திருப் புறவார் பனங்காட்டூர்


திருப் புறவார்பனங்காட்டூர்


     நடு நாட்டுத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் பனையபுரம் என்று வழங்கப்படுகின்றது.

         விழுப்புரத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும், செங்கல்பட்டு - விழுப்புரம் இரயில் பாதையில் உள்ள முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்திலும்அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம். விழுப்புரத்திலிருந்து திருக்கானூர் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்தில் சென்றால் கோயில் அருகில் இறங்கலாம்.

         திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்ல சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனயபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால் ஆலயம் மிக அருகிலுள்ளது.


இறைவர்                  : பனங்காட்டீசர்

இறைவியார்               : புறவம்மை, சத்யாம்பிகை

தல மரம்                   : பனை

தீர்த்தம்                    : பத்ம தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - விண்ணமர்ந்தன மும்மதில்.


         சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

         ஒரு சிறிய கோபுரம். உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. வெளிச்சுற்றில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்திலுள்ளது. உள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறைச் சுற்றில் விநாயகர், அறுபத்துமூவர் திருப்படிமங்கள் உள்ளன. இவற்றில் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள சுற்ற்றில சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன.

         அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

         பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் பனையபுரம் என்கிற புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பெண்தகையார் ஏர் பன் அம் காட்டூர் என்று இருநிலத்தோர் வாழ்த்துகின்ற சீர்ப் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பாடல் எண் : 1135
அரசிலியில் அமர்ந்துஅருளும் அங்கண்அர சைப்பணிந்து,
பரசிஎழு திருப்புறவார் பனங்காட்டூர் முதல்ஆய,
விரைசெய்மலர்க் கொன்றையினார் மேவுபதி பலவணங்கி,
திரைசெய்நெடும் கடல்உடுத்த திருத்தில்லை நகர்அணைந்தார்.

         பொழிப்புரை : திருஅரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரைப் பணிந்து போற்றி, திருப்புறவார் பனங்காட்டூர் முதலான, மணம் கமழ்கின்ற கொன்றை மலரைச் சூடிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல் அணிமையாய்ச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தார்.

         குறிப்புரை : திருஅரசிலியில் அருளியது, `பாடல் வண்டறை\' (தி.2 ப.95) எனும் முதற்குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருஅரசிலி மற்றும் திருப்புறவார்பனங் காட்டூரில் இதுபோது அருளியது, `விண் அமர்ந்தன\' (தி.2 ப.53) எனும் முதற்குறிப்புடைய சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிபலவும் என்பன திருவக்கரை, திருவடுகூர், திருஇரும்பைமாகாளம், திருவாமாத்தூர், திருவதிகை, திருச்சோபுரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் திருச்சோபுரத்திற்கு அமைந்தது, `வெங்கண் ஆனை\' (தி.1 ப.51) எனும் முதற்குறிப்புடைய பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகளுக்குரிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.


2.053 திருப்புறவார்பனங்காட்டூர்      பண் - சீகாமரம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விண்அ மர்ந்தன மும்ம தில்களை
         வீழ வெங்கணை யால்எய் தாய்,விரி
பண்அமர்ந்து ஒலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்அ மர்ந்துஒரு பாக மாகிய
         பிஞ்ஞகா, பிறை சேர்நு தல்இடைக்
கண்அமர்ந் தவனே, கலந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார்பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.


பாடல் எண் : 2
நீடல் கோடல் அலரவெண் முல்லை
         நீர்ம லர்நிரைத் தாது அளஞ்செய,
பாடல் வண்டுஅறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடு இலங்கிய காது அயல்மின்
         துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே, அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசைபாடும் புறவார்பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 3
வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை
         வார்பு னற்கரை அருகு எலாம்வயல்
பாளை ஒண்கமுகம் புறவார் பனங்காட்டூர்,
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
         மத்த மும்புனை வாய், கழல்இணைத்
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 4
மேய்ந்து இளஞ்செந்நென் மென்க திர்கவ்வி
         மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும்
         அடிகள் என்றென்று அரற்றி நன்மலர்
சாய்ந்துஅடி பரவும் தவத்தார்க்கு அஅருளாயே.

         பொழிப்புரை :வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென்கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்றுகுளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடிபரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 5
செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்
         சீறி யாழ்முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்,
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
         கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை ஆடலனே, அடியார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 6
நீரி னார்வரை கோலி மால்கடல்
         நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்,
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்,
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
         கடவுள் என்றுகை கூப்பி நாள்தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள் தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள் தோறும் சிறப்பொடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 7
கை அரிவையர் மெல்வி ரல்லவை
         காட்டி அம்மலர்க் காந்தள் அம்குறி
பைஅரா விரியும் புறவார் பனங்காட்டூர்,
மெய் அரிவையொர் பாகம் ஆகவும்
         மேவி னாய்,கழல் ஏத்தி நாள்தொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 8
தூவி அம்சிறை மெல்ந டையன
         மல்கி ஒல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டுஅறையும் புறவார் பனங்காட்டூர்,
மேவி யந்நிலை யாய் அரக்கன
         தோள் அடர்த்து,அவன் பாடல் கேட்டுஅருள்
ஏவி,எம் பெருமான் என்பவர்க்கு அருளாயே.

         பொழிப்புரை :அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 9
அந்தண் மாதவி புன்னை நல்ல
         அசோக மும்அர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்,
எந்து இளம்முகில் வண்ணன் நான்முகன்
         என்று இவர்க்குஅரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே ,தவத்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 10
நீணம் ஆர்முரு குண்டு வண்டினம்
         நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்,
நாண் அழிந்துஉழல் வார்ச மணரும்
         நண்புஇல் சாக்கியரும் நகத்தலை
ஊண்உரி யவனே, உகப்பார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :வண்டுகள்,பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரியவனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 11
மையின் ஆர்மணி போல்மி டற்றனை,
         மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனை,
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னை, புகழான காழியுள்
         ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்,
செய்யுள் பாடவல்லார் சிவலோகம் சேர்வாரே.

         பொழிப்புரை :கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார் பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...