திருப் பாச்சில் ஆச்சிராமம்




திருப் பாச்சிலாச்சிராமம்
(திருவாசி)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மீ. செல்ல இந்த ஆலயத்தை அடையலாம். திருத்தலம் இப்போது "திருவாசி" என்ற வழங்கப்படுகின்றது.

இறைவர்              : மாற்றறிவரதர்,   சமீவனேசுவரர்பிரமபுரீசுவரர்.

இறைவியார்           : பாலாம்பிகை, பாலசௌந்தரி.

தல மரம்               : வன்னி.

தீர்த்தம்               : சிலம்பாறு.  (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்)

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - துணிவளர் திங்கள் துளங்கி
                                          2. சுந்தரர்  -   வைத்தனன் தனக்கே.


தேவார வைப்புத் தலங்கள்
         திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் திருவாசி பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்னாலேயே துடையூர் என்ற இடம் வரும். மக்கள் பேச்சு வழக்கில் இந்த இடம் தொடையூர் என்று வழங்குகிறது. இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவர் திருப்பெயர் விஷமங்களேசுவரர். இறைவி திருப்பெயர் மங்கள நாயகி. திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) பாடல் பெற்ற திருத்தலம் செல்பவர்கள் விசாரித்துக் கொண்டு இந்த தேவார வைப்புத் தலத்தையும் வழிபடலாம்.


         இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. கொல்லி மழவன் சைவ வழி வந்தவன். ஆதலால், பெருமான் சந்நிதியின் முன் தனது மகளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டிருந்தான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல திருத்தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் இத்தலத்திற்கு எழுந்தருளினார்.

     பிள்ளையார் வருகையைக் கேள்வியுற்ற கொல்லிமழவன், நகரை அலங்கரித்துப் பிள்ளையாரை எதிர்கொண்டு, அவர்தம் சிவிகையின் முன் விழுந்து வணங்கினான்.  பிள்ளையார் அவனுக்கு அருள் செய்தார். அவனுடன் பிள்ளையார் திருக்கோயிலுள் சென்றார். அங்கே உணர்வழிந்து கிடந்த பெண்ணைப் பார்த்து, "என்ன இது?" என்று கேட்டார்.  கொல்லிமழவன் வள்ளலாரை வணங்கி, "இவள் அடியேன் புதல்வி. இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பீடித்து இருக்கிறது. அந் நோய் மணி, மந்திர, மருந்துகளால் தீரவில்லை.  இவளைச் சந்நிதி முன்னே கிடத்தினேன்" என்றான். 

     ஆளுடைய பிள்ளையார், திருவருளைச் சிந்தித்து, "துணிவளர் திங்கள்" என்று எடுத்து, "மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே" என்று பாடியருளினார். உடன் அக் கன்னியும் பிணி தீர்ந்து எழுந்தாள். கொல்லிமழவன் பெருமகிழ்வு எய்திப் புதல்வியோடும் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கினான். பிள்ளையார் அவர்களுக்கு அருள் செய்து அங்கே சிலநாள் தங்கியிருந்தார்.

         இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. சுந்தரர், "இவர் அல்லாது இல்லையோ பிரானார்?" என்று "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று பாடிப் பொன் பெற்றார். இது பெரிய புராணம் நமக்கு அறிவுறுத்துவது.

         வழக்கம் போலவே, சில தலங்களுக்கு உள்ள செவிவழிச் செய்தி இங்கும் உண்டு. அது வருமாறு, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

          ஐந்து நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி உருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு இலிங்கமாக அருளுகிறார். இராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

         திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ்வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "எஞ்ஞான்றும் ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம் சேர் அருள் நிலையே" என்று போற்றி உள்ளார்.

     காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 309
சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துஉறையும்
         திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந்து, அணிநெடுமா ளிகைவலஞ்செய்து,
         உள்புக்கு, முன்பு தாழ்ந்து,
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
         தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து, நிறைதமிழின்
         சொல்மாலை நிகழப் பாடி.

         பொழிப்புரை : சென்றவர், திருமாந்துறையில் விளக்கம் பெற வீற்றிருந்தருளும் கங்கையாறு தங்கப் பெற்று வாழ்வு அடைந்த சடையை உடைய இறைவரின் திருமுற்றத்தை வணங்கி, அழகிய நீண்ட திருமாளிகையை வலம் வந்து, உட்சென்று, திருமுன் விழுந்து பணிந்து, செறிந்த ஒளிர்க் கதிர்களையுடைய ஞாயிறும், சந்திரனும், தேவ மருத்துவர்களும் தொழுது வழிபட, இறைவர் எழுந்தருளிய நிலையைச் சிறப்பித்த சொல்மாலையை நிலவி நிற்கும்படியாகப் பாடி,


பெ. பு. பாடல் எண் : 310
அங்கண் அகன்று, அம்மருங்கில் அங்கணர்தம்
         பதிபிறவும் அணைந்து போற்றி,
செங்கமலப் பொதி அவிழச் சேல்பாயும்
         வயல் மதுவால் சேறு மாறா,
பொங்கு ஒலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
         கரைமிசைப் போய், புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரா
         மம் பணிய நண்ணும் போதில்.

