திரு வேட்களம்


திரு வேட்களம்

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         சிதம்பரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளே புகுந்து பின்புறம் இசைக் கல்லூரியைக் கடந்து சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

இறைவர்               : பாசுபதேசுவரர், பாசுபதநாதர்.

இறைவியார்           : சற்குணாம்பாள், நல்லநாயகி.

தல மரம்               : மூங்கில்.

தீர்த்தம்                : தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில்.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - அந்தமும் ஆதியு மாகிய

                                        2. அப்பர்   - நன்று நாடொறும் நம்வினை


     அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். (கயிலைமலை சென்று தவம் முயன்றதாக, வில்லிபாரதம் கூறுகிறது என்பதை அறியவும்) அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக் கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் திருவடி தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சி கொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.

         மூன்று அடுக்கு இராஜகோபுரத்துடன் கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் சித்திவிநாயகர், சோமஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பகுதியில் உள்ள நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, இந்திர மயில் மீதமர்ந்த முருகன் ஆகியன அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகருகே சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இருப்பது விசேஷம். இவர்களை சூரிய, சந்திர கிரகணங்களின் போது வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியுன் உள்ளது.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த திருவுருவம். வைகாசி விசாக விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

         இத்தல தீர்த்தம் கிருபா தீர்த்தம் கோவிலின் எதிரில் உள்ளது. தலமரம் மூங்கில்.

         திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாயம் மிகும் வாள் களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் வேட்களம் உற்று ஓங்கும் விழுப்பொருளே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6-45 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 166
செய்ய சடையார் திருவேட் களம்சென்று
கைதொழுது சொல்பதிகம் பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளும்இடம் அங்குஆக, மன்றுஆடும்
ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவுறுநாள்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவேட்களத்துக்குச் சென்று, கையால் தொழுது சொல்பதிகத்தைப் பாடி, எழுந்தருளியிருக்கும் இடம் அவ்விடமாக, நாளும் அப்பேரம்பலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருக்கூத்தையும் சென்று கண்டு மகிழ்ந்து மீண்டு போந்திருக்கும் அந்நாளில்,

         குறிப்புரை : திருவேட்களத்தில் பாடிய சொற்பதிகம் `அந்தமும் ஆதியும்' (தி.1 ப.39) என்று தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


1.039    திருவேட்களம்                   பண் - தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அந்தமும்ஆதியும் ஆகியஅண்ணல்
         ஆர்அழல்அங்கை அமர்ந்துஇலங்க,
மந்தம்முழவம் இயம்ப,
         மலைமகள் காணநின்றுஆடி,
சந்தம்இலங்கு நகுதலைகங்கை
         தண்மதியம் அயலேததும்ப
வெந்தவெண் நீறுமெய்பூசும்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவருமாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய தீ கையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபாலமாலை, கங்கை, தண் பிறை ஆகியன தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 2
சடைதனைத் தாழ்தலும் ஏறமுடித்துச்
         சங்கவெண்தோடு சரிந்துஇலங்கப்
புடைதனில் பாரிடஞ்சூழப்
         போதருமாறு இவர்போல்வார்,
உடைதல்நால்விரற் கோவணஆடை,
         உண்பதும் ஊர்இடு பிச்சை,வெள்ளை
விடைதனை ஊர்திநயந்தார்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்.


பாடல் எண் : 3
பூதமும்பல்கண மும்புடைசூழப்
         பூமியும்விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும்வெம்மையும் ஆகிச்
         சீரொடுநின்றஎம் செல்வர்,
ஓதமுங்கானலும் சூழ்தருவேலை
         உள்ளங்கலந்துஇசை யால்எழுந்த
வேதமும்வேள்வியும் ஓவா
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :கடல்நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவ கணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார்.


பாடல் எண் : 4
அரைபுல்கும்ஐந்தலை ஆடல்அரவம்
         அமையவெண்கோவணத் தோடுஅசைத்து
வரைபுல்குமார்பில் ஒர்ஆமை
         வாங்கிஅணிந் தவர்தாம்,
திரைபுல்குதெண்கடல் தண்கழிஓதம்
         தேனலங்கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்குபைம்பொழில் சூழ்ந்த
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :இடையிற் பொருந்திய ஐந்து தலைகளையுடைய தாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமானார் அலைகளையுடைய தெளிந்த கடல்நீர் பெருகிவரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகளை உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார்.


