திரு அண்ணாமலை


திருவண்ணாமலை

இறைவர்            : அருணாசலேசுவரர், அண்ணாமலையார்.

இறைவியார்         : அபீதகுசாம்பாள்,          உண்ணாமுலை.

தல மரம்            : மகிழம்

தீர்த்தம்              : பிரம தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்:                1. திருஞானசம்பந்தர் - 1. உண்ணாமுலை
                                                                                       2. பூவார்மலர்கொண் டடியார்.

                                                  2. அப்பர்   -             1. ஓதிமா மலர்கள்
                                                                                    2. வட்ட னைமதி
                                                                                    3. பட்டி ஏறுகந் தேறிப்.


            நடு நாட்டுத் திருத்தலம். பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.

            இங்கு மலையே இறைவனின் சொரூபம்.

            வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.


            கார்த்திகை தீப பெருவிழா, இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது.

            உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.

            நினைக்க முத்தி அருளும் பதி.

            அருணகிரிநாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.

            ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)

            இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம், வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

            மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.

            கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

            கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.

            உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.

            வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

            சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது; அருகிலேயே அருணகிரிநாதரின் 'திருவெழுகூற்றிருக்கை' வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.

            அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் படல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

            விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

            மூவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

            25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

            நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

            தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

            'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.

            குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேசுவரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.

            நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சமக்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன. (கல்வெட்டுக்களின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.)

            இக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் :- நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம்,

திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம்,

 (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பாதிருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம்,

இராமலிங்கசுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம்,

புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் -    அருணாசலேஸ்வரர் பதிகம்,

காஞ்சிபுரம் சபாபதி முதலியார் - அருணாசல பதிகம்,

யாழ்ப்பாணம் நல்லூர் தியாகராஜப் பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம்.

இவையன்றி; உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம் அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.

            வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

            சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் நிறைய உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "யாம் ஏத்தும் உண்ணாமுலையாம் உமையோடு மேவு திரு அண்ணாமலை வாழ் அருட்சுடரே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

            திருஅறையணிநல்லூரை  வழிபட்ட பிள்ளையாருக்கு அன்பர்கள் திரு அண்ணாமலையைக் காட்டினார்கள்.  திரு அண்ணாமலை, இறைவன் திருவுருவாகவே காட்சியளித்தது. அதனைக் கண்ணால் பருகி, கைதொழுது, கலந்து போற்றும் காதலினால் இத்திருப்பதிகத்தை அருளிக்கொண்டே தலத்தை அடைகின்றார்கள்.  இத் திருப்பதிகமும் சேய்மையில் அண்ணாமலையை அன்பர் காட்டக் கண்டு தொழுது பாடியதாகவே சேக்கிழார் தெரிவிக்கின்றார்.


பெரிய புராணப் பாடல் எண் : 969
சீரின் மன்னிய பதிகம்முன்
            பாடிஅத் திருஅறை அணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
            பங்கர்தம் மலைமிசை வலம்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
            இமையவர் நாடொறும் பணிந்துஏத்தும்
காரின் மல்கிய சோலைஅண்
            ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.

            பொழிப்புரை : திருஅறையணி நல்லூர் இறைவரைப் பெருமை பொருந்திய திருப்பதிகம் பாடி வழிபட்டு, கச்சணிந்த தனங்களை உடைய பெருமாட்டியைத் தன் பங்கிலே கொண்ட பெருமானுடைய திருமலையை வலம் வருகையில்,  தேவர்கள் நாள்தோறும் பணிந்து வணங்குகின்ற சோலைவளம் நிறைந்த திருஅண்ணாமலையினை, தொண்டர்கள் காட்ட, திருஞானசம்பந்தர் கண்டார்.


பாடல் எண் : 970
அண்ணா மலைஅங்கு அமரர்பிரான்
            வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது
            கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம்
            பாடித் தொண்டர் உடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
            மலையைச் சென்று சேர்வுற்றார்.

