திருப் பாம்புரம்




திருப் பாம்புரம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         காரைக்கால் - கும்பகோணம் (வழி) பேரளம் - சாலையில் கற்கத்தி வந்து அங்கிருந்து திரும்பி 2 கி. மீ. அச்சாலையில் வந்தால் ஊரை அடையலாம். கோயில் வரை வாகனங்களில் செல்லலாம். திருமீயச்சூருக்கு அருகில் உள்ளது.

இறைவர்              : பாம்புரேசுவரர், சேஷபுரீசுவரர்பாம்பீசர், பாம்புரநாதர்.

இறைவியார்           : பிரமராம்பிகை, வண்டார்குழலி.

தல மரம்              : வன்னி.

தீர்த்தம்                : ஆதிசேஷ தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - சீரணி திகழ்திரு மார்பில்.

          நாகராசன் (ஆதிசேஷன்) வழிபட்ட தலமாதலின், பாம்பு + புரம் = பாம்புரம் என்றாயிற்று.

          ஆதிசேஷன் உலகைத் தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெற இறைவனருளை வேண்டி, உலகிற்கு வந்து, மகாசிவராத்தி நாளில் முதல் காலத்தில் குடந்தை நாகேசிவரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேச்சுரம் நாகநாதரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேசுவரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேசுவரரையும் வழிபட்டு உடல் வளம் பெற்றான் என்பது தல வரலாறு.

          உரகபுரம், சேஷபுரி என்பன இதன் வேறு பெயர்களாம்.

          நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு கேது போன்ற சர்ப்ப தோஷங்கள் விலகவும் இத்தலம் சிறந்த பிரார்த்தனையிடமாக விளங்குகிறது.

          இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையாம். வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போயிவிடுமாம் - யாரையும் கடிப்பதில்லையாம்.

          இத்தலத்தில் ராகராஜனுக்கு மூல, உற்சவ விக்கிரகங்கள் உள்ளன.

          பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலத்தானத்தில் எப்போதேனும் ஓரொரு காலங்களில் இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் மல்லிகை, தாழம்பூ வாசனை கோயிலுக்குள் கமகமவென வீசுமாம். அப்போது பாம்பு கோயிலுக்குள் எங்கேனும் ஓரிடத்தில் உலாவிக் கொண்டிருக்கும் என்பது பொருளாம்.

          மகா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது.

          இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னன் முதலியோர் காலத்திய 15 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

          கல்வெட்டுக்களில் இறைவன் "பாம்புரம் உடையார்" என்றும், விநாயகர் "ராஜராஜப் பிள்ளையார்" என்றும், இறைவி "மாமலையாட்டி" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

          சரபோஜி மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபண்டிதராயன் என்பவனால் வசந்த மண்டபமொன்று கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஆடும் மயில் காம்பு உரம் கொள் தோளியர் பொன் காவில் பயில்கின்ற பாம்புரம் கொள் உண்மைப் பரம்பொருளே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 537
தக்க அந்தணர் மேவும்அப்
         பதியினில் தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப்
         பணிந்து, இசைச் செந்தமிழ்த் தொடைபாடி,
மிக்க கோயில்கள் பிறவுடன்
         தொழுதுபோய், மீயச்சூர் பணிந்துஏத்தி,
பக்கம் பாரிடம் பரவநின்று
         ஆடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.

         பொழிப்புரை : தகுந்த அந்தணர்கள் வாழ்கின்ற அப்பதியில், தான் தோன்றிமாடக் கோயிலில் சிவந்த நீண்ட சடையையுடைய இறைவரைப் பணிந்து, இசையையுடைய செந்தமிழ்ப் பதிக மாலையைப் பாடி, பெருமை பொருந்திய பிற கோயில்களையும் உடனே தொழுது சென்று, `திருமீயச்சூரினையும்\' வணங்கி, பூத கணங்கள் அருகிலிருந்து போற்ற நின்று ஆடும் இறைவரின் `திருப்பாம்புர\' நகரத்தை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 538
பாம்பு ரத்துஉறை பரமரைப்
         பணிந்து, நல் பதிகஇன் இசைபாடி,
வாம் புனல்சடை முடியினார்
         மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றி,
காம்பினில் திகழ் கரும்பொடு
         செந்நெலின் கழனிஅம் பணைநீங்கி,
தேம்பொழில் திரு வீழிநன்
         மிழலையின் மருங்குஉறச் செல்கின்றார்.