         பொழிப்புரை : அவ்விடத்தினின்றும் நீங்கி அருகில் உள்ள சிவபெருமானின் பிற திருப்பதிகளையும் வணங்கி, செந்தாமரை மலர்களின் மொட்டு அவிழ, சேல்மீன் பாய, தேன் பொழிவதால் சேறு உலராத வயல்களையுடைய, பொங்கும் ஒலிமிக்க நீரையுடைய மழநாட்டில், காவிரியின் வடகரை வழியாகச் சென்ற சீகாழித் தலைவர், நம் இறைவரின் திருப்பாச்சிலாச்சிராமத்தைத் தொழுவதற்குச் சேரும் பொழுதில்,

         பாச்சில் - ஊரின் பெயர். ஆச்சிராமம் - கோயிலின் பெயர். `பதி பிறவும்' என்பன திருத்தவத்துறை, பூவாளுர், திருமங்கலம் முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 311
அந்நகரில் கொல்லிமழவன் பயந்த
         அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாம் காமருகோ
         மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி,
மன்னுபெரும் பிணிஆகும் முயலகன்வந்து
         அணைவுற, மெய் வருத்தம் எய்தி,
தன்னுடைய பெரும்சுற்றம் புலம்பு எய்த,
         தானும் மனம் தளர்வு கொள்வான்.

         பொழிப்புரை : அந்நகரத்தில் கொல்லி மழவன் தான் பெற்றெடுத்த அரிய அமுதம் போன்ற மென்மையான சொல்லையுடைய கன்னியான இளமான் போன்ற அழகான இளங்கொழுந்தினுடைய ஒளி பொருந்திய உடம்பில், முயலகன் வந்து சார்ந்ததால், உடல் வருந்தித் தனது உறவினர் வருந்தத் தானும் உள்ளத் தளர்ச்சி அடைந்தவனாய்,

         முயலகன் - உடலில் வலிப்பு ஏற்பட உணர்வற்றுக் கிடக்கும் நோய். இக்காலத்தில் வலிப்பு எனக் கூறப்படுவதொரு நோய்.


பெ. பு. பாடல் எண் : 312
மற்றுவேறு ஒருபரிசால் தவிராமை,
         மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வரும்குலத்துப் பான்மையினான்
         ஆதலினால், பரிவு தீரப்
பொன்தொடியைக் கொடுவந்து, போர்க்கோலச்
         சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தம் கோயிலின்உள் கொடுபுகுந்து,
         திருமுன்பே இட்டு வைத்தான்.

         பொழிப்புரை : எவ்வாற்றானும் நீக்க மாட்டாமையால், மான் கன்றினையுடைய திருக்கையைக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்தலையே வழிவழியாகக் கொண்டு நிற்கும் தன்மையனாதலின், அத்துன்பம் நீங்கும் பொருட்டுப் பொன் வளையல் அணிந்த அப்பெண்ணை அழைத்து வந்து, போர்க்கோலம் கொண்ட வீரராய், முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருக்கோயிலில், அவர் திருமுன்பு இட்டு வைத்தான்.


பெ. பு. பாடல் எண் : 313
அவ்அளவில் ஆளுடைய பிள்ளையார்
         எழுந்து அருளி அணுக எய்த,
"செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞான
         சம்பந்தன் வந்தான்" என்றே
எவ்வுலகும் துயர்நீங்கப் பணிமாறும்
         தனிக்காளத்து எழுந்த ஓசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா, மெல்இயலை
         விட்டு எதிரே விரைந்து செல்வான்.

         பொழிப்புரை : அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் அத்திருப்பதிக்கு எழுந்தருளி, அப்பதியினை அணுகிவரச் `செம்மைதரும் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்த திருஞானசம்பந்தன்' என எவ்வுலகும் துன்பம் நீங்குமாறு ஒலிக்கின்ற திருக்காளம் முதலான இயங்கள் ஒலிக்க, துன்ப மிகுதியால் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் அக்கொல்லி மழவன், அதனைக் கேட்டு, மென்மைத் தன்மை வாய்ந்த அப்பெண்ணை அங்கே விட்டுப் பிள்ளையாரை எதிர் கொள்ள விரைந்து செல்வானாகி,


பெ. பு. பாடல் எண் : 314
"மாநகரம் அலங்கரிமின், மகரதோ
         ரணம்நாட்டும், மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி
         விளக்கினொடு தூபம் ஏந்தும்,
ஏனைஅணி பிறவும்எலாம் எழில்பெருக
         இயற்றும்"என ஏவி, தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு
         தொழுதுஅணைந்தான் மழவர் கோமான்.

         பொழிப்புரை : `பெரிய இந்நகரை அணிசெய்யுங்கள். மகர தோரணங்களைக் கட்டுங்கள்! மணிகளை இட்ட மணநீர் நிறைந்த நிறை குடங்களையும் ஒளியுடைய அழகிய விளக்குகளுடன் நறுமணப் புகையையும் ஏந்துங்கள்! இன்னும் பிறபிற அணிகளையெல்லாம் பெருகச் செய்யுங்கள்!\' என ஆணையிட்டு, அக்கொல்லி மழவன் தானும் தேவதேவரான சிவபெருமானின் திருமகனாரான பிள்ளையாரின் திருமுன்பு தொழுதபடியே சென்றணைந்தான்.


பெ. பு. பாடல் எண் : 315
"பிள்ளையார் எழுந்துஅருளப் பெற்றேன்"என்று
         ஆனந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழிய, திருமுத்தின்
         சிவிகை யின்முன் வீழ்ந்தபோது,
வள்ளலார் "எழுக"என மலர்வித்த
         திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந்து, உடன்சென்று குலப்பதியின்
         மணிவீதி கொண்டு புக்கான்.

         பொழிப்புரை : சென்றவன் `பிள்ளையார் எழுந்தருளப் பேறு பெற்றேன்!' என எண்ணி, மேன்மேலும் பெருகும் அன்பினால் வெள்ளமாய்க் கண்கள் நீரைப் பொழிய, முத்துச் சிவிகையின் முன்பு விழுந்த பொழுது, வள்ளலாரான பிள்ளையார் `எழுக\' என்ற திருவாக்கால் அருள, அவன் தன் மலர்க்கைகளைத் தலைமேல் குவித்துக் கொண்டு எழுந்து, அவருடனே சென்று பழமையான அப்பதியின் திருவீதி வழியே அழைத்துக் கொண்டு வந்து நகரினுள் புகுந்தான்.


