திருக் கோலக்கா


திருக் கோலக்கா

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

      சீர்காழியில் உள்ள பிரம்மபுரீசுவரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் திருகோலக்கா என்னும் திருத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோயில் என்று வழங்கப்படுகிறது.


இறைவர்                  : சப்தபுரீசுவரர், தாளேசுவரர்திருத்தாளமுடையார்.

இறைவியார்              : தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.

தல மரம்                  : கொன்றை.

தீர்த்தம்                    : ஆனந்த தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : 1. சம்பந்தர் -     மடையில் வாளை
                                            2. சுந்தரர்  -  புற்றில் வாளரவார்த்த


         சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா (திருத்தாளமுடையார் கோயில்) என்னும் இத் திருத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய திருத்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு திருப்பதிகம் பாடத் தொடங்கிய மூன்று வயதுடைய திருஞானசம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான்.

     தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று திருஞானசம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு "ஓசை கொடுத்த நாயகி" என்று பெயர்.
        
         மக்கள் வழக்கில் தாளமுடையார் கோயில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகின்றார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது. இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

         கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள். திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.

         பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோயிலில் உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓர் காழிப் பாலற்கா அன்று பசும் பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 100
காதல்உடன் அணைந்து, திருக் கழுமலத்துக்
         கலந்துவீற்று இருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்க அரிய
         மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து
போதமுலை சுரந்து அளித்த புண்ணியத்தா
         யாரையும் முன் வணங்கிப் போற்றி,
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்
         காஇறைஞ்ச விருப்பில் சென்றார்.

         பொழிப்புரை : பெருகிய அன்புடன் சேர்ந்து திருக்கழுமலம் எனும் அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தம் தந்தையாரையும், தம்மிடம் வெளிப்பட்டு வந்து யாவராலும் காண்டற்கரிய மெய்ஞ்ஞானத்ததைத் திருமுலைசுரந்து வரும் பாலுடன் கலந்து தமக்கு ஊட்டிய புண்ணிய வடிவான திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி, மேன்மையான அருளைப் பெற்றுத் `திருக்கோலக்கா' என்ற திருப்பதியை வணங்கும் பொருட்டு விருப்புடன் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 101
பெருக்குஓலிட்டு அலைபிறங்கும் காவிரிநீர்
         பிரசமலர் தரளம் சிந்த,
வரிக்கோல வண்டுஆட, மாதரார்
         குடைந்துஆடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காஎய்தி, தேவர்பிரான்
         கோயில்வலம் செய்து முன்நின்று,
இருக்கு ஓலிட்டு அறிவரிய திருப்பாதம்
         ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்.

         பொழிப்புரை : நீர்ப்பெருக்கால் ஒலிமிகுந்து அலைகள் பெருகும் காவிரியாறு, நல்ல நீருடன் தேன் மிகுந்த மலர்களையும் முத்துக்களையும் சொரிய, அம்மலர்களைச் சூழ்ந்து வண்டுகள் மொய்க்க, மங்கையர் குடைந்து நீராடுகின்ற நீரையுடைய வாவிகள் பொருந்திய `திருக்கோலக்கா' என்ற பதியையடைந்து, தேவர்களின் தலைவரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து, திருமுன்நின்று, மறைகள் முறையிட்டும் அறிதற்கு அரிய இறைவரின் திருவடிகளைப் போற்றத் தொடங்கியவராய்,


பெ. பு. பாடல் எண் : 102
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
         விழுப்பொருளை, வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
         திங்கள்பரித்து அருளு வானை,
மைந்நிறைந்த மிடற்றானை, "மடையில்வா
         ளைகள்பாய" என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
         கவுணியர்கோன் பாடும் காலை.

         பொழிப்புரை : மெய்ம்மை நிறைந்த செம்பொருள் எனப்படுகின்ற நான்மறைகளில் கூறப்படும் பொருளாய் உள்ளவரை, திருச்சடையின் மேல் பாம்புடன் பசுமையான பிறைச்சந்திரனைத் தாங்குபவரை, நஞ்சுடைய திருமிடற்றையுடையவரை, `மடையில் வாளைகள் பாய' என்ற திருப்பதிகத் திருவாக்கினால், திருக்கரங்களைக் கொண்டு அமைக்கும் காலவரையறையினைச் செய்யும் தாள ஒத்துச் செய்து, கலைகள் நிரம்பிய திருப்பதிகத்தைக் கவுணியர் பெருமானான சம்பந்தர் பாடிய போது,

         குறிப்புரை : கைந்நிறைந்த ஒத்து அறுத்து - பாட்டின் இசைக்கு ஏற்றவாறு கைகளைத் தட்டுதல், நிறுத்தல், எடுத்தல் ஆகிய தொழில்களால் தக்கவாறு அளவுபடுத்துவது. இதுபொழுது பாடி அருளிய பதிகம் `மடையில் வாளை' (தி.1 ப.23) எனத் தொடங்கும் தக்கராகப் பதிகம் ஆகும்.


