வட திருமுல்லைவாயில்




வட திருமுல்லைவாயில்
மாசிலாமணி ஈசுவரர் கோவில், திருமுல்லைவாயில்

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

         சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் நிறையவே இருக்கின்றன.


இறைவர்         --    மாசிலாமணீசுவரர், நிர்மலமணீசுவரர், பாசுபதேசுவரர்,

இறைவி          --    கொடியிடை நாயகி, கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்

தலமரம்           --  முல்லை.

தீர்த்தம்           --    கலியாண தீர்த்தம்.

பதிகம்            --    சுந்தரர் - திருவும் மெய்ப்பொருளும்


         திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள திருத்தலம் வடதிருமுல்லைவாயில். சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள திருத்தலம் தென்திருமுல்லைவாயில்.

         காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற்கொண்ட போது, எருக்கந் தூண்களும் வெண்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். (இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்). போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். இந்த வரலாற்றை சுந்தரர் தனது திருப்பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் குறும்பர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையைப் பொற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். குறும்பர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமனி ஈசுவரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.

         தெற்கில் உள்ள இராஜகோபுரம் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி சந்நிதி. அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி சந்நிதி இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது.

         கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீசுவரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார்.

     வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

         தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

         இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன.

         கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

         காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "துன்பம் அற எல்லை வாயற்குள் மட்டும் ஏகில் வினை ஏகும் என்னும் முல்லைவாயிற்குள் வைத்த முத்தி வித்தே" என்று போற்றி உள்ளார்.

         1. சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை,

         2. சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை,

         3. இத்தலத்து கொடியிடை அம்மை -

ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. 

வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெரும் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், பெருமான் அருளால், சூளுறவு செய்து சங்கிலியாரை மணந்து திருவொற்றியூரின் எல்லையைக் கடந்ததால் கண்ணிழந்து செல்லும்பொழுது, துயர் நீங்க, ''அழுக்கு மெய் கொடு'' என்ற திருப்பதிகம் பாடி, வழிப்போவார் வழிகாட்ட, வடதிருமுல்லைவாயில் சென்று இறைஞ்சிப் பாடினார். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 277)

பெரிய புராணப் பாடல் எண் : 277
அங்கு நாதர்செய் அருள்அது வாக
         அங்கை கூப்பி ஆரூர்தொழ நினைந்தே,
பொங்கு காதல் மீளாநிலை மையினால்
         போது வார்வழி காட்ட,முன் போந்து,
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
         சென்று இறைஞ்சி, நீடிய திருப்பதிகம்
"சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்"
         என்று சாற்றிய தன்மையில் பாடி.

         பொழிப்புரை : அங்குத் திருவொற்றியூர் இறைவர் செய்த அருள் அதுவேயாகத் தம் அழகிய கைகளைக் கூப்பி வணங்கித் திருவாரூர்ச் சென்று தொழ விரும்பிப் பொங்கும் காதலால், வழிக்கொள்ளும் அவர், முன்போவார் வழிகாட்டிடச் சென்று, இளம்பிறையைச் சடையிலுடைய பெருமானின் வடதிருமுல்லைவாயில் என்னும் திருப்பதிக்குச் சென்று வணங்கி, பெருமை மிகுந்த திருப்பதிகம் பாடுவார், `சங்கிலிக்காக என் கண்களை மறைத்தீர்\' எனப் பாடியருளினார்.

         குறிப்புரை : வடதிருமுல்லைவாயிலில் அருளிய `திருவும் மெய்ப் பொருளும்' (தி.7 ப.69) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் வரும் `சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப\' எனவருவதை ஆசிரியர் இங்குச் சொல்கிறார்.


பெ. பு. பாடல் எண் : 278
தொண்டை மானுக்குஅன்று அருள்கொடுத்து அருளும்
         தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகஎனப் பரவி,
         குறித்த காதலின் நெறிக்கொள வருவார்,
வண்டுஉலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
         மாட மாளிகை நீடுவெண் பாக்கம்,
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
         காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார்.

         பொழிப்புரை : தொண்டைமான் என்னும் அரசனுக்கு முன்னைய நாளில் அருள் புரிந்திடும், வடதிருமுல்லைவாயிலில் அமர்ந்தருளும் தலைவனை நினைந்து, `அடியனேன் கொண்ட கொடும் துயர் களைந்திடுவாய்' எனப் போற்றித் திருவாரூர் மேல் குறித்த காதலால் வழிக் கொண்டு வருபவர், வண்டுகள் மொய்த்திடும் சோலைகள் சூழ்ந்து, மாட மாளிகைகள் நிரல்பட அமைந்து விளங்கிடும் திருவெண்பாக்கத்தில் உள்ள அடியவர்கள் நகர எல்லையில் எதிர்கொண்டிடத் தாம் அவரை வணங்கிக் கொலை புரியும் யானையை உரித்த சிவபெருமானது அக்கோயிலைச் சென்றடைந்தார்.

7. 069   வடதிருமுல்லைவாயில்      பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குஉன்
         சீர்உடைக் கழல்கள்என்று எண்ணி,
ஒருவரை மதியாது, உறாமைகள் செய்தும்
         ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்,
முருகுஅமர் சோலை சூழ்திரு முல்லை
         வாயிலாய், வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , வீட்டின்பமும் , அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும் , இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து , பிறர் ஒருவரையும் துணையாக நினையாது , அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும் , அவர்கள் என்னைப் பற்ற வரின் , பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரி வேன் ; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை , நீ நீக்கியருளாய் .