            பொழிப்புரை : அவ்விடத்தினின்றும் திருவண்ணாமலை தோன்றும் காட்சி, தேவர் தலைவரான சிவபெருமானின் வடிவம் போல் தோன்றவும், கண்ணால் கண்டு, பருகுவார் அன்ன ஆர்வத் தராகி, கைகளால் தொழுது, போற்றுதற்குரிய பெருவிருப்பத்தால் `உண்ணா முலையாள்\' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் தொண்டருடன் சென்று, தெளிந்த கங்கையைத் தலையிற்கொண்ட இறைவரின் திருவண்ணாமலையைச் சேர்ந்தார்.

            குறிப்புரை : திருஅறையணிநல்லூரின் மலையிலிருந்தவாறே திருவண்ணாமலையை அன்பர்கள் காட்டக் கண்ட பிள்ளையார், அவ் வண்ணாமலையை நோக்கியருளிய பதிகம் இத்தொடக்கம் உடைய பதிகம் ஆகும். இது நட்டபாடைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.1 ப.10). அலரவனும் மாலவனும் காணாமே அழலுருவாய் நின்ற மலை ஆதலின், பெருமானின் வடிவு போல்வதாயிற்று.


திருஞானசம்பந்தர் திருப்பதகம்

1.010 திருவண்ணாமலை                   பண் – நட்டபாடை
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ஆர்ந்தன அருவித்திரள் மழலைம்முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

            பொழிப்புரை :உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.


பாடல் எண் : 2
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இலரே.

            பொழிப்புரை :கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.


பாடல் எண் : 3
பீலிம்மயில் பெடையோடுஉறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவார்அன புகழே.

            பொழிப்புரை :தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).


பாடல் எண் : 4
உதிரும்மயிர் இடுவெண்தலை கலனாஉலகு எல்லாம்
எதிரும்பலி உணல்ஆகவும் எருதுஏறுவது அல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்குஇடம் அண்ணாமலை அதுவே.

            பொழிப்புரை :உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.


பாடல் எண் : 5
மரவம்சிலை தரளம்மிகு மணிஉந்துவெள் அருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவம்சடை உலவும்புனல் உடன்ஆவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

            பொழிப்புரை :வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?


பாடல் எண் : 6
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும்மிடறு உடையார்,கமழ் சடையார்கழல் பரவி,
உருகும்மனம் உடையார்தமக்கு உறுநோய்அடை யாவே.

            பொழிப்புரை :பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.


பாடல் எண் : 7
கரிகாலன குடர்கொள்வன கழுதுஆடிய காட்டில்,
நரிஆடிய நகுவெண்டலை உதையுண்டுஅவை உருள
எரிஆடிய இறைவர்க்குஇடம், இனவண்டுஇசை முரல
அரிஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.

            பொழிப்புரை :கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.


பாடல் எண் : 8
ஒளிறூபுலி அதள்ஆடையன், உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித்து உரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன், இராவணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

            பொழிப்புரை :ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.


பாடல் எண் : 9
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேல்உறை கேடுஇல்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்அடி சரணே.

            பொழிப்புரை :விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.


பாடல் எண் : 10
வேர்வந்துஉற, மாசுஊர்தர, வெயில்நின்றுஉழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின், அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே.

            பொழிப்புரை :உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.


பாடல் எண் : 11
வெம்புஉந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ எயில்எய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்புஉந்துவ குயில்ஆலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

            பொழிப்புரை :வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு, குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

                                                            திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 971
அங்கண் அணைவார் பணிந்துஎழுந்து
            போற்றி செய்து,அம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
            தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து,
            புளகம் மலர்ந்த திருமேனி
எங்கும் ஆகி, கண்பொழியும்
            இன்ப அருவி பெருக்கினார்.

            பொழிப்புரை : அண்ணாமலையை அடைபவரான ஞானசம்பந்தர், நிலத்தில் விழுந்து வணங்கி, அம்மலையின் மீது தங்கும் விருப்புடன் வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடிகளாகிய தாமரைகளைத் தம்முடியின் மீது மேல் எழுகின்ற ஆசையுடன் சூடி, திருமேனி முழுதும் மயிர்க் கூச்செறியக் கண்களில் பொழியும் ஆனந்தக் கண்ணீரை அருவி எனப் பெருக்கினார்.