பெ. பு. பாடல் எண் : 103
கைஅதனால் ஒத்துஅறுத்துப் பாடுதலும்,
         கண்டு அருளி, கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
         எழுதியநல் செம்பொன் தாளம்
ஐயர்அவர் திருவருளால் எடுத்த பா
         டலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம்எலாம் உய்யவரு மறைச்சிறுவர்
         கைத்தலத்து வந்தது அன்றே.

         பொழிப்புரை : அங்ஙனம் திருக்கைகளால் தாள ஒத்து அறுதியிட்டுப் பாடவும் (இறைவர்) கண்டு, அருள் செய்ய, கருணை கூர்ந்த தேவர்பெருமானின் திருவைந்தெழுத்துப் பொறித்த நல்ல செம்பொன் தாளங்கள், இறைவரின் அருளால் எடுத்த அத்திருப்பதிகத்திற்குப் பொருந்திய அளவுபட, வரும் மறைச் சிறுவரான பிள்ளையாரின் திருக்கைகளில் அது பொழுதே வந்து சேர்ந்தன.

         குறிப்புரை :  சென்ற பாடலில் கூறியவாறு `மடையில் வாளை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைக் கையினால் ஒத்தறுத்துப் பாடும் அளவில் இறையருளால் திருவைந்தெழுத்துப் பொறித்த பொற்றாளம் பிள்ளையார் கையில் வரப்பெற்றன.

     இவ்வரலாற்றிற்கு, `நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்த' (தி.7 ப.62) எனவரும் சுந்தரர் திருவாக்கும், `எழுத் தஞ்சும் இட்டசெம்பொற்றாளங்கள் ஈய' (தி.11 ப.34 பா.82), `பெற்றது ... செம்பொன் தாளம் அவையே' (தி.11 ப.36 பா.4) எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாக்குகளும் அரணாகின்றன.


பெ. பு. பாடல் எண் : 104
காழிவரும் பெருந்தகையார் கையில்வரும்
         திருத்தாளக் கருவி கண்டு,
வாழிய தம் திருமுடிமேல் கொண்டுஅருளி,
         மனம் களிப்ப மதுர வாயில்
ஏழிசையும் தழைத்து ஓங்க, இன்னிசை வண்
         தமிழ்ப் பதிகம் எய்தப் பாடி,
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
         கடைக்காப்புச் சாத்தி நின்றார்.

         பொழிப்புரை : சீகாழியில் வந்து தோன்றிய பெருந்தகையார் ஆன ஆளுடைய பிள்ளையார், தம் திருக்கையில் வந்த தாளத்தைப் பார்த்துப் பெரும்பேறு எனக் கருதி அதனைத் தம்திருமுடிமீது வைத்து, மனம் மகிழ, இனிமை மிக்க திருவாக்கால் ஏழிசைகளும் தழைத்து ஓங்க, இனிய இசை பொருந்திய அத்தமிழ்ப் பதிகத்தைப் பொருத்தமாகப் பாடி, விரும்பி ஏற்றருளிய குழை அணிந்த சிவபெருமானின் திருமுன்னிலையில் தக்க திருக்கடைக்காப்புச் சாத்தி நின்றார்.

         குறிப்புரை : நலங்கொள் காழி ஞானசம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. (தி.1.ப.23.பா.11) என்பது திருக்கடைக்காப்பாக அமைந்த திருப் பாடலாகும். `வினை போய்' என்பதால் பாச நீக்கமும் `ஓங்கி வாழ்வரே' என்பதால் சிவப்பேறும் பெறுதலின், இதனினூங்கு உயிர் பெறத் தக்க தொருபயன் இல்லையாதலின் இதனைத் `தக்க திருக்கடைக் காப்பு' என்றார்.


பெ. பு. பாடல் எண் : 105
உம்பர்உலகு அதிசயிப்ப ஓங்கியநா
         தத்து அளவின் உண்மை நோக்கி,
தும்புருநா ரதர்முதலாம் சுருதிஇசைத்
         துறை உள்ளோர் துதித்து, மண்மேல்
வம்பலர் மாமழை பொழிந்தார், மறைவாழ
         வந்து அருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி, மீண்டுஅருளி,
         சண்பைநகர் சாரச் செல்வார்.

