திரு அரசிலி


திருஅரசிலி
(ஒழிந்தியாபட்டு)

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

         பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது.

         திருவக்கரை தலத்தை தரிசித்து விட்டு வருவோர் பிரதான சாலைக்கு வந்து வானூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அடைந்து, அங்கிருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற்சொல்லியவாறு ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று அரசிலி ஆலயத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது.


இறைவர்         : அரசிலிநாதர், ஆலாலசுந்தரர்அசுவத்தேசுவரர், அரசலீசுவரர்.

இறைவியார்      : பெரியநாயகி, அழகியநாயகி.

தல மரம்     : அரச மரம்

தீர்த்தம்           : அரசடித் தீர்த்தக்குளம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பாடல் வண்டறை.


         மூன்று நிலை இராஜகோபுரமும், ஒரு பிராகாரமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் அரசிலிநாதர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் பெரியநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், நவக்கிரகம், சண்டேசுவரர் நால்வர் ஆகியேரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். பொதுவாக வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி, கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இது வித்தியாசமான அமைப்பாகும். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்தத் தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். ஒரே இடத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தை கீழேயும், மேலே தாண்டவ கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி ஆகிய பிற கோஷ்ட மூர்த்திகளின் சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்கு பின்புறத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார். கருவளையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்புலிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இலிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.

         தல விருட்சமாக அரசமரம் விளங்குகிறது. மரங்களில் சிறந்த அரசடியில் இறைவன் விளங்குவதால் இத்தலம் அரசிலி என்று பெயர் பெற்றது.

     வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.

         வாமதேவ முனிவருக்குப் பின பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு பொயிற்று. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொறு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியை செய்து வந்தான். ஒரு சமயம் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் அதøø விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்க பாண்த்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும் இத்தல இறைவனிடம் அளவில்லாத பக்தியுடன் வழிபட்ட தலம். இந்த இந்திரசேனன் மகள் அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி கூடிய தலம்.

         காலை 7 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேர்ந்தவர்கள் தத்தமது மதியால் சாரும் அரிசிலியூர் உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1134
ஏறுஅணிந்த வெல்கொடியார்
         இனிதுஅமர்ந்த பதிபிறவும்
நீறுஅணிந்த திருத்தொண்டர்
         எதிர்கொள்ள நேர்ந்துஇறைஞ்சி,
வேறுபல நதிகானம்
         கடந்துஅருளி, விரிசடையில்
ஆறுஅணிந்தார் மகிழ்ந்ததிரு
         அரசிலியை வந்துஅடைந்தார்.

         பொழிப்புரை : விடையைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பிறபதிகள் பலவற்றையும் திருநீறு அணிந்த தொண்டர்கள் அங்கங்கும் எதிர்கொளச் சென்று, விரிந்த சடையில் கங்கையாற்றை அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற `திருவரசிலிப் பதியினை\\\' வந்தடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 1135
அரசிலியில் அமர்ந்துஅருளும்
         அங்கண்அர சைப்பணிந்து,
பரசியெழு திருப்புறவார்
         பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
         மேவுபதி பலவணங்கி,
திரைசெய்நெடுங் கடல்உடுத்த
         திருத்தில்லை நகர்அணைந்தார்.

         பொழிப்புரை : திருஅரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறை வரைப் பணிந்து போற்றி, திருப்புறவார் பனங்காட்டூர் முதலான, மணம் கமழ்கின்ற கொன்றை மலரைச் சூடிய இறைவர் எழுந்தருளி யிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல் அணிமையாய்ச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தார்.

         குறிப்புரை : திருஅரசிலியில் அருளியது, `பாடல் வண்டறை\' (தி.2 ப.95) எனும் முதற்குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


2.095 திருவரசிலி                     பண் - பியந்தைக்காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாடல் வண்டுஅறை கொன்றை,
         பால்மதி, பாய்புனல் கங்கை,
கோடல், கூவிள மாலை,
         மத்தமும் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்தலை மாலை
         மருவிட வல்லியம் தோள்மேல்
ஆடம் மாசுணம் அசைத்த
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச் சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.


