரானால், அதனை
இன்று விரைந்து வலிய வாங்கிக் கிழித்தல் உமக்கு வெற்றியாகுமோ? உடம்பிலுள்ள தசைகளெல்லாம் வற்றுமாறு
மூப்படைந்த இம்மறையவர், தம் வழக்கு இதுவென
யாவர்க்கும் பொருந்துமாறு சொல்லியுள்ளார். (வெற்றி காண்டலில்) தளர்ச்சியின்றி
இருக்கும் நம்பியாரூரரே! இதற்கு நும் கருத்து யாது? என்று வினவினார்கள்.
பெ.
பு. பாடல் எண் : 200/54
"அனைத்து நூல்
உணர்ந்தீர், ஆதிசைவன் என்று அறிவீர், என்னைத்
தனக்கு வேறு
அடிமை என்று, இவ் அந்தணன் சாதித்தானேல்,
மனத்தினால்
உணர்தற்கு எட்டா மாயை, என் சொல்லுகேன் யான்,
எனக்கு இது
தெளிய ஒண்ணாது" என்றனன் எண்ணம்
மிக்கான்.
பொழிப்புரை : இவ்வாறு கேட்ட
அவையத்தாருக்கு ஆராய்ந்த அறிவில்வல்ல நம்பியாரூரர் `மறை முதலிய அனைத்து நூல்களையும்
உணர்ந்தவர்களே! என்னை ஆதி சைவன் என்று நீவிர் அறிவீர்! இம்மறையவர், உலக வழக்கிற்கு வேறாக என்னைத் தம்
அடியன் என்று உறுதிப்படச் சொல்வாரேயானால், அச் செய்தி மனத்தினால் அறியப்படாததோர்
மாயையாய் இருக்கின்றது. இதற்கு யான் என்ன கூறுவேன்? எனக்கு இவ்வழக்கு ஒருவகையில்
உறுதிப்படுத்த இயலாததாய் இருக்கின்றது` என்று
சொன்னார்.
பெ.
பு. பாடல் எண் : 201/55
அவ்வுரை
அவையின் முன்பு நம்பியாரூரர்
சொல்லச்
செவ்விய
மறையோர், நின்ற திருமறை முனியை
நோக்கி,
"இவ்வுலகின் கண்
நீ இன்று இவரை உன்அடிமை என்ற
வெவ்வுரை
எம் முன்பு ஏற்ற வேண்டும்" என்று
உரைத்து மீண்டும்.
பொழிப்புரை : அவ்வாறாய கருத்தினை, அவ்வவையார் முன்பு, நம்பியாரூரர் எடுத்துக் கூற, நடுவுநிலைமை உடைய அவ்வவையத்தார், அங்கு நிற்கின்ற சிவபெருமானாகிய
மறையவரைப் பார்த்து, `இவ்வுலகில் இற்றைப்
போதில் நீர் இந் நம்பியாரூரரை உம்முடைய அடியான் என்று சொன்ன கடுஞ்சொல்லை எங்கள்
முன் உறுதிப்படுத்த வேண்டும்` என்று கூறியவர், பின்னும் கூறுவார்.
பெ.
பு. பாடல் எண் : 202/56
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார்
தங்கள்
காட்சியில்
மூன்றில் ஒன்று காட்டுவாய்"
என்ன, "முன்னே
மூட்சியில்
கிழித்த ஓலை படி ஓலை, மூல ஓலை
மாட்சியில்
காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான்.
பொழிப்புரை : ஆட்சி, ஆவணம், அயலார் கூறும் சான்று ஆகிய இம்மூன்றில்
ஒரு சான்றை இந்நம்பியாரூரர் உமக்கு அடிமை என்பதற்குக் காட்டும் என்று
அம்மறையவரிடம் கூற, மாயையில் வல்ல
அச்சிவபெருமானாகிய மறையவர், முன்பு இவன் தன்
சினத்தால் கிழித்த ஓலையானது என்னிடத்தில் இருக்கும் மூல ஓலையின் படியோலையாகும்.
(நகல்); ஆதலின் என்னிடம் உள்ள
மூல ஓலையை மாண்புமிக்க இப்பேரவையின் முன் காட்டுதற்கென வைத்துள்ளேன் என்றார்.
குறிப்புரை : ஒரு வழக்கைச்
சொல்வதற்கு மூன்று சான்றுகள் வேண்டும்.