பெ. பு. பாடல் எண் : 316
மங்கலதூ ரியம்முழங்கும் மணிவீதி
         கடந்து,மதிச் சடையார் கோயில்
பொங்குசுடர்க் கோபுரத்துக்கு அணித்துஆக,
         புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந்து அருளும்முறை இழிந்து அருளி,
         அணிவாயில் பணிந்து புக்கு,
தங்கள்பிரான் கோயில்வலம் கொண்டு,திரு
         முன்வணங்கச் சாரும் காலை.

         பொழிப்புரை : மங்கல இயங்கள் ஒலிக்கும் அவ்வீதியைக் கடந்து சென்று, பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருக்கோயிலின் பொங்கும் ஒளி வீசும் கோபுரத்துக்கு அருகில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிய பிள்ளையார், அழகிய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, தம் இறைவரின் கோயிலை வலம் வந்து, அப்பெருமானைத் திருமுன்பு சென்று வணங்கச் செல்லும் பொழுது,


பெ. பு. பாடல் எண் : 317
கன்னிஇளங் கொடிஉணர்வு கழிந்து,நிலன்
         சேர்ந்த அதனைக் கண்டு நோக்கி,
"என்இது"என்று அருள்செய்ய, மழவன்தான்
         எதிர்இறைஞ்சி, "அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருஇல்அரும்
         பிணிபொருந்த, புனிதர் கோயில்
முன்அணையக் கொணர்வித்தேன், இது புகுந்த
         படி" என்று மொழிந்து நின்றான்.

         பொழிப்புரை :கன்னியாகிய இளங்கொடிபோன்ற ஒரு பெண், உணர்வின்றி நிலத்தில் கிடப்பதைப் பார்த்து, இஃது என்ன? எனப் பிள்ளையார் கேட்க, அதனைக் கேட்ட கொல்லி மழவன், அவர் எதிரே வணங்கி, `அடியேன் பெற்ற பொன் போன்ற இப் பெண்ணை ஒப்பில்லாத தீர்ப்பதற்கு அரிய `முயலகன்' என்ற நோய் பற்ற, அதனைத் தீர்க்க இயலாது இறைவர் தம் திருக்கோயிலில் அவர் திருமுன்பு கொணர்ந்து இவ்வகையில் கிடத்தியுள்ளேன்! இதுவே நிகழ்ந்தது!' எனக் கூறி நின்றான்.


பெ. பு. பாடல் எண் : 318
அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம்
         அருளொடும் கேட்டு,அந் நிலையின்நின்றே,
பணிவளர் செஞ்சடைப் பாச்சில்மேய
         பரம்பொருள் ஆயினா ரைப்பணிந்து,
"மணிவளர் கண்டரோ மங்கையைவாட
         மயல்செய்வ தோஇவர் மாண்புஅது" என்று
தணிவுஇல் பிணிதவிர்க் கும்பதிகத்
         தண்தமிழ் பாடினார் சண்பைநாதர்.

         பொழிப்புரை : அழகிய மாலையை அணிந்த மழவன் சொல்லியவற்றை அருளோடும் கேட்டருளி, அந்நிலையில் நின்றவாறே, பாம்பு வாழ்தற் கிடனாய சிவந்த சடையினையுடைய திருப்பாச்சிலாச்சிராமத்தில் வீற்றிருக்கும் மேலாய பெருமானைப் பணிந்து, நஞ்சு வளர்தற் கிடனாய கழுத்தினை யுடையவரோ, இம்மங்கையை வாடும்படி மயக்கம் செய்வதோ இவர்தம் மாண்பு என்று எடுத்துத் தீர்த்தற்கரிய அந்நோயினைத் தீர்க்கும் தண்தமிழ்ப் பதிக மாலையைப் பாடியருளினார்.

         இதுபொழுது அருளிய பதிகம் `துணிவளர் திங்கள்' (தி.1 ப.44) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     இப்பதிகத்தின் முதற்பாடல், `மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ இவர் மாண்பே' என நிறைவு பெறுகிறது. இதனையே ஆசிரியர் எடுத்து மொழிகின்றார். இப்பதிகப் பாடல்கள் பத்தும் இறைவனின் அரும் பண்புகள் பலவற்றையும் விரித்துக் கூறி, `இவ்வரும் பண்பு உடையவரோ இந்நங்கையை இடர் செய்வதா இவர் மாண்பு' என எடுத்து மொழிகின்றன. இப்பதிக முதற்பாடலில் `சுடர்ச்சடை சுற்றி முடித்து' எனக் கூறுதற்கேற்ப இத்திருக்கோயிலில் உள்ள கூத்தப்பெருமானின் திருமுடி இன்றும் காட்சி அளிக்கின்றது.

  
பெ. பு. பாடல் எண் : 319
பன்னும் தமிழ்மறை யாம்பதிகம்
         பாடி, திருக்கடைக் காப்புச்சாத்தி,
மன்னும் கவுணியர் போற்றிநிற்க,
         மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி உறுபிணி விட்டுநீங்க,
         கதும்எனப் பார்மிசை நின்றுஎழுந்து,
பொன்னின் கொடிஎன ஒல்கிவந்து,
         பொருவலித் தாதை புடைஅணைந்தாள்.