பெ. பு. பாடல் எண் : 972
ஆதி மூர்த்தி கழல்வணங்கி,
            அங்கண் இனிதின் அமரும் நாள்,
பூத நாதர் அவர் தம்மைப்
            பூவார் மலரால் போற்றி இசைத்து,
காத லால்அத் திருமலையில்
            சிலநாள் வைகி, கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
            பிறவும் பணியும் விருப்புஉறுவார்.

            பொழிப்புரை : ஆதி மூர்த்தியான அண்ணாமலையாரின் திருவடிகளை வணங்கி, அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருக்கும் நாள்களில், பூதங்களுக்குத் தலைவரான அவரைப் `பூவார் மலர்\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி, விருப்புடன் அம்மலையில் சில நாள்கள் தங்கி, மறைகளை இசையுடன் பாடுபவரான ஞானசம்பந்தர், இறைவரின் திருப்பதிகள் பிறவற்றையும் சென்று வணங்கும் விருப்பத்தை மேற்கொள்பவராய்,

            குறிப்புரை : `பூவார் மலர்' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும் (தி.1 ப.69).


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.069   திருவண்ணாமலை                        பண் - தக்கேசி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பூஆர்மலர்கொண்டு அடியார்தொழுவார்,
            புகழ்வார் வானோர்கள்,
மூவார் புரங்கள் எரித்தஅன்று
            மூவர்க்கு அருள்செய்தார்,
தூமா மழைநின்று அதிரவெருவித்
            தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந்து அணையும்சாரல்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சிய காட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியாவரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.


பாடல் எண் : 2
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும்
            வானோர் பெருமானார்,
நஞ்சைக்கண்டத்து அடக்கும்அதுவும்
            நன்மைப் பொருள்போலும்,
வெஞ்சொல்பேசும் வேடர்மடவார்
            இதணம் அதுஏறி
அஞ்சொல்கிளிகள் ஆயோஎன்னும்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவரவரும் அழகிய சொற்களைப் பேசும்கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.


பாடல் எண் : 3
ஞானத்திரளாய் நின்றபெருமான்,
            நல்ல அடியார்மேல்
ஊனத்திரளை நீக்கும், அதுவும்
            உண்மைப் பொருள்போலும்,
ஏனத்திரளோடு இனமான்கரடி
            இழியும் இரவின்கண்
ஆனைத்திரள்வந்து அணையும்சாரல்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகமநூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.


பாடல் எண் : 4
இழைத்தஇடையாள் உமையாள்பங்கர்,
            இமையோர் பெருமானார்,
தழைத்தசடையார், விடைஒன்றுஏறித்
            தரியார் புரம்எய்தார்,
பிழைத்தபிடியைக் காணாதுஓடிப்
            பெருங்கை மதவேழம்
அழைத்துத்திரிந்துஅங்கு உறங்கும்சாரல்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :தன்னைவிட்டுப் பிரிந்த பெண்யானையைக் காணாத பெரிய கையைஉடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலைஉடைய திருவண்ணாமலை இறைவர், நூல்போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச்சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.


பாடல் எண் : 5
உருவில்திகழும் உமையாள்பங்கர்,
            இமையோர் பெருமானார்,
செருவில்ஒருகால் வளையவூன்றிச்
            செந்தீ எழுவித்தார்,
பருவில்குறவர் புனத்தில்குவித்த
            பருமா மணிமுத்தம்
அருவித்திரளோடு இழியும்சாரல்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணைஎய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.


பாடல் எண் : 6
எனைத்துஓர்ஊழி அடியார்ஏத்த,
            இமையோர் பெருமானார்,
நினைத்துத்தொழுவார் பாவம்தீர்க்கும்
            நிமலர், உறைகோயில்,
கனைத்தமேதி காணாதுஆயன்
            கைம்மேல் குழல்ஊத
அனைத்தும்சென்று திரளும்சாரல்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :மலைச்சாரலில் புல்மேய்க்கச் சென்ற ஆயன் கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்றுதிரளும் அடிவாரத்தை உடைய திரு வண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.