1. ஆட்சி. அஃதாவது தான்
இதுகாறும் ஆண்டு வந்திருக்கும் உரிமை. இதனை இக்காலத்தார் `அநுபோக பாத்தியம்` என்பர்.
2. ஆவணம் -
தனக்குரியதென்று அவ்வுடைமைக்கு உரிய முன்னோர் எழுதிக் கொடுத்திருக்கும் ஓலை.
இக்காலத்தார் இதனை `மூல சாசனம்` என்பர்.
3. அயலவர் சான்று -
தனக்குரிய உடைமையாக ஆண்டுவந்த ஒன்றைத் தம் கண்ணால் பார்த்து அதனைப் பிறர்க்கும்
தெளிவித்தற் குரியார்தம் கூற்று. இதனை இக்காலத்தார் `சாட்சி` என்பர்.
இவையே இன்றும் வழக்கில் வெல்லுவதற்குரிய
சான்றுகளாக இருந்து வருகின்றன என்பதும் அறியத்தக்கதாம்.
காட்சி - கண்ணால் கண்டது. இதனைப் பிறர்க்கும்
தெளிவிப்பார் சான்றாவார். இம்மூன்றனுள் ஒன்றைக் காட்டினும் அமையும் என்றனர்
அவையத்தார். இவ்வழக்கில் காட்டுதற்குரியதாக இருப்பது `ஆவணம்` ஒன்றேயாம். ஆதலின் அம்மூல ஓலையைக்
காட்டுகிறேன் என்றார். சுந்தரர் அடிமையாயுள்ளதற்கு ஏனைய இரு சான்றுகளும் உளவேனும்
அவையோர், அவற்றைக் காட்டக்
காணும் தகையராவரல்லர். சுந்தரர் அடிமை செய்து வந்தது திருக்கயிலையில் ஆகும். அதனை
ஆண்டுள்ளார் பலரும் அறிவர். ஆயினும் அச்சுந்தரரே நாவலூரராய்த் தோன்றினார் என்பதை
அவர்களுள் சிலரே தமக்குரிய ஞானத்தால் அறிவர். அவர்களும் ஈண்டு வரவோ, அச்சான்றுகளைக் கூற இவர்கள் ஏற்கவோ
இயலாததாகும். இனி இறைவற்கு என்றும் அடிமையாய் இருப்பதும் வாய்மையே. எனினும்
அதனையும் உலகியல் வழி உணர்த்த இயலாது. அன்றியும் எவ்வுயிர்களும் என்றென்றும்
அப்பெருமானின் அடிமையேயாம். `என்று நீ அன்று நான்
உன்னடிமை அல்லவோ` (தாயுமான. சுவாமி.7) என்ற திருவாக்கால் இந்த உண்மை
பெறப்படும். இவற்றிற்கும் மேலாக வழக்காடுவோர் மறையவர் வேடத்தில் வந்திருப்பதாலும், அவையத்தாரும் உலகியல்
வயப்பட்டவராதலாலும் ஆவணம் ஒன்றுமே காட்டவும், அதன்வழி அவர்கள் தெளியவும்
வாய்ப்பாயிற்று. மூட்சி - சினம். மாயை - யாவரையும் தன்வயப்படுத்துதல்.
பெ.
பு. பாடல் எண் : 203/57
"வல்லையேல்
காட்டு இங்கு" என்ன, மறையவன், "வலி செய்யாமல்
சொல்ல நீர்
வல்லீர் ஆகில், காட்டுவேன்"
என்று சொல்லச்
செல்வ நான்
மறையோர், "நாங்கள் தீங்கு உற
ஒட்டோம்" என்றார்
அல்லல் தீர்த்து
ஆள நின்றார், ஆவணம் கொண்டு
சென்றார்.