         பொழிப்புரை : புகழ்ந்து பேசப்படுகின்ற தமிழ் மறையான திருப்பதிகத்தைப் பாடி, நிறைவில் திருக்கடைக்காப்பும் அருளிச் செய்து, நிலைபெற்ற கவுணியர் தலைவரான சம்பந்தர் வணங்கி நிற்ப, அதுபொழுது மழவன் பெற்ற மழலையாகிய மென்மையான சொற்களையுடைய அக்கன்னி, நோய் நீங்கப் பெற்று, மிக விரைவாக நிலத்தினின்றும் எழுந்து பொற்கொடிபோல் ஒதுங்கி நடந்து வந்து, போர் வன்மை கொண்ட தந்தையின் அருகே அடைந்தனள்.

         இவ்வரலாற்றை நினைவு கூரும் வகையில் இப்பதியிலுள்ள கூத்தப்பெருமானின் திருவடிக்கீழ் முயலகன் இல்லாது உள்ளது. எனினும் முயலகன் என்னும் நோய் வேறு; திருவடிக்கீழ் இருக்கும் முயலகன் வேறு.


பெ. பு. பாடல் எண் : 320
வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
         மழவன், பெருகு மகிழ்ச்சிபொங்க,
தன்தனிப் பாவையும் தானும்கூடச்
         சண்பையர் காவலர் தாளில்வீழ,
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
         நீர்அணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்,
         உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.

         பொழிப்புரை : கொடிய முயலகன் என்ற நோய் நீங்கிய மகளைக் கண்ட மழவன், பெருகிய மகிழ்ச்சிமீதூர, தன்னுடைய ஒப்பில்லாத மகளும் தானும் சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்க, அங்கு நின்ற பிள்ளையாரும் கங்கை நீரைத் தரித்த சடையையுடைய குற்றமற்ற இறைவரின் திருவடிகளை ஒரு நெறியாகக் கொண்டு பணிந்தார்; தேவதேவரான இறைவரின் அடியவர்கள் மகிழ்வொலி செய்தனர்.


பெ. பு. பாடல் எண் : 321
நீடு திருஆச் சிராமம் மன்னும்
         நேர்இழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்குஅமர்ந்து,
         கும்பிடும் கொள்கைமேல் கொண்டுபோந்தே,
ஆடல் பயின்றார் பதிபிறவும்
         அணைந்து, பணிந்து,அடி போற்றி, ஏகிச்
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
         சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.

         பொழிப்புரை : என்றும் அருள் நீடுகின்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் நிலையாய் எழுந்தருளியிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகிவரும் சிவபெருமானின் அருளுடனே அங்கிருந்த பிள்ளையார், மேலும் பல பதிகளை வணங்கும் திருக்குறிப்பால் சென்று, ஆடலில் மகிழ்வுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து வணங்கித் திருவடிகளைப் போற்றி, மேலும் சென்று அறிவால் சிறந்தவர் உறைகின்ற `திருப்பைஞ்ஞீலிச்' சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றருளினார்.

         இங்குப் பதிபிறவும் என்றது திருப்புலிவலம், திருத்துறையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.


1.044  திருப்பாச்சிலாச்சிராமம்       பண் - தக்கராகம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச்
         சுடர்ச்சடை சுற்றிமுடித்து,
பணிவளர்கொள்கையர், பாரிடம்சூழ
         ஆரிடமும் பலிதேர்வர்,
அணிவளர்கோலம் எலாஞ்செய்துபாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
மணிவளர்கண்டரோ, மங்கையைவாட
         மயல்செய்வதோ, இவர்மாண்பே.

         பொழிப்புரை :முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

 
பாடல் எண் : 2
கலைபுனைமான்உரி தோல்உடைஆடை
         கனல்சுட ரால்இவர்கண்கள்,
தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர்,
         தம்அடிகள் இவர்என்ன,
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர்பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
இலைபுனைவேலரோ, ஏழையைவாட
         இடர்செய்வதோ, இவர்ஈடே.

         பொழிப்புரை :மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர் செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?


பாடல் எண் : 3
வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சிருள் மாலை,
         வேண்டுவர்பூண்பது வெண்நூல்,
நஞ்சுஅடை கண்டர், நெஞ்சு இடமாக
         நண்ணுவர் நம்மைநயந்து,
மஞ்சுஅடை மாளிகை சூழ்தரு பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச்
         சிதைசெய்வதோ, இவர்சீரே.

         பொழிப்புரை :உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக் காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?


பாடல் எண் : 4
கனமலர்க்கொன்றை அலங்கல் இலங்க,
         கனல்தரு தூமதிக் கண்ணி,
புனமலர் மாலை அணிந்து, அழகாய
         புனிதர்கொ லாம் இவர் என்ன,
வனமலிவண் பொழில் சூழ்தரு பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
மனமலிமைந்தரோ, மங்கையைவாட
         மயல்செய்வதோ, இவர்மாண்பே.

         பொழிப்புரை :கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?


பாடல் எண் : 5
மாந்தர் தம்பால் நறு நெய்மகிழ்ந்து ஆடி,
         வளர்சடை மேல்புனல் வைத்து,
மோந்தை முழாக்குழல் தாளம் ஒர்வீணை
         முதிரஓர் வாய்மூரிபாடி,
ஆந்தை விழிச்சிறு பூதத்தர், பாச்சில் 
         ஆச்சிராமத்து உறைகின்ற
சாந்துஅணி மார்பரோ, தையலை வாடச்
         சதுர்செய்வதோ, இவர்சார்வே.

         பொழிப்புரை :மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?


பாடல் எண் : 6
நீறுமெய்பூசி, நிறைசடைதாழ,
         நெற்றிக்கண் ணால் உற்றுநோக்கி,
ஆறுஅதுசூடி, ஆடு அரவு ஆட்டி ,
         ஐவிரல் கோவண ஆடை,
பால்தருமேனியர், பூதத்தர், பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர், ஏழையைவாட
         இடர்செய்வதோ, இவர்ஈடே.

         பொழிப்புரை :திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?