         பொழிப்புரை : விண்ணுலகத்தவரும் வியப்படைய ஓங்கிய அத்தாளத்தின் ஒலியின் மேன்மையை நோக்கி, தும்புரு நாரதர் முதலிய மறை பயில்கின்ற இசைத்துறை வல்லவர் யாவரும் போற்றி, தேன் மிகுந்த மலர்மழையைப் பொழிந்தனர். மறைகள் வாழத் தோன்றியருளிய பெருமகனாரும், தம் இறைவரின் அருளைப் போற்றி அங்கு நின்றும் விடைபெற்றுச் சீகாழிப் பதியை நோக்கிச் செல்பவராகி,



1. 023  திருக்கோலக்கா               பண் – தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும், கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ.

         பொழிப்புரை :நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?


பாடல் எண் : 2
பெண்தான் பாகம் ஆகப் பிறைச்சென்னி
கொண்டான், கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையாம் கூப்பவே,
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.

         பொழிப்புரை :உமையம்மையைத் தன் திருமேனியில் இடப் பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.


பாடல் எண் : 3
பூண்நல் பொறிகொள் அரவம், புன்சடை
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிகள் ஆனவே.

         பொழிப்புரை :அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப்பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப்பிணிகளானவை நீங்கும்.


பாடல் எண் : 4
தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்,
மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான்,
குழுக்கொள் பூதப் படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

         பொழிப்புரை :பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகியகையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.


பாடல் எண் : 5
மயில்ஆர் சாயல் மாதுஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயில்ஆர் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்க, பறையும் பாவமே.

         பொழிப்புரை :ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.


பாடல் எண் : 6
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்,
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவுஆர் கோலக் காவுள்எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

         பொழிப்புரை :ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக்கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.


பாடல் எண் : 7
நிழல்ஆர் சோலை நீல வண்டுஇனம்
குழல்ஆர் பண்செய் கோலக் காஉளான்,
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

         பொழிப்புரை :நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.


பாடல் எண் : 8
எறிஆர் கடல்சூழ் இலங்கைக் கோன்தனை
முறிஆர் தடக்கை அடர்த்த மூர்த்திதன்
குறிஆர் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

         பொழிப்புரை :அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகமநெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 9
நாற்ற மலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணைமே லவனும் காண்கிலாக்
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

         பொழிப்புரை :மணம் பொருந்திய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில் உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.


பாடல் எண் : 10
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர்தோய் உருவி லாளரும்
குற்ற நெறியார், கொள்ளார், கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.

         பொழிப்புரை :நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப்போற்றப் பாவம்தீரும்.


பாடல் எண் : 11
நலம்கொள் காழி ஞானசம் பந்தன்
குலம்கொள் கோலக் காவு ளானையே
வலம்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலம்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

         பொழிப்புரை :இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலை போலும் திண்ணிய வினைகள் நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள், திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சித் திருக்கோலக்கா செல்லும் பொழுதில், பெருமான் எதிர் காட்சி கொடுத்து அருளக்கண்டு வணங்கித் திருஞானசம்பந்தருக்குப் பொன் தாளம் அளித்ததைச் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 154)

பெரிய புராணப் பாடல் எண் : 153
அங்கண்இனிது அமர்ந்து, அருளால் திருப்புன்கூர் அணைந்துஇறைஞ்சி,
கொங்குஅலரும் மலர்ச்சோலைத் திருக்கோலக் காஅணைய,
கங்கைசடைக் கரந்தவர்தாம் எதிர்காட்சி கொடுத்துஅருள,
பொங்குவிருப் பால்தொழுது திருப்பதிகம் போற்றிசைப்பார்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அருளிய பதிகம் `புற்றில்வாள் அரவு' (தி.7 ப.62) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த தாகும். பதிகப் பாடல் தோறும் `கோலக்காவினில் கண்டு கொண்டேனே' என வருவது கண்டு, `எதிர்காட்சி கொடுத்தருள' என்ற வர லாற்றுப் பின்னணியை அமைத்துக் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 154
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப்
பெருகுஆர்வத் துடன்பாட, பிஞ்ஞகனார் கண்டுஇரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்து,
பொருள்மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றிசைத்தார்.