பாடல் எண் : 7
வந்தித்துஇருக்கும் அடியார்தங்கள்
            வருமேல் வினையோடு,
பந்தித்துஇருந்த பாவந்தீர்க்கும்
            பரமன் உறைகோயில்,
முந்திஎழுந்த முழவின்ஓசை
            முதுகல் வரைகள்மேல்
அந்திப்பிறைவந்து அணையும்சாரல்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப்பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரமனாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும்.


பாடல் எண் : 8
மறம்தான்கருதி வலியைநினைந்து
            மாறாய் எடுத்தான்றோள்
நிறம்தான்முரிய நெரியவூன்றி,
            நிறைய அருள்செய்தார்,
திறம்தான்காட்டி அருளாய்என்று
            தேவர் அவர்வேண்ட
அறம்தான்காட்டி அருளிச்செய்தார்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர் களை அழித்து அருள் புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத்தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.


பாடல் எண் : 9
தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர் பெருமானை
மூடிஓங்கி முதுவேய்உகுத்த முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்து, கொள்ள வம்மின்என்று
ஆடிப்பாடி அளக்கும்சாரல் அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :மலையை மூடி ஓங்கிவளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப்பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திரு வண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.


பாடல் எண் : 10
தட்டைஇடுக்கித் தலையைப்பறித்துச்
            சமணே நின்றுஉண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா ,
            பேணித் தொழுமின்கள்,
வட்டமுலையாள் உமையாள்பங்கர்
            மன்னி உறைகோயில்
அட்டம்ஆளித் திரள்வந்துஅணையும்
            அண்ணா மலையாரே.

            பொழிப்புரை :தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலைமயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்கஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.


பாடல் எண் : 11
அல்ஆடுஅரவம் இயங்கும்சாரல் அண்ணா மலையாரை
நல்லார்பரவப் படுவான், காழி ஞான சம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல்ஆன பத்தும், இவைகற்று
வல்லார்எல்லாம், வானோர்வணங்க மன்னி வாழ்வாரே.

            பொழிப்புரை :இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய அருஞ்சொல்லமைப் புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.

                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------

   
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 311
நாதர் மருவும் திருமலைகள்,
            நாடும் பதிகள், பலமிகவும்
காதல் கூரச் சென்று இறைஞ்சி,
            கலந்த இசைவண் தமிழ்பாடி,
மாதொர் பாகர் அருளாலே
            வடபால் நோக்கி, வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
            அண்ணா மலையை நண்ணினார்.

            பொழிப்புரை : நாவரசர் இறைவர் வீற்றிருந்தருளும் திருமலைகளையும், வழிபடுதற்குரியவெனக் குறிக்கொளத்தக்க மிகப் பலவாய பதிகளையும், மிக்க அன்பு பொருந்தச் சென்று வணங்கி, இசை கலந்த விருப்பம் மிக்க தமிழ்ப் பதிகங்களைப் பாடி, உமையொரு கூறனாம் பெருமானின் திருவருளால், வடக்குத் திக்கு நோக்கிச் சென்று, முதன்மையுடைய தேவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவண்ணாமலையை அடைந்தார்.

            குறிப்புரை : இங்குக் குறிக்கப்படும் திருமலைகள்: திருஈங்கோய் மலை, கொல்லி மலையில் அறப்பள்ளி, நயினார் மலை, கஞ்சமலை, பச்சைமலையில் இருக்கு வேளூர், தீர்த்த மலை முதலாயினவாகலாம்.

            பதிகள் பல என்று குறிக்கத் தகுவன: புலிவலம், திருத்தலையூர், நெற்குன்றம். தோழூர், ஏழூர் முதலானவை ஆகலாம் என்றும், நாடும் என்பதற்கு நாடுகள் எனப் பொருள் கொண்டு, கொங்கு நாடு, திருமுனைப்பாடி நாடு முதலியனவாகலாம் என்றும் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை) கருதுவர். எனினும் குறிப்பாக அறியத்தக்க நிலையில் பதிகம் பெற்றிருந்தன எவை எனத் தெரிந்தில. கொங்கு நாட்டிலுள்ள திருப்பாண்டிக் கொடுமுடிக்கு நாவரசர் பதிகம் ஒன்றுள்ளது. அதனை ஈண்டுக் கொள்ளலாம். அப்பதிகம்: `சிட்டனைச் சிவன்` (தி.5 ப.81) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகை.

