திருச்செங்கோடு - 0382. ஆலகால படப்பை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆலகால படப்பை (திருச்செங்கோடு)

முருகா!
மாதர் ஆசையால் உன்னை மறந்து,
பிறப்பினில் அலையாமல் காத்து அருள்.

தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான


ஆல காலப டப்பைம டப்பியர்
     ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
          யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே

ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
     பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
          ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே

மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
     சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
          வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே

மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
     காம போகவி னைக்குளு னைப்பணி
          வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
     பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
          வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே

மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
     மாது தோள்தழு விப்பதி புக்கிட
          வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே

ஞால மாதொடு புக்கவ னத்தினில்
     வாழும் வாலிப டக்கணை தொட்டவ
          னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே

ஞான தேசிக சற்குரு உத்தம
     வேல வாநெரு வைப்பதி வித்தக
          நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஆல கால படப்பை மடப்பியர்,
     ஈர வாள்அற எற்றும் விழிச்சியர்,
          யாவர் ஆயினும் நத்தி அழைப்பவர், ...... தெருவூடே

ஆடி ஆடி நடப்பதொர் பிச்சியர்,
     பேசி ஆசை கொடுத்து மருட்டிகள்,
          ஆசை வீசி அணைக்கு முலைச்சியர், ...... பலர்ஊடே

மாலை ஓதி விரித்து முடிப்பவர்,
     சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள்,
          வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள், ...... உறவாலே

மாயை ஊடு விழுத்தி அழுத்திகள்,
     காம போக வினைக்குள், உனைப் பணி
          வாழ்வு இலாமல் மலச் சனனத்தினில் ...உழல்வேனோ

மேலை வானொர் உரைத் தசரற்கொரு
     பாலன் ஆகி உதித்து ஒர் முநிக்கு ஒரு
          வேள்வி காவல் நடத்தி, அ கற்கு உரு ...... அடியாலே

மேவியே, மிதிலைச் சிலை செற்று, மின்
     மாது தோள் தழுவிப் பதி புக்கிட,
          வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின் ...... னவனோடே

ஞால மாதொடு புக்கு அ வனத்தினில்,
     வாழும் வாலி படக்கணை தொட்டவன்,
          நாடி இராவணனைச் செகுவித்தவன் ...... மருகோனே!

ஞான தேசிக! சற்குரு! உத்தம
     வேலவா! நெருவைப் பதி வித்தக!
          நாக மாமலை சொல்பெற நிற்பதுஒர் ...... பெருமாளே.


 பதவுரை

      மேலை வானோர் உரை தசரற்கு --- மேலுலகத்தில் உள்ள தேவர்கள் புகழும் தசரதனுக்கு

     ஒரு பாலனாய் உதித்து --- ஒப்பற்ற மகனாய்ப் பிறந்து,

     ஓர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி --- சமானமில்லாத விசுவாமித்திர முனிவர் செய்த சிறந்த யாகத்தைக் காவல் செய்து,

     அ கற்கு உரு அடியாலே மேவியே --- அந்தக் கல்லுக்குப் பாதத்தாலே முன் வடிவைக் கொடுத்து,

     மிதிலை சிலை செற்று --- மிதிலாபுரியில் இருந்த வில்லை ஒடித்து,

     மின் மாது தோள் தழுவி --- ஒளிமிகுந்த சீதையின் தோளைத் தழுவி மணஞ்செய்து,

     பதி புக்கிட --- அயோத்திமா நகரம் வந்து சேர,

     வேறு தாய் அடவிக்குள் விடுத்த ---  மாற்றாந் தாயான கைகேயி காட்டுக்குப் போகும்படிச் செய்ய,

     பின்னவனோடே --- இலட்சுமணனுடனும்,

     ஞாலமாதொடு புக்கு ---  பூதேவியாம் சீதையுடனும் சென்று,

     அ வனத்தினில் வாழும் வாலி பட --- அவ்வனத்தில் வாழ்ந்த வாலி இறக்கும்படி

     கணை தொட்டவன் ---  அம்பை ஏவினவரும்,

     நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே ---  தேடிச் சென்று இராவணனை அழிவித்தவருமான இரகுராமருடைய திருமருகரே!

      ஞானதேசிகரே --- ஞான ஆசாரியரே!

      சற்குருவே --- உண்மைக் குருவே!

      உத்தம வேலவா --- உத்தமமான வேலவரே!

      நெருவை பதி வித்தக --- நெருவூரில் வாழும் ஞானமூர்த்தியே!

