விதிப்படியே எல்லாம் ஆகும்




3.  இட்டபடியே எல்லாம் ஆகுமெ.

அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்,     
         பாதாளம் அதில்சென் றாலும்,
பட்டம்என வான்ஊடு பறந்தாலும்,
          என்ன? அதில் பயன்உண் டாமோ?
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா
          ரே! முன்னாள் பெரியோர் கையில்
இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்
          படின்வருவது இல்லை தானே.

இதன் பொருள் ---  

     பிட்டு வர மண்சுமந்த தண்டலையாரே --- பிட்டை விரும்பி மண்ணைச் சுமந்த  தண்டலை நீள்நெறி இறைவரே!, 

     முன்நாள் பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை --- முற்காலத்திற் பெரியோர்களின் கையிலே கொடுத்தவாறே தவிர மற்று அரு வகையாக ஆசைப்பட்டால் வருவது ஏதும் இல்லை.

     எனவே,

     அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும் --- எட்டுத் திசைகளிலும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும்.

     பாதாளம் அதில் சென்றாலும் ---- பாதாள லோகத்திலே சென்று தேடினாலும்,

     வான் ஊடு பட்டம் எனப் பறந்தாலும் --- வானத்திலே காற்றாடி போலப் பறந்து திரிந்தாலும்,

     என்ன --- என்ன கிடைக்கும்?

     அதில் பயன்தான் உண்டோ ---- அவ்வாறு அலைவதனால் பயன் ஏதும் உண்டாகாது.

     கருத்து ---  விதிப்படியே எல்லாம் ஆகுமே அன்றி, பேராசை கொண்டு அலைவதனால் பயன் இல்லை.

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...