பாடல் எண் : 2
ஏறு பேணி அதுஏறி,
         அளமதக் களிற்றினை எற்றி,
வேறு செய்துஅதன் உரிவை
         வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேன்அவன், உம்பர்க்கு
         ஒருவன்,நல் ஒளிகொள்ஒண்   சுடராம்,
ஆறு சேர்தரு சென்னி
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும் உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும், அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்கு பவரும், தேவர்களால் போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை சூடிய சென்னியரும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.


பாடல் எண் : 3
கங்கை நீர்சடை மேலே
         கதமிகக் கதிர்இள வனமென்
கொங்கை யாள்ஒரு பாகம்
         மருவிய கொல்லைவெள் ஏற்றன்,
சங்கை யாய்த்திரி யாமே
         தன்அடி யார்க்குஅருள் செய்து,
அங்கை யால்அனல் ஏந்தும்
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல் தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் `முல்லை` நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல் ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.


பாடல் எண் : 4
மிக்க காலனை வீட்டி,
         மெய்கெடக் காமனை விழித்து,
புக்க ஊர்இடு பிச்சை
         உண்பது, பொன்திகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில்
         தவளவெண் ணீறுஅணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை அழித்துத் காமன் உடல் நீறாகும்படி விழித்து, ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை, பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமை யோடு, என்புமாலை ஆகியவற்றைச் சூடிவரும் சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.


பாடல் எண் : 5
மான்அஞ் சும்மட நோக்கி
         மலைமகள் பாகமும் மருவி,
தான்அஞ் சாஅரண் மூன்றும்
         தழல்எழச் சரம்அது துரந்து,
வான்அஞ் சும்பெரு விடத்தை
         உண்டவன், மாமறை ஓதி,
ஆன்அஞ்சு ஆடிய சென்னி
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வான வரும் அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும் திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.


பாடல் எண் : 6
பரிய மாசுணம் கயிறா,
         பருப்பதம் அதற்குமத்து ஆகப்
பெரிய வேலையைக் கலங்கப்
         பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சுஅது தோன்றக்
         கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆர்அமுது ஆக்கும்
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப் பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக் காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.


பாடல் எண் : 7
* * * * *
பாடல் எண் : 8
வண்ண மால்வரை தன்னை
         மறித்திடல் உற்றவல் அரக்கன்
கண்ணும் தோளும்நல் வாயும்
         நெரிதரக் கால்விரல் ஊன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பால்
         பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாய்அருள் செய்த
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும் வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.


பாடல் எண் : 9
குறிய மாண்உரு ஆகிக்
         குவலயம் அளந்தவன் தானும்,
வெறிகொள் தாமரை மேலே
         விரும்பிய மெய்த்தவத் தோனும்,
செறிவுஒ ணாவகை ஏங்கும்
         தேடியும் திருவடி காண
அறிவுஒ ணாஉரு வத்துஎம்
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும், அழலுருவாய் ஒங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.


பாடல் எண் : 10
குருளை எய்திய மடவார்
         நிற்பவே, குஞ்சியைப் பறித்து,
திரளை கையில்உண் பவரும்,
         தேரரும் சொல்லிய தேறேல்,
பொருளை, பொய்இலி மெய்,எம்
         நாதனை, பொன்அடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும்
         அடிகளுக்கு இடம்அர சிலியே.

         பொழிப்புரை :இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடி வாழாது தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டைகளைக் கையில் இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும் அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க பொருளானவரும், பொய்மையில்லாத வரும் உண்மையின் வடிவானவரும், தம் பொன்னடிகளை வணங்கு வார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி வழிபடுங்கள்.


பாடல் எண் : 11
அல்லி நீள்வயல் சூழ்ந்த
         அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன்
         நல்தமிழ் பத்துஇவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச்
         சூழ்ந்துஅம ரர்தொழுது ஏத்த
வல்ல வான்உலகு எய்தி
         வைகலும் மகிழ்ந்துஇருப் பாரே.

         பொழிப்புரை :நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல ஞானசம்பந்தர் பாடியருளிய இத் திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்.


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...