பொழிப்புரை : நீர் கூறியவாறு மூல
ஓலையைக் காட்ட இயலுமேல் காட்டுக! என அவையத்தார் கூற, இந்நம்பியாரூரன் இம்மூல ஓலையைப்
பறித்துக் கிழிக்காமல் இருக்குமாறு நீங்கள் சொல்லவல்லவர்களானால் அதனைக்
காட்டுகின்றேன் என்று கூற, அதற்குரிய தகுதி
வாய்ந்த அவ்வவையத்தாரும் அம்மூல ஓலைக்குத் தீங்கு வாராமல் காப்போம் என்று உறுதி
கூறினர். நம்பியாரூரரின் பிறவித் துன்பத்தை நீக்கி ஆளுதற்கு வந்த அம்மறையவரும் ஆவண
மூல ஓலையை அவையத்தார்முன் காட்டி அருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 204/58
இருள்மறை
மிடற்றோன் கையில் ஓலைகண்டு, அவையோர் ஏவ,
அருள் பெறு
கரணத்தானும் ஆவணம் தொழுது
வாங்கி,
சுருள் பெறு
மடியை நீக்கி விரித்து, அதன் தொன்மை
நோக்கித்
தெருள்பெறு
சபையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான்.
பொழிப்புரை : தம் கழுத்திலுள்ள
கருமையான நிறத்தை மறைத்து வந்தவனாகிய சிவபெருமான் தந்த ஓலையைக் கண்ட அவையத்தார், அதனை யாவரும் அறியப் படிக்குமாறு
கணக்கனிடம் கூற, அவர்தம் அனுமதியைப்
பெற்ற கணக்கனும் அவ்வோலையைத் தொழுது வாங்கிச், சுருளாயிருக்கின்ற மடிப்பை நீக்கி
விரித்து, அதன் பழமையைப்
பார்த்து, அறநூல் உணர்வில்
தெளிவு பெற்றிருக்கும் அவ்வவையத்தார் கேட்குமாறு அவ்வோலையில் இருந்த செய்தியை
வாசிக்கத் தொடங்கினான்.
பெ.
பு. பாடல் எண் : 205/59
"அருமறை நாவல்
ஆதி சைவன் ஆரூரன் செய்கை,
பெருமுனி
வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு, யானும்
என்பால்
வருமுறை
மரபு உளோரும் வழித்தொண்டு
செய்தற்கு ஓலை
இருமையால்
எழுதி நேர்ந்தேன், இதற்கு இவை என்
எழுத்து".
பொழிப்புரை : `அறிதற்கரிய மறைகளை உணர்ந்த திருநாவ
லூரிலிருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் எழுதிக் கொடுத்த உடன்பாடு; பெருமுனிவராய திருவெண்ணெய் நல்லூரில்
வாழும் பித்தன் என்னும் மறையவருக்கு `யானும்
என் வழிவழி வரும் மரபினரும் வழிவழியாக அடிமை செய்தற்கு இந்த ஆவணத்தை உள்ளும் புறம்பும்
ஒத்து எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு இவை என் கையெழுத்தாம்.`
பெ.
பு. பாடல் எண் : 206/60
வாசகம்
கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து
இட்டார்கள்
ஆசு இலா
எழுத்தை நோக்கி "அவை ஒக்கும்"
என்ற பின்னர்
மாசிலா
மறையோர் "ஐயா மற்று உங்கள் பேர்
அனார் தம்
தேசு உடை
எழுத்தே ஆகில், தெளியப் பார்த்து
அறிமின்" என்றார்.
பொழிப்புரை : இவ்வாறு எழுதிய
உடன்பாட்டைக் கேட்ட பின்பு, அவ்வுடன்படிக்கையில்
சான்றாகக் கையெழுத்திட்டிருப்பவர்களின் குற்றமில்லாத கையெழுத்தைப் பார்த்து, அவையனைத்தும் முறையாக அமைந்துள்ளன என்று
கூறிப், பின்பு நீதியில்
திறம்புதலில்லா அவ் அவையத்தார்,
`நம்பியாரூரரே!
உம்முடைய பாட்டனாரின் உண்மையான கையெழுத்தாய் இருக்குமாயின் அதனை நன்றாகப்
பார்த்துணர்வீர்!` என்றார்கள்
பெ.
பு. பாடல் எண் : 207/61
அந்தணர்
கூற "இன்னும் ஆள்ஓலை இவனே காண்பான்,
தந்தை தன்
தந்தை தான் வேறு எழுது கைச்சாத்து
உண்டு ஆகில்
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு
நோக்கி
வந்தது
மொழிமின்" என்றான் வலிய ஆட்கொள்ளும்
வள்ளல்.