பாடல் எண் : 7
பொங்குஇளநாகம் ஓர் எகவடத்தோடு,
         ஆமை,வெண் நூல்,புனைகொன்றை,
கொங்கு இளமாலை புனைந்து, அழகாய
         குழகர்கொலாம் இவர் என்ன,
அங்குஇளமங்கை ஓர் பங்கினர், பாச்சில் 
         ஆச்சிராமத்து உறைகின்ற
சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச்
         சதிர்செய்வதோ, இவர்சார்வே.

         பொழிப்புரை :சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?


பாடல் எண் : 8
ஏவலத்தால்விச யற்குஅருள்செய்து ,
         இராவணனை ஈடு அழித்து,
மூவரிலும்முதல் ஆய்நடுஆய
         மூர்த்தியை அன்றிமொழியாள்,
யாவர்களும் பரவும் எழிற் பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச்
         சிதை செய்வதோ, இவர்சேர்வே.

         பொழிப்புரை :அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?


பாடல் எண் : 9
மேல்அதுநான்முகன் எய்தியது இல்லை,
         கீழ்அது சேவடிதன்னை
நீலஅதுவண்ணனும் எய்தியது இல்லை,
         எனஇவர் நின்றதும் அல்லால்,
ஆல்அது மாமதி தோய்பொழில் பாச்சில் 
         ஆச்சிராமத்து உறைகின்ற
பால்அதுவண்ணரோ, பைந்தொடிவாடப்
         பழிசெய்வதோ, இவர்பண்பே.

         பொழிப்புரை :மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?


பாடல் எண் : 10
நாணொடு கூடிய சாயினர் ஏனும்
         நகுவர் அவர்,இருபோதும்
ஊணொடுகூடிய உட்குநகையால்
         உரைகள் அவைகொளவேண்டா,
ஆணொடுபெண்வடிவு ஆயினர், பாச்சில்
         ஆச்சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப்
         புனைசெய்வதோ, இவர்பொற்பே.

         பொழிப்புரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?


பாடல் எண் : 11
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
         ஆச்சிராமத்து உறைகின்ற,
புகைமலி மாலை புனைந்து அழகாய
         புனிதர்கொலாம் இவர் என்ன,
நகைமலி தண்பொழில் சூழ்தருகாழி
         நல்தமிழ் ஞானசம்பந்தன்,
தகைமலி தண்தமிழ் கொண்டு இவைஏத்தச்
         சாரகி லாவினைதானே.

         பொழிப்புரை :உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள்சாரா.

                                             திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர் திருவானைக்காவைத் தரிசித்து அதன் அருகில் உள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து சிவபெருமானை வழிபட்டுப் பொருள் வேண்டினார். அதனை இறைவன் அருளாது ஒழியவும், தோழமை உறவினால், அடியார்கள் முன்னே முறையிடுவார் போலப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 78 - 81)


பெரிய புராணப் பாடல் எண் : 78
சாற்றி அங்குத் தங்கும் நாள்,
         தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும்
         சென்று, தாழ்ந்து, நிறைவிருப்பால்
போற்றி, அங்கு நின்றும்போய்,
         பொருஇல் அன்பர் மருவியதொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில்
         ஆச்சி ராமம் சென்று அடைந்தார்.

         பொழிப்புரை : இப்பதிகத்தைப் பாடி திருவானைக்காவில் தங்கியிருக்கும் நாள்களில், அதன் அருகிலுள்ள ஒளிவளர் பவளமேனியில் ஒளி நீறணிந்து விளங்கும் சிறப்பையுடைய சிவபெருமானின் கோயில்கள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, நிறைந்த விருப்பால் போற்றி, அங்கிருந்து ஒப்பற்ற அன்பர்கள் அருகிலிருந்து இறைவற்குத் தொண்டு செய்யும் பெருமையுடைய திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் பதிக்குச் சென்றடைந்தார்.

         கோயில் எம்மருங்கும் என்றது திருச்சிராப்பள்ளி, உறையூர், திருக்கற்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 79
சென்று திருக்கோ புரம்இறைஞ்சி,
         தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு, உள்அணைந்து,
         முதல்வர் முன்பு வீழ்ந்து,இறைஞ்சி,
நன்று பெருகும் பொருட்காதல்
         நயப்புப் பெருக, நாதர்எதிர்
நின்று பரவி, நினைந்தபொருள்
         அருளாது ஒழிய, நேர்நின்று.

         பொழிப்புரை : சென்று திருக்கோபுரத்தை வணங்கித் தேவர்கள் பெருகக் கூடும் திருந்திய மணிகள் பதித்த கோயிலின் திருமுற்றத்தினை வலங்கொண்டு, உட்சென்று, முதல்வராய பெருமானின் திருமுன்பு வீழ்ந்து வணங்கி, பெரிதாகத் தம் உள்ளத்துப் பெருகும் பொருளின் விருப்புப் பெருகிட, அப்பொருளைப் பெற வேண்டிப் பெருமானின் திருமுன் நின்று வணங்கிட, இறைவர் தாம் நினைந்த பொருளை அருளாது ஒழிய, அவர் முன் நின்று,


பெ. பு. பாடல் எண் : 80
அன்பு நீங்கா அச்சமுடன் அடுத்த
         திருத்தோழமைப் பணியால்,
பொன்பெ றாத திருவுள்ளம்
         புழுங்க அழுங்கி, புறம்புஒருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
         முகப்பே, முறைப்பாடு உடையார்போல்
என்பு கரைந்து "பிரானார்மற்று
         இலையோ" என்ன எடுக்கின்றார்.