பாடல் எண் : 5
பண்உறுவண்டுஅறை கொன்றைஅலங்கல்,
         பால்புரைநீறு, வெண் நூல்கிடந்த
பெண்உறுமார்பினர், பேணார்
         மும்மதில்எய்த பெருமான்,
கண்உறுநெற்றி கலந்தவெண்திங்கள்
         கண்ணியர்விண்ணவர் கைதொழுதுஏத்தும்
வெண்நிறமால்விடை அண்ணல்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய், முப்புரிநூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப் பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக் கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும் தலைவராவார்.


பாடல் எண் : 6
கறிவளர்குன்றம் எடுத்தவன்காதல்
         கண்கவர்ஐங்கணை யோன்உடலம்
பொறிவளர் ஆர்அழல்உண்ணப்
         பொங்கிய பூதபுராணர்,
மறிவளர்அங்கையர், மங்கையொர்பங்கர் ,
         மைஞ்ஞிறமான்உரி தோல்உடைஆடை,
வெறிவளர்கொன்றைஅம் தாரார்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக் கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறி பறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார்.


பாடல் எண் : 7
மண்பொடிக்கொண்டுஎரித்து ஓர்சுடலை
         மாமலைவேந்தன் மகள்மகிழ,
நுண்பொடிச்சேர நின்றுஆடி,
         நொய்யன செய்யல்உகந்தார்,
கண்பொடிவெண்தலை ஓடுகைஏந்திக்
         காலனைக்காலால் கடிந்துஉகந்தார்,
வெண்பொடிச் சேர்திருமார்பர்,
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத்தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதிதேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற்படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண் பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், காலனைக் காலால் கடிந்துகந்தவரும் வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினரும் ஆவார்.


பாடல் எண் : 8
ஆழ்தருமால்கடல் நஞ்சினைஉண்டார்,
         அமுதம்அமரர்க்கு அருளிச்
சூழ்தருபாம்புஅரை ஆர்த்துச்
         சூலமோடுஒண் மழுஏந்தித்
தாழ்தருபுன்சடை ஒன்றினைவாங்கித்
         தண்மதியம்அயலே ததும்ப
வீழ்தருகங்கை கரந்தார்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக் கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத்தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார்.


பாடல் எண் : 9
திருஒளிகாணிய பேதுஉறுகின்ற
         திசைமுகனும் திசைமேல்அளந்த
கருவரைஏந்திய மாலும்
         கைதொழ நின்றதும்அல்லால்,
அருவரைஒல்க எடுத்தஅரக்கன்
         ஆடுஎழில்தோள்கள் ஆழத்துஅழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.

பாடல் எண் : 10
அத்தம்மண்தோய்துவ ரார்,அமண்குண்டர்,
         யாதும்அல்லாஉரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவதுஅல்லால்
         புறன்உரை யாதுஒன்றும் கொள்ளேல்,
முத்துஅனவெண்முறு வல்உமைஅஞ்ச
         மூரிவல்ஆனையின் ஈர்உரிபோர்த்த
வித்தகர், வேத முதல்வர்
         வேட்கள நல்நகராரே.

         பொழிப்புரை :செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண் குண்டர்கள் ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப்புறனுரைத்துத் திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர். முத்துப் போன்ற வெண்முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலியயானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும் வேத முதல்வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின்.


பாடல் எண் : 11
விண்இயல்மாடம் விளங்குஒளிவீதி
         வெண்கொடிஎங்கும் விரிந்துஇலங்க
நண்ணியசீர்வளர் காழி
         நல்தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின்நல்லாள்ஒரு பாகம்அமர்ந்து
         பேணியவேட்களம் மேல்மொழிந்த
பண்இயல்பாடல் வல்லார்கள்
         பழியொடு பாவம்இலாரே.

         பொழிப்புரை :விண்ணுறவோங்கிய மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும், பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில் நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது பாடியருளிய பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 172
மேவிய பணிகள் செய்து விளங்குநாள், வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்றுமுன் வணங்கிப் பாடி,
காவிஅம் கண்டர் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில்,
நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் இவ்வாறு தமக்குப் பொருத்தமான பணிகளைச் செய்து வந்த நாள்களில், `திருவேட்களத்தில்` எழுந்தருளியிருப்பவரும், உயரிய ஆனேற்றுக் கொடியை உடையவருமான இறைவரைத் திருமுன் சென்று வணங்கிப்பாடி, நீலமலர் போன்ற நிறமுடைய, அழகிய கழுத்தினையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கழிப்பாலைக்கு, மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டுச் சென்று அடைந்தார்.