பொழிப்புரை : அவ்வவையில் உள்ள
மறையவர்கள் இவ்வாறு சொல்ல, அடியவர்களை வலிய
வந்து ஆட்கொள்ளும் கருணைப் பெருக்குடைய சிவபெருமானாகிய மறையவர், இன்னமும் அடிமை ஓலையை, இந் நம்பியாரூரனோ காண வல்லவன்? இவன் பாட்டன் இதுவன்றி வேறாக
எழுதியிருக்கும் கைச்சாத்துகள் இருக்குமாயின் இவ்வாவண ஓலையின்கண் இருக்கும்
எழுத்துக்களோடு ஒத்து நோக்கி ஒக்கும் அல்லது ஒவ்வாது என்று உங்கள் மனத்தில்
தோன்றும் தீர்ப்பைச் சொல்லுங்கள் என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 208/62
திரண்ட மா
மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
மருண்ட அது
தெளிய, மற்றுஅம் மறையவன் எழுத்தால்
ஓலை
அரண் தரு
காப்பில் வேறு ஒன்று அழைத்து, உடன் ஒப்பு
நோக்கி
"இரண்டும் ஒத்து
இருந்தது என்னே இனிச் செயல்
இல்லை" என்றார்.
பொழிப்புரை : திரண்டிருக்கும்
பெருமையுடைய மறையோர்களாகிய அவ்வவையோர் தாமும், நம்பியாரூரர் முன்பு ஐயம் தெளியுமாறு, அப்பாட்டனுடைய கையெழுத்தாக ஊர் அவையில்
பாதுகாவலாக வைத்திருக்கும் கையெழுத்தொன்றை எடுக்கச் செய்து, அவ் வோலையிலுள்ள கையெழுத்துடன் எழுத்து
வடிவங்களை ஒத்துப் பார்த்து, இரண்டும் ஒத்துள்ளமை
கண்டு, ஈதென்ன வியப்பு என
நினைந்து இனி வேறு செயலில்லை என்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 209/63
"நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரர்
தோற்றீர்,
பான்மையின்
ஏவல் செய்தல் கடன்" என்று,
பண்பின் மிக்க
மேன்மையோர்
விளம்ப, நம்பி, "விதிமுறை இதுவே ஆகில்
யான் இதற்கு
இசையேன் என்ன இசையுமோ" என்று
நின்றார்.
பொழிப்புரை : `நான்கு மறைகளையும் உணர்ந்த இம்
மறையவர்க்கு நம்பியாரூரரே! நீர் தோற்றீர்! ஆதலின் அவர் கூறியவாறு அவருக்குப் பணி
செய்வதே உமக்குக் கடன்` என்று நற்குணங்கள்
நிறைந்த மேதக்க அவ்வவையோர் கூற,
நம்பியாரூரரும்
`அவையத்தாரின் ஆணை
இதுவாயின் யான் இதற்கு உடன்படேன் என மறுத்தற்கு ஒல்லுமோ?` என்று கூறி நின்றார்.
பெ.
பு. பாடல் எண் : 210/64
திருமிகு
மறையோர் நின்ற செழுமறை முனியை
நோக்கி
"அருமுனி நீமுன்
காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர்
பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்
ஊரில்
வருமுறை
மனையும் நீடு வாழ்க்கையும்
காட்டுக" என்றார்.
பொழிப்புரை : மேதக்க அம்மறையவர்கள்
அங்கு நிற்கும் சிவபெருமானாகிய மறையவரைப் பார்த்து, `அரிய மறைமுனிவரே! நீர் முன் காட்டிய
ஆவணவோலையில் உம்முடைய ஊர் எங்கள் திருவெண்ணெய்நல்லூர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உமக்கு இவ்வூரில் வழிவழியாக ஆண்டு வரும் மனையையும், நீர் வாழ்ந்து வரும் நிலையான வாழ்க்கை
வசதிகளையும் காட்டும்` என்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 211/65
பொருஅரும்
வழக்கால் வென்ற புண்ணிய முனிவர், "என்னை
ஒருவரும்
அறியீர் ஆகில், போதும்" என்று
உரைத்துச் சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு
செல்லத்
திருவருள்
துறையே புக்கார், கண்டுஇலர், திகைத்து
நின்றார்.