         பொழிப்புரை : அன்பு நீங்காத அச்சமுடன் பெருமானுக்கு உற்ற தோழமையினால், தாம் வேண்டிய பொன்னை விரும்பியவாறு பெறாத அவரது திருவுள்ளம், புழுங்கி, புறம்பாக நின்ற திருத்தொண்டர்களை முன்னிலைப் படுத்தி, அவர்களிடமே தமது முறைப்பாட்டைச் சொல்லிக் கொள்வார்போல, எலும்பும் கரைந்துருகப், `பிரானார் மற்று இல்லையோ' என்று பாடத் தொடங்குவாராய்,


பெ. பு. பாடல் எண் : 81
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி,
         நிலத்திடைப் புலம்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை உணர்ந்து,நொந்து, அடிமை
         ஒருமையாம் எழுமையும் உணர்த்தி,
எத்தனை அருளாது ஒழியினும் "பிரானார்
         இவர்அலாது இல்லையோ" என்பார்
"வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்"
         எனவழுத் தினார்வழித் தொண்டர்.

         பொழிப்புரை : ஒருநாளும் திருக்கயிலாய மலையை விட்டு நீங்காத பேரின்ப நிலையினின்றும் நீங்குமாறு செய்து, இந்நிலவுலகத்தில் ஐம்புல இன்பங்களால் ஆரத் துய்த்தற்குரிய பிறப்பினைக் கொடுத்த காரணத்தை உணர்ந்து வருந்தி, அடிமைத் திறத்தில் இப்பிறப்பிலன்றி எழுமைக்கும் நான் அடிமை என்பதை விண்ணப்பித்து, எவ்வளவும் இவர் அருளா தொழிந்தாலும் இவரலாது பிரானார் எனக்கு இல்லை என நினைவு கூர்ந்து `வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினர், வழிவழியாக அடிமை செய்துவரும் நம்பியாரூரர்.

         `வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.14). `ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்' எனப் பதினோராவது பாடலில் வரும் தொடரையும், பாடல்தொறும் `இவர்அலாது இல்லையோ பிரானார்' என வரும் தொடர்களையும் நினைந்து இவ்வரிய கருத்தினை இப் பாடலில் ஆசிரியர் அருளுவாராயினார்.

     இறைவன்பால் பொன் வேண்ட, அவர் தாராது ஒழிந்த நிலையில் பாடியது என அருளற்குக் காரணம், நான்காவது பாடலில், `பரிந்து ஓர் பேச்சிலர் ஒன்றைத் தரவிலர் ஆகில்' என்றும், ஒன்பதாவது பாடலில் `பிழைத்தது பொறுத் தொன்று ஈகிலராகில்' என்றும் அருளுவனவேயாம். `இவரலாது இல்லையோ பிரானார்' எனும் தொடர் மேலாக நோக்கின் வெகுளற் குறிப்புடையதாய் இருப்பினும், `ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்' எனவும், `ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல' எனவும் அருளும் நம்பியாரூரரின் திருவுள்ளக் கிடக்கையை ஆழ்ந்து கண்ட சேக்கிழார் பெருமான், இறைவன், அருளினும் அருளாது ஒழியினும், `இவரலாது பிரானார் எனக்கில்லை' என்பதே அவர்தம் திருவுள்ளம் என மொழி மாற்றிப் பொருள் அமைவு காணச் செய்திருப்பது ஆழ எண்ணற்கு உரியதாம். வழிவழித் தொண்டர் என இவ்விடத்து அவரைக் குறிப்பதும் எண்ணற்கு உரியதாம்.

 
பெ. பு. பாடல் எண் : 82
இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்,
         "ஏசின அல்ல" என்று இசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெருமானார்
         விழுநிதிக் குவைஅளித்து அருள,
மைவளர் கண்டர் கருணையே பரவி,
         வணங்கி,அப் பதியிடை வைகி,
எவ்வகை மருங்கும் இறைவர்தம் பதிகள்
         இறைஞ்சி,அங்கு இருந்தனர் சில நாள்.

         பொழிப்புரை : இவ்வாறு போற்றி, `ஏசின வல்ல\' என்று இசைத்த திருக்கடைக்காப்பையும் சேர்த்துப் பாட, உண்மை அன்பையே விரும்பியருளும் பெருமானும், பெரும்பொருள் குவையைக் கொடுத்து அருளலும், நஞ்சு வளரும் கழுத்தினையுடைய பெருமானின் திருக்கருணையையே போற்றித் தொழுது வணங்கி, அப்பதியின் இடத்துத் தங்கி, அவ்விடத்து அருகிலுள்ள இறைவர்தம் கோயில்கள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, மீளவும் வந்து சிலநாள்கள் அங்கு இருந்தனர்.

         எவ்வகை மருங்கும் உள்ள இறைவர்தம் பதிகளை வணங்கி என்றதற்கேற்ப அறியத்தகும் பதிகள் எவை எனத் தெரிந்தில.