 
பெ. பு. பாடல் எண் : 312
செங்கண் விடையார் திருஅண்ணா
            மலையைத் தொழுது, வலங்கொண்டு,
துங்க வரையின் மிசைஏறி,
            தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும்
அங்கண் அரசைப் பணிந்து, எழுந்து,
            திளைத்து, திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
            மேல்ஆம் பெருமை சாதித்தார்.

            பொழிப்புரை : நாவுக்கரசர் சிவந்த விழிகளையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் திருவண்ணாமலையை வணங்கி, பெருமை பொருந்திய மலைமீது ஏறித் தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன்னின்றருளும் அருளுடைய அரசரான சிவபெருமானை வணங்கி எழுந்து இன்பத்தில் மூழ்கி, இங்ஙனம் வழிபட்டு உலகில் தங்கும் பிறவியே இவ்வுலகை நீங்கித் தங்கும் வீடு பேற்றிற்கும் மேலானது என்ற பெருமையைத் திருவுளம் கொண்டார்.

            இதுபொழுது அருளிய பதிகம்: `பட்டிஏறுகந்து` (தி.5 ப.5) - திருக்குறுந்தொகை.


                                                5.  005   திருஅண்ணாமலை
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பட்டி ஏறு உகந்து ஏறிப் பலஇ(ல்)லம்
இட்ட மாக இரந்து உண் டுஉழிதரும்
அட்ட மூர்த்தி அண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடுஇல்லை காண்மினே.

            பொழிப்புரை : அடங்காத ஏற்றினை அடக்கி விடையாக் கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து சுழலும் , அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும்; என்றும் கேடு இல்லை; காண்பீராக.


பாடல் எண் : 2
பெற்றம் ஏறுவர் பெய்பலிக்கு என்றுஅவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றம் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே.

            பொழிப்புரை : மனைகளிலிடும் பலிக்கெனப் பெற்றம் ஏறும் பெருமான் , தனக்குச் சுற்றமாமெனும் உமையம்மையோடும் வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார். நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் .


பாடல் எண் : 3
பல்இல் ஒடுகை ஏந்திப் பலஇ(ல்)லம்
ஒல்லை சென்றுஉணங் கல்கவர் வார்அவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல ஆயின நம்மை அடையுமே.

            பொழிப்புரை : பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் விரைந்து சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வாராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ , நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .


பாடல் எண் : 4
பாடிச் சென்று பலிக்குஎன்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதுஒன்று என்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.

            பொழிப்புரை : பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் ஓடிப் போய்விட்டனராதலால் செய்வது இனி என்னை ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ நம் மேலை
( பழைய ) வினைகள் ஓடிப்போகும். (` ஓடிப் போயினர் செய்வதொன்றென் கொலோ` எனப் பேசநின்ற பெருமானது திருவண்ணாமலை - என இசையெச்சம் கொண்டு முடிக்க )


பாடல் எண் : 5
தேடிச் சென்று திருந்துஅடி ஏத்துமின்
நாடி வந்துஅவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே.

            பொழிப்புரை :தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும் .


பாடல் எண் : 6
கட்டி ஒக்கும் கரும்பி னிடை, துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே.

            பொழிப்புரை : கரும்பினிடைக் கட்டி ஒக்குமாறு துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் .


பாடல் எண் : 7
கோணிக் கொண்டையர் வேடம்மூன் கொண்டவர்
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப் பொன்னின்அண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

            பொழிப்புரை : சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆணிப் பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் வருதற்குப் பேணி நின்ற பெரு வினைகள் போகும் .


பாடல் எண் : 8
கண்டம் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.

            பொழிப்புரை : திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைப் பண்டு கால் கொண்டு பாய்ந்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நம் மேலை ( பழைய ) வினைகள் நம்மைவிட்டு நீங்கும் .


பாடல் எண் : 9
முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாய்ஒளில யான்தன் அண்ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே.