பொழிப்புரை : ஒப்பற்ற
பெருவழக்கினால் வெற்றிகொண்ட புண்ணியத்தின் வடிவென நிற்கும் சிவபெருமானாகிய மறையவர், `இத்துணை முதியவராக இருந்தும் ஒருவரும்
என் மனையையும் வாழ்க்கையையும் அறியீராயின் அவற்றை நான் காட்டுகின்றேன்` என அவர்களை அழைக்க, ஆண்டுச் சூழ்ந்துள்ள பெருமைமிக்க
அவையத்தாரும் நம்பியாரூரரும் பின்வர, அவ்வூரிலுள்ள
`திருவருட்டுறை` என்னும் திருக்கோயிலில் புகுந்தார்.
அதன்பின்பு அவரை அவர்கள் காணாமல் திகைத்து நின்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 212/66
எம்பிரான்
கோயில் நண்ண, இலங்கு நூன் மார்பர், "எங்கள்
நம்பர் தம்
கோயில் புக்கது என்காலோ" என்று
நம்பி
தம் பெரு
விருப்பினோடு தனித் தொடர்ந்து
அழைப்ப மாதோடு
உம்பரின்
விடைமேல் தோன்றி, அவர் தமக்கு
உணர்த்தல் உற்றார்.
பொழிப்புரை : எம் சிவபெருமான் ஆகிய
மறையவர், திருக்கோயிலுக்குட்
சென்று மறைந்தருள, நம்மை அடிமை என்று
உறுதிப்படுத்திய விளங்குகின்ற பூணூலணிந்த மார்பினை உடைய மறையவர், எம்பிரானார் எழுந்தருளியிருக்கும்
திருக்கோயிலுக்குட் புகுந்தது என்னோ? என்று
கருதிய நம்பியாரூரர், தம்மிடத்துத் தோன்றிய
பெருவிருப்போடும் உடன் வந்த மறையவர்களினின்றும் பிரிந்து தனியே சென்று அழைக்கச், சிவபெருமான் உமையம்மையாரோடு
ஆனேற்றின்மீது எழுந்தருளி, அந்நம்பியாரூரர்க்கு
அருளிச் செய்வாராய்.
பெ.
பு. பாடல் எண் : 213/67
"முன்புநீ நமக்குத்
தொண்டன், முன்னிய வேட்கை கூரப்
பின்பு நம்
ஏவலாலே பிறந்தனை மண்ணின்
மீது,
துன்பு உறு
வாழ்க்கை நின்னைத் தொடர்வுஅற,
தொடர்ந்து வந்து
நன்புல
மறையோர் முன்னர் நாம் தடுத்து
ஆண்டோம்" என்றார்.
பொழிப்புரை : முற்பிறப்பில் நீ
நமக்கு அடியனாய் இருந்தாய். மாதரைக் கருதிய விருப்பு மிகுதியால் பின் நம்முடைய
ஆணையால் இந்நிலவுலகில் தோன்றினாய். அதனால் துன்பத்தை விளைவிக்கும்
இல்வாழ்க்கையானது உன்னைத் தொடராமல் நாமே வலியத் தொடர்ந்து வந்து நல்லுணர்வினை உடைய
மறையவர்களுக்கு முன்னே தடுத்தாட்கொண்டோம் என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 214/68
என்று எழும்
ஓசை கேளா, ஈன்ற ஆன் கனைப்புக்
கேட்ட
கன்று போல்
கதறி, நம்பி கரசரண ஆதி அங்கம்
துன்றிய
புளகம் ஆகத் தொழுதகை தலைமேல் ஆக,
"மன்று உளீர் செயலோ
வந்து வலிய ஆட்கொண்டது" என்றார்.
பொழிப்புரை : இவ்வாறு, சிவபெருமான் அருளிச் செய்த திருவாக்கைக்
கேட்ட நம்பியாரூரர், ஈன்ற பசுவின்
கனைப்பினைக் கேட்ட கன்றைப் போல அலறி, கைகால்
முதலிய உறுப்புக்களில் நெருங்கி எழுந்த மயிர்க்கூச்செறிதல் உண்டாக, தொழுத கை தலைமீது ஏற, திருமன்றுள் ஆடல் செய்தருளும் பெருமானே!