7. 014   திருப்பாச்சிலாச்சிராமம்          பண் - தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்,
         நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை
         உரைத்தக்கால் உவமனே ஒக்கும்,
பைத்தபாம்பு ஆர்த்து, ஓர் கோவணத் தோடு
         பாச்சில்ஆச் சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து, ஓர் நச்சுஇலர் ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : எனது தலையையும் , நாவையும் , நெஞ்சத்தையும் , இத் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன் ; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன்; இவற்றை யானே சொல்லின், பொய் போல்வதாகும். இந் நிலையில், இவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து , பித்தரோடே ஒத்து , சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும் , எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 2
அன்னையே என்னேன், அத்தனே என்னேன்,
         அடிகளே அமையும் என்று இருந்தேன்,
என்னையும் ஒருவன் உளன்என்று கருதி
         இறைஇறை திருவருள் காட்டார்,
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சில்
         ஆச்சிரா மத்து உறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள்செய்வது ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணையென்று நினைந்திலேன் ; தந்தையைத் துணையென்று நினைந்திலேன் ; என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன் . இவ்வாறு ஒருவன் உளன் ` என்று , தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் , அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திருவுள்ளத்தடைத்து , சிறிது திருவருளைப் புலப்படுத்திலர் . இவர் தம் அடியவர்க்கு , மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது , இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும் . இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 3
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்,
         உள்ளமே அமையும் என்று இருந்தேன்,
செற்றவர் புரமூன்று எரிஎழச் செற்ற
         செஞ்சடை நஞ்சுஅடை கண்டர்,
அற்றவர்க்கு அருள்செய் பாச்சில்ஆச் சிராமத்து
         அடிகள்தாம், யாதுசொன் னாலும்
பெற்றபோது உகந்து, பெறாவிடில் இகழில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : யான் , ஒரு பொருளினால் நன்மையாதல் தீமையாதல் வந்த காலத்தில் அதனைக் கண்டபின் அல்லது , அதற்கு முன்பே அதன் உண்மை இயல்பை ஓர்ந்துணரும் சிறப்புணர்வு இல்லேன் ; அதனால் , என் பொதுமை யுணர்வே சாலும் என்று அமைந்திருந்தேன் . இத்தன்மையேனிடத்து , தேவர் பொருட்டு அவரைப் பகைத்த அசுரரது முப்புரத்தில் தீயெழச்செய்தும் , நஞ்சினை யுண்டு கண்டத்தில் வைத்தும் , சிவந்த சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டும் , ` களை கண் இல்லாது அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர் ` எனப் பெயர் பெற்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியேன் யாது சொல்லி இரந்தாலும் , தாம் மனம் மகிழ்ச்சி அடையப் பெற்றபோது இரக்கம் வைத்து , பெறாதபோது இரக்கம் வையாது விடினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 4
நாச்சில பேசி நமர்பிறர் என்று,
         நன்றுதீது என்கிலர், மற்றுஓர்
பூச்சுஇலை நெஞ்சே, பொன்விளை கழனிப்
         புள்ளினம் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சில்ஆச் சிராமத்து அடிகள் என்று இவர்தாம்
         பலரையும் ஆட்கொள்வர், பரிந்துஓர்
பேச்சுஇலர், ஒன்றைத் தர இலர் ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : மனமே , பொன் விளையும் எனப் புகழத்தக்க கழனிகளில் பறவைக் கூட்டம் ஒலிப்பதும் , நீர் நிறைந்த பொய்கைகளை யுடையதும் ஆகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அடிகள் எனப்பட்ட இவர்தாம், சிலரை, `நம்மவர்` என்றும், சிலரை, `பிறர்` என்றும் நாவாற் சிலவற்றைச் சொல்லுதலும். அவர் சொல்வனவற்றைத் தாம், ` நன்று ` என்று புகழ்தலாதல், `தீது` என்று இகழ்தலாதல் செய்தலும் இலர். மற்றும் ஓர் முகமன் செய்தலும் இவரிடத்து இல்லை. ஆயினும், பலரையும் தமக்கு அடிமை என்று மட்டும் ஆளாக்கிக் கொள்வர். அதன் பின்பு அவரிடம் அன்பு கொண்டு ஓர் இனிய பேச்சுப் பேசுதல் இலர்; ஒன்றைத் தருதலும் இலர்; ஆயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ !


