குன்றக்குடி - 0375. தவள மதியம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தவள மதியம் (குன்றக்குடி)

முருகா!
உன்னையே விரும்பி நிற்கும் இப் பெண்ணைத் தழுவி அருள்


தனன தனன தனத்தந் ...... தனதான


தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே

சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே

கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே

கருதி மிகவு மயக்கம் ...... படவோநான்

பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின்

பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந்

திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா

திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தவள மதியம் எறிக்கும் ...... தணலாலே

சரச மதனன் விடுக்கும் ...... கணையாலே

கவனம் மிகவும் உரைக்குங் ...... குயிலாலே

கருதி மிகவு மயக்கம் ...... படவோ? நான்

பவளம் நிகரும் இதழ்ப் பைங் ...... குறமானின்

பரிய வரையை நிகர்க்கும் ...... தனம் மேவும்

திவளும் மணிகள் கிடக்கும் ...... திருமார்பா

திகழும் மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.


பதவுரை

       பவளம் நிகரும் இதழ் --- பவளம் போன்ற அதரத்தையுடைய,

     பைங் குறமானின் --- பச்சைவண்ணமுடைய வள்ளிபிராட்டியின்,

     பரிய வரையை நிகர்க்கும் --- பருத்த மலைக்கு ஒப்பான,

     தனம் மேவும் --- தனத்தின் மீதுள்ள,

     திவளும் மணிகள் கிடக்கும் --- ஒளி வீசும் மணிமாலைகள் பொருந்தும்,

     திருமார்பா --- அழகிய மார்பினரே!
           

     திகழும் மயிலின் மலைக்கண் பெருமாளே --- விளங்குகின்ற மாயூரகிரியில் வாழ்கின்ற பெருமையின் மிகுந்தவரே!

       தவளம் மதியம் எறிக்கும் தணலாலே --- வெண்ணிறமுள்ள சந்திரம் வீசும் நெருப்பினாலும்,

     சரச மதனன் விடுக்கும் கணையாலே --- சரசமாக விளையாடும் மன்மதன் செலுத்தும் கணையினாலும்,

     கவனம் மிகவும் உரைக்கும் குயிலாலே --- கலக்கம் மிகும்படி கூவுகின்ற குயிலினாலும்,

     கருதி மிகவும் மயக்கம் நான் படவோ --- அடியேன் உம்மை நினைந்து மிகவும் மயக்கத்தை அடையலாமோ?

பொழிப்புரை

பவளம் போன்ற சிவந்த இதழை உடைய, மரகத வண்ணம் படைத்த வள்ளி நாயகியாரின் பருத்த மலைபோன்ற தனங்களில் விளங்குகின்ற ஒளிவீசும் மணிமாலைகள் பொருந்தும் திருமார்பினரே!

விளங்குகின்ற மாயூரகிரியில் வாழும் பெருமிதமுடையவரே!

வெண்ணிறமுள்ள சந்திரன் விடும் வீசும் நெருப்பினாலும், சரச விளையாடல் புரியும் மன்மதன் விடும் கணையினாலும், கலக்கமடையும்படி கூவுகின்ற குயிலாலும், உம்மை நினைத்து தலைவியாகிய நான் மயக்கப்படுவது முறையோ?

விரிவுரை

இத்திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது. ஆன்மாவாகிய தலைவி முருகனாகிய தலைவனை நினைந்து நினைந்து அப்பரமனைத் தழுவப் பெறாமையால் வருந்துகின்ற வருத்தத்தைக் கூறுகின்றது.

தவள மதியம் எறிக்குந் தணலாலே ---

தவளம்-வெண்மை. காமுகர்க்குச் சந்திரன் வெண்ணெருப்பாகக் கொளுத்தி வேதனை தருவான்.

சரச மதனன் விடுக்கும் கணையாலே ---

சரச லீலையைச் செய்யும் மன்மதன் சமயம் பார்த்துப் பூங்கணை பொழிந்து புண்படுத்துவான்.

கவன மிகவும் உரைக்கும் குயிலாலே ---

கவனம் - கலக்கம். பிரிவுத் துயரைக் குயில் கூவி மிகுதிப்படுத்தும்.

மெள்ளவரு சோலைக் குயிலாலே
   மெய்யுருகு மானைத் தழுவாயே”   --- (துள்ளுமத) திருப்புகழ்.


கருதி மிகவும் மயக்கம் படலாமோ ---

முருகா! உன்னையே கருதி பெண்ணாகிய நான் மயக்கப்பட்டுத் துன்புறுவது முறையாகுமோ? விரைவில் என்னைத் தழுவி என் வேதனையை நீக்கியருள்”.


பவள நிகரும் இதழ்ப் பைங்குறமாது ---

வள்ளியம்மை பச்சைநிறம். இதழ் பவள நிறம். நிறம் மாறுபட்டால் அழகு மிகுதியடையும். “பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்” என்று ஆழ்வாருங் கூறுகின்றார்.

மயிலின் மலை:-

குன்றக்குடிக்கு மாயூரகிரி என்ற மற்றொரு பேருமுண்டு.

விரிவுரை

குன்றக்குடி குமரா! தலைவியாகிய என்னைத் தழுவி ஆட்கொள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...