         பொழிப்புரை : பிள்ளையார் திருப்பாம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி நல்ல இனிய இசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடியருளி, தாவும் அலைகளையுடைய கங்கை ஆற்றைச் சூடிய முடியையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பிற பதிகளையும் போற்றி, மூங்கில் போல் விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த வயல் இடங்களைக் கடந்து, தேனையுடைய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலையின் அருகே செல்கின்றவராகி,

     திருப்பாம்புரத்தில் அருளிய பதிகம் `சீரணி திகழ்' (தி.1 ப.41) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிற பதிகளாவன திருச்சிறுகுடி, திருவன்னியூர் முதலாயினவாகலாம். திருச்சிறுகுடிக்கு உரிய பதிகம் `திடமலி' (தி.3 ப.97) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவன்னியூர்ப் பதிகம் கிடைத்திலது.


1.041 திருப்பாம்புரம்                  பண் - தக்கராகம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சீர்அணி திகழ்திரு மார்பில்வெண் நூலர்,
         திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார்அணி வனமுலை மங்கை ஓர்பங்கர்,
         மான்மறி ஏந்திய மைந்தர்,
கார்அணி மணிதிகழ் மிடறுஉடை அண்ணல்,
         கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார்அணிதிகழ்தரு நான்மறையாளர்
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச்செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஓரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர்.


பாடல் எண் : 2
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம்
         கொன்றையொடு எருக்கு அணிசடையர்,
அக்கினொடு ஆமை பூண்டு அழகாக
         அனல் அது ஆடும் எம் அடிகள்,
மிக்கநல் வேத வேள்வியுள் எங்கும்
         விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம் பல்பூதம் பாடிட வருவார்,
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :திருப்பாம்புர நன்னகர் இறைவர், கொக்கிறகு என்னும் மலர், வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணிந்த சடைமுடியினர். சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண் ஆடும் எம் தலைவர். மிக்க நல்ல வேதவேள்விகளில் விண்ணோர்கள் மணம் கமழும் மலர்கள் தூவிப் போற்ற அருகில் பூதங்கள் பல பாடவும் வருபவர்.


பாடல் எண் : 3
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர்
         சூறைநல் அரவுஅது சுற்றி,
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி,
         பித்தராய்த் திரியும்எம் பெருமான்,
மன்னு மாமலர்கள் தூவிட நாளும்
         மாமலை யாட்டியும் தாமும்
பன்னுநான்மறைகள் பாடிட வருவார்,
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :திருப்பாம்புர நன்னகர் இறைவர் தைத்த கோவண ஆடையை அணிந்துஅதன் மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஓன்றைச் சுற்றிக் கொண்டு பின்னிய நீண்ட சடைகளைத் தாழ விட்டுக் கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் எமது பெருமான். அவர் மணம் நிறைந்த சிறந்த மலர்களைத் தூவி நாளும் நாம் வழிபட மலையரசன் மகளாகிய பார்வதியும், தாமுமாய்ப் புகழ்ந்து போற்றும் நான் மறைகளை அடியவர் பாடிக்கொண்டு வர, நம்முன் காட்சி தருபவர்.


பாடல் எண் : 4
துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச்
         சுடர்விடுசோதி எம் பெருமான்,
நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர்,
         நள்இருள் நடம் செயும் நம்பர்,
மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட
         மாடமாளிகை தன்மேல் ஏறிப்
பஞ்சுசேர் மெல்அடிப் பாவையர் பயிலும்
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :மேகங்கள் தோயும் சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாத வராய், தோற்றமும் இல்லாதவராய், ஓளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார்.


பாடல் எண் : 5
நதிஅதன் அயலே நகுதலை மாலை
         நாண்மதி சடைமிசை அணிந்து,
கதிஅது ஆகக் காளிமுன்காணக்
         கானிடை நடம்செய்த கருத்தர்,
விதிஅது வழுவா வேதியர்வேள்வி
         செய்தவர் ஓத்துஒலி ஓவாப்
பதிஅது ஆகப் பாவையும் தாமும்
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :விதிமுறை வழுவா வேதியர்கள், வேள்விகள் பல செய்தலால், எழும் வேத ஓலி நீங்காதபதிஅது என உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர், சடைமுடி மீது கங்கையின் அயலே சிரிக்கும் தலைமாலை, பிறை மதி ஆகியவற்றை அணிந்து நடனத்திற்குரிய சதி அதுவே என்னும்படி காளி முன்னே இருந்து காண இடுகாட்டுள் நடனம் செய்ததலைவர் ஆவார்.