            பொழிப்புரை : முந்துறச்சென்று , மாலைச்செவ்வானன்ன மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் வணங்குவீர்களாக ; அத்திருவண்ணாமலையைச் சிந்தித்தபடி துயிலெழுவார் வினைகளை , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய பெருமான் தீர்ப்பான் .


பாடல் எண் : 10
மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றுஅருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
பறையும் நாம்செய்த பாவங்கள் ஆனவே.

            பொழிப்புரை : பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற் றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் .

                                                            திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 313
அண்ணா மலைமேல் அணிமலையை,
            ஆரா அன்பின் அடியவர்தம்
கண்ணார் அமுதை, விண்ணோரைக்
            காக்கக் கடலில் வந்துஎழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
            கும்பிட்டு, உருகும் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
            பணிந்து பரவிப் பணிசெய்தார்.

            பொழிப்புரை : அண்ணாமலையின் மீது அழகிய மலையாக விளங்கியருளும் பெருமானை, அடங்காத அன்புடைய அடியவர்கள் தம் கண்ணால் அநுபவிக்கும் அமுதம் போன்றவரைத், தேவர்களைக் காத்தற்காகப் பாற்கடலில் எழுந்து வந்த யாவராலும் உண்ணத்தகாத நஞ்சை உண்டருளிய பெருமானை, வணங்கி உருகும் உள்ளத்தோடும் பண் நிறைந்த தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து போற்றி செய்து திருப்பணிகள் செய்தார்.

            குறிப்புரை : `கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடி`(தி.8 ப.7 பா.4), `கண்ணகத் தேநின்று களிதரு தேனே` (தி.8 ப.20 பா.9) எனவரும் திருவாக்குகளும் காண்க.

            இது பொழுது பாடிய பதிகத் தமிழ் மாலைகள்:
1.`ஓதிமாமலர்கள்` (தி.4 ப.63) - திருநேரிசை.
2. `வட்டனை` (தி.5 ப.4) - திருக்குறுந்தொகை.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


4. 063    திருவண்ணாமலை                          திருநேரிசை
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஓதி,மா மலர்கள் தூவி,
            உமையவள் பங்கா, மிக்க
சோதியே, துளங்கும் எண்தோள்
            சுடர்மழுப் படையி னானே,
ஆதியே, அமரர் கோவே,
            அணிஅணா மலை உளானே,
நீதியால் நின்னை அல்லால்
            நினையுமா நினைவுஇ லேனே.

            பொழிப்புரை : பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத் தலைவனே! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன் .


பாடல் எண் : 2
பண்தனை வென்ற இன்சொல்
            பாவைஓர் பங்க, நீல
கண்டனே, கார்கொள் கொன்றைக்
            கடவுளே, கமல பாதா,
அண்டனே, அமரர் கோவே,
            அணிஅணா மலை உளானே,
தொண்டனேன் உன்னைஅல்லால்
            சொல்லுமா சொல்இலேனே.

            பொழிப்புரை : பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே ! நீலகண்டனே ! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே ! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே ! தேவனே ! தேவர்கள் தலைவனே ! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே ! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன் .


பாடல் எண் : 3
உருவமும் உயிரும் ஆகி,
            ஓதிய உலகுக்கு எல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
            நின்றஎம் பெருமான், மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
            மலைஉளாய், அண்டர் கோவே,
மருவிநின் பாதம் அல்லால்
            மற்றொரு மாடு இலேனே.

            பொழிப்புரை : சடமாகிய மாயையாகவும் , சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய் , குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே ! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர் தலைவனே ! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன் .


பாடல் எண் : 4
பைம்பொனே, பவளக் குன்றே ,
            பரமனே, பால்வெண் நீறா,
செம்பொனே, மலர்செய் பாதா ,
            சீர்தரு மணியே, மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
            அணிஅணா மலை உளானே,
என்பொனே, உன்னை அல்லால்
            ஏதும்நான் நினைவு இலேனே.

            பொழிப்புரை : பசிய பொன்னே ! பவளமலையே ! மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே ! செம்பொன்னே ! மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே ! உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன் .