உம்முடைய செய்கையோ இவ்வாறு வலிய வந்து தடுத்தாட்கொண்டது என்று விண்ணப்பம் செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 215/69
எண்ணிய
ஓசை ஐந்தும் விசும்புஇடை நிறைய,
எங்கும்
விண்ணவர்
பொழி பூ மாரி மேதினி நிறைந்து
விம்ம,
மண்ணவர்
மகிழ்ச்சி பொங்க, மறைகளும் முழங்கி
ஆர்ப்ப,
அண்ணலை
ஓலை காட்டி ஆண்டவர் அருளிச்
செய்வார்.
பொழிப்புரை : எண்ணப்பட்ட ஐந்து
இயங்களின் ஓசையும் விண்ணில் நிறையவும், எவ்விடத்தும்
தேவர்கள் சொரிகின்ற மலர் மழையானது இந்நிலவுலகில் நிறைந்து மேற்படவும், மண்ணுலகத்தவர் மகிழ்ச்சியடையவும், மறைகள் பெருமுழக்கிடவும் நம்பியாரூரரை
ஆவண ஓலை காட்டித் தடுத்தாட்கொண்ட சிவபெருமான் இவ்வாறு அருளிச் செய்வாராயினார்.
பெ.
பு. பாடல் எண் : 216/70
"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும்
நாமம்
பெற்றனை, நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின்
மிக்க
அற்சனை
பாட்டே ஆகும், ஆதலால், மண் மேல் நம்மைச்
சொல் தமிழ்
பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.
பொழிப்புரை : தூய்மையான மறைகளைப் பண்டு
அருளிச் செய்த சிவபெருமான், மேலும் நீ என்னுடன்
வன்மையான சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், `வன்றொண்டன்` என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும்
அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல் திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல்
முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளேயாகும். ஆதலின்
இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக! என்றருளிச்
செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 217/71
தேடிய
அயனும் மாலும் தெளிவுறாது, ஐந்து
எழுத்தும்
பாடிய
பொருளாய் உள்ளான் "பாடுவாய் நம்மை"
என்ன,
நாடிய
மனத்தர் ஆகி, நம்பியாரூரர்
மன்று உள்
ஆடிய
செய்ய தாளை அஞ்சலி கூப்பி
நின்று.
பொழிப்புரை : பண்டொருகால்
பெருமானின் முடியையும் அடியையும் தேடிய அயனும் மாலும் காணாமல் வருந்திய நிலையில், திருவைந்தெழுத்தைத் துதித்து, வாழ்த்த, அவ்வளவில் அவர்க்குக் காட்சி கொடுத்தருளிய
சிவபெருமான், நம்மைப் பாடுவாய்
என்று அருளிச் செய்ய, சிவபெருமானின்
திருவருளைச் சிந்தித்து நிற்கும் கருத்துடையராய நம்பியாரூரரும், திருமன்றுள் ஆடியருளும் சிவந்த
திருவடிகளைக் கைகுவித்து வணங்கி நின்று.
பெ.
பு. பாடல் எண் : 218/72
"வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல
வந்த
ஊதியம்
அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக்
கொண்ட
கோது இலா
அமுதே, இன்றுஉன் குணப்பெருங் கடலை
நாயேன்
யாதினை
அறிந்து, என் சொல்லிப் பாடுகேன்"
என மொழிந்தார்.
பொழிப்புரை : மறையவனாய் அடியேனை
வழக்கிட்டு வெல்ல வந்த ஊதியத்தை அறியாத அடியேனுக்கு, முன்னைய உணர்வைக் கொடுத்து, உலக வாழ்வினின்றும் விலகுமாறு
தடுத்தாட்கொண்ட குற்றமற்ற அமுதாக விளங்குபவனே! இன்று உம் மேலான குணநலன்களாம்
பெருங்கடலில், நாயை ஒத்த
சிறுமைக்குணம் உடையவனாகிய யான்,
எவ்வளவில்
முகந்து எக்குணத்தை அறிந்து எவ்வண்ணம் பாடுகேன்? என்று விண்ணப்பம் செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 219/73
அன்பனை
அருளின் நோக்கி அங்கணர் அருளிச்
செய்வார்,
"முன்பு எனைப் பித்தன்
என்றே மொழிந்தனை, ஆதலாலே
என் பெயர்
பித்தன் என்றே பாடுவாய்"
என்றார், நின்ற
வன்பெருந்
தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல்
உற்றார்.