         பொழிப்புரை : திருஞானசம்பந்தர் தமது திருக்கைகளால் தாளமிட்டுப் பெருகும் ஆர்வத்துடன் அத்திருப்பதியை முன்னால் பாடிட, அதுகண்டு பெருமானார் திருவுள்ளமிரங்கி அவருக்குத் திருத்தாளம் வழங்கிய வரலாற்றைத் தாம் பாடிய பதிகத்து வைத்துச் சிறப்பித்துப் பொருள் சிறந்த மாலையாகும் அத்திருப்பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 155
மூவாத முழுமுதலார் முதற்கோலக் காஅகன்று,
தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு, தாழ்ந்துஇறைஞ்சி,
நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார்.

         பொழிப்புரை : எக்காலத்தும் மூப்படையாத முழுமுதல்வராய சிவபெருமான் அமர்ந்த முதன்மையான அத்திருக்கோலக்காவை நீங்கிக் குறைவிலாத புகழுடைய சீகாழி நகரையும் வலங்கொண்டு, விழுந்து வணங்கி, அங்குத் தோன்றிய நாவார்ந்த முத்தமிழில் வல்லுனரான திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றி, அப்பால் சென்று, பகைவர்களாகிய முப்புரத்தவரை எரித்த பெருமானது திருக்குருகாவூரை அணைவார்,


7. 062    திருக்கோலக்கா                    பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
புற்றில் வாள்அரவு ஆர்த்தபி ரானை,
         பூத நாதனை, பாதமே தொழுவார்
பற்று வான்துணை, எனக்குஎளி வந்த
         பாவ நாசனை, மேவஅரி யானை,
முற்ற லார்திரி புரம்ஒரு மூன்றும்
         பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்அங்கை ஏந்திய கோனை,
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும் , பூத கணங்கட்கு முதல்வனும் , தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும் , எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும் , அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும் , யாவராலும் அடைதற்கு அரியவனும் , செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு , திருமால் அம்பாகி நிற்க , வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருக்கோலக்கா வில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 2
அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
         ஆய நம்பனை, வேய்புரை தோளி
தங்கு மாதிரு வுருஉடை யானை,
         தழல்ம திசடை மேல்புனைந் தானை,
வெங்கண் ஆனையின் ஈர்உரி யானை,
         விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்கு உலாம்பொழில் குரவுவெறி கமழும்
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : துணை நூல்களாகிய ஆறும் , முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும் , மூங்கில் போலும் தோள் களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள , சிறந்த திருமேனியை யுடையவனும் , ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும் , சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலை யுடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , விண்ணில் உள்ளவர் களும் , மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற , தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்கா வினில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 3
பாட்டு அகத்துஇசை ஆகிநின் றானை,
         பத்தர் சித்தம் பரிவுஇனி யானை,
நாட்டகத் தேவர் செய்கை உளானை,
         நட்டம் ஆடியை, நம்பெரு மானை,
காட்டு அகத்துஉறு புலிஉரி யானை,
         கண்ணொர் மூன்றுஉடை அண்ணலை, அடியேன்
கோட்டு அகப்புனல் ஆர்செழுங் கழனிக்
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும் , அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும், மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும் , நடனம் ஆடு பவனும் , நமக்குத் தலைவனும் , காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும் , கண்கள் மூன்று உடைய பெருமையுடைய வனும் ஆகிய இறைவனை , அடியேன் , வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 4
ஆத்தம் என்றுஎனை ஆள்உகந் தானை,
         அமரர் நாதனை, குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
         வைத்து, வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனை, சிவனை, செழுந் தேனை,
         தில்லை அம்பலத் துள்நிறைந்து ஆடும்
கூத்தனா, குரு மாமணி தன்னை,
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்குவாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளின வனும் , தேவர்கட்குத் தலைவனும் , முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து , வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும் , மங்கலம் உடையவனும் , செழுமையான தேன்போல இனிப்பவனும், தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும், ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை , அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 5
அன்று வந்துஎனை அகல்இடத் தவர்முன்
         ஆள் அதாகஎன்று ஆவணம் காட்டி
நின்று, வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
         நித்தி லத்திரள் தொத்தினை, முத்திக்கு
ஒன்றி னான்தனை, உம்பர்பி ரானை,
         உயரும் வல்அர ணங்கெடச் சீறும்
குன்ற வில்லியை, மெல்லியல் உடனே
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து , அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும் , ` நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க ` என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று , பின்பு , திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த, முத்தினது திரட்சியமைந்த கொத்துப்போல்பவனும் , முத்தியளித்தற்குப் பொருந் தியவனும் , தேவர்கட்குத் தலைவனும் , உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த , மலைவில்லைஉடையவனும் ஆகிய இறைவனை , இறைவியுடனே , அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன் .