      நாகமாமலை சொல்பெற நிற்பது ஓர் பெருமாளே --- திருச்செங்கோட்டில் புகழ்பெற வீற்றிருக்கும் ஒப்பற்ற பெருமையில் மிகுந்தவரே!

      ஆலகால படப் பை மடப்பியர் --- ஆலகால நஞ்சையுடைய பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய மடமாதர்கள்.

     ஈரவாள் அற எற்றும் விழிச்சியர் --- நெய் தடவிய ஈரமுடைய வாள்போல் மிகவும் தாக்கவல்ல கண்களையுடையவர்கள்.

     யாவர் ஆயினும் நத்தி அழைப்பவர் --- யாவராயிருந்தாலும் அவர்களை விரும்பி அழைப்பவர்கள்.

     தெரு ஊடே ஆடி ஆடி நடப்பது ஒரு பிச்சியர் --- நடுத்தெருவில் ஆடிஆடி நடக்கின்ற பித்து பிடித்தவர்கள்.

     பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் --- பேசும் வண்மையால் ஆசையூட்டி மயக்குபவர்கள்.

     ஆசை வீசி அணைக்கு முலைச்சியர் --- ஆசை வலையை வீசி தழுவுகின்ற கொங்கையினர்.

     பலர் ஊடே மாலை ஓதி விரித்து முடிப்பவர் --- பலருடைய மத்தியில் மாலை தரித்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர்கள்,

     சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் --- புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடையில் சுற்றுபவர்கள்.

     வாசம் வீசுமணத்தில் மினுக்கிகள் --- வாசனை வீசும் நறுமணங் கொண்டு மினுக்குபவர்கள்.

     உறவாலே மாயை ஊடு விழுத்தி அழுத்திகள் --- தமது சம்பந்தத்தினால் மாயையின் உள்ளே விழும்படி அழுத்துபவர்களாகிய பொது மாதர்களின்,

     காமபோக வினைக்குள் --- ஆசை யநுபவச் செயல்களில் ஈடுபட்டதாலே,

     உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ --- உம்மைப் பணிகின்ற நல்வாழ்வு இல்லாமல், ஆணவ மலத்துடன் கூடிய பிறப்பினில் அலைவேனோ?


பொழிப்புரை

     மேலுகத்தில் வாழ்கின்ற தேவர்கள் புகழ்கின்ற தயாத மன்னவனுக்கு ஒப்பற் குமாரனாகப் பிறந்து, சமான மில்லாத விசுவாமித்திர முனிவர் செய்த யாகத்தைக் காத்து, அந்தக் கல்லுக்கு முன் உருவத்தைத் திருவடியால் கொடுத்து, மிதிலாபுரியில் இருந்த வில்லை ஒடித்து, ஒளிமிக்க சீதாதேவியைத் திருமணஞ்செய்து, மறுபடியும் அயோத்தி மாநகருக்குச் சென்று, மாற்றாந்தாயான கைகேயி காட்டுக்குப் போகும்படிச் செய்ய, இலட்சுமணனுடனும், பூதேவியாம் சீதையுடனும் சென்று, அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பையேவினவரும், தேடிச்சென்று இராவணனை அழித்தவருமான இரகுராமருடைய திருமருகரே!

     ஞானாசிரியரே!

     சற்குருவே!

     உத்தம் வேலாயுதரே!

     நெரூரில் வாழும் ஞான மூர்த்தியே!

     திருச்செங்கோட்டில் புகழ்பெற வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே!

     ஆலகால நஞ்சையுடைய பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய மடமாதர்கள்.

     நெய்யின் ஈரமுள்ள வாள் போலமிகவுந் தாக்க வல்ல கண்கையுடையவர்கள்.

      யாவராயிருந்தாலும், விரும்பி அழைப்பவர்கள்.

     நடுத்தெருவில் ஆடியாடி நடக்கின்ற பித்துப்பிடித்தவர்கள்.

     தங்கள் பேச்சு வன்மையால் ஆசையூட்டி மயக்குபவர்கள். ஆசை வலையை வீசி அணைக்கின்ற கொங்கையர்கள்.

      பலர் மத்தியிலும் மாலையணிந்த கூந்தலை யவிழ்த்து முடிப்பவர்கள்.

     புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடையில் சுற்றுபவர்கள்.

     நறுமணத்துடன் மினுக்குபவர்கள்.