பாடல் எண் : 5
பிறைஅணி முடியி னானே,
            பிஞ்ஞகா, பெண்ஓர் பாகா,
மறைவலா, இறைவா, வண்டுஆர்
            கொன்றையாய், வாம தேவா,
அறைகழல் அமரர் ஏத்தும்
            அணிஅணா மலை உளானே,
இறைவனே உன்னைஅல்லால்
            யாதும்நான் நினைவுஇலேனே.

            பொழிப்புரை : பிறையைச் சூடிய சடைமுடியை உடையவனே ! தலைக்கோலம் அணிந்தவனே ! பார்வதிபாகனே ! வேதங்களில் வல்லவனே ! தலைவனே ! வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடியவனே ! வாமதேவனே ! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே ! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே ! உன்னைத் தவிர அடியேன் வேறு எந்தப் பொருளையும் விருப்புற்று உறுதியாக நினைப்பேன் அல்லேன் .


பாடல் எண் : 6
புரிசடை முடியின் மேல்ஓர்
            பொருபுனல் கங்கை வைத்துக்
கரி உரி போர்வை ஆகக்
            கருதிய கால காலா,
அரிகுலம் மலிந்த அண்ணா
            மலைஉளாய். அலரின்மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
            பாதம்நான் மறப்பு இலேனே.

            பொழிப்புரை : முறுக்குண்ட சடையின் மீது அலைகள் மோதும் நீரை உடைய கங்கையை வைத்து , யானைத் தோலை மேற்போர்வையாகக் கொண்டவனாய்க் காலனுக்கும் காலனானவனே ! குரங்குக் கூட்டங்கள் மிக்க அண்ணாமலையில் உறைவோனே ! மலரினும் மேம்பட்ட , கோடுகளை உடைய வண்டுகள் பண்பாடும் உன் திருவடிகளை அடியேன் மறத்தலைச் செய்யேன் .


பாடல் எண் : 7
இரவியு மதியும் விண்ணும்
            இருநிலம் புனலும் காற்றும்
உரகம்ஆர் பவனம் எட்டும்
            திசைஒளி உருவம் ஆனாய்,
அரவுஉமிழ் மணிகொள்சோதி
            அணிஅணா மலைஉளானே,
பரவும்நின் பாதம் அல்லால்
            பரம,நான் பற்றுஇலேனே.

            பொழிப்புரை : பரமனே ! சூரியன், சந்திரன், வானம், பூமி , நீர் , காற்று, பாம்புகள் தங்கும் பாதலம் , எண் திசைகள் இவற்றிலே ஓளி உருவமாக இருப்பவனே ! பாம்புகள் உமிழ்கின்ற இரத்தினங்களால் ஒளிவீசும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! அடியேன் முன் நின்று போற்றும் உன் திருவடிகளைத் தவிர அடியேன் வேறு பற்றுக் கோடு உடையேன் அல்லேன் .


பாடல் எண் : 8
பார்த்தனுக்கு அன்று நல்கிப்
            பாசுப தத்தை ஈந்தாய்,
நீர்த் ததும்பு உலாவு கங்கை
            நெடுமுடி நிலாவ வைத்தாய்,
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல்
            அணிஅணா மலைஉ ளானே,
தீர்த்தனே, நினதன் பாதத்
            திறம்அலால் திறம்இ லேனே.

            பொழிப்புரை : அருச்சுனனுக்கு அக்காலத்தில் விரும்பிப் பாசுபதப் படையை நல்கியவனே ! நீர் ததும்புதல் மிகுங் கங்கையை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே ! ஆரவாரித்துக் கொண்டு ஒன்று சேரும் மேகங்கள் தங்கும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! தூயோனே ! உன்பாதங்களின் தொடர்பன்றி அடியேன் வேறு தொடர்பு இல்லேன் .


பாடல் எண் : 9
பாலுநெய் முதலா மிக்க
            பசுவில்ஐந்து ஆடு வானே,
மாலும்நான் முகனும் கூடிக்
            காண்கிலா வகையுள் நின்றாய்,
ஆலும்நீர் கொண்டல் பூகம்
            அணிஅணா மலை உளானே,
வால்உடை விடையாய், உன்தன்
            மலர்அடி மறப்புஇ லேனே.