         குறிப்புரை : திருவேட்களத் திருக்குறுந்தொகையில் (தி.5 ப.42 பா.1) `என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்` எனக் கூறியவர். திருக்கழிப்பாலைப் பதிகத்தில் `துஞ்சும் போதும் துணையென லாகுமே` (தி.5 ப.40 பா.10) என்று அருளுமாற்றான் அதனை வலியுறுத்துகின்றார்.

                                    5. 042    திருவேட்களம்
                                       திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நன்று நாள்தொறும் நம்வினை போய்அறும்,
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்,
சென்று நீர்திரு வேட்களத்து உள்உறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

         பொழிப்புரை : திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக ; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் ; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் .


பாடல் எண் : 2
கருப்பு வெம்சிலைக் காமனைக் காய்ந்தவன்,
பொருப்பு வெம்சிலை யால்புரம் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன் ஆகில் எனக்குஇடர் இல்லையே.

         பொழிப்புரை : கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும் , மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும் , அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின் , எனக்கு இடர்களே இல்லை .

  
பாடல் எண் : 3
வேட்க ளத்துஉறை வேதியன் எம்இறை
ஆக்கள் ஏறுவர், ஆன்ஐஞ்சும் ஆடுவர்,
பூக்கள் கொண்டுஅவன் பொன்அடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற்று அண்ணலே.

         பொழிப்புரை : வேட்களத்துறையும் வேதியனும் , எம் இறைவனும் , திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர் ; பஞ்சகவ்வியம் ஆடுவர் ; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர் .


பாடல் எண் : 4
அல்லல் இல்லை, அருவினை தான்இல்லை,
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வ னார்திரு வேட்களம் கைதொழ
வல்லர் ஆகில் வழிஅது காண்மினே.

         பொழிப்புரை : நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும்; காண்பீர்களாக; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை ; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம் .


பாடல் எண் : 5
துன்பம் இல்லை, துயர்இல்லை யாம்இனி,
நம்பன் ஆகிய நன்மணி கண்டனார்,
என்பொ னார்உறை வேட்கள நல்நகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே.

         பொழிப்புரை : நம்மவராகிய திருநீலகண்டனும் , என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால் , இனித் துன்பமும் இல்லை ; துயரங்களும் இல்லை .


பாடல் எண் : 6
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்உயிர் போவதன் முன்னம்நீர்,
சிட்ட னார்திரு வேட்களம் கைதொழப்
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

         பொழிப்புரை : கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது , விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர் , உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின் , பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்.


பாடல் எண் : 7
வட்ட மென்முலை யாள்உமை பங்கனார்,
எட்டும் ஒன்றும் இரண்டுமூன்று ஆயினார்,
சிட்டர் சேர்திரு வேட்களம் கைதொழுது,
இட்டம் ஆகி இருமட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமை உடைய நெஞ்சமே ! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , எட்டு மூர்த்தியானவரும் , ஒரு பரம்பொருளானவரும் , இரண்டு ( சிவம் , சத்தி ) ஆனவரும் , மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும் , உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக .


பாடல் எண் : 8
நட்டம் ஆடிய நம்பனை நாள்தொறும்
இட்டத் தால்இனி தாக நினைமினோ,
வட்ட வார்முலை யாள்உமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களம் தன்னையே.

         பொழிப்புரை : வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும் , அங்கு நட்டமாடிய நம்பனையும் , நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக .


பாடல் எண் : 9
வட்ட மாமதில் மூன்றுஉடை வல்லரண்
சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொன்திரு வேட்களச் செல்வரே.

         பொழிப்புரை : திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும் , தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர் .


பாடல் எண் : 10
சேட னார்உறை யும்செழு மாமலை
ஓடி ஆங்குஎடுத் தான்முடி பத்துஇற
வாட ஊன்றி மலர்அடி வாங்கிய
வேட னார்உறை வேட்களம் சேர்மினே.

         பொழிப்புரை : பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி , மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக .
                                             திருச்சிற்றம்பலம்

















No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...