கதிர்பெறு செந்நெல்




வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

கதிர்பெறு செந்நெல்வாடக்
     கார்க்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
     கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
     வாடினோர் முகத்தைப் பாரார்,
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்
     நிலை இலார்க்கு ஈயமாட்டார்.      5.

     கதிர் பெற்ற செம்மையாகிய செல் பயிர்,   மேலும் செழிக்க நீர் இன்றி வாட்டத்தை அடையும். வாடுகின்ற அப் பயிரைக் கண்டும், அதனிடத்தே மழையைப் பெய்யாது, மேகக் கூட்டமானது, பொங்குகின்ற அலைகளை உடைய கடலில் சென்று பெய்வது போல,  இந்தப் பூமியில் மதிக்கத்தக்க செல்வத்தை உடையவர்கள், பசியினால் வாட்டம் அடைந்தோருடைய முகத்தைப் பார்க்கமாட்டார். வறுமை காரணமாக நிலையில்லாமல் திரிந்து அலைபவருக்கும் கொடுத்து உதவ மாட்டார். செல்வத்தை மிகுதியாகப் படைத்தவருக்கே, அவர்கள் வேண்டாவிடினும், முகத்துதி செய்வதை விரும்பி, தனது செல்வத்தைக் கொடுப்பார்கள்.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
குறி எதிர்ப்பை நீரது உடைத்து.

என்னும் திருக்குறள் கருத்து இங்கு வைத்து எண்ணத்தக்கது.

No comments:

Post a Comment

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...