     உறவினால் மாயைக்குள் அழுத்துபவர்களுமான பொது மாதர்களின் காமபோகச் செயல்களில் ஈடுபட்டதாலே,

     உம்மைப் பணியும் நல்வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு உறவைிடமான பிறப்பினில் அலைவேனோ?
விரிவுரை

இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகள் பொதுமாதரது செயல்களைக் கூறுகின்றன.

மேலை வானொர் உரைத் தசரற்கு ---

தசரதன் என்ற சொல் தசரன் என வந்தது. இந்திரனுடைய நகரைக் கவர்ந்த சம்பராசுரனைத் தயரதன் கொன்று பொன்னுலகை மீட்டு இந்திரனுக்கு அளித்தான். அதனால் தசரதனை தேவலோக வாசிகள் புகழ்கின்றார்கள்.

குன்றளிக்கு குலமணித்தோள் சம்பரனைக்
     குலத்தோடு சென்று நீ கொண்டு
அன்றளித்த அசரன்றோ புரந்தரன்
     இன்று ஆள்கின்றது அரச என்றான்”   --- கம்பராமாயணம்.

முனிக்கொரு வேள்விக் காவல் நடத்தி ---

இராமசந்திரமூர்த்தி விசுவாமித்திர முனிவர் உலக நலங்கருதிச் செய்த வேள்வியைக் காவல் புரிந்து உதவி செய்தார்.

எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்று நாள்
விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்       --- கம்பராமாயணம்.

அ கற்குரு அடியாலே மேவியே ---

அ கற்கு உரு.

இந்திரர் கௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். அதனால் கல்லாகுமாறு கௌதம் சபித்தார்.

இராமருடைய திருவடியின் துகள் பட்டவுடன் கௌதமருக்கு மனைவியாக ஆவதற்கு முன் இருந் கன்னி அகலிகையாக அத்திருவடித்துகள் அருளியது.

கோதமன்தன் பன்னிக்கு முன்னையுரு கொத்ததிவன்
போதுநின்ற தெனப்போலிந்த பொலன் கழற்காற் கொடிகண்டாய்
காதலென்றன் உயிர்மேலும் மிக்கரியோன் பாலுண்டால்
ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான்,    --- கம்பராமாயணம்.

அகலிகையின் நிலை மூன்று.

கௌதமர் மணப்பதற்குமுன் கன்னி அகலிகை; மணந்தபின்
பன்னி அகலிகை. இந்திரன் தீண்டிய பின் தூய்மை இழந்த அகலிகை.

இராமருடைய திருவடியில் துகள், கல்லான அகலிகையை, அமுதத்துடன் பாலாழியில் பிறந்தபோது இருந்த கன்னி அகலிகையாகச் செய்துவிட்டது. அவளுடைய வடிவத்தையே பின்னுக்குத் தள்ளி பெரிய புரட்சியைச் செய்துவிட்டது.

இந்தக் குறிப்பு கோதமன்றன் பன்னிக்கு முன்னையுரு...... பன்னியாக ஆவதற்கு முன்னிருந்த வடிவு என்று கூறும் கம்பர் கவிநயத்தால் உணர்க.

மிதிலைச் சிலை செற்று ---

நெடுங்காலம் யாவராலும் வளைக்க முடியாத உருத்திர வில்லை இராமர் ஒரு நொடியில் ஒடித்துவிட்டார்.

தடுத்திமை யாம லிருந்தவர் தாளின்
மடுத்தது நாணாதி வைத்தது நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.

வேறு தாய் அடவிக்குள் விடுத்த ---

இராமர் மாற்றாந்தாயின் மொழியை மறை ‘மொழியாகக் கொண்டு, ஆழிசூழ் உலகம் அனைத்தும் தம்பிக்குத் தியாகஞ் செய்துவிட்டு, இளையோனும் வைதேகியும் உடன் வரக் கொடிய கானகஞ் சென்றார்‘

இது மற்றவர்கள் நினைக்க முடியாத அரிய தியாகம்.

நெருவைப் பதி வித்தக ---

நெருவூர்-இரு கருவூருக்கு வடக்கே ஆறு கல் தொலைவில் காவேரிக்குத் தென்கரையில் விளங்குகின்ற அருமையான திருத்தலம். இங்கு சதாவிப்பிரம்மேந்திரர் சமாதி விளங்குகின்றது.

நாகமாலை --

திருச்செங்கோடு நாகவடிவாகத் திகழ்கின்றது. அதனால், சர்ப்பகிரி, நாககிரி எனப்படும்.

கருத்துரை

         திருச்செங்கோட்டுத் தேசிகா,  மாதர் மயலும் பிறவித் துயரும் அற அருள் செய்வீர்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...