பாடல் எண் : 6
காற்றுத் தீப்புனல் ஆகிநின் றானை,
         கடவுளை, கொடு மால்விடை யானை,
நீற்றுத் தீஉரு வாய்நிமிர்ந் தானை,
         நிரம்பு பல்கலை யின்பொரு ளாலே
போற்றித் தன்கழல் தொழும்அவன் உயிரைப்
         போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளால்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானை,
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : காற்றும் , தீயும் , நீரும் ஆகி நிற்பவனும் , எல்லாப் பொருள்களையும் கடந்தவனும் , கொடிய பெரிய இடப ஊர்தியை யுடையவனும் , நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும் , நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த , ஒலிக்கின்ற கழலை யணிந்தவனும் ஆகிய இறைவனை , அடியேன் திருக்கோலக்கா வில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 7
அன்று அயன்சிரம் அரிந்துஅதில் பலிகொண்டு
         அமர ருக்குஅருள் வெளிப்படுத் தானை,
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த
         சோதி யை, சுடர் போல்ஒளி யானை,
மின்த யங்கிய இடைமட மங்கை
         மேவும் ஈசனை, வாசமா முடிமேல்
கொன்றை அஞ்சடைக் குழகனை, அழகுஆர்
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப் படுத்தியவனும் , நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடி யில் சிலம்பையணிந்த ஒளிவடிவினனும் , விளக்குப்போலும் விளக்கம் உடையவனும் , மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும் , மணங்கமழுமாறு தலையின் மேல் கொன்றை மாலையையணிந்த அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை, அடியேன் , அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

பாடல் எண் : 8
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
         ஞான சம்பந்த னுக்குஉல கவர்முன்
தாளம் ஈந்து,அவன் பாடலுக்கு இரங்கும்
         தன்மை யாளனை, என்மனக் கருத்தை,
ஆளும் பூதங்கள் பாடநின்று ஆடும்
         அங்க ணன்தனை, எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெரும் கோயில் உளானை,
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு , அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி , பலருங் காணத் தாளம் ஈந்த கருணையாளனும் , என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும் , தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல் களைப்பாட , அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும் , பதினெண் கணங்களாலும் வணங்கப் படுபவனும் , திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன் , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 9
அரக்கன் ஆற்றலை அழித்துஅவன் பாட்டுக்கு
         அன்று இரங்கிய வென்றியி னானை,
பரக்கும் பார்அளித்து உண்டுஉகந் தவர்கள்
         பரவி யும்பணி தற்குஅரி யானை,
சிரக்கண் வாய்செவி மூக்குஉயர் காயம்
         ஆகித் தீவினை தீர்த்தஎம் மானை,
குரக்கு இனங்குதி கொண்டுஉகள் வயல்சூழ்
         கோலக் காவினில் கண்டுகொண் டேனே

         பொழிப்புரை : அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து , பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும் , விரிந்த உலகத்தைப் படைத்தும் , உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும் , தலையில் அமைந்த , ` கண் , வாய் , காது , மூக்கு ` என்பவற்றோடு , நீண்ட உடம்புமாய் நின்று , தீமையைத் தரும் வினையை ஒழித்த எம் பெரு மானும் ஆகிய இறைவனை , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டம் குதித்துத் திரிகின்ற , வயல் சூழ்ந்த , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .


பாடல் எண் : 10
கோட ரம்பயில் சடைஉடைக் கரும்பை,
         கோலக் காவுள்எம் மானை,மெய்ம் மானப்
பாடர் அங்குடி அடியவர் விரும்பப்
         பயிலும் நாவல் ஆரூரன்,வன் தொண்டன்,
நாடு இரங்கிமுன் அறியும்அந் நெறியால்
         நவின்ற பத்துஇவை விளம்பிய மாந்தர்,
காடு அரங்குஎன நடம்நவின் றான்பால்
         கதியும் எய்துவர், பதிஅவர்க்கு அதுவே

         பொழிப்புரை : ஆலம் விழுது போலும் சடைகளை யுடையவனும் , கரும்பு போல இனிப்பவனும் ஆகிய , திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை , உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு , அத்திருத் தொண்டிலே பழகும் , திருநாவலூரில் தோன்றிய , வன்தொண்டனாகிய நம்பியாரூரன் , உலகில் உள்ளவர்தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல் களாகிய இவைகளைப் பாடிய மாந்தர் , காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவபிரானிடத்து உயர்கதியையும் பெறுவர்; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக் கதியே ஆகும் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...