பாடல் எண் : 5
வரிந்தவெம் சிலையால் அந்தரத்து எயிலை
         வாட்டிய வகையின ரேனும்,
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
         போகும்நாள் வீழும்நாள் ஆகிப்
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சில்ஆச் சிராமத்து
         அடிகள்தாம், யாதுசொன் னாலும்
பிரிந்துஇறைப் போதில் பேர்வதே ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : கட்டப்பட்ட வெவ்விய வில்லால் , வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வன்கண்மையை உடையவராயினும் , தொண்டுபுரிந்த அந்த நாட்களே புகழத்தக்க நாட்களும் , தொண்டு புரியாது போகும் நாட்கள் பயனின்றிக் கழிந்த நாட்களுமாம் என்று கொண்டு , அன்புசெய்பவருக்கு அருள் செய்பவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர் , என்னளவில் , யாது சொல்லி இரந்தாலும் திருச்செவியில் ஏலாது , நொடிப் பொழுதில் நீங்குதலையே உடையவராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 6
செடித்தவம் செய்வார் சென்றுஉழிச் செல்லேன்,
         தீவினை செற்றிடும் என்று,
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்,
         ஆவதும் அறிவர்எம் அடிகள்,
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்,
         பாச்சில்ஆச் சிராமத்து எம் பரமர்,
பிடித்தவெண் ணீறே பூசுவது ஆனால்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : அடியேன் , ` பணிபிழைத்தற் குற்றம் வந்து அழிவைச் செய்யும் ` என்று அஞ்சி , நன்றல்லாத தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன் ; தமது திருவடித் தொண்டினையன்றி மற்று யாவரது பணியையும் யான் அறிந்திலேன் ; அடியேன் இத் தன்மையேனாதலை எம்பெருமானாராகிய இவரும் அறிவர் . அங்ஙனமாக , என்னைப் புரத்தற்கு , படைகளுள் முதன்மையுடைத்தாகிய சூலத்தைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளாகிய இவரது நிலைமை , பிசைந்த வெள்ளிய சாம்பலைப் பூசுவதே யாயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 7
கையது கபாலம், காடுஉறை வாழ்க்கை,
         கட்டங்கம் ஏந்திய கையர்,
மெய்அது புரிநூல், மிளிரும்புன் சடைமேல்
         வெண்திங்கள் சூடிய விகிர்தர்,
பையரவு அல்குற் பாவையர் ஆடும்
         பாச்சில்ஆச் சிராமத்து எம் பரமர்,
மெய்யரே ஒத்துஓர் பொய்செய்வது ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : கையின் கண்ணதாகிய தலை ஓட்டினையும், காட்டில் வாழும் வாழ்க்கையினையும் , ` கட்டங்கம் ` என்னும் படையினை ஏந்திய கையினையும் , மார்பின் கண்ணதாகிய முப்புரி நூலினையும் உடைய ஒளிவிடுகின்ற புல்லிய சடையின்மேல் வெள்ளிய பிறையைச் சூடிய விகிர்தரும் , அரவப் படம் போலும் அல்குலினை உடைய மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை , சொல் பிறழாதவர் போல வந்து ஆட்கொண்டு , பின்பு பிறழ்தலைச் செய்வதேயாய் விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 8
நிணம்படும் உடலை நிலைமை என்று ஓரேன்,
         நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்,
கணம்படிந்து ஏத்திக் கங்குலும் பகலும்
         கருத்தினால் கைதொழுது எழுவேன்,
பணம்படும் அரவம் பற்றிய கையர்,
         பாச்சில்ஆச் சிராமத்துஎம் பரமர்,
பிணம்படு காட்டில் ஆடுவது ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : அடியேன் , நிணம் பொருந்தியதாகிய இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையதென்று நினையாது , நெஞ்சம் இறைவருக்கு உரியது என்றே துணிந்தேன் ; இரவும் பகலும் அடியவர் குழாத்தின் ஊடே சென்று தம்மை அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன் ; இவ்வாறாக , படம் பொருந்திய பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவரது தன்மை , பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதேயாய்விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 9
குழைத்து உவந்து ஓடிக் கூடுதி நெஞ்சே,
         குற்றேவல் நாள்தொறும் செய்வான்,
இழைத்தநாள் கடவார் அன்புஇல ரேனும்,
         எம்பெரு மான் என்று எப்போதும்
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சில்ஆச் சிராமத்து
         அடிகள்தாம், யாதுசொன் னாலும்
பிழைத்தஅது பொறுத்து, ஒன்று ஈகிலர் ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : நெஞ்சே , நீ அன்பால் இளகி மகிழ்ச்சியோடும் விரைந்து சென்று நாள் தோறும் குற்றேவல் செய்ய அடைகின்றாய் ; ஆயினும் , தமக்கு வரையறுத்த நாளெல்லையைத் தவத்தாற் கடக்க மாட்டாத சிலர் , இயல்பில் அன்பில்லாதவராயினும் , தாம் கேட்ட வாற்றால் வாயினால் எப்போதும் , ` சிவனே சிவனே ` என்று கூப்பிடுந் தன்மையுடையவராயின் , அவர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானார், யாது சொல்லி வேண்டினும் , நீ பிழை செய்ததைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர் ; ஆயினும் உன்னைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; நீ என் செய்தியோ !


பாடல் எண் : 10
துணிப்படும் உடையும், சுண்ணவெண் நீறும்,
         தோற்றமும் சிந்தித்துக் காணில்,
மணிப்படு கண்டனை வாயினால் கூறி,
         மனத்தினால் தொண்டனேன் நினைவேன்,
பணிப்படும் அரவம் பற்றிய கையர்,
         பாச்சில்ஆச் சிராமத்து எம் பரமர்,
பிணிப்பட ஆண்டு பணிப்பு இலர் ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும் , நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும் , மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து , அவற்றைக் கண்டால் , அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து , வாயால் துதிப்பேன் ; அவ்வாறாக , படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர் , என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு , ஒன்றையும் ஈயாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 11
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்,
         அடியவர்க்கு அடியனும் ஆனேன்,
உரிமையால் உரியேன், உள்ளமும் உருகும்,
         ஒண்மலர்ச் சேவடி காட்டாய்,
அருமையாம் புகழார்க்கு அருள்செயும் பாச்சில்
         ஆச்சிரா மத்து எம் அடிகள்,
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர்க்கு யான் ஒரு பிறப்பில் அடியேன் அல்லேன் ; ஏழ் பிறப்பிலும் அடியேன் ; அதுவேயுமன்றி , இவர் தம் அடியார்க்கும் அடியனாயினேன் ; என்னை விற்கவும் , ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவனா யினேன் ; இவர்தம் ஒளி பொருந்திய மலர் போலும் செம்மையான திருவடிகளே எனக்கு உறுதுணையாக , என் உள்ளம் அவற்றிடத்து உருகா நிற்கும் ; இவ்வாறாக , இவர் , முன்பு பெருமைகள் பேசி , பின்பு சிறுமைகள் செய்வாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !


பாடல் எண் : 12
ஏசின அல்ல, இகழ்ந்தன அல்ல,
         எம்பெரு மான்என்று எப் போதும்
பாயின புகழான், பாச்சில்ஆச் சிராமத்து 
         அடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினால் கூறி, மனத்தினால் நினைவான்,
         வளவயல் நாவல்ஆ ரூரன்,
பேசின பேச்சைப் பொறுத்து இலர் ஆகில்,
         இவர் அலாது இல்லையோ பிரானார்.

         பொழிப்புரை : ` எம்பெருமான் ` என்று , எப்போதும் உரிமையோடு பரவிய புகழை யுடையவனும் , திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரை யடைந்து அவரது திருவடிகளைத் தொழவேண்டுமென்று பல நாட்கள் வாயினாற் சொல்லி , மனத்தினால் நினைந்தவனும் ஆகிய , வளப்பமான வயல்கள் சூழ்ந்த , திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள் , உண்மையில் ஏசினவும் அல்ல; இகழ்ந்தனவும் அல்ல; ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் ; அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ !

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...