பாடல் எண் : 6
ஓதிநன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்
           ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்,
மாதினை இடமா வைத்த எம்வள்ளல்,
         மான்மறி ஏந்திய மைந்தர்,
ஆதிநீ அருள் என்று அமரர்கள் பணிய
         அலைகடல் கடைய அன்று எழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்த எம்பரமர்,
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :திருப்பாம்புர நன்னகர் இறைவர், கல்வி கற்றுத் தெளிந்த அறிவுடையோரால் அறியப்படும் ஓருவராவார். ஓளியாக விளங்கும் சோதி உருவினராவார். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட எம் வள்ளலாவார். இளமான் மறியைக் கையில் ஏந்திய மைந்தராவார். திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகாலவிடத்திற்கு அஞ்சிய தேவர்கள் ஆதியாக விளங்கும் தலைவனே, நீ எம்மைக் காத்தருள் என வேண்ட, நஞ்சினை உண்டும், கடலினின்றெழுந்த பிறைமதியைச் சடையிலே வைத்தும் அருள்புரிந்த எம் மேலான தலைவராவார்.


பாடல் எண் : 7
மாலினுக்குஅன்று சக்கரம் ஈந்து,
         மலரவற்கு ஒருமுகம் ஒழித்து,
ஆலின்கீழ் அறம்ஓர் நால்வருக்கு அருளி,
         அனல் அது ஆடும் எம் அடிகள்,
காலனைக் காய்ந்து தம்கழல் அடியால்,
         காமனைப் பொடிபட நோக்கி,
பாலனுக்கு அருள்கள் செய்த எம்அடிகள்,
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :திருப்பாம்புர நன்னகர் இறைவர் முன்பு திரு மாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். தாமரை மலர் மேல் உறையும் பிரமனது ஐந்தலைகளில் ஓன்றைக் கொய்தவர். சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர். தீயில் நடனமாடுபவர். தமது கழலணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர். காமனைப் பொடிபட நோக்கியவர். உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்ததலைவர் ஆவார்.


பாடல் எண் : 8
விடைத்த வல்அரக்கன் வெற்பினை எடுக்க,
         மெல்லிய திருவிரல் ஊன்றி,
அடர்த்து அவன்தனக்கு அன்று அருள்செய்த அடிகள்,
         அனல்அது ஆடும்எம் அண்ணல்,
மடக்கொடி யவர்கள் வருபுனல் ஆட
         வந்துஇழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பருமணி சிதறும்
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக்கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய திருவடிவிரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப்போற்ற அருள் பல செய்ததலைவர் ஆவார்.


பாடல் எண் : 9
கடிபடுகமலத்து அயனொடு மாலும்
         காதலோடு அடிமுடி தேட,
செடிபடுவினைகள் தீர்த்து அருள்செய்யும்
         தீவணர், எம்முடைச் செல்வர்,
முடிஉடை அமரர் முனிகணத்தவர்கள்
         முறைமுறை அடிபணிந்து ஏத்தப்
படி அதுவாகப் பாவையும் தாமும்
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரியதகுதி வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத்தீவண்ணராய்க் கிளைத்த வினைகள் பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.

  
பாடல் எண் : 10
குண்டர் சாக்கியரும், குணம் இலாதாரும்,
         குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்,
கண்டவாறு உரைத்து, கால் நிமிர்த்து உண்ணும்
         கையர்தாம் உள்ளவாறு அறியார்,
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
         வாரணம் உரிசெய்து போர்த்தார்,
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்,
         பாம்புர நல் நகராரே.

         பொழிப்புரை :திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச்சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி பேசிக் கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதிதேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.


பாடல் எண் : 11
பார்மலிந்து ஓங்கிப் பருமதில் சூழ்ந்த
         பாம்புரநல் நகராரை,
கார்மலிந்து அழகார் கழனிசூழ்மாடக்
         கழுமலமுதுபதிக் கவுணி,
நார்மலிந்து ஓங்கு நான்மறைஞான
         சம்பந்தன்,செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்து அழகார் செல்வம் அதுஓங்கி,
         சிவன்அடி நண்ணுவர்தாமே.

         பொழிப்புரை :உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப்பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம்பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்.

                                             திருச்சிற்றம்பலம்






No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...