பொழிப்புரை : இவ்வாறு வேண்டிய
அடியவராகிய நம்பியாரூரரைக் கருணையோடும் பார்த்து, அழகிய பேரருட்பெருங் கருணையை உடைய
சிவபெருமான் அருளிச் செய்வார் `முன்னே என்னைப்
பித்தன் என்றே கூறினாய், அதனால் இப்பொழுதும்
என் பெயரைப் பித்தன் என்றே வைத்துப் பாடுக!` என்று அருளினார். அதனைக் கேட்டு நின்ற
பெருமைமிக்க தொண்டராகிய நம்பியாரூரரும், தம்மைத்
தடுத்தாட்கொண்ட கருணை வள்ளலாகிய பெருமானைப் பாடத் தொடங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 220/74
கொத்து ஆர்மலர்க்
குழலாள் ஒரு கூறு ஆய், அடியவர்பால்
மெய்த்தாயினும்
இனியானை அவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தாபிறை
சூடீ" எனப் பெரிது ஆம் திருப்பதிகம்
இத்தாரணி
முதலாம் உலகு எல்லாம் உய
எடுத்தார்.
பொழிப்புரை : கொத்தாக மலர்ந்த
மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையம்மையாரைஒரு மருங்கில் கொண்டவரும், அடியவரிடத்து மெய்யன்புடைய தாயினும்
இனியவருமான சிவபெருமானை, இடமகன்ற
திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைமை பெற்று விளங்குபவராகிய அந்நம்பியாரூரர், `பித்தா பிறைசூடி` என்னும் முதற்குறிப்புடைய பெருமை
பொருந்திய திருப்பதிகத்தை, இந்நிலவுல கம் முதலாக
எவ்வுலகத்தில் உள்ளாரும் உயரிய பேறான வீட்டின்பத்தைப் பெறும் பொருட்டுப் பாடத்
தொடங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 221/75
முறையால் வரு
மருதத்துடன் மொழி இந்தள முதலில்
குறையா நிலை
மும்மைப்படி கூடும் கிழமையினால்
நிறை பாணியில்
இசைகோள் புணர் நீடும் புகல் வகையால்
இறையான் மகிழ்
இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.
பொழிப்புரை : எவ்வகையினாலும்
தமக்குப் பிறர் ஒப்பில்லாத வன்தொண்டர், முறைமையாக
வரும் மருதப்பண்ணுடன் கூடிய முதலில் எடுத்துப் பாடுகின்ற `இந்தளம்` என்னும் பண்ணை உடைய அத்திருப்பதிகத்தை, எடுத்தல், படுத்தல், நலிதல் எனவரும் இசை வேறுபாடு குறையாமல்
பொருந்தும் முறைமையினாலும், நிறைந்த தாளத்தில்
இசையின்பகுதி மிகவும் புணர்ந்து அமையும் வகைமையாலும் சிவபெருமான் மகிழுமாறு
இசையோடு பாடினர்.
பெ.
பு. பாடல் எண் : 222/76
சொல்ஆர்
தமிழ் இசைபாடிய தொண்டன் தனை,
"இன்னும்
பல்ஆறு
உலகினில் நம் புகழ் பாடு" என்று, உறு பரிவின்
நல்லார்வெண்ணெய்
நல்லூர்அருள் துறைமேவிய நம்பன்
எல்லா
உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
பொழிப்புரை : இவ்வாறு தம்மைச்
சொற்கள் நிறைந்த தமிழ்ப்பதிகத்தை இசையோடு பாடியருளிய வன்தொண்டரை, இனியும் பலவகைகளால் இந்நிலவுலகத்தின்கண்
இருந்து நம் புகழைப் பாடுவாயாக! என்று மீதூர்ந்த கருணையினால் எவ்வுலகும் உய்யுமாறு
முப்புரங்களை எரித்தவரும் மெய்யன்பர்கள் வாழும் திருவெண்ணெய் நல்லூர்த்
திருவருட்துறையில் எழுந்தருளியிருப்பவருமான சிவபெருமான் ஆணையிட்டு அருளினர்.
7.001
திருவெண்ணெய்நல்லூர் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பித்தா, பிறை சூடீ, பெரு மானே, அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து, உன்னை
வைத்தாய், பெண்ணைத்
தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா, உனக்கு ஆளாய, இனி அல்லேன்எனல் ஆமே.