            பொழிப்புரை : பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே ! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் தீத்தம்பமாய் நின்றவனே ! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் உள்ளவனே ! வெண்மையை உடைய காளைவாகனனே ! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன்.


பாடல் எண் : 10
இரக்கம்ஒன்று யாதும் இல்லாக்
            காலனைக் கடிந்த எம்மான்,
உரத்தினால் வரையை ஊக்க
            ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
            மலைஉளாய் அமரர் ஏறே,
சிரத்தினால் வணங்கி எத்தித்
            திருவடி மறப்புஇ லேனே.

            பொழிப்புரை : இரக்கம் என்பது சிறிதும் இல்லாத கூற்றுவனைத் தண்டித்த பெருமானே ! இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே ! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன்.
                                                            திருச்சிற்றம்பலம்


                                      5. 004     திருஅண்ணாமலை
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு அண்ணா மலையனை
இட்ட னை இகழ்ந் தார்புரம் மூன்றையும்
அட்ட னை அடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : கந்தையுடை அணிந்தானும் , மதிசூடியும் , வானவர்க்கு உயர்ந்தானும் , திருவண்ணாமலை வடிவினனும் , விருப்பம் உடையானும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 2
வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு அண்ணா மலையனை
ஏன னை இகழ்ந் தார்புரம் மூன்றுஎய்த
ஆன னை அடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : வானத்துள்ளவனும் , பிறைசூடிய பேராற்றல் உடையவனும் , தேனென இனிப்பவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , பன்றிக்கொம்பை அணிந்தவனும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 3
மத்த னைம்மத யானை உரித்த எம்
சித்த னைத்திரு அண்ணா மலையனை
முத்த னைம் முனிந் தார்புரம் மூன்றுஎய்த
அத்த னை அடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : ஊமத்தமலர் அணிந்தவனும் , யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும் , திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , முத்தனும் , முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 4
காற்ற னைக்கலக் கும்வினை போய்அறத்
தேற்ற னைத்திரு அண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புரம் மூன்றுஎய்த
ஆற்ற னைஅடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : காற்றாகியுள்ளவனும் , கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும் , திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும் , உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும் , கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 5
மின்ன னைவினை தீர்த்துஎனை ஆட்கொண்ட
தென்ன னைத்திரு அண்ணா மலையனை
என்ன னை இகழ்ந் தார்புரம் மூன்றுஎய்த
அன்ன னைஅடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : மின் ஒளியுருவாயவனும் , வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , என்னை உடையவனும் , இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 6
மன்ற னைம்மதி யாதவன் வேள்விமேல்
சென்ற னைத்திரு அண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புரம் மூன்றையும்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : ஐந்துவகை மன்றங்களில் ( சபைகளில் ) எழுந்தருளியிருப்பவனும் , மதியாத தக்கன் வேள்வியின்மேல் உருத்துச் சென்றவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும் , சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடியவனாகிய அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 7
வீர னைவிடம் உண்டனை விண்ணவர்
தீர னைத்திரு அண்ணா மலையனை
ஊர னைஉண ரார்புரம் மூன்றுஎய்த
ஆர னைஅடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : வீரச்செயல்களைப் புரிந்தவனும் , விடம் உண்டவனும் , விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணாமலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .

  
பாடல் எண் : 8
கருவி னைக்கடல் வாய்விடம் உண்டஎம்
திருவி னைத்திரு அண்ணா மலையனை
உருவி னைஉண ரார்புரம் மூன்றுஎய்த
அருவி னைஅடி யேன் மறந்து உய்வனோ.

            பொழிப்புரை : கருவாயிருந்து காப்பவனும் , கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 9
அருத்த னைஅரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு அண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புரம் மூன்றுஎய்த
அருத்த னைஅடி யேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : பொருள் வடிவாயுள்ளவனும் , ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , தலைவனானவனும் , தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப் போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .


பாடல் எண் : 10
அரக்க னைஅல றவ்விரல் ஊன்றிய
திருத்த னைத்திரு ஆண்ணா மலையனை
இரக்க மாய்என் உடல்உறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துஉய்வனோ.

            பொழிப்புரை : இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமே? .

                                                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...