பாடல் எண் : 2
கூடிய இலயம் சதிபிழை யாமைக்
         கொடிஇடை உமையவள் காண
ஆடிய அழகா, அருமறைப் பொருளே,
         அங்கணா, எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
         வாயிலாய், திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : உன் தேவியாகிய கொடிபோலும் இடையினை யுடைய உமையவள் கண்டு மகிழுமாறு , பல திறங்களும் கூடிய கூத் தினை , தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே , அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே , கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே , ` இறைவனே , நீ எங்குள் ளாய் ?` என்று தேடிய தேவர்கள் , நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர் கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன் , மேலும் அங்ஙனமே பாடுதற்கு , யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய் .


பாடல் எண் : 3
விண்பணிந்து ஏத்தும் வேதியா, மாதர்
         வெருவிட வேழம்அன்று உரித்தாய்,
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
         வாயிலாய், தேவர்தம் அரசே,
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்,
         சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்ப,நின் அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே , மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து , அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்களுக்குத் தலைவனே , தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே , சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உன் அடியேன் படு கின்ற துன்பத்தை நீக்கியருளாய் .


பாடல் எண் : 4
பொன்நலம் கழனிப் புதுவிரை மருவிப்
         பொறிவரி வண்டுஇசை பாட,
அந்நலம் கமலத் தவிசின்மேல் உறங்கும்
         அலவன்வந்து உலவிட, அள்ளல்
செந்நெல்அம் கழனி சூழ்திரு முல்லை
         வாயிலாய், திருப்புகழ் விருப்பால்
பல்நலம் தமிழால் பாடுவேற்கு அருளாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில் , புள்ளிகளையும் , கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட , அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு , அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழை விருப்பத்தோடு , பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய் .


பாடல் எண் : 5
சந்தன வேரும் கார்அகில் குறடும்,
         தண்மயில் பீலியும், கரியின்
தந்தமும், தரளக் குவைகளும், பவளக்
         கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி
வந்துஇழி பாலி வடகரை முல்லை
         வாயிலாய், மாசிலா மணியே,
பந்தனை கெடுத்துஎன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : சந்தன மரத்தின் வேரையும் , கரிய அகிலினது கட்டையினையும் , மென்மையான மயில் இறகினையும் , யானையின் தந்தத்தையும் , முத்துக் குவியல்களையும் , பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும் , பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந் தருளியிருப்பவனே , மாசில்லாத மணி போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .


பாடல் எண் : 6
மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார்,
         வள்ளலே, கள்ளமே பேசிக்
குற்றமே செயினும் குணம்எனக் கொள்ளும்
         கொள்கையால் மிகைபல செய்தேன்,
செற்றுமீது ஓடும் திரிபுரம் எரித்த
         திருமுல்லை வாயிலாய், அடியேன்
பற்றுஇலேன், உற்ற படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் , யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .


பாடல் எண் : 7
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
         வார்குழல் மாமயில் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயல் கண்ணார்
         அருநடம் ஆடல் அறாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயில்
         செல்வனே, எல்லியும் பகலும்
பணிஅது செய்வேன், படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : அழகு பொருந்திய சிவந்த வாயினையும் , வெள்ளிய பற்களையும் , கரிய நீண்ட கூந்தலையும் , சிறந்த மயில் போலும் சாயலையும் , அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும் , அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும் , செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .


பாடல் எண் : 8
நம்பனே, அன்று வெண்ணெய்நல் லூரில்
         நாயினேன் தன்னைஆட் கொண்ட
சம்புவே, உம்ப ரார்தொழுது ஏத்தும்
         தடங்கடல் நஞ்சுஉண்ட கண்டா,
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
         தேடி,யான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே, அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : யாவராலும் விரும்பத் தக்கவனே , அன்று திரு வெண்ணெய்நல்லூரில் வந்து , நாய்போன்றவனாகிய என்னை ஆட் கொண்ட சம்புவே , வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற , பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே , உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட , பசிய பொன் போல்பவனே, உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ள வனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .


பாடல் எண் : 9
மட்டுஉலா மலர்கொண்டு அடியிணை வணங்கும்
         மாணிதன் மேல்,மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாள,
         காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே, செல்வத் திருமுல்லை வாயில்
         செல்வனே, செழுமறை பகர்ந்த
பட்டனே, அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல் , அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை , அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே , செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே , சொல்வளமும் , பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே , உயிர்களைக் காப்ப வனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .


பாடல் எண் : 10
சொல்அரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
         சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு
         அருளிய இறைவனே, என்றும்
நல்லவர் பரவும் திருமுல்லை வாயில்
         நாதனே, நரைவிடை ஏறீ,
பல்கலைப் பொருளே, படுதுயர் களையாய்,
         பாசுப தாபரஞ் சுடரே

         பொழிப்புரை : சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய , ` தொண்டைமான் ` என்னும் அரசன் , எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை , படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து , பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே , எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , வெள்ளை விடையை ஏறுபவனே , பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .


பாடல் எண் : 11
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
         வெருவிட நீண்டஎம் மானை,
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயில்
         செல்வனை, நாவல்ஆ ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோடு அஞ்சும்
         உள்குளிர்ந்து ஏத்தவல் லார்கள்,
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
         நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே

         பொழிப்புரை : நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி , அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய , அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் , மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள் , நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி , தேவர்களுக்கு அரச ராகும் நிலையை அடைவர் .
                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...