பொழிப்புரை :பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள
திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய,
`அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள்
உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
பாடல்
எண் : 2
நாயேன்
பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னைப்
பேயாய்த்
திரிந்து எய்த்தேன், பெறல் ஆகா அருள்
பெற்றேன்,
வேய்ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர்அருள்
துறையுள்
ஆயா, உனக்கு ஆளாய்இனி
அல்லேன் என லாமே.
பொழிப்புரை :மூங்கில்கள் நிறைந்து
வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத்
திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான்
உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து
இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான்
பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
பாடல்
எண் : 3
மன்னே, மறவாதே நினைக்
கின்றேன் மனத்து உன்னைப்
பொன்னே, மணி தானே, வயிரம்மே பொருது
உந்தி
மின்ஆர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள்
அன்னே, உனக்கு ஆளாய் இனி
அல்லேன் என லாமே.
பொழிப்புரை :தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின்
தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே,
உனக்கு
நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது
பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில்
ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.
பாடல்
எண் : 4
முடியேன், இனிப் பிறவேன், பெறில் மூவேன், பெற்றம்
ஊர்தீ
கொடியேன்பல
பொய்யே உரைப்பேனைக் குறிக் கொள்நீ
செடியார் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள்
அடிகேள், உனக்கு ஆளாய் இனி
அல்லேன் என லாமே.
பொழிப்புரை :இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால்
உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே
அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து
வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய
என்னை நீ வெறாது ஏற்றருள்.
பாடல்
எண் : 5
பாதம்பணி
வார்கள்பெறு பண்டம்அது பணியாய்
ஆதன்பொருள்
ஆனேன், அறி வில்லேன், அரு ளாளா,
தாதுஆர்பெண்ணைத்
தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள்
ஆதீ
உனக்கு ஆளாய்இனி அல்லேன் என லாமே.
பொழிப்புரை :அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த
பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண்
எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே
அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ!
அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி
வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.
பாடல்
எண் : 6
தண்ஆர்மதி
சூடீ, தழல் போலுந்திரு மேனீ,
எண்ணார்புரம்
மூன்றும்எரி உண்ணநகை செய்தாய்
மண்ஆர்பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர்அருள்
துறையுள்
அண்ணா, உனக்கு ஆளாய்இனி அல்லேன்என
லாமே.
பொழிப்புரை :தட்பம் நிறைந்த
திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும்
திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது
அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல்
பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய
அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
பாடல்
எண் : 7
ஊன்ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய், உலகு ஆனாய்,
வான்ஆய், நிலன் ஆனாய், கடல் ஆனாய், மலை ஆனாய்,
தேன்ஆர்பெண்ணைத்
தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்
துறையுள்
ஆனாய், உனக்கு ஆளாய் இனி
அல்லேன் எனல் ஆமே.
பொழிப்புரை :பூக்களின் தேன்
நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத்
திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து
வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற
அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே
அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
பாடல்
எண் : 8
ஏற்றார்புரம்
மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன
சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர்
ஏற்றாய்பெண்ணைத்
தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள்
ஆற்றாய், உனக்கு ஆளாய்இனி
அல்லேன்என லாமே.
பொழிப்புரை :பெண்ணையாற்றின்
தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண்
எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ
உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த
சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும்
சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக
இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
பாடல்
எண் : 9
மழுவாள்வலன்
ஏந்தீ, மறை ஓதீ, மங்கை பங்கா,
தொழுவார்அவர்
துயர்ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழுஆர்பெண்ணைத்
தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள்
அழகா, உனக்கு ஆளாய்இனி
அல்லேன்என லாமே.
பொழிப்புரை :மழுப்படையை
வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற
பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்
கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை
வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை
அறியாது, முன்பே உனக்கு
அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
பாடல்
எண் : 10
கார்ஊர் புனல்
எய்திக் கரை கல்லித் திரைக் கையால்
பார்ஊர் புகழ்
எய்தித் திகழ் பன்மாமணி உந்திச்
சீர்ஊர் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்
துறையுள்
ஆரூரன்எம்
பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே.
பொழிப்புரை :மேகத்தினின்றும்
ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத்
தள்ளிவந்து, அழகு மிகுகின்ற
பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்
கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment